† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 09 †
✠ இறைவார்த்தை வழிபாடு ✠
திருப்பலியின் இருமுக்கிய கூறுகளில் ஒன்றாகிய இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் அலசுவோம். இறைவார்த்தை வழிபாட்டின் முக்கிய நோக்கம் என்ன இப்பகுதியினூடாக இறைவனோடு இறைமக்கள் சமூகம் உரையாடலுக்கு உட்படுகின்றது. இறைவார்த்தை வழியாக பேசும் இறைவனோடு உறவாடுகின்றது. அவருடைய உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுக்கின்றது. அமைதியில் தியானிக்கின்றது, பதிலுரைப்பாடல் மூலம் பதிலளித்து, தம் வாழ்வில் இறைவார்த்தையை கடைப்பிடித்து நல்வழி நடந்திட, நம்பிக்கை அறிக்கை (விசுவாசப்பிரமாணம்) செய்து, அவர் அருள் வேண்டுவது இப்பகுதியின்
சிறப்பாகும்.
ஆதித்திருச்சபை, திருப்பலி கொண்டாட்டத்தில் இறைவார்த்தைக்கு முக்கிய இடம் கொடுத்ததை காணக் கூடியதாக உள்ளது. ஏனெனில், அருள் அடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கிய கூறாக இருப்பது இறைவார்த்தையே. நற்செய்தி அறிவிப்பில்லாமல் திருமுழுக்கு அளிப்பதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் கூறப்படுவதில்லை. ஏனெனில் இறைவாக்கு அறிவிக்கப்பட்டு, விளக்கப்படும் போது தான் நம்பிக்கை (விசுவாசம்) ஏற்படுகின்றது. அதுவே திருமுழுக்கு பெற வழிசமைக்கின்றது. (தி.பணி 8: 35- 38. 10: 44- 48, 19: 4-5) இதிலிருந்து முதலாம் நூற்றாண்டில் இருந்தே திருவழிபாட்டில் இறைவாக்கு முன்னுரிமை பெற்றிருந்ததை காணக் கூடியதாக உள்ளது.
✠ இரண்டாம் வத்திக்கான சங்கமும் இறைவார்த்தையும்
"திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம்" செலுத்தி வந்துள்ளது போலவே இறைநூல்களுக்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது" இக்கூற்று இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துகின்றது. எனவே திருப்பலியிலும் வேறு எந்தவொரு அருட்சாதனக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு என்பது கட்டாயம் நடைபெற வேண்டியதே.
✠ இதன் இயல்பு
இறைவார்த்தைகள் வழியாக இறைவனே நம்மோடு பேசுகின்றார். எனவே இந்த வார்த்தைகள் வாசிக்கப்படும் போது நாம் மிகக் கவனத்துடன் செவிமடுத்துக் கேட்க வேண்டும். கூர்ந்து கவனிக்க வேண்டும். அவ்வாறன்றி நாம் கைகளில் விவிலியத்தை வைத்துக்கொண்டோ, பக்கங்களைப் புரட்டிக்கொண்டோ, வாசிக்கப்படும் வாசகத்தை தேடிக்கொண்டோ அல்லது வாசிப்பவரோடு சேர்ந்து வாசித்துக் கொண்டோ இருக்கக்கூடாது. ஏனெனில் இறைவார்த்தை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்காகவே பறைசாற்றப்படுகின்றது. இவ்வார்த்தைகளை உள்வாங்கி சமுதாயத்தில் நாமும் வார்த்தைப் பணியாளர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றோம்.
✠ வழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல வேண்டுமா?
ஆலயங்களுக்கு விவிலியத்தை எடுத்துச்செல்வது மிகவும் சிறப்பான செயல். ஏனெனில் இறைவார்த்தையை நாம் கொண்டாடுகின்றோம். வரலாற்றில் இறைவன் செயற்பட்ட விதங்களை எண்ணிப்பார்த்து இன்று அந்த வார்த்தை நம்மோடு பேசும் விதங்களை கண்டுணர்வதே இறைவார்த்தைக் கொண்டாட்டம் ஆகும். ஒவ்வொரு வழிபாட்டிலும் இறைவார்த்தை முழக்கம் இடப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. எனவே இறைவார்த்தையின் கொண்டாட்டமான திருவழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். விவிலியத்தை எடுத்துச் செல்வதே, நாம் அதை கொண்டாடச் செல்கின்றோம் என்பதை அடையாளப்படுத்துகின்றது.
இன்று பல ஆலயங்களில் வாசக தாள்கள் அச்சடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இது முறையா? தகுமா? தாள்களில் இருந்து வாசிக்கக்கூடாது என்றால் ஏன் இவை அச்சடிக்கப்படுகின்றன? நல்ல கேள்வி. ஒரு கணம் இத்தாள்கள் உண்மையிலேயே ஏன் அச்சடிக்கப்படுகின்றன. ஞாயிறு பறைசாற்றப்படும் இறைவார்த்தைகளை தாங்கி வரும் இத்தாள் குறிப்பிட்ட ஞாயிறுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு வீட்டிலே வைத்து வாசிக்கவும், தியானிக்கவும், செபிக்கவும், இவ்வாறு ஞாயிறு திருப்பலிக்கு முன்கூட்டி தயாரிப்பு செய்து, திருப்பலியில் செயலூக்கத்துடன் பங்கேற்கவே இவ்ஏற்பாடு. இத்தாள்கள் இறைவார்த்தையைப் பிரசன்னப்படுத்துவதாக திருச்சபை ஏற்றுக்கொள்ளவல்லை. எனவே திருவழிபாட்டில் அச்சடித்த வாசக தாள்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
✠ இறைவார்த்தை ஏன் பறைசாற்றப்படுகின்றது?
✠ மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
✠ அவசியமான போதனைகளை வழங்குகின்றது.
✠ திருச்சபைக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்கப்படுகின்றது.
✠ இறைமக்களை நம்பிக்கையில் (விசுவாசம்) உறுதிப்படுத்துகின்றது.
✠ ஆன்மாவிற்கு உணவளிக்கின்றது
✠ புனிதத்துவ வாழ்விற்கு ஊற்றாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment