அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, March 21, 2018

திருப்பலி எதற்கோ, எப்படியெல்லாமோ பலியாகிறது!!

திருப்பலி எதற்கோ, எப்படியெல்லாமோ பலியாகிறது!!

அரசியல் இன்று ஊழல், இலஞ்சம் இவைகளுக்குப் பலியாகிறது போல, நிதித்துறை உண்மைக்குப் புறம்பானவைக்குப் பலியாகிறது போல, திருமண அன்பு  ரொக்கத்திற்கும், நகைகளுக்கும் பலியாகிறது போல, திருவருட்சாதன வழிபாடுகள் கூட விளம்பரங்களுக்குப் பலியாகின்றன!
திருவிழாக்கள் தெருவிழாவாக வேடிக்கைகளுக்குப் பலியாகின்றன. பாட்டுப் பூசை என்ற பெயரில் பாடகர் (ஆண், பெண் இருவரும்) குழுவினரின் பல்வேறு இசைக்கருவிகள் முழங்கும் பாட்டுக் கச்சேரிக்குத் திருப்பலி பலியாகிறது! நாம  விழா, பாராட்டு-பிரிவு உபச்சார விழா, ஜூபிலி விழாத் திருப்பலிகள் நாடக-நடனக் கொண்டாட்டங்களுடன் வெளியரங்க மேடைகளுக்குப் பலியாகினறன.
எல்லா மதத்தவரும் அவரவரது வழிபாட்டு முறைக்கேற்ப மந்திரங்கள், சுலோகங்கள், சடங்குகளை கடவுளைத் துதிக்கவோ, புகழவோ, அவரக்கு நன்றி கூறவோ, அவரிடம் மன்னிப்பு வேண்டவோ, வரஙகள் கேட்கவோ எனத் தேவைக் கேற்பப் பயன்படுத்துகிறார்கள், அதுபோல திருச்சபை திருப்பலி நிறைவேற்ற சில விதிமுறைகளை வரையறுத்துள்ளது.

இவைகளில் 1) சில வார்த்தைகள் (யார், எப்பொழுது, எவ்விதம் உச்சரிப்பது?) 2) சில நிற்பது, வணங்குவது, முழந்தாளிடுவது, கைவிரிப்பது, கைகூப்புவது போன்ற செயல்கள் பற்றியது 3) சில அணியும் உடை, நிறம், பீட, அமைப்பு, ஜோடனை மற்றும் பயன்படுத்தும் பொருள்கள் பற்றியது. 4) இன்னும் சில திருப்பலிக்குரிய இடம், நாள், நேரம் பற்றியவை. ஆக பல விதிமுறைகள் இருப்பது -  எந்த நாட்டிலும், மொழியிலும் திருப்பணியாளர் யாராயினும் முறைப்படி வழிபாடு நிறைவேற்றவும், மக்களும் குழப்பமின்றி பங்குப் பெறவும் அவை உதவும் என்பதே திருச்சபையின் கருத்து.

ஆனால் இன்றைய நாள்களில் இந்த விதிமுறைகள் சில அருள்பணியாளர்களின் விருப்பு – வெறுப்புகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் இவர்கள் தங்கள் மொழிப்புலமையையோ, திறமையையோ வெளிப்படுத்த எண்ணி திருச்சபையின் வழிபாட்டு ஒழுங்குமுறைகளைக் கண்டு கொள்ளாமல், அனுமதிக்கப்பட்ட தருணங்கள் தவிர மற்ற வேளைகளிலும் வார்த்தைகள், சைகைகளைக் கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ செபிப்பதும், செயல்படுவதும்  மக்களிடையே கசப்பை, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்விதம் ஒருவரைப் பார்த்து ஒருவர் விதிமுறைகளை மீறுவதை யார் திருத்துவது? யார் சரி செய்வது?
அன்பாலும், இரக்கத்தாலும் பிறருக்காகப் பலியாக வேண்டி நாமும் அர்த்தமற்ற வாடிக்கை வழக்கங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் அநேக நேரங்களில், இடங்களில் அனைவருமே பலியாகிக் கொண்டிருக்கின்றோம்!
திருமுழுக்கு, புதுநன்மை, திருமணம் ஆகிய திருவருட்சாதனக் கொண்டாட்டங்கள், பங்குத் திருச்சபை (பங்கு எனும் குடும்ப நிகழ்வு) என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தனிப்பட்ட வசதியுள்ள குடும்பங்களின், தலைவர்களின் தனிப்பெருமைக்கும், விளம்பரத்திற்கும், “அன்பளியுங்கள்” என்ற பெயரில் கொடுக்கல் – வாங்கலுக்கும், வியாபார வர்த்தகச் செயலுக்கும் பலியிகிக் கொண்டிருக்கின்றனர்!
பாஸ்கா விழா கொண்டாடும் அனைத்துலக மக்களும் இஸ்ரயேலரின் பாஸ்காவை நினைவு கூறும் நேரம் மாலை (இரவு) நேரம்; இயேசுவும் அன்று பாஸ்கா உணவை உண்ணும் போது தான் தம் உடலையும், இரத்தத்தையும் அப்ப, இரச வடிவில் ஒப்புக் கொடுத்தார். எனவே, முதற் திருப்லி  இயேசு கிறிஸ்துவால் மாலையில் (இரவில்) நிறைவேற்றப்பட்டது! அதிகாலையில் அன்றைய செபம், வேலை, இன்ப – துன்பம் இவைகள் அனைத்தையும் மரியாளின் தூய இதயத்தோடு இணைத்து ஒப்புக் கொடுப்பது போல, காலையில் எழுந்து உடலும், உள்ளமும் எவ்விதத் தீமைக்கும் உள்ளாகுமுன்பு, கடவுளின் அன்பில் இருக்கும் போதே தூய மனத்துடன் கல்வாரித் திருப்பலியாக நம்மையே இறைவனுக்குக் கையளிக்கும் நிகழ்வே அன்றாடக் காலைத் திருப்பலி!!
கூட்டுத்(திரு)ப்பலியா? குருக்கள் கூடிவாழும், கூடும் இடங்களில் தனித்தனியே திருப்பலிக்காகப் பீடம் தேடுவதைத் தவிர்க்கவும், குருத்துவக் கூட்டமைப்புத் தன்மையை செயலால் உணர்த்தவும் திருச்சபையே அனுமதித்துள்ள “கூட்டுத் திருப்பலி” என்பது இன்று எந்த நேரமும், எதற்கும், எத்தனைப் பேரும் கூடி இயேசுவைப் பலியாக்கும் கூட்டுத் திருப்பலி எனும் சடங்காகி விட்டது! ஒவ்வோர் அருள்பணியாளரும் தன்னுடைய காலைத் தியானம், செபம் இவைகளால் தன்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, தன்னையே பலியாக இயசுவின் திரு உடல் திரு இரத்தத்தோடு ஒப்புக் கொடுப்பதை விட்டுவிட்டு, விருப்பமான நேரத்தில், விரும்பும் காரணத்திற்காக என்று தகுதி பற்றிய சிந்தனைக்கு இடம் கொடாமல், கூட்டுப்பலி என்ற பெயரில் பார்ப்பவர் மகிழும்படி எத்தனை பேரும் நிறைவேற்றும் பலியே கூட்டுத் திருப்பலியாகி விட்டது!!
துறவற விழாக்கள், குருத்துவ விழாக்கள் கூட அர்ப்பணமாகிறவர்களின் விளம்பரமாகவோ, அன்பளிப்புகள் பெறவோ, அடியார்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்ணும் வசதிக்காகவோ அறுசுவை உணவை மையப்படுத்தி மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு முன்பு ஆலயம் செல்லாமல் வாழ்த்து, பாராட்டுக் கூட்டத்தோடு அதே மேடையில் நிறைவேற்றப்படும் நவின பழக்கத்திற்குத் திருப்பலி பலியாகிக் கொண்டிருக்கிறது!!
அன்று முதல் திருப்பலியை திருத்தூதரோடு ஒப்புக்கொடுத்த அதே இயேசுவே இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் தாமே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும், இறைத்தந்தைக்கு உகந்த பலிப்பொருளாகவும் இருக்கிறார் எனும் உண்மையை மறந்து கூட்டுத் திருப்பலியின் போது பீடத்தருகில் இருப்போர் தவிர  மற்றக் குருக்கள் திரு உடை அணிந்திருந்தாலும் (குறிப்பாக குருப்பட்ட விழா, திருவிழா, பாராட்டு விழாக்களில்) இயேசுவின் முதற் கூட்டுத் திருப்பலியின் போது திருத்தூதர்களிடம் இருந்த அமைதியோ, பக்தி நிறைந்த மனநிலையோ எதுவும் இன்றி, அருகிலிருக்கும் குருவிடம் நலம் விசாரிப்பதும், நிகழ்பனவற்றை விமர்சிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டதால் தான் கூட்டுத் திருப்பலி கூத்துப் பலியாகி விடுகின்றது. அதோடு ஓர் ஆயரோ, பலரோ, ஒரு குருவோ, பலரோ, ஆயரும் – குருக்களும் சேர்ந்தோ  எத்தனை பேர் கூடித் திருப்பலியில் கலந்து கொண்டாலும் அங்கும் பலிப்பொருளாகவும், திருப்பலி  நிறைவேற்றுபவராகவும் விளங்குபவர் இயேசுவே என்பதால், திருப்பலியின் பலன் நமக்குக் கிடைப்பது நாம் காணும் திருப்பலி நிறைவேற்றுகிற ஆயரையோ, குருவையோ பொறுத்தது அல்ல; அல்லது திருப்பலி நிறைவேற்றுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அல்ல; திருப்பலியில் கலந்து குருவோடும், பலிப்பொருளாம் இயேசுவோடும் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நமது தகுதியைப் பொறுத்ததே என்ற மறைக்கல்வி மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
திருநாள், பெருவிழா நாள்களில் பீடப்பகுதி பூந்தொட்டிகளால் அழகுச் செய்யப்படுவது போல ஆயரோ, குருக்கள் கூட்டமோ பீடத்திற்கு அழகு சேர்ப்பார்களே தவிர, அவர்களில் ஒருவர் வழங்கும் இறைசெய்தி மற்றும் ஒரு திருப்பலியின் பலன், இவை தவிர வேறு எதுவும் அதிகமாக அங்கு கூடும் மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் உண்மை!
குருத்துவ வெள்ளி விழா, பொன்விழா ஆகிய விழாக்களையொட்டி மாலை வேளையில் விழா மேடைக்குக் குருக்களும் – துறவியரும் விழா நாயகர்களுடன் பவனியாக வந்து, மகிழ்வுடன் மக்களோடு இணைந்து பாராட்டு, அன்பளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்ற முறையில் திருப்பலியோடு இணைக்காமல் காலையிலேயே நன்றித் திருப்பலி, மாலையில் மேடை நிகழ்வு, இறுதியில் விருந்து என்று கொண்டாடுவது இன்னும் சிறப்பல்லாவா! அதுதோடு ஒரு கிராமத்தில் உள்ள சிறிய ஆலயமோ, மறைமாவட்டத் திருத்தலமோ, பேராலயமோ எந்தக் கோவிலாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் திருப்பலியின் பலன் ஒன்றே! ஆனால் அங்குக் கூடுகின்ற விசுவாசிகளின் பக்தி மன்றாட்டு இவைகளால் மட்டுமே உடனிருக்கும் அனைவருக்கும் அதிகமாய் இறைவன் அருள் பொழிகின்றார் என்பதால் விழாத் திருப்பலி, கூட்டுத் திருப்பலி, சிறப்புத் திருப்பலி, நவநாள் திருப்பலி எதுவாக இருந்தாலும் அப்பலியை ஒப்புக்கொடுக்கிற தனி ஒரு குருவோ, விசுவாசியோ பலன் பெறுவது அவரது தகுதியைப் பொறுத்ததே!! குறிப்பிட்ட இடமோ, நாளோ, கூட்டமோ அவரது தகுதியைத்தான் மிகுதியாக்க முடியும் என்பதும் உண்மையே!!!

No comments:

Post a Comment