† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 12 †
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு ✠
திருப்பலியில் இறைவார்த்தை வழிபாட்டை தொடர்ந்து இடம் பெறுவது நற்கருணை வழிபாடாகும். இதனை நாம் இரு கூறுகளாக பிரிக்கலாம். ஒன்று, அப்ப இரசத்தை காணிக்கையாக கொண்டு வருதல், அதனை ஆயத்தம் செய்து பீடத்தின் மேல் வைத்தல். இரண்டாவது, நற்கருணை மன்றாட்டு.
✠ காணிக்கைகளை தயார் செய்தல்:
முன்னர் அதாவது தொடக்க காலத்தில் இருந்தே, பீடத்திற்கு காணிக்கைகளை கொண்டு வரும் பழக்கம் இருந்தது. திருப்பலியில் பயன்படுத்த தேவையான அப்பம், இரசம் இதில் முதன்மையானது. முன்னர் “காணிக்கைகளை ஒப்புக்கொடுத்தல்” என்று சொல்லப்பட்ட இப்பகுதி இப்பகுதி இப்பொழுது “காணிக்கைகளை தாயார் செய்தல்” என்று அழைக்கப்படுகிறது. இதில் அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. கிறிஸ்துவும் அப்பத்தையும் இரசத்தையும் பயன்படுத்தினார். ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதற்கும், ஆலய பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்களும் நாளடைவில் காணிக்கைப் பவனியில் இடம் பெறலாயின. அப்பமும், இரசமும் பவனியில் இறுதியில் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் காணிக்கைப் பொருட்கள் பீடத்திற்குக கீழ் அல்லது வேறு இடத்தில் வைக்க வேண்டும். பீடத்தில் அல்ல.
✠ அர்த்தமுள்ள அடையாளக் காணிக்கை
அண்மைக் காலங்களில் புதியதொரு பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது, சில பொருட்களையும் விசுவாசிகளின் மன்றாட்டையும் இணைப்பது ஒர் தவறான செயலாகும். ஏனென்றால் இறைவார்த்தை வழிபாட்டை நிறைவு செய்வது விசுவாசிகளின் மன்றாட்டு. நற்கருணை வழிபாட்டை ஆரம்பிப்பது காணிக்கை பவனி. மேலும் காணிக்கைகள் ஏழைகளோடு பகிர்வதற்கு என்பதை மறக்ககூடாது.
✠ உண்டியல்
திருப்பலியின் போது ஏன் உண்டியல்?
“இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்து பார்ப்போம்...” “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். “உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.” (1 கொரி16:1-4) இது தொன்று தொட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சரியான முறைப்படி பார்ப்போமேயானால் இறைமக்களிடம் சேகரித்த பின்பே காணிக்கைப் பவனி இடம்பெற வேண்டும். காணிக்கைக்காக உண்டியல் சேகரிக்கும் போதும் பவனியின் போதும் பாடல்கள் இடம் பெறலாம். ஒவ்வொரு திருப்பலியிலும் ஒருவர் கொடுக்கக்கூடிய சிறப்புக் காணிக்கையாக அமைவது “தன்னைக் கொடுப்பதே” ஆகும். இதனையே தூய பவுலும் வலியுறுத்துகிறார். “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.” (உரோ 12:1) இறைவன் எம்மிடம் எதிர்பார்ப்பது பொன்னையும், பொருளையும் அல்ல, மாறாக நொறுங்குண்ட என் இதயத்தையே இறைவன் என்னிடம் எதிர்பார்க்கிறார். அப்படியானால் காணிக்கை தேவையில்லை தானே எனச் சொல்வது தவறு. நம்மையே நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றோம் என்பதனை சில அடையாளப் பொருட்கள் வழியாக வெளிப்படுத்துகிறோம்.
✠ அப்ப, இரசத்தை தயார் செய்தல்.
இது காணிக்கை நேரமல்ல, மாறாக, காணிக்கையை ஆயத்தம் செய்தல். அப்ப, இரசம் ஆகிய இறைவனின் கொடைகளுக்காக இறைவனை போற்றுவதாகும். இறைவனின் பராமரிப்பினால் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு நன்றி கூறுவதோடு, அவையே எங்களுக்கு “வாழ்வளிக்கும் அப்பமாகவும், ஆன்மிக பானமாகவும் மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
திராட்சை இரசத்தோடு தண்ணீர் சேர்க்கப்படுவது எதற்காக? யூதர்கள் இரசத்தோடு தண்ணீர் கலந்தே பருகினார். இரசத்தின் செறிவுத் தன்மையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டது திருச்சபை தந்தையர்கள் இதில் ஆன்மீக தன்மையை கண்டனர். புனித சிப்ரியன் “இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாகக் கலந்து விடுகிறோம்” என்று பொருள்படும் என்பார்கள். தண்ணீரும், இரசமும், மனித, தெய்வீக பண்புகளை வெளிப்படுத்துகிறது.
இதனை இரசத்தில் தண்ணீர் கலக்கும்போது சொல்லப்படுகின்ற செபம் தெளிவுபடுத்துகிறது.
“கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார் இத்தண்ணீர், இரச மறைப்பொருள் வழியாக, நாமும் அவருடன் இறை இயல்பில் பங்கு பெறுவோமாக” அடுத்து குருவானவர் தன்கைகளை கழுவுகிறார். இறைவனின் முன்னிலையில் வருமுன், இஸ்ரயேலர் தம்மைக் கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் (வி.பி 19:10-11) நாடு கடத்தப்பட்டு மீண்டும் இஸ்ரயேலுக்கு வந்த பொழுது, கடவுள் மக்களின் அகத்தூய்மையை வலியுறுத்துகிறார். (எசேக் 36:25) அதே போன்று இன்று குருவானவர் தன்கைகளை கழுவும் போது பின்வரும் செபத்தை செல்வார். “ஆண்டவரே என் குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் துய்மையாக்கும்” (தி.பா 51:2)
No comments:
Post a Comment