† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 10 †
✠ இறைவார்த்தை வழிபாடு - 2 ✠
கடந்த பதிவின் தொடர்ச்சியாக இறைவார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்றும் எழுத விளைகின்றேன். இது ஒரு சிலருக்கு சுவராசியமாக இல்லாமல் இருக்கலாம். மன்னியுங்கோ! ஒரு சின்ன வேண்டுகோள், தயவு செய்து தொடர்ந்து படிங்க, அப்புறம் சொல்லுங்க பிரயோசனமாக இருந்ததா? இல்லையா? இறைவார்தை முழக்கத்திற்கு பயன்படுத்தப்படும் திருவாசக நூலின் பொது முன்னுரையிலிருந்து ஒரு சில முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம்.
இயேசு நாசரேத்து செபக்கூடத்தில் எசாயா எழுதிய ஏட்டுச்சுருளின் ஓர் பகுதியை வாசித்து, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21) என்றார். அதே போன்றே இன்றும் இறைவார்தை முழக்கமிடும் போது 'கிறிஸ்துவே தம் வாக்கில்" உள்ளார். ஆக இறைவார்தையானது எழுதி முடிக்கப்பட்ட ஒர் புத்தகம் அல்ல. இறைவனின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது. எனவே நாம் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றுகூடும் போது முழங்கப்படும் இறைவார்த்தை கேட்போரின் உள்ளத்தில் பயனளிக்கின்றது, மேலும் புதிய வலிமையைத்தந்து வளப்படுத்துகின்றது. ஆகவே, திருவழிபாட்டில் இடையறாது அறிவிக்கப்படும் இறைவார்த்தை தூய ஆவியின் வல்லமையால் ஓர் உயிருள்ள, பயனுள்ள வார்தையாக என்றும் இருக்கிறது. இதனை பவுலடிகளார் இப்படிச் சொல்வார் 'நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன" (2 கொரி 1:19-20)
மேலும் திருவழிபாடுகளில் இறைவாக்கை கேட்பதால் திருச்சபை கட்டியமைக்கப்படுகிறது. வளர்ச்சி அடைகிறது. நம் செவிகளில் ஒலிக்கும் இறைவாக்கு மெய்யாகவே உள்ளத்தில் பயன் அளிக்க, தூய ஆவியின் செயல் தேவைப்படுகிறது. அவருடைய தூண்டுதலாலும், துணையாலும் தான் இறைவாக்கு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் அடித்தளமாகவும் நம் வாழ்விற்கு அளவு கோலாகவும், உறுதுணையாகவும் அமைகின்றது. நாம் திருப்பலிக்காக ஒன்று கூடும் போது இரு மேசைகளிலிருந்து ஆன்ம ஊட்டம் பெறுகின்றோம். ஓன்றில் இருந்து சோதனை பெறப்படுகின்றது, மற்றதிலிருந்து மிக நிறைவாக புனிதப் படுத்தப்படுகின்றது. இறைவாக்கில் கடவுளின் உடன்படிக்கை அறிவிக்கப்படுகின்றது. நற்கருணையில் அது புதிய, நித்திய உடன்படிக்கையாகப் புதுப்பிக்கப்படுகிறது.
இனிச்சற்று நடைமுறைகளைப் பார்ப்போமே! பொது போதனையின்படி, திருப்பலிக்காக தரப்பட்டிருக்கும் வாசகங்களையும், திருப்பாடல்களையும் திருப்பலியில் விட்டுவிடுவதோ, குறைப்பதோ முறையல்ல. விவிலியத்திற்குப் பதிலாக வேறு இடங்களிலிருந்து வாசகங்களை எடுப்பது மிகவும் கனமான குற்றமாகும். ஏனெனில், விவிலியம் ஊடாக இன்றும் 'இறைவன் தம் மக்களோடு பேசுகின்றார்" அடுத்து, இறைவாக்கு வாசகங்களை வாசிக்கும் புத்தகங்களும், இறைவன் தம் மக்களோடு பேசுகிறார் என்னும் எண்ணத்தைத் தூண்டி எழுப்புகின்றன. இப்புத்தகங்கள் விண்ணைச் சார்ந்தவற்றின் அடையாளமாகவும், அறிகுறியாகவும் இருப்பதால், அவையும் மெய்யாகவே தகுதி உள்ளவையாகவும், பொருத்தமாக அணி செய்யப்பட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.
வாசகத்தாள்கள், கையேடுகள் வாசக புத்தகத்திற்கு பதிலாக பயன்படுத்துவது இறைவாக்கின் மாண்புக்கும் பொருந்துவதாக இல்லை. அடுத்து இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய்வோம்..
No comments:
Post a Comment