† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 14 †
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - III ✠
நற்கருணை மன்றாட்டுக்கள்
இப்பதிவிலே நற்கருணை மன்றாட்டில் உள்ள பல்வேறு கூறுகளைப் பற்றி பார்ப்போம். அந்த வகையிலே நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருப்பது தொடக்கவுரை.
✠ தொடக்கவுரை ✠
தொடக்கவுரை நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருக்கின்றது. அதாவது 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலுடன் தொடங்குவது. தொடக்கவுரையின் நோக்கம் யாது என்பதை உரையாடலில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது 'நம் இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம், அது தகுதியும் நீதியுமானதே" ஆக நம் கடவுளை போற்றுவது தான் தொடக்கவுரையின் நோக்கம் இதனை ஆங்கிலத்தில் "Preface'' என்றழைப்போம். மீட்பின் வரலாற்றில் கடவுள் ஆற்றியுள்ள வியப்பிற்குரிய செயல்களையும், அன்புக்குரிய செயல்களையும் எடுத்துரைத்து நன்றி சொல்லி அவரை புகழ்வதாகும். இன்று நமது திருப்பலிப் புத்தகத்தில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், விழாக்களுக்கும், புனிதர்களின் விழாவிற்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூறுக்கும் மேற்பட்ட தொடக்கவுரைகள் உள்ளன. இனிமேல் திருப்பலியில் பங்கேற்கும் போது, நாம் எதற்காக நன்றி கூறுகின்றோம் என்பதை அவதானமாக கவனியுங்கள். அர்த்தம் உணர்ந்து பங்கு கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தொடக்கவுரையை நிறைவுக்கு கொண்டு வருவது தூயவர், தூயவர் என்ற ஆர்ப்பரிப்பு பாடல்.
✠ தூயவர்... தூயவர்.... ✠
இது வானதூதரின் வாழ்த்தொலியும் 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர், மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" (எசா6:3) இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் கூட்டம் எழுப்பிய ஆர்ப்ரிப்பும் 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசான்னா" (மத்21:9) இணைத்த ஓர் பாடலாகும். ஒவ்வொரு திருப்பலியிலும் பாடுவதே சிறந்தது. காணிக்கை மீது தூய ஆவி தூயவர் என்ற பாடலைத் தொடர்ந்து காணிக்கை பொருட்களாகிய அப்ப, இரசம் மீது அவற்றைப் புனிதப்படுத்தவும், அவை இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுவதற்கு தூய ஆவியானவரை வேண்டும் நேரமிது. இறைவன், தன் ஆவியின் வல்லமையில் இதனை செய்து முடிக்கின்றார். 'ஆகவே இறைவா, உம் தூய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளை புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசுவின் உடலும், இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக". எனவே இது குருவானவருடைய ஆற்றலால் அல்ல, தூய ஆவியின் வல்லமையால் ஏற்படுகின்றது.
✠ நற்கருணையை ஏற்படுத்தல் ✠
இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் இப்பகுதி, நற்கருணை மன்றாட்டின் மிக முக்கிய பகுதியாகும். புதிய ஏற்பாட்டில் நற்கருணையை ஏற்படுத்திய வரலாற்றை யோவான் தவிர்ந்த ஏனைய மூன்று நற்செய்தியாளர்களும், பவுல் அடிகளாரும் தந்துள்ளார்கள். இவர்கள் வெவ்வேறு வேறுபாடுகளோடு இந்நிகழ்வை எழுதி வைத்துள்ளார்கள். இதற்கு காரணம் இவர்கள் எழுதுவதற்கு முன்னதாக, கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திய வெவ்வேறு வாய்மொழி பாடல்கள் இவை. இவை மிகவும் பழமை வாய்ந்தவை. முன்னைய திருத்தந்தை மறைந்த 6ம் பவுல், அனைத்து நற்கருணை மன்றாட்டுக்களிலும் ஒரே மாதிரியான பாடல்கள் இருக்க வேண்டுமென விரும்பினார். இன்று ஒரே பாடலையே அனைத்திலும் பயன்படுத்துகின்றோம். இந்த வேளை ஆராதனைக்குரிய நேரமல்ல, சில இடங்களில் இவ்வேளையில் 'என் ஆண்டவரே என் தேவனே" என மக்கள் ஆர்ப்பரிப்பு சொல்வதை காண்கின்றோம்.
இந்த நடைமுறையில் தவிர்க்கப்பட வேண்டியதாகும். இருப்பினும் மறைமாவட்ட ஆயரின் அனுமதி இருப்பின் பயன்படுத்தலாம். நம்பிக்கை மறைபொருள் ஆர்ப்பரிப்பு
நற்கருணை ஏற்படுத்தப்பட்ட பகுதியை தொடர்ந்து, இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரின் வருகையை எதிர் நோக்கோடு காத்திருக்கவும் வேண்டும் என விளக்குவதாய் அமைகின்றது.
இதனையே பின்வரும் ஆர்பரிப்பு காட்டும் 'ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்" புதிய திருப்பலி புத்தகத்தின் படி மூன்று மாற்று பாடல்கள் பயன்பாட்டுக்காக தரப்பட்டுள்ளன.
✠ மக்கள் மீது தூய ஆவி ✠
காணிக்கை பொருளான அப்ப, இரசம் கிறிஸ்துவின் உடலாக இரத்தமாக மாற வேண்டி கூவியழைத்த தூய ஆவி மீண்டும் கூவியழைக்கப்படுகிறது. கூடியுள்ள இறைமக்கள் மீது பொழியப்பட வேண்டப்படுகின்றது. இறைமக்கள் மீது வேண்டப்படும் தூய ஆவி என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்க கூடும். 'உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள், கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று, கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக" கிறிஸ்துவின் மறையுடலாம் இறைமக்கள் சமூகம் ஒன்று சேர்க்கப்பட வேண்டுமென்று குருவானவர் செபிக்கின்றார்.
✠ திருச்சபையின் தேவைகளுக்காக ✠
இப்பகுதியிலே வாழ்வோருக்காக மன்றாடுகின்றோம். திருத்தந்தை உட்பட பல்வேறு பணிநிலைகளில் இருக்கும் அனைவருக்காகவும், மேலும் மக்கள் அனைவரும் ஆழ்ந்த இறையன்பில் நிறைவு பெற வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.
✠ இறந்தோருக்காக ✠
வாழ்வோருக்காக மன்றாடியதைத் தொடர்ந்து, இப்பொழுது இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு, கிறிஸ்துவில் துயில் கொள்ளும் அனைவரையும், இறைவன் கருணையோடு நினைவு கூர்ந்து விண்ணகப் பேரின்பத்தில் அவர்களுக்குப் பங்களிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கின்றார்.
✠ தூயோர் நினைவு ✠
நற்கருணை மன்றாட்டின் நிறைவுக்கு முன்னதாக, தூயோரை நினைவு கூறுகின்றோம். ஏற்கனவே விண்ணக வாழ்வின் நிறைவை சுவைக்க பேறுபெற்ற கன்னிமரியாள், திருத்தூதர்கள், புனிதர்கள், இவர்களின் பரிந்துரையால், பயணிக்கும் திருச்சபை இவர்களோடு தோழமை கொண்டு முடிவில்லா வாழ்வில் பங்பெற மன்றாடுகின்றோம்.
✠ இறுதிப் புகழுரை ✠
நற்கருணை மன்றாட்டின் 'கொடுமுடி" அல்லது 'சிகரம்" இது தான், நன்றி, புகழ்ச்சி இவற்றின் உச்சக்கட்டம் இது. இதனை 'இறுதி சிறப்புப் புகழுரை" என்றழைப்போம்.
திருச்சபை முழுவதும் தூய ஆவியோடு ஒன்றித்து, கிறிஸ்து வழியாக விண்ணக தந்தைக்கு நன்றியும், புகழும் கூறுகின்றது. இம்மன்றாட்டின் இறுதியில் மக்கள் அனைவருமாக 'ஆமென்" என்று பதிலளிப்பர். சில இடங்களில் இச்செபத்தை, அதாவது இறுதி புகழுரையை மக்கள் செபிப்பது வழக்கமாக உள்ளது. இது தவறான நடைமுறையாகும்.
No comments:
Post a Comment