† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 13 †
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - II ✠
திருப்பலியின் மையம் நற்கருணை மன்றாட்டாகும். இது ஒருசிலர் நினைப்பது போன்று பல செபங்களின் தொகுப்பு அல்ல. மாறாக பல கூறுகளைக் கெண்ட ஒரு நீண்ட செபமாகும். இப்படி எழுதும் போது ஏனைய திருப்பலிச் செபங்கள் முக்கியமற்றவை என்று பொருள் கொள்ள கூடாது.
நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரையில் அமைந்துள்ள 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலோடு ஆரம்பமாகிறது. 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக" என்ற வார்த்தைகள் திருவிவிலியத்தில் பல்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கின்றன.
மனிதரிடத்தில் குறிக்கப்பட்ட, பணிக்கப்பட்ட பணியில் இருப்பதாக கடவுள் அளிக்கும் வாக்குறுதி மோயீசனுக்கு கடவுள் 'நான் உன்னோடு இருப்பேன்" (வி.ப 3:12), யோசுவாவுக்கு அதே வாக்குறுதி (1:5) எரேமியா இறைவாக்கினரின் கடின பணி வாழ்வில் இறைவன் வாக்குறுதி அளிக்கின்றார்(1:8, 'நான் உன்னோடு இருக்கின்றேன்"), இஸ்ரயேலை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கிதியோனுக்கு இறைவன் அவருடைய தூதர் மூலம் உத்தரவாதம் 'வலிமைமிக்க வீரனே" 'ஆண்டவர் உன்னோடு இருக்கின்றார்" (நீதித்தலைவர்கள் 6:12) அதே போன்று கிறிஸ்துவின் உன்னத பணிக்காய் அனுப்பப்பட்டவிருக்கின்ற, திருப்பலி நிறைவேற்ற கூடியிருக்கும் இறைமக்கள் சமூகத்தோடு இறைவன் உறைகின்றார் என்பதை வலியுறுத்துகின்றது.
அடுத்து குரு 'இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்" என்று கூறி தகுதியோடு, ஆக்கபூர்வமாக பங்கேற்ற அழைக்கின்றார். ஆதற்கு இறைமக்கள் 'நாம் ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்" என்று பதில் அளிக்கின்றனர். இறுதியாக 'நம்இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம்" என்றுரைத்து கிறிஸ்து வழியாக இறைவன் நமக்கு செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூறுமாறு அழைக்கின்றார். திருப்பலி என்பது நாம் பெற்றுக் கொண்ட மீட்பு எனும் பெரும் கொடைகளாக, கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவது தகுதியும், நீதியுமானதே என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.
1. பின்னணி :
1.1 கடைசி இராவுணவு
நற்கருணை மன்றாட்டுக்கள் தோன்றுவதற்கு மூலக் காரணம் யாது? நற்செய்தி பகுதியிலே கடைசி இராவுணவு நிகழ்வின் போது இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் 'அப்பத்தை தம் திருக்கரங்களில் எடுத்து, 'இறைவனுக்கு நன்றி கூறி, வாழ்துரைத்து" (மாற் 14:17) என்ற நற்செய்தி பகுதி மூலக் காரணமாக அமைந்துள்ளது. கடைசி இராவுணவு, யூதர்களின் பாஸ்கா விழாவின் போது இடம் பெற்றது என்பதும் அப்பொழுதே இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார் என்பதையும் மறந்து போகலாகாது.
1.2 யூதர்கள் பெராக்கா (BERAKAH)
பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு ஒவ்வொரு உணவு வேளையும் முக்கியமானது. மேலும் ஒவ்வொரு உணவும் வழிபாட்டு தன்மை உடையதாக இருந்தது. அதிலும் சிறப்பாக பாஸ்கா விழாவிற்கு முந்தின நாள் மாலை உணவு திருவழிபாட்டு தன்மையுடையதாக இருந்தது. மேலும் அப்பத்தையும், இரசகிண்ணத்தையும் கையில் எடுத்து, இறைவனுக்கு, அவருடைய அன்புக்கும், கருணைக்கும், வியத்தகு செயல்களுக்கும் நன்றி கூறுவது 'இறைபுகழ்ச்சியாக" அமைந்தது. இதனையே எபிரேய மொழியில் 'பெராக்கா" என்று அழைப்பதுண்டு.
1.3 புதிய ஏற்பாடு
'இறைவனின் புகழை உரைத்தல்" அல்லது இறைவனுக்கு நன்றி செலுத்துதல் என்பது ஒரே கருத்தையே வலியுறுத்துக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இதனை வெளிப்படுத்த 'பெராக்கா" (Berakah)) என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தபட்டாலும், புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழியின் படி 'நன்றி கூறுதல்" (Eucharistein), 'புகழுரைத்தல்" (Eulogein) என்றசொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தோன்றியது எவ்வாறு?
திருச்சபையின் ஆரம்பகாலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் இன்று உள்ளது போல் எழுதிவைக்கப்பட்ட அதிகாரபூர்வமான செபங்களாக இருக்கவில்லை. தொடக்க காலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப சொல்லப்பட்டன. ஆகவே 4ஆம் நூற்றாண்டின்முன், ஒரு நற்கருணை மன்றாட்டு மாத்திரம் இருந்ததாகவும், மேலும், அது திருவழிபாட்டுக்கு தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார். 4ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழி, வழிபாட்டு மொழியாக மாறியது. இக்காலகட்டத்தில் தான் படிப்படியாக உரோமையில் 'உரோமை நற்கருணை மன்றாட்டு" உருவாகியது. இதனை ROMAN CANON அல்லது CANON I என்று அழைப்பது உண்டு.
“CANON” என்ற சொல்லுக்கு 'அளவு கோல்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது எந்தவித மாற்றமும் இல்லாமல், செபத்தை கூட்டியோ குறைத்தோ செபிக்க முடியாது. எழுதியுள்ளபடியே செபிக்க வேண்டும். 2ம் வத்திக்கான் சங்கம் வரை இந்த உரோமை Canoan தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏன் இத்தகைய இறுக்கம்?
4ம் நூற்றாண்டு வரை சூழலுக்கும், தலைமை ஏற்பவரின் திறமைக்கும் ஏற்ப செபிக்கப்பட்ட இச்செபம் இத்தகைய இறுக்க நிலைக்கு செல்வதற்கு காரணம் அக்காலத்தில்
முளைக்கத் தொடங்கிய தப்பறை கொள்கைகள் (உ + ம் ஆரியனிஸம் (Arianism). இக்கொள்கைகளுக்கு எதிராக கிறிஸ்தவ சமய கோட்பாடுகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் அவசியம் ஏற்பட்டது. எனவே தான் எழுதப்பட்டஅதிகாரப் பூர்வமான ஒரேயொரு நற்கருணை மன்றாட்டு 1970 வரை பன்படுத்தப்பட்ட வந்துள்ளது. இன்று பல புதிய நற்கருணை மன்றாட்டுகள் தோன்றிவிட்டன.
No comments:
Post a Comment