அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

உங்களுக்குத் தெரியுமா..........................

உங்களுக்குத் தெரியுமா..........................

கி.பி 1200ல் திருத்தந்தை மூன்றாம் இன்னாசென்ட் திருவழிப்பாட்டிற்குறிய ஆடைகளில் பல்வேறு வண்ணங்களை நிர்ணயித்தார்.

வெள்ளை - சாதாரண திருவிழா
சிவப்பு - பெந்தகோஸ்தே மற்றும் மறைசாட்சிகளின் நினைவு
கருப்பு - நோன்பு காலங்களிலும் இறந்தோர் திருப்பலியிலும்
பச்சை - சாதாரண நாட்களில்.

† திருப்பலியின் உட்கூறுகள் - இறுதிப் பாகம் † ✠ முடிவுச் சடங்கு ✠



† திருப்பலியின் உட்கூறுகள் - இறுதிப் பாகம் †

✠ முடிவுச் சடங்கு ✠

அறிவித்தல்கள் வழமையாக பெரும்பாலான ஆலயங்களில் நற்கருணை விருந்தின் பின், அறிவித்தல்கள், திருமண அறிவித்தல்கள் இடம் பெறுவதை காண்கின்றோம். ஆனால் இவையெல்லாம் நன்றி மன்றாட்டுக்குப் பிறகு தான் வாசிக்கப்பட வேண்டும் என்பது திருச்சபையின் போதனையாக இருக்கின்றது. (எண் 123)

இறுதி ஆசீர்:

7ம் நுற்றாண்டு சவால்களில். இறைமக்களை ஆயர் ஆசீர்வதித்தார். 11ம் நூற்றாண்டின் பின் தான் இறைமக்கள் ஆசீர்வதிக்க குருக்கள் அனுமதிக்கப்பட்டனர். 2ம் வத்திக்கான் சங்கத்தின் விளைவால் புதிய திருப்பலி புத்தகத்தில் மூன்று வகையான ஆசீர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

(அ) சாதாரண ஆசீர் :-
இது தினமும் திருப்பலியில் பயன்படுத்தப்படும் ஆசீர் (எல்லா வல்ல இறைவன் பிதா....)

(ஆ) சிறப்பு ஆசீர் :-
இச்சிறப்பு ஆசீரில் பொதுவாக மூன்று ஆசியுரைகள் இருக்கும். இவ்வாசீர் வழங்கப்படும் போது, இறைமக்கள் யாவரும் சிரம் தாழ்த்தி வேண்டுவர். ஒவ்வொரு ஆசியுரைக்கு பிறகு மக்கள் 'ஆமென்" என்று பதில் கூறுவர். அதன் பிறகு குரு மக்களுக்கு ஆசீர் வழங்குவார்.

(இ) மக்கள் மீது மன்றாட்டு :-
மேலே கூறப்பட்ட சிறப்பு அசீருக்குப் பதிலாக குரு 'மக்கள் மீது மன்றாட்டு" எனப்படும் சிறப்பு ஆசீரை மக்கள் மீது கைகளை விரித்து செபிக்க, மக்கள் சிரம் தாழ்த்தி நின்றவர்களாய். செபத்தின் நிறைவில் 'ஆமென்" என்று பதிலளிக்க, குருவானவர் ஆசீர் வழங்குவார். இத்தகைய 'மக்கள் மீது மன்றாட்டுக்கள்" மொத்தம் 27 திருப்பலி புத்தகத்தில் உண்டு.

அனுப்பி வைத்தல்:

நிறைவாக, இறை ஆசீர் பெற்ற, இறைமக்கள் சமூகத்தை நோக்கி, குருவானவர் 'சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது" என்கின்றார். மக்களும் 'இறைவா உமக்கு நன்றி" என்று பதில் அளிக்கின்றார். திருப்பலி முடிந்து மக்கள் வீட்டிற்கும். பணி வாழ்விற்கும் திரும்பிச் செல்லும் போதும், திருப்பலியில் செவி கொடுக்கப்பட்ட இறைவார்த்தைகள் வாழப்பட வேண்டுமென்பதையும், பங்கேற்ற திருவிருந்தைப் போன்று நாமும் பிறர்க்காக வாழ பலியாக்கப்பட வேண்டுமென்பதையும் நினைவூட்டி
வழியனுப்பி வைக்கப்படுகின்றனர் 'வாழ்விருந்து மலர்வதே வழிபாடு. அவ்வழிபாட்டின் தொடர்ச்சியே வாழ்க்கை" என்பதை உணர்வோம்.

திருப்பலி மறைஉண்மை: முற்றும்

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 16 † ✠ நற்கருணை விருந்து... (தொடர்ச்சி) ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 16 †

✠ நற்கருணை விருந்து... (தொடர்ச்சி) ✠

அப்பம் பிட்குதல... (உலகின் பாவம்...)
சமாதானப் பகிர்வை தொடர்ந்து இடம் பெறுவது 'அப்பம் பிட்கும்" சடங்காகும். இது மிகவும் பழமையான சடங்காகும். மேலும் ஆதித்திருச்சபையிலே நாம் இன்று திருப்பலி என்று அழைப்பதை அவர்கள் 'அப்பம் பிட்குதல" என்றே அழைத்தனர். (தி.ப. நூல் 2:42, 46 ; 20:7, 1கொரி 10:16). அப்பம் ஏன் பிட்;க்கப்பட வேண்டும்? பகிர்ந்து கொடுப்பதற்கு என்பதே பதில். முன்னர் மக்கள் பெரிய அப்பங்களை கொண்டு வந்தனர். ஆகவே அவை பகிர்வதற்கு உடைக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் 'உலகின் பாவம் போக்கும்" என்ற செபம் சொல்லாப்படும், இச்செபம் கி.பி7ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செபத்தின் பின்னனி யோ 1:23 இல் திருமுழுக்கு யோவான் இயேசுவை உலகின் பாவம் போக்கும் செம்மறியாக சுட்டிக் காட்டுகின்றார். (1கொரி 5:7, 1பேதுரு 1: 18-19)

ஆனால் இன்று தனித்தனி அப்பங்கள் சிறு, சிறு துண்டுகளாக (வட்டம்) தயார் செய்யப்பட்டு திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே குரு தமக்குரிய பெரிய அப்பத்தை மட்டும் உடைத்து, ஒரு சிறு துண்டை இரத்தத்தில் கலக்கின்றார். இது தொடக்க காலத்தில் இருந்தே வரும் "COMMINGLING” என்றழைக்கப்படும் மிகப்பழமையான பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் ஏனைய தலத் திருச்சபைக்குமிடையே உள்ள 'ஒன்றிப்பின் அடையாளம்" என்று சொல்லப்படுகின்றது. திருத்தந்தை அருகில் இருக்கும் பங்குகளுக்கு தனது திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் இருந்து ஒரு சிறு துண்டை பகிர்வார். அவர்கள் (குரு) தங்களுடைய அடுத்த திருப்பலியில் இரத்தத்தில் இடுவார்கள்.
அவ்வாறே ஏனைய ஆயர்களும் தங்கள் குருக்களோடு பகிர்வார்கள். இது கிறிஸ்துவின் பலியின் ஒன்றிப்பினை குறித்துக் காட்டுகின்றது.

✠ நன்றி மன்றாட்டு ✠

நற்கருணை விருந்தை தொடர்ந்து இடம் பெறுவது நன்றி மன்றாட்டு. நற்கருணை விருந்தின் பொழுது பொருத்தமான பாடல் பாடப்படுகின்றது. நற்கருணை பெற்றவர்களும், பெறவிருப்பவர்களும் பாடலில் பங்கேற்க வேண்டும். நற்கருணை பெற்றவர்கள் ஆண்டவர்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வில் பெரும்பாலும் அமைதியாகி விடுவார்கள். அப்படியில்லாமல் மனதாலே ஆண்டவர்க்கு நன்றி சொன்ன வண்ணமே தொடர்ந்து பாடலில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. அனைவரும் நற்கருணை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு, புனித பாத்திரங்களை துப்பரவு செய்ததன் பிற்பாடு, குருவானவர் மன்றாடுவோமாக என்று அனைவரையும் செபிக்க அழைக்கின்றார். இதனை நன்றி மன்றாட்டு என்போம். குருவானவருடைய அழைப்பை தொடர்ந்து அனைவரும் சற்று நேரம் மௌனமாக ஆண்டவர்க்கு நன்றி கூறி செபிப்பார்.

அதனைத் தொடர்ந்து குருவானவர் தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறிச் செபிப்பார். வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்காக, புத்துயிர் அளிக்கும்
கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தத்திற்காக நன்றி கூறுகின்றார். மீட்புக்காக நன்றி கூறுகின்றார். ஈற்றிலே கிறிஸ்தவ மதிப்பீடுகளை வாழ்வாக்க, கிறிஸ்தவ ஓழுக்கத்தில் வளர, அதனூடாக வானக விருந்தில் பங்கு பெற தேவையான அருளை வேண்டி மன்றாடுகின்றார். அனைவரும் 'ஆமென்" என்று பதில் அளிப்பார். இத்தோடு நற்கருணைச் சடங்கு நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலியின் நான்காம் பகுதியும், இறுதிப் பகுதியுமான 'முடிவுச் சடங்கு" இடம் பெறும்.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 15 † ✠ திருவிருந்துச் சடங்கு ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 15 †

✠ திருவிருந்துச் சடங்கு ✠

5ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நற்கருணை மன்றாட்டைத் தொடர்ந்து, நற்கருணை விருந்து இடம் பெற்றது. 'டிடாக்கே" என்ற ஆவணத்திலிருந்து இது தெளிவாகின்றது. திருவிருந்துச் சடங்கில் இருக்கும் பல்வேறு கூறுகள் வெவ்வேறு காலங்களில் சேர்க்கப்பட்டவையாக உள்ளன. பல்வேறு காலங்களில் இக்கூறுகளின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈற்றில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினூடாக இக்கூறுகள் ஓர் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. இன்று உரோமைத் திருப்பலியில் நற்கருணை திருவிருந்து சடங்கில் பின்வரும் கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1. இயேசு கற்பித்த செபம்,
2. அமைதிக்கான சடங்கு
3. அப்பத்தை பிட்குதல்
4. சிறுதுண்டு திரு அப்பம் இரத்தத்தோடு கலத்தல்
5. உலகின் பாவம் போக்கும் செம்மறி
6. குருவானவர் தம்மை ஆயத்தம் செய்யும் தனிப்பட்ட செபம்,
7. திருவிருந்துக்கு அழைப்பு, திருவிருந்துப் பல்லவி அல்லது பாடல்,
8. நன்றி மன்றாட்டு

✠ இயேசு கற்பித்த செபம் ✠

திருப்பலியில் வசீகரத்தின் பின் செபம் சொல்வது மிகவும் பழமையான மரபாகும். 4 நூற்றாண்டு அளவில் இது நடைமுறையில் இருந்துள்ளது. நற்கருணை மன்றாட்டுக்குப் பிறகும், திருவிருந்தில் பங்கேற்கும் முன்னும் இச்செபம் சொல்லப்பட்டது.

ஏன் இவ்விடத்தில் இச்செபம் சொல்லப்பட்டது?

இச்செபத்தின் முதல் பகுதி இறைவனை புகழ்வதாகும், ஆகவே நற்கருணை மன்றாட்டின் ஓர் தொடர் போன்று உள்ளது. மேலும் இரண்டாம் பகுதி அன்றாட உணவிற்காக, பாவ மன்னிப்புக்காக செபிப்பது திருவிருந்து சடங்கோடு இணைக்கின்றது. இயேசு கற்பித்த செபம் நற்செய்தியாளர்கள் மத்தேயு 6: 9- 13, லூக்கா 11:2-4 ஆகியோரால் தரப்பட்டுள்ளன. இருப்பினும் மத்தேயு நற்செய்தியில் உள்ள செபமே திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆண்டவரே தீமை... (THE EMOLISM) இயேசு கற்பித்த செபத்தின் தொடர்ச்சியாக 'ஆண்டவரே தீமைகள்..." என்ற செபம் இடம் பெறுகிறது. இச்செபத்திற்கு கிரேக்க மொழியை தழுவிய ஒரு சொல் பாவிக்கப்படுகின்றது. அது “EMOLISM” என்றழைக்கப்படுகின்றது. இதன் பொருள் 'இடைச் செருகல்" என்பதாகும். இயேசு கற்பித்த செபத்திலே 'எங்களை தீமைகளில் இருந்து பாதுகாத்தருளும்" என்று செபித்து முடிக்க, அதன் தொடர்ச்சியாக அனைத்து தீமைகளிலிருந்தும் எம்மை பாதுகாக்க, அதாவது குழப்பங்கள், பாவம் போன்றவற்றிலிருந்து சகலவிதமான அங்கலாய்ப்புக்களில் இருந்து பாதுக்க வேண்டுவதோடு, நீதி நிறைந்த அமைதி குடி கொள்ள மன்றாடுகின்றோம்.

உலகில் அமைதி வேண்டுமெனில் தனிமனித வாழ்வில் அமைதி தேவை என்பதை மறத்தலாகாது. ஈற்றிலே நாம் இறையேசுவின் மீள் வருகைக்காக மகிழ்வோடு கூடிய எதிர்நோக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று குருவானவர் செபிக்க, 'ஏனெனில், அரசம், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே" என்று இறைமக்கள் சமூகம் ஆர்ப்பரித்து பதில் சொல்லும்.

✠ அமைதிக்கான செபம் ✠

திருவிருந்தில் பங்கேற்குமுன் சமாதான உறவுப் பரிமாற்றம் அவசியம். இச்செபம் கிறிஸ்து தன்னுடைய
சீடர்களுக்கு கொடுத்த வாக்குறுதியோடு ஆரம்பாமாகிறது. 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்".. (யோ 14: 27) எபிரேய மொழியில் அமைதிக்கு 'ஷாலோம்" என்பர். இதன் பொருள் 'நலமாக இருத்தல்" அதாவது இறைவனோடு, அயலாரோடு, இயற்கையோடு, தன்னோடு, நலமான உறவு இருப்பது அவசியம் அமைதியோடு வாழ்வதற்கு. இத்தகைய அமைதி இயேசுவின் பாஸ்கா மறைபொருளினால் நமக்கு கிடைத்த கொடை.

சமாதான வாழ்த்து மற்றும் பரிமாற்றம் இச்செபத்தைத் தொடர்ந்து, உறவின் வாழ்த்தை அறிவித்து, அமைதியை பகிர்ந்து கொள்ள இறைமக்களை குரு அழைக்கின்றார். ஏனெனில் தம் சகோதர, சகோதரிகளோடு சமாதானம் இன்றி, நற்கருணை விருந்தில் பங்கேற்பது பொருள் அற்றது. (மத் 5:24) ஆகவே மக்கள் உண்மையாகவே மற்றவரோடு சமாதான உறவை பகிர வேண்டும். ஒருவரை ஒருவர். விசேஷமாக எனக்கு தீங்கு செய்தவரை நான் மன்னிக்க வேண்டும். கடமைக்காக, கட்டாயத்திற்காக, வாடிக்கையாக இச் சடங்கில் பங்கேற்கக்கூடாது. ஒருவர் ஒருவருடைய முகத்தைப்பார்த்து, புன்முறுவலோடும், மகிழ்வோடும், சமாதானத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் இரு பக்கமும் யாருமில்லாத போதும் கும்பிடுவதும், தலையாட்டி போன்று இருபக்கமும் தலையாட்டுவதும் பொருளற்றது. எனவே தவிர்க்கப்படவேண்டியது.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 14 † ✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - III ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 14 †


✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - III ✠


நற்கருணை மன்றாட்டுக்கள்

இப்பதிவிலே நற்கருணை மன்றாட்டில் உள்ள பல்வேறு கூறுகளைப் பற்றி பார்ப்போம். அந்த வகையிலே நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருப்பது தொடக்கவுரை.

✠ தொடக்கவுரை ✠

தொடக்கவுரை நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருக்கின்றது. அதாவது 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலுடன் தொடங்குவது. தொடக்கவுரையின் நோக்கம் யாது என்பதை உரையாடலில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது 'நம் இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம், அது தகுதியும் நீதியுமானதே" ஆக நம் கடவுளை போற்றுவது தான் தொடக்கவுரையின் நோக்கம் இதனை ஆங்கிலத்தில் "Preface'' என்றழைப்போம். மீட்பின் வரலாற்றில் கடவுள் ஆற்றியுள்ள வியப்பிற்குரிய செயல்களையும், அன்புக்குரிய செயல்களையும் எடுத்துரைத்து நன்றி சொல்லி அவரை புகழ்வதாகும். இன்று நமது திருப்பலிப் புத்தகத்தில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், விழாக்களுக்கும், புனிதர்களின் விழாவிற்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூறுக்கும் மேற்பட்ட தொடக்கவுரைகள் உள்ளன. இனிமேல் திருப்பலியில் பங்கேற்கும் போது, நாம் எதற்காக நன்றி கூறுகின்றோம் என்பதை அவதானமாக கவனியுங்கள். அர்த்தம் உணர்ந்து பங்கு கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொடக்கவுரையை நிறைவுக்கு கொண்டு வருவது தூயவர், தூயவர் என்ற ஆர்ப்பரிப்பு பாடல்.

✠ தூயவர்... தூயவர்.... ✠

இது வானதூதரின் வாழ்த்தொலியும் 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர், மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" (எசா6:3) இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் கூட்டம் எழுப்பிய ஆர்ப்ரிப்பும் 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசான்னா" (மத்21:9) இணைத்த ஓர் பாடலாகும். ஒவ்வொரு திருப்பலியிலும் பாடுவதே சிறந்தது. காணிக்கை மீது தூய ஆவி தூயவர் என்ற பாடலைத் தொடர்ந்து காணிக்கை பொருட்களாகிய அப்ப, இரசம் மீது அவற்றைப் புனிதப்படுத்தவும், அவை இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுவதற்கு தூய ஆவியானவரை வேண்டும் நேரமிது. இறைவன், தன் ஆவியின் வல்லமையில் இதனை செய்து முடிக்கின்றார். 'ஆகவே இறைவா, உம் தூய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளை புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசுவின் உடலும், இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக". எனவே இது குருவானவருடைய ஆற்றலால் அல்ல, தூய ஆவியின் வல்லமையால் ஏற்படுகின்றது.

✠ நற்கருணையை ஏற்படுத்தல் ✠

இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் இப்பகுதி, நற்கருணை மன்றாட்டின் மிக முக்கிய பகுதியாகும். புதிய ஏற்பாட்டில் நற்கருணையை ஏற்படுத்திய வரலாற்றை யோவான் தவிர்ந்த ஏனைய மூன்று நற்செய்தியாளர்களும், பவுல் அடிகளாரும் தந்துள்ளார்கள். இவர்கள் வெவ்வேறு வேறுபாடுகளோடு இந்நிகழ்வை எழுதி வைத்துள்ளார்கள். இதற்கு காரணம் இவர்கள் எழுதுவதற்கு முன்னதாக, கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திய வெவ்வேறு வாய்மொழி பாடல்கள் இவை. இவை மிகவும் பழமை வாய்ந்தவை. முன்னைய திருத்தந்தை மறைந்த 6ம் பவுல், அனைத்து நற்கருணை மன்றாட்டுக்களிலும் ஒரே மாதிரியான பாடல்கள் இருக்க வேண்டுமென விரும்பினார். இன்று ஒரே பாடலையே அனைத்திலும் பயன்படுத்துகின்றோம். இந்த வேளை ஆராதனைக்குரிய நேரமல்ல, சில இடங்களில் இவ்வேளையில் 'என் ஆண்டவரே என் தேவனே" என மக்கள் ஆர்ப்பரிப்பு சொல்வதை காண்கின்றோம்.

இந்த நடைமுறையில் தவிர்க்கப்பட வேண்டியதாகும். இருப்பினும் மறைமாவட்ட ஆயரின் அனுமதி இருப்பின் பயன்படுத்தலாம். நம்பிக்கை மறைபொருள் ஆர்ப்பரிப்பு
நற்கருணை ஏற்படுத்தப்பட்ட பகுதியை தொடர்ந்து, இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரின் வருகையை எதிர் நோக்கோடு காத்திருக்கவும் வேண்டும் என விளக்குவதாய் அமைகின்றது.

இதனையே பின்வரும் ஆர்பரிப்பு காட்டும் 'ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்" புதிய திருப்பலி புத்தகத்தின் படி மூன்று மாற்று பாடல்கள் பயன்பாட்டுக்காக தரப்பட்டுள்ளன.

✠ மக்கள் மீது தூய ஆவி ✠

காணிக்கை பொருளான அப்ப, இரசம் கிறிஸ்துவின் உடலாக இரத்தமாக மாற வேண்டி கூவியழைத்த தூய ஆவி மீண்டும் கூவியழைக்கப்படுகிறது. கூடியுள்ள இறைமக்கள் மீது பொழியப்பட வேண்டப்படுகின்றது. இறைமக்கள் மீது வேண்டப்படும் தூய ஆவி என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்க கூடும். 'உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள், கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று, கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக" கிறிஸ்துவின் மறையுடலாம் இறைமக்கள் சமூகம் ஒன்று சேர்க்கப்பட வேண்டுமென்று குருவானவர் செபிக்கின்றார்.

✠ திருச்சபையின் தேவைகளுக்காக ✠

இப்பகுதியிலே வாழ்வோருக்காக மன்றாடுகின்றோம். திருத்தந்தை உட்பட பல்வேறு பணிநிலைகளில் இருக்கும் அனைவருக்காகவும், மேலும் மக்கள் அனைவரும் ஆழ்ந்த இறையன்பில் நிறைவு பெற வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

✠ இறந்தோருக்காக ✠

வாழ்வோருக்காக மன்றாடியதைத் தொடர்ந்து, இப்பொழுது இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு, கிறிஸ்துவில் துயில் கொள்ளும் அனைவரையும், இறைவன் கருணையோடு நினைவு கூர்ந்து விண்ணகப் பேரின்பத்தில் அவர்களுக்குப் பங்களிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கின்றார்.

✠ தூயோர் நினைவு ✠

நற்கருணை மன்றாட்டின் நிறைவுக்கு முன்னதாக, தூயோரை நினைவு கூறுகின்றோம். ஏற்கனவே விண்ணக வாழ்வின் நிறைவை சுவைக்க பேறுபெற்ற கன்னிமரியாள், திருத்தூதர்கள், புனிதர்கள், இவர்களின் பரிந்துரையால், பயணிக்கும் திருச்சபை இவர்களோடு தோழமை கொண்டு முடிவில்லா வாழ்வில் பங்பெற மன்றாடுகின்றோம்.

✠ இறுதிப் புகழுரை ✠

நற்கருணை மன்றாட்டின் 'கொடுமுடி" அல்லது 'சிகரம்" இது தான், நன்றி, புகழ்ச்சி இவற்றின் உச்சக்கட்டம் இது. இதனை 'இறுதி சிறப்புப் புகழுரை" என்றழைப்போம்.
திருச்சபை முழுவதும் தூய ஆவியோடு ஒன்றித்து, கிறிஸ்து வழியாக விண்ணக தந்தைக்கு நன்றியும், புகழும் கூறுகின்றது. இம்மன்றாட்டின் இறுதியில் மக்கள் அனைவருமாக 'ஆமென்" என்று பதிலளிப்பர். சில இடங்களில் இச்செபத்தை, அதாவது இறுதி புகழுரையை மக்கள் செபிப்பது வழக்கமாக உள்ளது. இது தவறான நடைமுறையாகும்.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 13 † ✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - II ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 13 †

✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - II ✠

திருப்பலியின் மையம் நற்கருணை மன்றாட்டாகும். இது ஒருசிலர் நினைப்பது போன்று பல செபங்களின் தொகுப்பு அல்ல. மாறாக பல கூறுகளைக் கெண்ட ஒரு நீண்ட செபமாகும். இப்படி எழுதும் போது ஏனைய திருப்பலிச் செபங்கள் முக்கியமற்றவை என்று பொருள் கொள்ள கூடாது.

நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரையில் அமைந்துள்ள 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலோடு ஆரம்பமாகிறது. 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக" என்ற வார்த்தைகள் திருவிவிலியத்தில் பல்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கின்றன.

மனிதரிடத்தில் குறிக்கப்பட்ட, பணிக்கப்பட்ட பணியில் இருப்பதாக கடவுள் அளிக்கும் வாக்குறுதி மோயீசனுக்கு கடவுள் 'நான் உன்னோடு இருப்பேன்" (வி.ப 3:12), யோசுவாவுக்கு அதே வாக்குறுதி (1:5) எரேமியா இறைவாக்கினரின் கடின பணி வாழ்வில் இறைவன் வாக்குறுதி அளிக்கின்றார்(1:8, 'நான் உன்னோடு இருக்கின்றேன்"), இஸ்ரயேலை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கிதியோனுக்கு இறைவன் அவருடைய தூதர் மூலம் உத்தரவாதம் 'வலிமைமிக்க வீரனே" 'ஆண்டவர் உன்னோடு இருக்கின்றார்" (நீதித்தலைவர்கள் 6:12) அதே போன்று கிறிஸ்துவின் உன்னத பணிக்காய் அனுப்பப்பட்டவிருக்கின்ற, திருப்பலி நிறைவேற்ற கூடியிருக்கும் இறைமக்கள் சமூகத்தோடு இறைவன் உறைகின்றார் என்பதை வலியுறுத்துகின்றது.

அடுத்து குரு 'இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்" என்று கூறி தகுதியோடு, ஆக்கபூர்வமாக பங்கேற்ற அழைக்கின்றார். ஆதற்கு இறைமக்கள் 'நாம் ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்" என்று பதில் அளிக்கின்றனர். இறுதியாக 'நம்இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம்" என்றுரைத்து கிறிஸ்து வழியாக இறைவன் நமக்கு செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூறுமாறு அழைக்கின்றார். திருப்பலி என்பது நாம் பெற்றுக் கொண்ட மீட்பு எனும் பெரும் கொடைகளாக, கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவது தகுதியும், நீதியுமானதே என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.

1. பின்னணி :

1.1 கடைசி இராவுணவு

நற்கருணை மன்றாட்டுக்கள் தோன்றுவதற்கு மூலக் காரணம் யாது? நற்செய்தி பகுதியிலே கடைசி இராவுணவு நிகழ்வின் போது இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் 'அப்பத்தை தம் திருக்கரங்களில் எடுத்து, 'இறைவனுக்கு நன்றி கூறி, வாழ்துரைத்து" (மாற் 14:17) என்ற நற்செய்தி பகுதி மூலக் காரணமாக அமைந்துள்ளது. கடைசி இராவுணவு, யூதர்களின் பாஸ்கா விழாவின் போது இடம் பெற்றது என்பதும் அப்பொழுதே இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார் என்பதையும் மறந்து போகலாகாது.

1.2 யூதர்கள் பெராக்கா (BERAKAH)

பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு ஒவ்வொரு உணவு வேளையும் முக்கியமானது. மேலும் ஒவ்வொரு உணவும் வழிபாட்டு தன்மை உடையதாக இருந்தது. அதிலும் சிறப்பாக பாஸ்கா விழாவிற்கு முந்தின நாள் மாலை உணவு திருவழிபாட்டு தன்மையுடையதாக இருந்தது. மேலும் அப்பத்தையும், இரசகிண்ணத்தையும் கையில் எடுத்து, இறைவனுக்கு, அவருடைய அன்புக்கும், கருணைக்கும், வியத்தகு செயல்களுக்கும் நன்றி கூறுவது 'இறைபுகழ்ச்சியாக" அமைந்தது. இதனையே எபிரேய மொழியில் 'பெராக்கா" என்று அழைப்பதுண்டு.

1.3 புதிய ஏற்பாடு
'இறைவனின் புகழை உரைத்தல்" அல்லது இறைவனுக்கு நன்றி செலுத்துதல் என்பது ஒரே கருத்தையே வலியுறுத்துக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இதனை வெளிப்படுத்த 'பெராக்கா" (Berakah)) என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தபட்டாலும், புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழியின் படி 'நன்றி கூறுதல்" (Eucharistein), 'புகழுரைத்தல்" (Eulogein) என்றசொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தோன்றியது எவ்வாறு?

திருச்சபையின் ஆரம்பகாலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் இன்று உள்ளது போல் எழுதிவைக்கப்பட்ட அதிகாரபூர்வமான செபங்களாக இருக்கவில்லை. தொடக்க காலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப சொல்லப்பட்டன. ஆகவே 4ஆம் நூற்றாண்டின்முன், ஒரு நற்கருணை மன்றாட்டு மாத்திரம் இருந்ததாகவும், மேலும், அது திருவழிபாட்டுக்கு தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார். 4ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழி, வழிபாட்டு மொழியாக மாறியது. இக்காலகட்டத்தில் தான் படிப்படியாக உரோமையில் 'உரோமை நற்கருணை மன்றாட்டு" உருவாகியது. இதனை ROMAN CANON அல்லது CANON I என்று அழைப்பது உண்டு.

“CANON” என்ற சொல்லுக்கு 'அளவு கோல்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது எந்தவித மாற்றமும் இல்லாமல், செபத்தை கூட்டியோ குறைத்தோ செபிக்க முடியாது. எழுதியுள்ளபடியே செபிக்க வேண்டும். 2ம் வத்திக்கான் சங்கம் வரை இந்த உரோமை Canoan தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏன் இத்தகைய இறுக்கம்?

4ம் நூற்றாண்டு வரை சூழலுக்கும், தலைமை ஏற்பவரின் திறமைக்கும் ஏற்ப செபிக்கப்பட்ட இச்செபம் இத்தகைய இறுக்க நிலைக்கு செல்வதற்கு காரணம் அக்காலத்தில்
முளைக்கத் தொடங்கிய தப்பறை கொள்கைகள் (உ + ம் ஆரியனிஸம் (Arianism). இக்கொள்கைகளுக்கு எதிராக கிறிஸ்தவ சமய கோட்பாடுகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் அவசியம் ஏற்பட்டது. எனவே தான் எழுதப்பட்டஅதிகாரப் பூர்வமான ஒரேயொரு நற்கருணை மன்றாட்டு 1970 வரை பன்படுத்தப்பட்ட வந்துள்ளது. இன்று பல புதிய நற்கருணை மன்றாட்டுகள் தோன்றிவிட்டன.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 12 † ✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 12 †


✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு ✠


திருப்பலியில் இறைவார்த்தை வழிபாட்டை தொடர்ந்து இடம் பெறுவது நற்கருணை வழிபாடாகும். இதனை நாம் இரு கூறுகளாக பிரிக்கலாம். ஒன்று, அப்ப இரசத்தை காணிக்கையாக கொண்டு வருதல், அதனை ஆயத்தம் செய்து பீடத்தின் மேல் வைத்தல். இரண்டாவது, நற்கருணை மன்றாட்டு.

✠ காணிக்கைகளை தயார் செய்தல்:

முன்னர் அதாவது தொடக்க காலத்தில் இருந்தே, பீடத்திற்கு காணிக்கைகளை கொண்டு வரும் பழக்கம் இருந்தது. திருப்பலியில் பயன்படுத்த தேவையான அப்பம், இரசம் இதில் முதன்மையானது. முன்னர் “காணிக்கைகளை ஒப்புக்கொடுத்தல்” என்று சொல்லப்பட்ட இப்பகுதி இப்பகுதி இப்பொழுது “காணிக்கைகளை தாயார் செய்தல்” என்று அழைக்கப்படுகிறது. இதில் அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. கிறிஸ்துவும் அப்பத்தையும் இரசத்தையும் பயன்படுத்தினார். ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதற்கும், ஆலய பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்களும் நாளடைவில் காணிக்கைப் பவனியில் இடம் பெறலாயின. அப்பமும், இரசமும் பவனியில் இறுதியில் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் காணிக்கைப் பொருட்கள் பீடத்திற்குக கீழ் அல்லது வேறு இடத்தில் வைக்க வேண்டும். பீடத்தில் அல்ல.

✠ அர்த்தமுள்ள அடையாளக் காணிக்கை

அண்மைக் காலங்களில் புதியதொரு பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது, சில பொருட்களையும் விசுவாசிகளின் மன்றாட்டையும் இணைப்பது ஒர் தவறான செயலாகும். ஏனென்றால் இறைவார்த்தை வழிபாட்டை நிறைவு செய்வது விசுவாசிகளின் மன்றாட்டு. நற்கருணை வழிபாட்டை ஆரம்பிப்பது காணிக்கை பவனி. மேலும் காணிக்கைகள் ஏழைகளோடு பகிர்வதற்கு என்பதை மறக்ககூடாது.

✠ உண்டியல்

திருப்பலியின் போது ஏன் உண்டியல்?
“இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்து பார்ப்போம்...” “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். “உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.” (1 கொரி16:1-4) இது தொன்று தொட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சரியான முறைப்படி பார்ப்போமேயானால் இறைமக்களிடம் சேகரித்த பின்பே காணிக்கைப் பவனி இடம்பெற வேண்டும். காணிக்கைக்காக உண்டியல் சேகரிக்கும் போதும் பவனியின் போதும் பாடல்கள் இடம் பெறலாம். ஒவ்வொரு திருப்பலியிலும் ஒருவர் கொடுக்கக்கூடிய சிறப்புக் காணிக்கையாக அமைவது “தன்னைக் கொடுப்பதே” ஆகும். இதனையே தூய பவுலும் வலியுறுத்துகிறார். “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.” (உரோ 12:1) இறைவன் எம்மிடம் எதிர்பார்ப்பது பொன்னையும், பொருளையும் அல்ல, மாறாக நொறுங்குண்ட என் இதயத்தையே இறைவன் என்னிடம் எதிர்பார்க்கிறார். அப்படியானால் காணிக்கை தேவையில்லை தானே எனச் சொல்வது தவறு. நம்மையே நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றோம் என்பதனை சில அடையாளப் பொருட்கள் வழியாக வெளிப்படுத்துகிறோம்.

✠ அப்ப, இரசத்தை தயார் செய்தல்.

இது காணிக்கை நேரமல்ல, மாறாக, காணிக்கையை ஆயத்தம் செய்தல். அப்ப, இரசம் ஆகிய இறைவனின் கொடைகளுக்காக இறைவனை போற்றுவதாகும். இறைவனின் பராமரிப்பினால் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு நன்றி கூறுவதோடு, அவையே எங்களுக்கு “வாழ்வளிக்கும் அப்பமாகவும், ஆன்மிக பானமாகவும் மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திராட்சை இரசத்தோடு தண்ணீர் சேர்க்கப்படுவது எதற்காக? யூதர்கள் இரசத்தோடு தண்ணீர் கலந்தே பருகினார். இரசத்தின் செறிவுத் தன்மையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டது திருச்சபை தந்தையர்கள் இதில் ஆன்மீக தன்மையை கண்டனர். புனித சிப்ரியன் “இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாகக் கலந்து விடுகிறோம்” என்று பொருள்படும் என்பார்கள். தண்ணீரும், இரசமும், மனித, தெய்வீக பண்புகளை வெளிப்படுத்துகிறது.

இதனை இரசத்தில் தண்ணீர் கலக்கும்போது சொல்லப்படுகின்ற செபம் தெளிவுபடுத்துகிறது.

“கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார் இத்தண்ணீர், இரச மறைப்பொருள் வழியாக, நாமும் அவருடன் இறை இயல்பில் பங்கு பெறுவோமாக” அடுத்து குருவானவர் தன்கைகளை கழுவுகிறார். இறைவனின் முன்னிலையில் வருமுன், இஸ்ரயேலர் தம்மைக் கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் (வி.பி 19:10-11) நாடு கடத்தப்பட்டு மீண்டும் இஸ்ரயேலுக்கு வந்த பொழுது, கடவுள் மக்களின் அகத்தூய்மையை வலியுறுத்துகிறார். (எசேக் 36:25) அதே போன்று இன்று குருவானவர் தன்கைகளை கழுவும் போது பின்வரும் செபத்தை செல்வார். “ஆண்டவரே என் குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் துய்மையாக்கும்” (தி.பா 51:2)

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 11 † ✠ இறைவார்த்தை வழிபாடு - 3 ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 11 †

✠ இறைவார்த்தை வழிபாடு - 3 ✠


இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய முற்படும் பொழுது, பொதுப் போதனை பின்வரும் படிப்பினைகளை முன்வைக்கிறது. கிறிஸ்துவின் வாக்கு இறைமக்களை ஒன்றிணைக்கின்றது, வளர்க்கின்றது, ஊட்டம் பெறச் செய்கின்றது. இறைவாக்கை இறைமக்கள் ஏற்றுத் தம் வாழ்வோடு இணைத்து நிறைவாக்க, உயிருள்ள விசுவாசம் தேவை. அறிவிக்கப்படும் இறைவாக்கை கேட்பதால் இந்த விசுவாசம் இடையறாது ஊக்கம் பெறுகிறது.

திருநூல் சிறப்பாக திருவழிபாட்டில் அது அறிவிக்கப்படும் போது, வாழ்வுக்கும் ஆற்றலுக்கும் ஊற்றாயிருக்கின்றது. 'நற்செய்தி விசுவசிப்போர் அனைவர்க்கும் மீட்பளிக்கும் வல்லமையாய் உள்ளது" (உரோ1:16). இறைவாக்கைக்கேட்டு ஆழ்ந்து தியானிப்பதால் இறைமக்கள் நிறைவான விசுவாசம், நம்பிக்கை, மற்றும் அன்போடு தங்கள் பதிலை மன்றாட்டாலும். தற்கையளிப்பினாலும் செயல்முறையில் பதிலுரைக்க ஆற்றல் பெறுகின்றனர். அது திருப்பலியோடு நின்று விடாமல், தங்கள் கிறிஸ்தவ வாழ்வு அனைத்துமே இத்தகைய பதிலுரைகளாக மாறிட வழி பிறக்கும்.

அடுத்தப்படியாக, திருப்பலியில் இறைவார்தை அமைக்கப்பட்டிருக்கின்ற விதத்தை சற்று அலசுவோம்.

மிகவும் சுருக்கமாகச் சொன்னால், 'இறைமக்கள் தங்கள் விசுவாசத்தையும். மீட்பின் வரலாற்றையும் மேன்மேலும் ஆழ்ந்து அறிய வேண்டும" என்ற நோக்குடனேயே இது அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வாசக நூல் மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகளையும், சொற்றொடர்களையும் விவிலியத்திலிருந்து எடுத்து, பொருத்தமாக அளிக்கிறது. இவ்வாறு திருப்பலியில் சிறிது சிறிதாக மீட்பின் வரலாறு இறைவாக்கு வழியாக நினைகூறப்படுவதனால், நற்கருணையில் பாஸ்கா மறைபொருள். மறுபிரசன்னமாகி அது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு என்பதை தெளிவுபடுத்துகிறது.

வாசகங்களின் அமைப்பை நோக்குமிடத்து, ஞாயிற்றுக்கிழமைளுக்கும், பெருவிழாக்களுக்கும் முக்கியமான பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓர் குறிக்கப்பட்ட காலத்திற்குள் இறைவாக்கின் மிகச் சிறந்த பகுதிகள் மக்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட ஏதுவாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பெருவிழா நாட்கள் மூன்று ஆண்டு கால வட்டத்திற்குள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டுள்ளன. வார நாட்களுக்கான வாசகங்கள் கீழ்க்கண்டவாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஓவ்வொரு வாரநாள் திருப்பலியிலும் இரண்டு வாசகப்பகுதிகள் உள்ளன. ஆண்டின் பொதுக் காலத்திலுள்ள 34 வாரங்களில் வரும் வார நாட்களுக்கு நற்செய்தி ஒரே கால வட்டமாக அமைந்துள்ளன. இதில் முதலாவதாக மாற்கும் (வாரம் 1-9), பின்னர் மத்தேயுவும் (வாரம் 10-21), இறுதியாக லூக்காகவும் (வாரம் 23-34) வாசிக்கப்படுமாறு வாசகங்கள் அமைந்துள்ளன.

பொதுக்காலத்தின் வார நாள்களுக்கான வாசகத் தொகுப்பில் பழைய ஏற்பாட்டின் ஒரு சில தவிர எல்லாப் புத்தகங்களும் உட்பட்டிருக்கின்றன. மேலும் புதிய ஏற்பாட்டின் திருமுகம் ஒவ்வொன்றின் பொருள் விளங்குமாறு, ஏடுகளிலிருந்து வாசகங்கள் மிக விரிவாக எடுக்கப்பட்டுள்ளன. இத்தோடு திருவழிபாட்டின் வெவ்வேறு காலங்களுக்கேற்றவாறு திருவருகை, திருபிறப்பு, தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றில் அவ்வவ் மீட்பின் மறையுண்மைகளை தெளிவுபடுத்தும் விதங்களில் இறைவாக்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஈற்றிலே மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவாவது பயன்படும் என நம்புகின்றேன். அப்படி இல்லையெனில் மன்னிக்கவும்.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 10 † ✠ இறைவார்த்தை வழிபாடு - 2 ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 10 †


✠ இறைவார்த்தை வழிபாடு - 2 ✠


கடந்த பதிவின் தொடர்ச்சியாக இறைவார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்றும் எழுத விளைகின்றேன். இது ஒரு சிலருக்கு சுவராசியமாக இல்லாமல் இருக்கலாம். மன்னியுங்கோ! ஒரு சின்ன வேண்டுகோள், தயவு செய்து தொடர்ந்து படிங்க, அப்புறம் சொல்லுங்க பிரயோசனமாக இருந்ததா? இல்லையா? இறைவார்தை முழக்கத்திற்கு பயன்படுத்தப்படும் திருவாசக நூலின் பொது முன்னுரையிலிருந்து ஒரு சில முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம்.

இயேசு நாசரேத்து செபக்கூடத்தில் எசாயா எழுதிய ஏட்டுச்சுருளின் ஓர் பகுதியை வாசித்து, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21) என்றார். அதே போன்றே இன்றும் இறைவார்தை முழக்கமிடும் போது 'கிறிஸ்துவே தம் வாக்கில்" உள்ளார். ஆக இறைவார்தையானது எழுதி முடிக்கப்பட்ட ஒர் புத்தகம் அல்ல. இறைவனின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது. எனவே நாம் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றுகூடும் போது முழங்கப்படும் இறைவார்த்தை கேட்போரின் உள்ளத்தில் பயனளிக்கின்றது, மேலும் புதிய வலிமையைத்தந்து வளப்படுத்துகின்றது. ஆகவே, திருவழிபாட்டில் இடையறாது அறிவிக்கப்படும் இறைவார்த்தை தூய ஆவியின் வல்லமையால் ஓர் உயிருள்ள, பயனுள்ள வார்தையாக என்றும் இருக்கிறது. இதனை பவுலடிகளார் இப்படிச் சொல்வார் 'நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன" (2 கொரி 1:19-20)

மேலும் திருவழிபாடுகளில் இறைவாக்கை கேட்பதால் திருச்சபை கட்டியமைக்கப்படுகிறது. வளர்ச்சி அடைகிறது. நம் செவிகளில் ஒலிக்கும் இறைவாக்கு மெய்யாகவே உள்ளத்தில் பயன் அளிக்க, தூய ஆவியின் செயல் தேவைப்படுகிறது. அவருடைய தூண்டுதலாலும், துணையாலும் தான் இறைவாக்கு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் அடித்தளமாகவும் நம் வாழ்விற்கு அளவு கோலாகவும், உறுதுணையாகவும் அமைகின்றது. நாம் திருப்பலிக்காக ஒன்று கூடும் போது இரு மேசைகளிலிருந்து ஆன்ம ஊட்டம் பெறுகின்றோம். ஓன்றில் இருந்து சோதனை பெறப்படுகின்றது, மற்றதிலிருந்து மிக நிறைவாக புனிதப் படுத்தப்படுகின்றது. இறைவாக்கில் கடவுளின் உடன்படிக்கை அறிவிக்கப்படுகின்றது. நற்கருணையில் அது புதிய, நித்திய உடன்படிக்கையாகப் புதுப்பிக்கப்படுகிறது.

இனிச்சற்று நடைமுறைகளைப் பார்ப்போமே! பொது போதனையின்படி, திருப்பலிக்காக தரப்பட்டிருக்கும் வாசகங்களையும், திருப்பாடல்களையும் திருப்பலியில் விட்டுவிடுவதோ, குறைப்பதோ முறையல்ல. விவிலியத்திற்குப் பதிலாக வேறு இடங்களிலிருந்து வாசகங்களை எடுப்பது மிகவும் கனமான குற்றமாகும். ஏனெனில், விவிலியம் ஊடாக இன்றும் 'இறைவன் தம் மக்களோடு பேசுகின்றார்" அடுத்து, இறைவாக்கு வாசகங்களை வாசிக்கும் புத்தகங்களும், இறைவன் தம் மக்களோடு பேசுகிறார் என்னும் எண்ணத்தைத் தூண்டி எழுப்புகின்றன. இப்புத்தகங்கள் விண்ணைச் சார்ந்தவற்றின் அடையாளமாகவும், அறிகுறியாகவும் இருப்பதால், அவையும் மெய்யாகவே தகுதி உள்ளவையாகவும், பொருத்தமாக அணி செய்யப்பட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.

வாசகத்தாள்கள், கையேடுகள் வாசக புத்தகத்திற்கு பதிலாக பயன்படுத்துவது இறைவாக்கின் மாண்புக்கும் பொருந்துவதாக இல்லை. அடுத்து இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய்வோம்..

திருப்பலி விளக்கம் - சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

சில சிறப்பு, அதாவது குறிப்பிட்ட காலத்திற்கும், குறிப்பிட்ட நபர்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள நற்கருணை மன்றாட்டுகள் பற்றிய விளக்கம்.

பின்புலம்:
மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளை உருவாக்கி கொடுத்தபின் வேறு நற்கருணை மன்றாட்டுகளை வேறு யாரும் உருவாக்கக் கூடாது என்று திருவழிபாட்டு பேராயம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஒரு சுற்று மடலை அகில உலக ஆயர்களுக்கு அனுப்பியது. ஆனால் பல ஆயர்களின் பேரவையும், தனிப்பட்ட ஆயர்களும் கேட்டுக் கொண்டதின் பெரில் ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டு திருத்தந்தை ஆறாம் பாலினுடைய ஒப்புதல் பெற்று மூன்று ஆண்டுகளுக்குச் சோதனைக்காக 1974 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வெளியிடப்பட்டன. இவை 1977 ஆம் ஆண்டோடு முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஆயர்களின் பேரவைகள் பல கேட்டுக்கொண்டதின் பேரில் இவற்றை தொடர்ந்துப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கும், நபர்களுக்குமன்றி மற்றநேரங்களிலும் பொது நற்கருணை மன்றாட்டுகள் போல் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இவற்றைப் பயன்படுத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. என்றாலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த உரோமை திருப்பலி நூலின் மூன்றாவது மாதிரி படிவத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளி வந்த திருத்தப்பட்ட மறுபதிப்பிலும் இந்த ஐந்து நற்கருணை மன்றாட்டுகளும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேவைகளுக்கென்று புதிதாக நான்கு நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இன்று சிறப்பு நற்கருணை மன்றாட்டுகளாக ஒன்பதை நாம் பெற்றுள்ளோம்.

அ.ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள்
ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுக்களை ஒப்புரவின் மறைபொருளை நம்பிக்கையாளர்களுக்குச் சிறப்பான விதத்தில் எடுத்துரைக்கப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மானிடரிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, ஒப்புரவுக்காக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, போர் கலகம் போன்ற காலங்களில் மன்னிப்புக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, திருச் சிலுவையின் மறைபொருள், தூய்மைமிகு நற்கருணை, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தம் ஆகிய திருப்பலிகளிலும், தவக்காலத் திருப்பலிகளிலும் பயன்படுத்தலாம். இந்த இரு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பும் பண்பு கூறுகளும் பொது நற்கருணை மன்றாட்டுகள் 2,3,4 இல் காணப்படுவது போலவே இருக்கின்றன.

1. ஒப்புரவு ஒன்று
ஒப்புரவுக்கான முதல் நற்கருணை மன்றாட்டு கடவுளோடு ஒப்புரவு ஆவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நாம் மனந்திரும்பி அவரிடம் வர அழைக்கப்பட்டாலும், அதற்குரிய முயற்சியை எடுப்பவர் கடவுளே. இதற்காக அவர் புனித ஆண்டையும், வருகை, தவக் காலங்களையும் வாய்ப்பாக அமைத்து அளிக்கிறார். இம்மன்றாட்டின் சிறப்பு அம்சமாக பின்வருவதைக் கூறலாம். உடன்படிக்கையின் வழியாக புதியதொரு உறவால் மக்களைத் தம்மோடு கடவுள் இறுக்கமாக பிணைத்துக் கொள்கிறார். அருள்மிகு காலத்தை வகுத்துக் கொடுத்து மக்கள் தம்மிடம் மனந்திரும்பி வரச் செய்கிறார். இத்தகைய சிறப்புரிமையை நமக்கு மட்டும் அருளாமல் மாந்தர் அனைவருக்கும் நம் வழியாக அருளுகின்றார்.

நான்காவது நற்கருணை மன்றாட்டில் இருப்பது போல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்கருணையை நிறுவியதை விவரிக்கும் பகுதிக்கு முன் இந்த நற்கருணை மன்றாட்டும், ஆண்டவர் தம்மை கடவுளுக்குக் கையளித்ததின் வழியாக இறைதந்தையின் அன்பு விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளது. மேலும் இரசக்கிண்ணம் வசீகரத்துக்கு முன், “அவ்வண்ணமே, சிலுவையில் சிந்தப்படவிருந்த தமது இரத்தத்தால் அனைத்தும் தம்மில் ஒப்புரவாக்கப்படும் என்பதை அறிந்த அவர்” என்ற வார்த்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் வசீகரங்களுக்கு அடுத்து வரும் நினைவாக்கத்தில் “எங்கள் பாஸ்காவும் உண்மையான அமைதியுமாகிய உம் திருமகன் இயேசுகிறிஸ்துவை நாங்கள் நினைவுகூர்ந்து” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2. ஒப்புரவு இரண்டு
இந்த நற்கருணை மன்றாட்டு மனிதன் தம்மோடு ஒப்புரவாக கடவுள் எடுக்கும் முதல் முயற்சிக்கும் பாவ மன்னிப்புக்கும் இடம் கொடுப்பதோடு மனிதர் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

“பகைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வந்து உரையாடவும், எதிரிகள் கைகோர்த்து ஒன்று சேரவும், மக்களினங்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்க தேடவும்... தூண்டுகின்றீர்” என தொடக்கவுரையில் வருவது இதை உறுதிப்படுத்துகிறது. இது மத்தேயு நற்செய்தி 6: 14 - 15 இன் அறிவுரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மனிதர் ஒருவர் மற் றொருவருடன் ஒப்புரவாவது தூய ஆவியாரின் செயலாகத் தொடக்கவுரையில் காட்டப்பட்டுள்ளது. கடவுள் மக்களைத் தம்மோடு ஒப்புரவாக்கும் செயல்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் செயல்களால் நிறைவேறுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

வசீகரங்களுக்குப் பின்வரும் நினைவாக்கம், தூய ஆவியாரால் வரும் ஒருமைப்பாடு, பரிந்துரை மன்றாட்டுக்கள் அனைத்திலும் ஒப்புரவு பன்முகத்தில் அழுத்தம் பெறுகிறது. தூய ஆவியார் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்துவதை அகற்றுவதின் வழியாக ஒப்புரவையும், ஒருமைபாட்டையும் செயலாக்கம் செய்கிறார்.

ஆ. சிறுவர் திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்
திருஅவை அன்புள்ள ஓர் அன்னையாகச் செயலாற்றுவதைச் சிறுவர்களுக்கான திருப்பலியில் சிறப்பாக நாம் காணலாம். புகுமுக அருள் அடையாளங்களால் கிறிஸ்தவ வாழ்வில் புகுத்தப்பட்ட சிறுவர் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவராக மாறுவதற்கு மறைக்கல்வியுடன் வழிபாடு துணைபுரிய வேண்டும். பல்வேறு குழுவினரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முறையான வேறுபாடுகளைப் புகுத்தவும் தழுவி யமைக்கவும் கவனம் செலுத்த வேண்டுமென இரண்டாவது வத்திக்கான் சங்கம் தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது (காண் தி.வ. 38,50)
.
இதைத் தொடர் ந்து சிறுவர்களுக்கான திருப்பலி வழிகாட்டி என்ற ஆவணத்தைத் திருவழிபாட்டு பேராயத்தால் 1973 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டது. அடுத்து பல ஆயர்கள் பேரவையின் விண்ணப்பத்திற்கேற்ப சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு 1975 இல் வெளியிடப்பட்டன.

1. இம்மன்றாட்டுகளின் நோக்கம்
இம்மன்றாட்டுகள் மிக எளிய நடையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் ஆக்கபூர்வமாக பங்குபெற்று பயனடையப் பழகிக் கொண்டவர்கள், பிற்காலத்தில் பெரியோர்க்காக கொண்டாடப்படும் திருப்பலியில் பயனுள்ள முறையில் சுலபமாக பங்கு பெறும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்ற எதிர்நோக்கே இவற்றின் நோக்கமாகும்.

2. இம்மன்றாட்டுகளின் சிறப்பியல்புகள்
சிறுவர்கள் வளர்ச்சியடைந்தபோது பங்கு பெறப் போகும் திருப்பலியின் அமைப்பு அவர்களுக்கு வினோதமாகத் தோன்றக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுக்களில் பெரும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த நற்கருணை மன்றாட்டுகள் இவர்களைப் பொறுத்த மட்டில் தற்காலிகமானவை. எனவே பொது நற்கருணை மன்றாட்டுகளின் அடிப்படை அமைப்பு இவற்றிலும் பாதுக்காப்பட்டுள்ளது. வசீகரத்தில் அப்பத்தின் மீதும், இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும், கொண்டா ட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகச் சிறுவர்களுக்கு எடுத்துரைக்கவும் “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்ற வார்த்தைகளுக்கு முன், “பின் இயேசு அவர்களிடம் கூறியதாவது” என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது.

நற்கருணை மன்றாட் டுகளின் மொழி எளிய நடையில் உள்ளது. அதனால் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். இருந்தாலும் திருப்பலியின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறுப்பிள்ளைத்தனமான மொழியும் வார்த்தைகளும் (Childish Language) தவிர்க்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் செயல்முறையிலும் பொருளுள்ள விதத்திலும் பங்கு பெறும் விதமாக ‘ஆர்ப்பரிப்புகள்’ இந்த நற்கருணை மன்றாட்டுகளில் அதிகமாக்க ப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்குரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும், தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக் கொள்ள முடியாது.

முதல் நற்கருணை மன்றாட்டில் வசீகரத்தின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங் களுக்காக இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கும், அருள் பணியாளரால் சொல்லப் படும் நினைவுகூர்தல், அதன் பின்வரும் நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு ஆகியவற்றிக்கும் இடையே உள்ளத்தொடர்பை சிறுவர் தெளிவாகப் புரிந்து கொள்வர்.

இந்த மன்றாட்டுகளில் நினைவு ஆர்ப் பரிப்பின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இது நினைவுகூர்தல் மன்றாட்டுக்குப் பின் (புதுழிதுஐeவிஷ்வி) வருகிறது. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கட்டளைக்கும் அருள்பணியாளர் அதற்கு அடிபணிந்து சொல்லும் நினைவுகூர்தல் மன்றாட்டுக்குமிடையே உள்ள நெருக்கமானத் தொடர்பை சிறுவர் புரிந்துக்கொள்ள இம்மாற்றம் உதவுகிறது. சிறுவர்களுக்கான மூன்று நற்கருணை மன்றாட்டு களுக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சில சிறப்பியல்பு உண்டு. அவையாவன:

முதல் நற்கருணை மன்றாட்டு எளிமையான நடையுடையது. ‘தூயவர்’ பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு இம்மன்றாட்டு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உன்னதங்களில் ஓசான்னா ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழிநடத்தும் ஒருவரால் பாடப்படலாம். அல்லது சொல்லப்படலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டு சிறுவர்களின் ஈடுபாட்டிற்கு அதிக வாய்ப்பளித்துள்ளது. இதில் ‘தூயவர்’ பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருள் எனும் அடிப்படையில் பாடப்படலாம்.

மூன்றாவது நற்கருணை மன்றாட்டு பாஸ்கா காலத்திற்குப் புறம்பே பயன்படுத்தத் தனியாகவும், பாஸ்கா காலத்தில் பயன்படுத்தத் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வசீகரத்திற்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

இ. பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்
2002 ஆம் ஆண்டு வெளி வந்த உரோமை திருப்பலி நூலில் மூன்றாம் மாதிரி படிவத்தில் பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கு வெளியிடப்பட்டன. அவை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தியமைக்கப்பட்ட உரோமை திருப்பலி நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவை தமிழ்த் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாம் இப்பொழுது பயன்படுத்தலாம்.

1. முதல் நற்கருணை மன்றாட்டு
“இது ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் திருஅவை” என்ற கருத்து கோள் கொண்டுள்ளது. இந்த நற்கருணை மன்றாட்டைத் திருஅவைக்காக, திருத்தந்தைக்காக, ஆயருக்காக, திருத்தந்தை ஆயர் தேர்வுக்காக, திருச்சங்கம், ஆயர் மாமன்றம் ஆகியவற்றிக்காக, அருள்பணியாளர்களுக்காக, அருள்பணியாளர் தமக்காக, திருஅவையின் பணியாளர் களுக்காக, ஆன்மீக அருள்பணிக் கூடுகை போன்ற வற்றிற்காக ஒப்புக் கொடுக்கப்படும் பலியில் பயன் படுத்தலாம்.

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு
இது “மீட்பின் வழியில் கடவுள் தமது திரு அவையை வழிநடத்துகின்றார்” என்ற கருத்துக்கோளைக் கொண்டுள்ளது. இதை திருஅவைக்காக, திருப்பட்டங்களுக்கான இறை அழைத்தலுக்காக, பொது நிலையினருக்காக, குடும்பங்களுக்காக, துறவுநிலை இறையழைத்தலுக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, உறவினர், நண்பர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்த ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு
இது “தந்தையை அடையும் வழி இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை நற்செய்தி அறிவிக்க, நம்பிக்கையை முன்னிட்டு துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, நாடுக்களுக்காக, நாட்டை ஆள்வோருக்காக, புத்தாண்டு நாளில், மக்களின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு
இது “நன்மை செய்யும் இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை அகதிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக, பஞ்சம் பசியால் வாடுவோருக்காக, நம்மை துன்புறுத்துவோர், கைது செய்யப்பட்டோர், சிறையில் இருப்போர், நோயுற்றோர், இறக்கும் நிலையில் இருப்போர் ஆகியோருக்காகவும், நல்மரண அருளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

இந்த நான்கு நற்கருணை மன்றாட்டுகளுக்கும் தனித்தனி சிறப்பு தொடக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சிப்புக்குப் பின் வாழ்வோருக்காக சொல்லப்படும் மன்றாட்டு அந்தந்த கருத்துக்கோளுக்கு ஏற்றவாறு வெவ்வேறாக உள்ளது. இவைத்தவிர மற்ற எல்லா மன்றாட்டுகளும் ஒரே மாதிரியானவை.
( முற்றும்)

திருப்பலி விளக்கம் - பலவகை நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு
இந்த நற்கருணை மன்றாட்டு மிகவும் தொன்மையான ஹிப்போலிட்ஸின் ‘அனாபோரா’ (Anaphora) வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து சில காரியங்களில் இது வேறுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’வில் இல்லாத தொடக்கவுரையை இந்த இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் காணமுடிகிறது. இந்த தொடக்கவுரை கடவுளின் மீட்பு செயல்களை முன்வைத்து புகழுரைக்கிறது.

அடுத்து ஒரு சுருக்கமான இடமாற்ற (Transition) செபம் காணிக்கைகளை அர்ப்பணிக்கும் செயலை நோக்கி (Consecratory Epiclesis) நகர்கிறது. பின் நற்கருணையை ஏற்படுத்திய விரிவுரை இடம் பெறுகிறது. இந்த விரிவுரை மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் இருக்கும் விரிவுரையைப் பின்பற்றுகிறது. நினைவு ஆர்ப்பரிப்பு மற்ற நற்கருணை மன்றாட்டுகளுடன் ஒத்துப்போகிறது.

அப்ப - இரச வசீகரங்களுக்குப் பின் முதல் நற்கருணை மன்றாட்டில் காணப்படுவது போல், ஒப்புக்கொடுக்கும் செபம், தூய ஆவியார் திருகுழுமத்தின் மீது இறங்கி வந்து ஒருங்கிணைக்கும் செபம் (Communion Epiclesis), திரு அவைக்கும், திருதந்தைக்கும், இறந்த ஆன்மாக்களுக்கும், திருப்பலிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பரிந்துரை செபங்கள் இடம் பெறுகின்றன. புனிதர்களில் அன்னை மரியாவும், யோசேப்பும் திருத்தூதர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அடுத்து இறுதி புகழுரையுடன் முடிவடைகிறது.

ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’ தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் ஓரளவு மட்டும் இதில் வெற்றி பெறுகிறது. இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தொடக்கவுரை படைப்பில் தொடங்கி மீட்பின் வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக குறிப்பிட்டு நன்றி செலுத்துகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு மக்களை யாவே கடவுள் வழிநடத்தியமுறை இதில் இடம்பெறவில்லை. இந்த தொடக்கவுரை புதிய ஏற்பாட்டின் விசுவாச அறிக்கை போல் உள்ளது. இதனால்தான் இது ஞாயிற்று திருப்பலிக்கு உகந்ததன்று என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஞாயிற்று கிழமை திருப்பலியில் வார்த்தை வழிபாட்டின் இறுதியில் விசுவாச அறிக்கை வருகிறது. ஆதலால் இந்த நற்கருணை மன்றாட்டை வார நாள்களிலும் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். இம்மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை இருந்தாலும். மற்ற தொடக்கவுரைகளைச் சிறப்பாக அவை மீட்புத் திட்டத்தை எடுத்துரைக்கும்போது அவற்றைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டின் மையம் கிறிஸ்து. தொடக்கவுரை கூட கிறிஸ்துவை மீட்பராக அனுப்பியதற்காக இறைதந்தைக்கு நன்றி நவில்கின்றது. மக்களை தந்தையிடம் கொண்டு சேர்க்க அவர் மனமுவந்து பாடுகளை ஏற்று தம்மை பலியாக்கினார். இவ்வாறாக கிறிஸ்து முக்கியத்துவம் பெறுகிறார்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு
இந்த நற்கருணை மன்றாட்டு தொன்மையான எந்தவொரு நற்கருணை மன்றாட்டையும் தழுவி அமைக்கப்பட்டதன்று . இது ஒரு புதிய படைப்பு. இருந்தாலும் உரோமை நற்கருணை மன்றாட்டின் கூர்மதியை உடைத்ததாக உள்ளது; அதனுடைய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. கல்லிக்கன் வழிபாட்டு முறையின் சில தனிமத்தை இதில் காணலாம்.

முதல் நற்கருணை மன்றாட்டைப்போல், இதற்கும் உரித்தான தொடக்கவுரை கிடையாது. எனவே இதை எந்த தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த இது மிகப் பொருத்தமானது. தொடக்கவுரையிலிருந்து ஒரு இணக்கமான நிலைபெயர்பை இதில் காணலாம். “ ஆண்டவரே நீர் மெய்யாகவே தூயவர்” என்று தொடங்கும் மன்றாட்டு தொடக்கவுரையில் குறிப்பிப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல்களின் சுருக்கமான தொகுப்பாக அமைந்துள்ளது.

இந்த நற்கருணை மன்றாட்டின் சிறப்பு அம்சம் தூய ஆவியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமாகும். இதே தூய ஆவியார் தான் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகளை புனிதபடுத்தி பலிபொருளாகும் தகுதியை அளிக்கின்றார். கிறிஸ்துவ சமூகத்தை இறைவனுக்கு ‘தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு’ ஒன்று கூட்டுகிறார். மேலும் இந்த பலியில் பங்கு பெறு வோரையும் புனிதப்படுத்துகிறார். நற்கருணையில் பங்கு பெறுவதின் வழியாக கிறிஸ்துவின் மறையுடலாக மாறும் ஆற்றலை அளிக்கின்றார்; அவர்கள் தூய ஆவியின் ஆலயமாகின்றார்கள்.

இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்குரிய இடத்தில், அதாவது “இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்” எனும் சொற்களுக்குப் பின் பயன் படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு
புதிய நற்கருணை மன்றாட்டுகளில் இது மிகவும் பாராட்டுக்குரியது என்றால் அது மிகையாகாது. உரோமை மரபிலிருந்து விலகி அந்தியோக்கியன் மரபை நெருங்கியுள்ளது. அதாவது அந்தியோக்கியன் “திருத்தூதர்களின் விதி தொகுப்பின்” (Constitutiones Apostolorum) சாராம்சத்தைச் சார்ந்துள்ளது.

இந்த நற்கருணை மன்றாட்டின் முதல் பாதிபகுதி தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது (1) அவருடைய கடவுள் தன்மைக்கும் (2) படைப்புக்கும், சிறப்பாக மனிதனின் படைப்புக்கும், அவன் தவறினாலும் அவனை மீட்க வகுத்தத் திட்டத்திற்கும் (3 ) மனிதராகி, மெசியாவை அவர் வெளிப்படுத்தவும், பாடுகளை அனுபவித்து மரித்து உயிர்த்தெழவும் அவரை இவ்வுலகிற்கு அனுப்பியதற்கும், மற்றும் கிறிஸ்துவின் பாஸ்கா மறை பொருளில் பங்கு பெற்று அருள் அடையாள வாழ்வை வாழ்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி கூறப்படுகிறது. இந்நற்கருணை மன்றாட்டின் இரண்டாவது பகுதி மற்ற இரு புதிய நற்கருணை மன்றாட்டுகளோடு அமைப்பில் ஒத்துப்போகிறது. இருந்தாலும் பரிந்துரை மன்றாட்டுகளின் வரிசைக் கிரமத்தில் சிறிது வேறுபடுகிறது.

இந்த நற்கருணை மன்றாட்டில் தூய ஆவியார் காணிக்கைகளை அர்ச்சிக்கவும் (Consecretory Epiclesis) (“அதே தூய ஆவியார் இக்காணிக் கைகளை புனிதப்படுத்தியருள... ” ), மக்களை ஒன்று சேர்க்கவும் (Communion Epiclesis) - (“இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறும் அனைவரும் தூய ஆவியாரால் ஒரே உடலாக கூட்டிச் சேர்க்கப்பட்டு....”) வேண்டிய மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில் மற்ற இரு (2+3) நற்கருணை மன்றாட்டுகளோடு ஒத்துப் போகிறது. இந்த ஒன்றிப்பு மன்றாட்டு இயல்பாக பரிந்துரைகளுக்கு நகர்வதைப் பார்க்கிறோம். அதாவது திருத்தந்தை, ஆயர்கள், திருநிலையினர் (Clergy), இறைமக்கள், நேர்மை உள்ளத்தோடு இறைவனை தேடுவோர் ஆகியவர்களின் ஒன்றிப்புக்காக பரிந்துரை மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மீட்பின் செயல் முழுவதிலும் தந்தையாம் கடவுள் செயல் முதல்வராகக் (Main Agent of Actor) காட்டப்பட்டுள்ளார். அதாவது தந்தையாகிய கடவுள் முக்கிய, மையமான இடம் வகிக்கிறார்.

இந்த நான்காவது நற்கருணை மன்றாட்டு மாற்ற முடியாத தொடக்கவுரையைக் கொண்டுள்ளது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாத போதும், ஆண்டின் பொதுக்கால ஞாயிற்று கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது. ( காண் GIRM 365 ஈ).

திருப்பலி விளக்கம் - இறுதி சடங்குகள்

இறுதி சடங்குகள்
திருப்பலிக்குத் தொடக்கச் சடங்குகள் போல் இறுதிசடங்குகளும் உண்டு. ஆனால் இவை மிகச் சுருக்கமாக அமைகிறது. இதில் அறிவிப்புகள், வாழ்த்தும் ஆசியும் அனுப்பி வைத்தலும் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.
1.அறிவிப்புகள்
இறுதி நன்றி மன்றாட்டுக்கு பின் அருள்பணியாளரோ அல்லது வேறோருவரோ முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால் அவற்றை சுருக்கமாக அறிவிப்பார். திருமண அறிவிப்புகளும் இங்கு இடபெறும்.
இந்த அறிவிப்புகளை திருபீடத்திலிருந்தோ, வாசக மேடையில் இருந்தோ கொடுக்கக் கூடாது. மாறாக “திருபீடமுற்றமும் அதன் அமைப்பும்” என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டது போல் ‘அறிக்கை மேடையில்’ இருந்து அல்லது வேறோரு ஏற்புடைய இடத்திலிருந்து கொடுக்க வேண்டும். வெள்ளி பொன்விழா கொண்டாடும் அருள்பணியாளர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. திருப்பலி முடிந்தபின் இதை செய்ய வேண்டும்.

2. இறுதி வாழ்த்தும் ஆசியும்
இறைவாழ்த்தோடு திருப்பலியைத் தொடங்கியது போல் திருப்பலியின் முடிவிலும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று சொல்லி மக்களை வாழ்த்துகிறார். அவர்களுடைய பதிலுக்குப் பின் அருள்பணியாளர் தமது இறுதி ஆசிரை “எல்லா வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவராக” என்று சொல்லி வழங்குகிறார். மக்கள் பதிலாக “ஆமென்” என்று சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள். பற்பல ஆண்டின் சிறப்புக்காலாம் விழாக்களுக்கு ஏற்றாற்போல் சிறப்பு ஆசீரும் இங்கு வழங்கலாம்.

3. அனுப்புதல்
திருப்பலி முடிந்ததும் தங்கள் பணிவாழ்வுக்குத் திரும்பி செல்லுமுன்“சென்று வாருங்கள் (வாழுங்கள்) திருப்பலி நிறைவேறிற்று” என்றோ “ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்க சென்று வாருங்கள்” என்றோ,
“ உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்” என்றோ சொல்லி அனுப்பிவைக்கிறார். மக்கள் “இறைவனுக்கு நன்றி” என்று சொல்லி பதில் கூறுகிறார்கள்.

முடிவுரை
திருப்பலி வேறு, வாழ்க்கை வேறு அன்று. இரண்டுக்குமிடையே நெருங்கியத் தொடர்புண்டு. வாழ்வில் எதை நாம் விசுவசிக்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதையே திருப்பலியில் கொண்டாடுகிறோம். எனவே நாம் வாழ்விலிருந்து வளர்வதே வழிபாடு என உணர்வோமாக.

குறிப்பு : திருப்பலியில் மூன்று இடங்களில் ஆர்ப்பரிப்புகள் (Proclamations) உண்டு. இவை பாடபட வேண்டுமே தவிர, வாசிக்கப்படக் கூடாது.

அவையாவன.
1. நற்செய்தி பறைசாற்றும் முன் “அல்லேலூயாவும்”,
2. வசீகரத்துக்குப் பின் “நம்பிக்கையின் மறைபொருள்” என்பதும்
3. “இவர் வழியாக, இவரோடு, இவரில்..... ”என்ற இறுதி புகழுரையும்.



திருப்பலி விளக்கம் -. திருவிருந்து சடங்கு

இ.திருவிருந்து சடங்கு
மூன்றாவதும் இறுதிபகுதியுமாகிய நற்கருணை பிடுதல், அதை உட்கொள்ளுதல். நற்கருணைக் கொண்டாட்டம் ஒருபலி மட்டுமல்ல; பாஸ்கா விருந்துமாகும். ஆண்டவரின் கட்டளைப்படி தக்கமுறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்ததையும் ஆன்ம உணவாகப் பெற்றுக் கொள்ளவது அவசியம் (GIRM 80). இத்திருவிருந்து சடங்கில் மூன்று பகுதிகளைக் காணலாம். 1. தயாரிப்பு 2. பகிர்தல் 3. இறுதி நன்றி கூறுதல்.

1. திருவிருந்துக்குத் தயாரிப்பு
இங்கு ஒன்றிப்பு, அமைதி அன்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நற்கருணை உட்கொள்பவர்களிடம் இப்புண்ணியங்கள் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும். எனவே இத்தயாரிப்பு பகுதியில் ஆண்டவர் கற்றுத்தந்த செபம், சமாதான பரிமாற்றம், அப்பத்தைப்பிடுதல் ஆகியவை இடம் பெறுகின்றன.

1.1. ஆண்டவர் கற்றுத்தந்த செபம்
“ஆண்டவர் கற்றுதந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம். அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணைவுணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகிறோம்” (GIRM 81).
‘அன்றாட உணவு’ என்ற சொற்கள் இந்த இறைவேண்டலில் வருவதால்தான் இது நற்கருணையை உட்கொள்ளும் முன் தயாரிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டிலிருந்து இந்த இறை வேண்டல் எல்லா வழிபாடுகளிலும் காணப்படுகிறது. இங்கு ‘உணவு’ என்ற சொல் நற்கருணையைக் குறிக்கிறது என்று பல திருஅவையின் தந்தையர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருப்பலியில் நற்கருணை வசீகரத்துக்குப் பிறகு இந்த இறைவேண்டலை சொல்லும் பழக்கம் திருத்தூதர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் இந்த இறைவேண்டலை அருள்பணியாளர் மட்டுமே சொல்லி வந்தார். அதன் கடைசியில் வந்த “தீமையிலிருந்து எங்களை மீட்டருளும்” என்ற பகுதியை மட்டும் மக்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது திருப்பலியில்அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பலியில் பொதுவாக மற்ற செபங்களின் முடிவில் ‘ஆமென்’ என்று மக்கள் சொல்லுகின்றனர். ஆனால் “ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில்” ‘ஆமென்’ சொல்வதில்லை. இதற்கு என்ன காரணம்? மற்ற செபங்களில், எடுத்துக்காட்டாக ‘திருக்குழும மன்றாட்டு’, ‘காணிக்கை மீது மன்றாட்டு’, ‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு’, இறுதிபுகழுரை போன்றவைகளில், அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களின் பெயரால் அவற்றைச் செபிக்கிறார். இறைமக்கள் எல்லாரும் சேர்ந்து ‘ஆமென்’ (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லி அவற்றைத் தங்கள் செபமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு எல்லாரும் சேர்ந்து சொல்வதால் ‘ஆமென்’ சொல்ல தேவையில்லை.

முன்னுரைகளும் பின்னுரைகளும்
ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலை சொல்ல அல்லது பாட அருள்பணியாளர் மக்களை அழைக்கிறார். பொதுவாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்ட அழைப்பு “ மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைபடிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்” என்பது. இதற்கொத்த முன்னுரையை பிசாந்தின் (Byzantine) திருஅவையில் காணலாம். “ஆண்டவரே, நாங்கள் முழுமனவுறுதியோடு, எவ்வகைத் தண்டணைத் தீர்ப்புக்கும் உள்ளாகாமல், விண்ணின் இறைவனாம் உம்மைத் தந்தாய் என்று அழைத்துச் சொல்லத் துணிகிறோம்”. இதிலிருந்து நமது பாடம் விளக்கம் பெறுகிறது. இரண்டாம் வத்திகான் சங்கத்திற்குப் பின் ஆயர்களின் இசைவு பெற்ற வேறுமுன்னுரை பாடங்களும் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டவர் கற்றுத்தந்த இறை வேண்டலுக்குப் பின்னுரையாக “ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.....” என்று தொடங்கும் செபத்தை அருள்பணியாளர் சொல்லுகிறார். இதன் முடிவில் நம்பிக்கையாளர்கள் “ஏனெனில் ஆட்சியும் ஆற்றலும் மாட்சியும் என்றென்றும் உமதே” என்று பதில் சொல்லுகிறார்கள். இது ஒரு வாழ்த்தொலியாக அமைகிறது.

இந்த செபம் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலின் பிற்பகுதியை விரிவுப்படுத்துகிறது. இத்தகைய பழக்கம் தொடக்கத்திலிருந்து வருகிறது. இந்த செபம் ‘எம்போலிஸம்’(Embolism) என்று அழைக்கப்படுகிறது. ‘திருத்தூதர்களின் போதனை’(Didache) என்ற முதல் நூற்றாண்டு நூலில் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலை இதே இறை புகழ்ச்சியோடு முடித்திருப்பது, இன்று இது திருப்பலியில் இடம் பெற்றிருப்பதற்கு ஒரு காரணமாகக் கொள்ளப்படலாம்.

1.2. சமாதானம் பரிமாற்றம்
இதன்பின் அருபணியாளர் சமாதனத்திற்காக செபிக்கிறார். அதாவது, திருஅவைக்கு அமைதியையும் ஒற்றுமையையும் தரவேண்டுமென்று மன்றாடுகிறார். இதன் பின்னணி யோவா 14:27; லூக் 24:36; யோவா 20:19; 21:26 ஆகிய பகுதிகள் ஆகும்.

இதன்பின் உறவின் வாழ்த்தை அறிவித்து, சமாதனத்தைப் பகிர்ந்துக் கொள்ள இறைமக்களை அருள்பணியாளர் அழைக்கிறார். ஏனெனில் தம் சகோதர சகோதரிகளோடு சமாதானம் செய்துக்கொள்ளாமல் ஒருவர் நற்கருணை விருந்தில் பங்கேற்பது தவறானது மட்டுமல்ல, பொருளற்றதும் ஆகும் (காண். மத் 5:24). சமாதானத்தைப் பகிர்ந்து கொள்ளும் இச்சடங்கு மிகப் பழமையானது. கி.பி.4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திருத்தூது அமைப்பு விதித்தொகுப்பு” (Apostolic Constitution) என்ற நூலில் இச்சடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயர் சமாதானம் வாழ்த்துக் கூற, ஒருவருக்கொருவர் சமாதான அடையாளத்தை அளித்துக்கொள்ள திருத்தொண்டர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, ஆயரும் அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும் மக்களும் ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

இன்று இந்த சமாதானம் பகிர்ந்தலின் பொருளை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாததால் இதுவெறும் சடங்கு ஆசாரமாக மாறிவிட்டது. அதனால் தங்கள் அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூட அறியாமல், மக்கள் வலது புறமும் இடது புறமும் தலை வணங்குவதைப் பார்க்கிறோம். இது பொருளற்ற ஒரு செயல். இக்குறைபாடு பற்றி மக்களுக்கு அருள்பணியாளர் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்

1.3. அப்பம் பிடுதலும், உலகின் பாவம் என்ற மன்றாட்டும்
முற்காலத்தில் மக்கள் திருப்பலிக்குப் பெரிய அப்பங்களைக் கொண்டு வந்தனர். எனவே அந்த அப்பங்களை உனடக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் தேவைப்பட்டது அப்பங்களை உடைத்து முடிக்கும்வரை ‘உலகின் பாவம் போக்கும்’ என்ற செபம் தொடர்ந்து சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது அப்பங்கள் சிறிய அளவில் தயார் செய்யப்படுவதால் அவற்றை உடைக்கும் தேவையில்லை. அருள்பணியாளர் தனக்கு பயன்படுத்தும் பெரிய அப்பத்தை மட்டும் பிடுகிறார். எனவே “உலகின் பாவம் போக்கும் ” என்ற செபம் மும்முறை மட்டும் சொல்லப்படுகிறது. “உலகின் பாவங்களைப் போக்கும் ” என்ற செபம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை செர்ஜ் (Sergius)அவரால் திருப்பலியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்செபத்தின் இறுதியில் வரும் வரும் “எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்பது கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை மும்முறை சொல்லப்பட்டது. கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் இச்செபம் மூன்றாவது முறை சொல்லப்பட்டபோது “எங்களுக்குச் சமாதானத்தை அருளும்” என்று மாற்றிச் சொல்லும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த செபம் சொல்லப்படும்போது தான் அருள்பணியாளர் பெரிய அப்பத்தை பிட்க வேண்டும். வசீகர சமயம் “அப்பத்தை எடுத்து, ஆசிவழங்கி பிட்டு” என்று சொல்லப்படும் போது அப்பத்தைப் பிடக் கூடாது. இது தவறு.
அப்பத்தைப் பிட்ட பிறகு ஒரு சிறு துண்டு இரசக்கிண்ணத்தில் போடப்படுகிறது. இது “கொம்மிக்ஸியோ” (Commixo Commingling) என அழைக்கப்படுகிறது. இது மிகப் பழமையான ஒரு பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் மற்ற தல திருஅவைகளுக்கும் இடையேயுள்ள “ஒன்றிப்பின் அடையாளம்” . இருப்பினும் இச்சடங்கின் உட்பொருள் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். உலகின் பாவமா, பாவங்களா? என்பதுதான் அது.
நற்செய்தியின் மூலமொழியாகிய கிரேக்கத்திலும், இலத்தீன் மற்ற மொழி பெயர்ப்புகளிலும் தமிழிலும் (யோவா 1:29) ‘பாவம்’ என்று ஒருமையில் உள்ளது. ஆனால் திருப்பலி நூலில் இலத்தீனில் ‘பெக்காத்தா முந்தி’ (Peccata Mundi) என்று உள்ளது. இருமுறை ‘எம்மேல்’,‘எமக்கு’ என்று இருப்பது ஒருமையைக் குறிக்கிறது. பாடுவதற்கு ‘பெக்காத்தும் முந்தி’ (Peccatum Mundi) என்பது எளிதல்ல என்பதால் “பாவங்கள்” என்று பன்மைக்கு மாற்றப்பட்டது என சில அறிஞர் கூறுவர். ஆனால் பொருளைக் கருதினோமாயின் ஒருமையே மிகச் சிறந்தது என்று தோன்றுகிறது. ‘பாவங்கள்’ என்பது எண்ணப்பட்ட ஒரு தொகுப்பைச் சுட்டுகிறது. மாறாக ஒருமையில் ‘பாவம்’ என்பது உலகின் பாவநிலையைக் குறிப்பதாகும். நமது ஆண்டவர் உலகைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்தார்.


2. நற்கருணை விருந்து
நற்கருணை விருந்தில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன:
1. அருள்பணியாளர் தம்மை தயாரிக்கும் செபம்.
2.. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணையைக்காட்டி அவர்களை திருவிருந்துக்கு அழைத்தல்.
3. திருவிருந்து பாடல்.
4. நற்கருணையை உட்கொள்ளுதலும் வழங்குதலும்.

2.1. அருள்பணியாளர் தம்மைத் தயாரிக்கும் செபம்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இரு செபங்களில் ஒன்றைச் சொல்லி தம்மைத் தயாரிக்கிறார். அவர் சொல்லும் செபமாவது:
“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் உம் உடலும் இரத்தமும் என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டணைக்கு உள்ளாக்காமல் உமது இரக்கத்தினால் என் உள்ளத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பதாக.”

2.2. திருவிருந்துக்கு அழைப்பு
அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தை திருத்தட்டின் மேல் அல்லது திருக்கிண்ணத்தில் மேல் பிடித்துக் கொண்டு நம்பிக்கையாளர்களுக்குக் காண்பித்து அவர்களைக் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கு கொள்ள பின்வரும் வார்த்தைகளில் அழைக்கிறார். “இதோ, இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்; செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.” பழைய ஏற்பாட்டு பாஸ்காவில் உண்ணப்பட்டது ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி. ஆனால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி ஆடு ஆகிறார். எனவேதான் இவ்விருந்து “செம்மறியின் விருந்து” என்று அழைக்கிறோம்.

அருள்பணியாளரின் அழைப்பிற்குப் பதிலாக நம்பிக்கையாளர் “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலமடையும்” எனச் சொல்கின்றனர். இங்கு ஒரு கேள்வி எழுப்பலாம் எனத் தோன்றுகிறது. திருப்பலியின் தொடக்கத்தில் மனத்துயர் செபம் “எல்லாம் வல்ல இறைவனிடமும்.....”என்று சொல்லப்பட்டபின், ஏன் மறுபடியும் அது போன்ற ஒரு செபத்தைச் சொல்ல வேண்டும்? வரலாற்றை சற்று நோக்கினால் விடை கிடைக்கும். அதாவது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடையே நற்கருணை உட்கொள்ளும் பழக்கம் மிகமிக அரிதாகியது. நோயாளிகள் மட்டுமே நற்கருணையை உட்கொள்ளும் பழக்கம் வழக்கில் இருந்தது. எனவே இச்சடங்கில் நோயாளிகளை நற்கருணை உட்கொள்ள ஆயத்தம் செய்யும் வகையில் இச்செபம் சொல்லப்பட்டது. இதுவே பிற்காலத்தில் நற்கருணையை உட்கொள்ள அனைவரையும் தயார் செய்யும் ஒரு செபமாக திருப்பலியிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. ஏற்கனவே நம்பிக்கையாளர் மனத்துயர் சடங்கில் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் நற்கருணையை உட்கொள்ளும் மீண்டும் ஒருமுறை கேட்பதில் தவறில்லை.

2.3. திருவிருந்து பாடல்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; உள்ளத்து மகிழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது; நற்கருணை உட்கொள்வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணை வழங்கப்படும் போது பாடல் தொடரும் (GIRM 86). இந்த பாடலை எங்கிருந்து தேர்வு செய்வது? இது உரோமை படிகீத ஏட்டிலிருந்து எடுக்கப்படலாம். அதில் பல்லவியும் அதற்குரிய திருப்பாடலும் இருக்கும். அல்லது ஆயர் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட பாடல் நூலிலிருந்து ஒரு பாடலைப் பாடலாம். ஆனால் இப்பாடல் நற்கருணையின் பொருளையும் அதுக்குறித்துக் காட்டும் உண்மையையும் கொண்டதாக அமைய வேண்டும். நற்கருணையோடு எந்த முறையிலும் தொடர்பற்ற, வெறும் சமூக, விடுதலை சிந்தனையுடைய பாடல்கள் இங்கு ஏற்புடையவை அன்று. இத்தகைய பாடல் எல்லாராலும் சுலபமாகப் புரிந்துக் கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும்.
திருவிருந்துபாடல் இடபெறவில்லை என்றால் திருப்பலில் நூலில் உள்ள பல்லவியை வாசிக்க வேண்டும். இது நம்பிக்கையாளர்களாலும், அல்லது அவர்களில் ஒருவராலும் வாசிக்கப்படலாம். யாரும் இதைச் செய்யாவிட்டால் அருள்பணியாளரே தான் நற்கருணையை உட்கொண்டபின், மக்களுக்கு நற்கருணை வழங்கும் முன் வாசிக்க வேண்டும்.

2.4. நற்கருணை வழங்குதல்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொண்டபின் பீடபணியாளர்களுக்கும், நம்பிக்கை யாளர்களுக்கும் நற்கருணையை வழங்குவார். அவ்வாறு வழங்கும் போது, நற்கருணைத் துண்டை கையில் எடுத்துக் காட்டி “கிறிஸ்துவின் திருவுடல்” என்று நம்பிக்கையாள் கேட்கக் கூடிய அளவில் சப்தமாகச் சொல்வார். நம்பிக்கையாளரோ அதே தொனியில் “ஆமென்” என்று சொல்லி விட்டு நாக்கை நீட்டி நற்கருணையை வாங்குவார் இந்த ஆமனுக்கு ‘ஆம், நான் கிறிஸ்துவின் உடல் என்று நம்புகிறேன்’ என்று பொருள்.

அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை அருள்பணியாளர் உட்கொள்வது மிக அவசியமானது. அப்பொழுதுதான் அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலியை நிறைவு செய்கிறார். அதேபோல் அவர் அப்ப இரசகுணங்களில் நற்கருணை உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில அருள்பணியாளர் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை மட்டும் உட்கொண்டு நற்கருணையை மக்களுக்கு வழங்கச் செல்வதைப் பார்க்கிறோம். இது சரியல்ல.

கூடிய வரையில் நம்பிக்கையாளர்களுக்கும் அதே திருப்பலியில் வசீகரம் செய்ய அப்பங்களை வழங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்து யார் யார் நற்கருணையை வழங்கலாம்? கைகளில் நற்கருணையை வாங்கலாமா? அப்படியானால் அதை எப்படி வாங்கி உட்கொள்வது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

சாதாரணமாக திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளரும், மற்ற அருள்பணியாளர்களும், திருத்தொண்டரும்(களும்) திவ்விய நற்கருணையை மக்களுக்கு வழங்குவார்கள். மற்ற அருள்பணியாளர் களோ, திருத்தொண்டரோ இல்லாதபோது இதற்காக நியமிக்கப்பட்ட அருள்சகோதரிகளும், இருபால் பொது நிலையினரும் நற்கருணையை மக்களுக்கு வழங்கலாம். இவர்கள் (அசாதாரன) சிறப்பு பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் (Extra - Ordinary Ministers of Holy Communion). மறைமாவட்ட ஆயர் மட்டுமே (பங்கு பணியாளர் அல்ல) ஒரு குறிப்பிட்ட தருணத்திற்குத் தனித்தனியாக இவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பார். அவசியமானபோது நிரந்தரமாகவும் நற்கருணை வழங்க அனுமதிக்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து பங்கு அருள்பணியாளர் இவர்களின் பெயருடைய பட்டியலை ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் திருப்பலியில் மட்டுமல்ல, நோயாளிகளுக்கும் நற்கருணையை எடுத்துச் சென்று வழங்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து அனுமதிக்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். அவையாவன :

1. வேறு அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ, பீடத்துணைவரோ (ழிஉலியிதீமிe) இல்லாத சூழ்நிலை,
2. இவர்கள் மற்றொரு மேய்ப்பு பணியின் காரணத்தால் அல்ல உடல் நலக்குறைவு காரணத்தினால் திருப்பலி
யில் நற்கருணை வழங்க முடியாத நிலை.
3. நற்கருணையை உட்கொள்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் திருப்பலியை நிறைவேற்றும்
அருள்பணியாளர் நற்கருணை வழங்கினால் நீண்ட நேரம் கெடுக்கும் என்ற நிலை.
சில சமயங்களில் மறைமாவட்ட ஆயர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நற்கருணை வழங்க மற்றவர்களைத் தேர்வு செய்து அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட அருள்பணியாளருக்கு வழங்கலாம். மற்றவர்கள் நற்கருணையை வழங்க அனுமதியளிக்கும் போது பின்வரும் வரிசைக் கிரமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாசகர் (Lector), பெரிய குருமட மாணவர், ஆண்பால் துறவி, பெண்பால் துறவி, வேதியர், இருபால் பொது நிலையினர். மறைமாவட்ட ஆயர் சூழ்நிலைக்கேற்ப இந்த வரிசைக் கிரமத்தை மாற்றலாம்.

இவ்வாறு நற்கருணை வழங்கும் அசாதாரண பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியும், நற்கருணை பற்றிய அறிவுரையும் வழங்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட விதிவிலக்கு நம்பிக்கையாளர்களுடைய ஆன்ம நலன்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படுகிறது. (காண் Immensae Caritatis ஜனவரி 25, 1973).

இந்த அசாதாரண நற்கருணை பணியாளர் தங்களுக்குத் தாங்களே நற்கருணையை வழங்கக் கூடாது. அருள்பணியாளரிடமிருந்து நற்கருணையை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

உரோமை திருவழிபாட்டு பேராலயத்தினால் அனுமதிக்கப்பட்ட மறைமாவட்டங்களில் நம்பிக்கையாளர் கைகளில் நற்கருணையை வாங்கி உட்கொள்ளலாம். அவர் தமது வலது கையால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ள தமது இடது கையின் மேல் நற்கருணையை வாங்க வேண்டும். பிறகு தமக்கு அடுத்து வருகிறவருக்கு இடம் கொடுத்து சற்று விலகி அங்கேயே தமது வலது கையால் எடுத்து உட்கொள்ள வேண்டும். எக்காரணத்திற்கும் நற்கருணையை தம் அமரும் இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

நற்கருணையை நாக்கில் வாங்கும்போது ஒருவர் நின்று கொண்டோ முழங்காலிலிருந்தோ வாங்கலாம். நின்று கொண்டு வாங்குவோர் அதற்குமுன் தலைவணங்கி வாங்க வேண்டும். முழங்காலில் இருந்துக்கொண்டு நாக்கில் நற்கருணை வாங்குவோர் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் முழங்காலில் இருப்பதே வணக்கத்தின் அடையாள மாகிறது.

2.5. திருவிருந்துக்குப் பின் அமைதி
மக்கள் அனைவரும் நற்கருணை உட்கொண்ட பின் திருபாத்திரங்களை அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ சுத்தம் செய்யும் போது, திருவிருந்து பாடல், நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மக்கள் அமைதியான முறையில் தங்கள் உள்ளத்தில் உரையாடுவர். இந்த அமைதி, வழிபாட்டைத் தன்மயமாக்க அவசியம்.

3. இறுதி நன்றி கூறுதல்
திருவிருந்து பாடலையும், அதன் முடிவில் இடம் பெறும் அமைதியான தனிச் செபத்தையும் தொடர்வது
‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு.’ இந்த மன்றாட்டை ‘மன்றாடுவோமாக’ என்று அருள்பணியாளர் கூறிவிட்டு தந்தையாகிய இறைவனுக்கு நன்றி கூறிச் செபிக்கிறார். அதாவது வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் கிறிஸ்துவின் திரு உடலுக்கும், திரு இரத்தத்திற்கும் நன்றி கூறி செபிக்கிறார். மேலும் திருப்பலிக்காகவும், அதன் வழியாகக் கிடைக்கும் அருள் அடையாளக் கொடைகளுக்காகவும் நன்றி கூறுகின்றார். இதன் பயனாகக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழத் தேவையான வரங்களுக்காகவும் செபிக்கிறார். இதன் முடிவில் மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி நன்றி மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.




திருப்பலி விளக்கம் - நற்கருணை மன்றாட்டு

ஆ.நற்கருணை மன்றாட்டு
உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் நற்கருணை மன்றாட்டு பற்றிய பின்வரும் குறிப்பை வாசிக்கிறோம்:

“திருப்பலி கொண்டாட்டம் முழுவதற்கும் மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருனை மன்றாட்டு... நன்றி மன்றாட்டாகவும் புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறை வேண்ட லுடனும், நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருன்பணியாளர் அழைப்பார். அவர்களை தம்முடன் இறைவேண்டலில் இணைத்து திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைதந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெறும் செயல்களை அறிக்கையிடுவதிலும், பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது.” ( எண் 78).

இந்த மேற்கோவிலிருந்து நற்கருணை வழிபாட்டில் பயனுள்ள முறையில் பங்கு கொள்வதற்கு நற்கருணை மன்றாட்டுகளைச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமென்பது தெளிவாகிறது. எனவே இப்பொழுது நற்கருணை மன்றாட்டுகளின் பின்னணி, தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, அவற்றில் பொதிந்துள்ள இறையியல் சிந்தனை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

1. நற்கருணை மன்றாட்டுகளின் பின்புலம்
நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இறுதி இரவு உணவு பகுதியில் பயன்படுத்தபட்டுள்ள “நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து” எனும் வார்த்தைகள் நற்கருணை மன்றாட்டு தோன்றுவதற்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றாலும், இப்பகுதி நற்கருணை மன்றாட்டு தோன்றிய விதமனைத்தையும் விளக்குகிறது என்று சொல்ல முடியாது. எனவே இதன் மூலத்தை வேறு இடங்களில் தேட வேண்டும்.

1.1. யூதர்களின் பெராக்கா (Berakah)
யூதர்களுக்கு ஒவ்வொரு உணவும், குறிப்பாக பாஸ்கா விழாவுக்கு முந்தினநாள் மாலை உணவு திருவழிப்பாட்டுத் தன்மை உடையதாக இருந்தது. அப்பத்தையும், இரசக்கிண்ணத்தையும் ஆசீர்வதித்தல். யூதர்களின் அன்றாட செப அமைப்பின் ஒரு கூறாக இருந்தது. அவர்களுடைய “யாவே வழிபாட்டில்” இறை புகழ்ச்சி சிறப்பிடம் பெற்றிருந்தது. மனித வரலாற்றில் விளங்கும் இறைவனின் அன்புக்கு, மனிதர் காட்டும் நன்றியறிதலும், வாழ்த்துரையும் ஒரு பதிலுரையாக அமைந்திருந்தது. தம் வியத்தகு படைப்பு செயலினால் இறைவன் பேச, அவருடைய படைப்பின் கைவன்மைக்குப் புகழ் கூறி மனிதன் பதிலளித்தான்
(காண் சங் 26:7). எனவே யூதர்களின் “இறைபுகழ்ச்சி” இயல்பிலேயே இறை வார்த்தைக்கு அளிக்கும் பதில் மன்றாட்டாக இருந்தது. இறைவன் தங்களுக்குச் செய்தவற்றை வெளிப்படை யாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும், நம்பிக்கையை வெளிப்படுத்து வதாகவும் இருந்தது. இவ்வாறு அது மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த இறை புகழ்ச்சியாக இருந்தது.

இது போன்ற புகழ்ச்சி மன்றாட்டுக்குப் பழைய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன ( காண் தொ.நூ 24:27; 1அரச 1:48). புதிய ஏற்பாட்டிலும் இறைபுகழ்ச்சிக்குச் சான்றுகளைக் காணலாம்( காண் மத் 11:25‡27; எபே 1:3‡14) . இப்புகழுரைகள் கடவுளின் வியத்தகுச் செயல்களைப் பிந்திய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தின. அவர்களும் இச்செயல்களை நினைவு கூர்ந்து இறைவனைப் போற்றி புகழ்ந்தனர். கால போக்கில் இப்புகழுரைகள் மாறாத வாய்ப்பாட்டு செபங்களாக மாறின. (Stereotype formulas). யூதர்களிடையே பழக்கத்திலிருந்த 18 புகழுரைகள் குறிப்பிடத்தக்கவை.

1.2. புதிய ஏற்பாட்டில் பின்னணி
புதிய ஏற்பாட்டில் “ நன்றி கூறுதல்” என்பதற்கு “யூக்கரிஸ்தேயின்”(Eucharistein) என்ற கிரேக்கச் சொல்லும், “புகழுரைத்தல்” என்பதற்கு “யூலோகேயின்” (Eulogein) என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் எபிரேய மொழியில் “நன்றி கூறுதல்” என்பதற்குத் தனிச்சொல் கிடையாது. எனவே இக்கருத்தை வெளிப்படுத்த “பெராக்கா” (Berakah=இறை புகழ்ச்சி) என்றே சொல்லே பயன்படுத்தப்பட்டது.
அப்பம் பலுகுதலை விவரிக்கும் பகுதிகள் இறுதி இரவு உணவைப்பற்றி கூறும் பகுதியுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டுள்ளன. ( காண். மாற் 6:35; 8:26). மாற்6:41 இல் நற்செய்தியாளர் “இறை புகழ்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யோவானோ அதே புதுமையை விவரிக்க “நன்றி கூறுதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ( யோவா 6:11). மாற்கு ஏழு அப்பம் பலுகுதலை விவரிக்குமிடத்தில் ( 8:6) “நன்றி கூறுதலும்” என்ற சொல்லை உபயோகிக்கிறார். இதிலிருந்து“நன்றி கூறுதலும்”, “இறை புகழ்ச்சியும்” ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என உணர முடிகிறது.

இது போன்றே மத்தேயும், மாற்கும் அப்பத்தைப்பற்றிக் கூறும்போது “இறைபுகழ்” என்றும், கிண்ணத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது “நன்றி” என்றும் சொல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் பவுலும், லூக்காவும் இரண்டு செயல்களுக்கும் “நன்றி கூறி” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். முதல் கிறிஸ்தவர் களுக்கும் இவ்விரு சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தின ( காண் 1 கொரி 14: 16‡17) இவ்வாறு ( 1 ) இயேசுவின் இறுதி இரா உணவும் (2) யூதர்களின் “பெராக்காவும்” ( 3) புதிய ஏற்பாட்டுக் கால மக்களின் “ இறை புகழுரைதல்” மற்றும் “நன்றி கூறுதலும்” நற்கருணை மன்றாட்டுக்கு பின்னணியாக அமைந்தன.

2. நற்கருணை மன்றாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
நமது ஆண்டவர் தமது இறுதி உணவின்போது தம் சீடர்களுக்கு அப்பத்தையும் கிண்ணத்தையும் அளித்து, “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்றார். இது தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் நற்கருணை மன்றாட்டைத் தமக்கேற்ப அமைத்துக் கொள்ள வாய்ப்பும், உரிமையும் அளித்தது.

முதல் கிறிஸ்தவர்கள் காலத்தில் “ நற்கருணை வழிபாடு” பொது உணவு வேளையின் முடிவில் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக நம் ஆண்டவருடைய இறுதி உணவின் இரு “இறைபுகழுரைகளும்” ( துவக்கத்திலும் முடிவிலும்) ஒரே இறைபுகழ் மன்றாட்டாக இணைக்கப்பட்டன. இதிலிருந்துதான் பிற்கால நற்கருணை மன்றாட்டு செபங்கள் விரிவாக்கப்பட்டன.

நற்கருணை மன்றாட்டைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துத் தொகுக்கக்கூடிய வாய்ப்பு அதன் பொது அமைப்பிலே இருந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வரையறுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் ஏதுவும் இல்லை. இதை மறைசாட்சியான புனித ஜஸ்டின் என்பவருடைய “ சமயதற்காப்பு” (Apology of Justin) உரையிலும், அதன் உட்கூறுகளின் சுருக்கத்தை ஹிப்போலிட்டஸ் (Hypolitus) என்பவரின் “திருத்தூதர்களின் மரபு” (Apostolic Tradition) என்ற நூலிலும் இருந்து அறிகிறோம்.

நான்காம் நூற்றாண்டிற்கு முன் ஒரே ஒரு நற்கருணை மன்றாட்டு இருந்ததாக புனித ஜஸ்டின் குறிப்பிடுகிறார். மேலும் அது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். எனினும் 4‡ஆம் நூற்றாண்டி லிருந்து, வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் தேவையயனும் ஒரு பொதுவான மனப்பாங்கு நிலவி வந்தது. இத்தகைய எண்ணம் முதலில் கீழக்குத் திருஅவையில் தான் தோன்றியது. ஏனெனில் இது “ஆரியனிஸம்” (Arianism) போன்ற தப்பறையான கொள்கைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தவும் பாதுக்காகவும் அவசியம் என உணரப்பட்டது.

இதன் விளைவாக கால போக்கில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நற்கருணை மன்றாட்டுகள் தோன்றின. இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன.

1. எகிப்திய அல்லது அலெக்சாந்திரிய வழிபாடு
2. அந்தியோக்கியா அல்லது மேற்குசீரியா வழிபாடு
3. கிழக்கு சீரிய வழிபாடு
4. உரோமைய வழிபாடு
5. கல்லிக்கன் மற்றும் ஸ்பெயின் சார்ந்த வழிபாடு

இவற்றுள் உரோமை வழிபாட்டு முறையைச் சார்ந்த நற்கருணை மன்றாட்டு (உரோமைத் திருமுறை-Roman Canon) காலபோக்கில் மேற்குதிரு அவையில் 11-ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப் பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் இது மட்டுமே உலகெங்கும் இலத்தின் திருஅவையில் பரவி நிலைத்து 1970 வரை நின்றது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உரோமை வழிபாட்டில் மற்றும் மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்ட பின் இந்த உரோமன் திருமுறை சிலசிறு மாற்றங்களுடன் முதல் நற்கருணை மன்றாட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது இலத்தீன் திருஅவையில் நான்கு நற்கருணை மன்றாட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றோடு ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவரோடு நிகழ்த்தும் திருப்பலிக்கான நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும், பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சிறுவர்களுக்கான திருப்பலியின் மூன்றாவது நற்கருணை மன்றாட்டு இருபாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு நற்கருணை மன்றாட்டுகளின் கருப்பொருள் ஒன்றே. அதாவது இறைவன் புரிந்த அரும்பெரும் செயல்களுக்குப் புகழ்பாடி, நன்றிகூறி மன்றாடுவதாகும். திருப்பலியில் கிறிஸ்துவின் மீட்புச்செயல் நினைவு கூறப்படுகிறது. இதற்கு மூலக்காரணராகிய இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறப்படுகிறது. மீட்பின் பலனை நம்பிக்கையாளர் அடையும்படி மன்றாட்டுகள் இடம் பெறுகின்றன. அவை பயனை விளைவிக்கும்படி காணிக்கைகள், அதாவது பலிபொருள் (கிறிஸ்துவே) ஒப்புக் கொடுக்கப்படுகிறது.

3. நற்கருணை மன்றாட்டின் அமைப்பும் பொருளும்
நற்கருணை மன்றாட்டு “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்ற தொடக்க உரையாடலில் ஆரம்பித்து இறுதி புகழுரைக்குப் (Doxology) பின் நம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் “ஆமென்” என்ற பதிலோடு நிறைவடைகிறது.

3.1 தொடக்க உரையாடல்
தொடக்கவுரை (Preface) திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருப்பலிக்குக் குழுமி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களிடையே இடம் பெறும் உரையாடலோடு தொடங்குகிறது. “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்” என்று அருள்பணியாளர் விடும் அழைப்பு அவர் தொடங்கியிருக்கும் இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறும் தொடர் செயலில் திருக்குழுமத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த அழைப்பு அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் சேர்ந்துதான் இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

3.2 தொடக்கவுரை ( Preface)
“பிரிப்பேஸ்” என்பது “ப்ரேபாசியும்” (Prefatium) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இது ஒரு நூலுக்கு முன்னுரை போல் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் இருக்கிறது என்று பொருளல்ல. மாறாக இந்த இலத்தீன் சொல்லுக்கு “முன்மொழிதல், பறைசாற்றுதல், எடுத்துரைத்தல்” போன்ற பொருள் உண்டு.

இத்தொடக்கவுரை கடவுளை போற்றுவது ஏன் “தகுதியும் நீதியும் ஆகும்” என விளக்குகிறது. இது யூதர்களின் பெராக்கா (இறை புகழ்ச்சிப்) பாணியில் தொடங்குகிறது. இறைவனின் திருப்பெயரைக் கூவியழைத்து, மீட்பின் வரலாற்றில் படைப்பு, மனுவுருவாதல், மீட்பு ஆகிய மாபெறும் செயல்களுக்காக வாழ்த்தும், நன்றியும் கூறப்படுகிறது. இறைவன் புரிந்த அருஞ்செயலுக்காக இறைபுகழ் கூறுவதே யூதர்களின் இறைபுகழ்ச்சியிலும், கிறிஸ்தவர்களின் இறைபுகழ்ச்சியிலும் காணப்படும் சிறப்புமிக்க ஓர் அம்சமாகும். விண்ணக தந்தை தம் மக்கள் மீது பொழிந்திருக்கும் அன்பிற்கு, அவர்களின் பதில் அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த ‘பதிலாகவும்’ இது அமைகிறது. இறைபுகழும், நன்றியும் நிறைந்த இவ்வழிபாடு இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் எல்லா கிறிஸ்தவர்களும் இடைவிடாது செபிக்க வேண்டுமென புனித பவுல் அழைக்கின்றார்.

இரண்டாவது நான்காவது நற்கருணை மன்றாட்டுகளுக்குச் சிறப்பான தொடக்கவுரைகள் உள்ளன. இரண்டாவதுக்கான தொடக்கவுரையில் முக்கிய நிகழ்ச்சிகளான படைப்பு, மனிதராதல், மீட்பு ஆகியவற்றின் வழியாக மீட்பின் வரலாறு சுருக்கமாக நினைவு கூறப்படுகிறது. நான்காவது நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரையிலிருந்து தூய ஆவியாருக்குரிய முதல் மன்றாட்டு (First Epiclesis) வரையில் நீண்டதொரு வாழ்த்துரையைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு வழிபாட்டு வல்லுநர் ஜேலினோ கருத்துப்படி இதன் முதல் பகுதி விண்ணகத் தந்தைக்குரிய நன்றி மன்றாட்டாகும். இது அவருடைய உள்ளியல்புகளை நினைத்து வாழ்த்துவதாகவும் அவருடைய படைப்புக்காக குறிப்பாக, மனிதரின் படைப்புக்காகவும் வீழ்ச்சிக்காகவும் அவர் தொடங்கிய மீட்புசெயலுக்காகவும், மெசியாவாகிய இறைமகன் மனிதராகி, பாடுபட்டு, இறந்து உயிர்த்து ஆற்றிய மீட்பு பணிகளுக்காகவும், திருஅவையின் அருள்அடையாள வாழ்விலே தூய ஆவியார் புரியும் திருப்பணிக்காகவும் நன்றியறிதலாக அமைந்துள்ளது.

முதலாவது நற்கருணை மன்றாட்டுக்கும் மூன்றாவது நற்கருணை மன்றாட்டுக்கும் தொடக்கவுரை கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மறைபொருளுக்கும், விழாவிற்கும் ஏற்றாற்போல் மாறுபடலாம். இன்று திருப்பலி நூலில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், பெருவிழாக்கள், விழாக்களுக்கும், புனிதர் விழாக்களுக்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூற்றுக்கு மேற்பட்ட தொடக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

3.3 புகழ்பாடல் ( Sanctus)
இது வானதூதர் எழுப்பிய வாழ்த்தொலி ( எசா 6:3) நமதாண்டவர் எருசலேமுக்கு நுழைந்த போது மக்கள் கூட்டம் அவரை வரவேற்று எழுப்பிய ஆர்ப்பரிப்பு ( மத் 23: 1 ; 21:9) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. சேராபீன்கள் என எபிரேயத்தில் அழைக்கப்படும் பக்தி சுவாலகர் என்னும் வானதூதர்கள் விண்ணகக் கோயிலைத் தம் பிரசன்னத்தால் நிறைத்தெழுந்து இறைவனுக்கு இப்பாடலைப் பாடியதாக வாசிக்கிறோம். அவர் அனைத்து உலகிற்கும் ‘ஆண்டவர்’ ஆவார். அவர் வானகச் சேனைகளுக்கும் வானின் வல்லமைகளுக்கும், அதாவது தேவதூதர் அணிகளுக்கும், விண்மீன்களின் கூட்டங்களுக்கும் ஆண்டவராகப் புகழ்ந்தேத்தினர் இஸ்ரேயல் மக்கள் ( திப 103; 148:1‡4; 1 அரச 22:19 காண்க.) திருவெளிப்பாட்டிலும் புனித யோவான் கண்ட காட்சியில் “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்” என்று இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகிறதைக் குறிப்பிடுகிறார். மூன்று முறை ‘தூயவர்’ என்பது மூவொரு கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய அறிஞர்.

இவ்வார்ப்பரிப்பின் இறுதிபகுதி நம் ஆண்டவர் மகிமையோடு எருசலேம் நுழைந்த குருத்தோலை விழாவை நினைவு கூறுகிறது. இச்சொற்களை திருப்பாடல்கள் 118:26 இல் காண்கிறோம். இவ்வார்ப்பரிப்பு இரண்டும் தொடக்கவுரையில் கூறப்பட்ட அனைத்திற்கும் இறைமக்கள் இயல்பாகவே கொடுக்கின்ற ஒரு பதிலாகவும் அமைந்துள்ளன.

3.4 ‘நீர் மெய்யாகவே தூயவர்’ ( Vere Sanctus)
இது புகழ்பாடலின் விரிவாகவும், அதனை பின் பகுதியோடு இணைப்பதாகவும் அமைந்துள்ளது. இது புகழ்பாடலோடு இணைந்து நன்றி மன்றாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதை ‘நிலைமாற்றச் செபம்’
(Transition Prayer) என்று கூட சொல்லலாம். இந்த மன்றாட்டு வேறு முறையில் விரிவாகலாம் என்பதற்கு முதல் நற்கருணை மன்றாட்டும், நான்காவது நற்கருணை மன்றாட்டும் தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஒன்றில் பரிந்துரை மன்றாட்டுகளும், புனிதர்களை நினைவு கூறும் செபமும், மன்றொன்றில் மீட்பு வரலாற்றின் விரிவுரையும் இருக்கின்றன.

3.5 காணிக்கைகளை புனிதபடுத்த மன்றாட்டு
மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அர்ச்சிக்கப்படவும், அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் தூய ஆவியாரை அனுப்பும்படி இங்கு மன்றாடப்படுகிறது. இம்மன்றாட்டு (Epiclesis) தொன்றுத்தொட்டு நற்கருணை மன்றாட்டின் வழக்கில் உள்ளது. முதல் நற்கருணை மன்றாட்டில் இது நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. “இரக்கம் மிகுந்த தந்தையே இக்கொடைகளையும், காணிக்கைகளையும்” ( ஞற்ழிது நுணுயிழிமிஷ்லிஐeது) என்று தொடங்கும் மன்றாட்டு பின்பு சேர்க்கப்பட்டது. ஆனால் தூய ஆவியாரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்போது இருக்கும் எல்லா புதிய நற்கருணை மன்றாட்டுகளில் தூய ஆவியாருக்குரிய மன்றாட்டைத் தெளிவாகக் காணலாம். நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்குமுன் இம்மன்றாட்டை அமைத்திருப்பதால், மேற்கு திருஅவை மரபின் நற்கருணை வழிபாட்டு இயலுக்கு மதிப்புக் கொடுக்கிறது.

3.6 நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதி
நற்கருணையை ஏற்படுத்துதலை விவரிக்கும் இப்பகுதியில் விசுவாசமும் பக்தியும் நிறைந்த சூழ்நிலையில் அருள்பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் கைகளிலேந்தி அர்ச்சிக்கும் வார்த்தைகளை, அதாவது கிறிஸ்து சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறி இயேசுகிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகின்றார். படைப்பிலும், மீட்பின் வரலாற்றிலும் மனிதரின் நலன்கருதி இறைவன் செய்த அனைத்தும் இதில் மீண்டும் நினைவுகூறப்படுகின்றன, உடனிருக்கச் செய்யப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

3.7 எழுந்தேற்றம்
வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கி மக்களுக்குக் காட்டுதல் தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மரபு அன்று. திருப்பலியில் இது முக்கியமானதோ, உச்சக்கட்டமான செயலோ அன்று . இரண்டாம் வத்திக்காம் சங்கம் வரை பலிபீடம் திருப்பலி பீட முற்றத்தில் பின்புறம் சுவரோடு ஒட்டியதாக இருந்தது. சுவற்றின் மேல் பகுதியில் பாடுபட்ட சுருபமுடைய சிலுவைத் தொங்கியது. அருள் பணியாளர் தமது முதுகை மக்கள் பக்கம் காட்டிச் சுவரை நோக்கிய வண்ணமாக பலியை ஒப்புக் கொடுத்தார். வழிபாடும் இலத்தீன் மொழியில் இருந்தது.

மக்களுக்கு வழிபாட்டு மொழி புரியாததாலும், எப்பொழுது இயேசுகிறிஸ்து அப்பத்தையும் இரசத்தையும் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி பலிபீடத்தில் பிரசன்னமாகிறார் என்று தெரியாததாலும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் ஆனதும் தங்களுக்குத் தூக்கி காட்ட வருந்திக் கேட்டதால் உண்டான பழக்கம் எழுந்தேற்றம். இது 9‡ஆம் நூற்றாண்டில் உண்டான ஒரு பழக்கம். அருள்பணியாளர் தொடர்ந்து சுவரைப் பார்த்து நின்றதால், தமது தலைக்குமேல் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. இயல்பாக மக்கள் தலைவணங்கி ஆராதிக்கத் தொடங்கினார்கள். இது திருப்பலியில் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது விதிவிலக்காக வந்த ஒரு தவிர்க்க முடியாத வழக்கம் என்று சொல்ல வேண்டும்.

இப்பொழுது மக்களைப் பார்த்து திருப்பலி நிகழ்த்தும் முறை கையாளப்பட்டாலும், வழிபாடு அவரவர் தாய் மொழியில் நிகழ்ந்த போதிலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும் இரசக்கிண்ணத்தையும் மக்களுக்கு தூக்கிக் காட்டும் நீண்டநாள் மரபு நிறுத்தப்படவில்லை.

அருள்பணியாளர்கள் இப்பொழுது தலைக்கும் மேல் தூக்கிக் காட்ட வேண்டியதில்லை. தங்கள் முகத்துக்கு முன்வரை தூக்கி காட்டினால் போதும். மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தூக்கிபிடிப்பது சரியல்ல. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தலை வணங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்களுடைய பக்திக்கும், கவனத்திற்கும் ஊறு விளைவிக்கும். மற்றும் புதியதோர் தவறுதலான கேட்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.

3. 8. நினைவு ஆர்ப்பரிப்பு
இது நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்கும் அதற்குப் பின்வரும் பகுதிக்குமிடையே ஒரு தொடர்பை உருவாக்கு வதற்காக அமைந்துள்ளது. “நம்பிக்கையின் மறைபொருள்” என்று ஆர்ப்பரிப்பது ஆண்டவர் மீது மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அவரை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் தூண்டுவதாய் அமைகிறது. விசுவாசத்தின் மறைபொருளை விளக்குவதாகவும் அமைகிறது. இதைத்தான் “ஆண்டவரே நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்” என்ற நினைவு ஆர்ப்பரிப்பு வெளிப்படுத்துகிறது. இது போன்ற மேலும் 3 பாடங்கள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றையும் நாம் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். “எனக்காக பிறந்து, எனக்காக மரித்து .... உமக்கே ஆராதனை” என்று சொல்வது தவறாகும். தவிர்க்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் பறைசாற்றக் கூடியே நேரம் இது. இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும் நேரம் அன்று.

3.9. நினைவாக்கம் (Sacrificial Memorial)
நற்கருணை வழிபாட்டின் இரண்டாவது பகுதி இந்த செபத்தோடு தொடங்குகிறது. முதல் பகுதி கிறிஸ்துவின் உடலை அருள் அடையாள உடலாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இரண்டாவது பகுதி மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளாகிய பாஸ்கா மறைபொருளை நினைவு கூறுவதோடு, இயேசு, கிறிஸ்துவையே இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கும் நேரமாக அமைகிறது. மேலும் கூடியிருக்கும் இறைமக்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்து (Second Epiclesis) அவர்களை ஒன்றிணைக்க வேண்டப்படுகிறது. இந்த இரண்டாவது பகுதி கிறிஸ்துவின் மறையுடலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. “மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என தாழ்மையுடன் உம்மை மன்றாடு கிறோம்” என்று சொல்லப்படுகிறது. (இரண்டாவது நற்கருணை மன்றாட்டு காண் ந.ம. III, IV).
தூய ஆவியார் உயிர்த்த கிறிஸ்துவின் கொடை. விண்ணகம் சென்ற கிறிஸ்து இதற்காகத் தந்தையிடம் பரிந்து மன்றாடிக் கொண்டுள்ளார். தூய ஆவியார் மக்கள் மீது இறங்கி வர மன்றாடுவது இரு நோக்கங்கள் கொண்டது: ஒன்று தூய ஆவியார் அனைவரையும் ஒன்றுசேர்த்து செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்பது (காண் உரோ 8:26-27). மற்றொன்று நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வதால் அதன் பயனாகிய ஒன்றிப்பை அடைய வேண்டும் என்பது (காண் 1 கொரி 10:17).

3.10. திரு அவையின் தேவைகளுக்காக மன்றாட்டு
அதன்பின் திருஅவையின் தேவை-களுக்காகவும் மக்களுடைய தேவைகளுக்காகவும் மன்றாட்டுகள் தொடர்கின்றன. இவை தூய ஆவியாரின் வருகைக்குரிய மன்றாட்டின் இயல்பான தொடர்ச்சியாகும். முதலில் திருஅவைக்காகவும், திருத்தந்தைக்காகவும், அடுத்து திருப்பணியாளர்கள், மற்றும் மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். (காண் ந.ம. ணூணூ, ணூணூணூ). நான்காவது மன்றாட்டில் “நேர்மையான உள்ளத்தோடு உம்மை தேடிவரும் யாவரையும் நினைவுகூர்ந்தருளும்” என்பது கவனிக்கத்தக்கது.

3.11 . புனிதர்களின் நினைவு
இறைவனின் அன்பில் சிறந்து வாழ்ந்து, இன்று விண்ணக பேரின்பத்தில் பங்கு பெற்றிருக்கும் நம் மூத்த சகோதரர்களாகிய புனிதர்களையும் சுருக்கமாக நினைவு கூர்ந்து நமக்காக பரிந்துரைக்க மன்றாடுகிறோம். முதல் நற்கருணை மன்றாட்டில் நற்கருணை ஏற்படுத்துதலை விவரிக்கும் பகுதிக்கு முன்னும் பின்னும் புனிதர்களை நினைவுகூர்வதைக் காணலாம். மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் கன்னிமரியும், அவரது கணவர் புனித சூசையப்பரைத் தவிர மற்றவர்கள் திருத்தூதர், மறைசாட்சியர் என்று பொதுவாக நினைவு கூறப்படுகிறார்கள்.

3.12. இறந்தோருக்காக வேண்டல்
இவ்வுலகில் வாழ்வோருக்காக செபித்த அருள்பணியாளர் இப்போது இவ்வுலகில் வாழ்ந்து மரித்தவர்களுக்காக மன்றாடுகிறார். இறைவன் அவர்கள் மீது கருணைக்காட்டிட மன்றாடுகிறார்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட மூன்று வேண்டுதல்களும் புனிதர்களின் சமூக உறவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இடம் பெறுகின்றன. பரிந்துரைகளின் கருத்துகளைக் குறிப்பிடுவதிலும், புனிதர்களை நினைவுகூர்தலிலும் ஒரே வகையான வரிசைகிரமத்தை நற்கருணை மன்றாட்டுகளில் காண்பதில்லை. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில் புனிதர்களை நினைவுகூர்தல் முதலிலும், மற்ற இரண்டிலும் (ணூணூ &ணூV) இறுதியிலும் அமைந்துள்ளது. வாழ்வோர்க்கான பரிந்துரைத்தலுக்குப் பின் இறந்தோர்க்காக மன்றாடுவது 3ஆம், 4ஆம் நற்கருணை மன்றாட்டுகளில் வரிசைக் கிரமமாயிருக்கிறது. ஆனால் 2 ஆம் நற்கருணை மன்றாட்டில் இறந்தோரை நினைவுகூர்ந்த பின்னரே நமக்காக வேண்டுதல் புரிகிறோம்.

3.13. இறுதி புகழுரை (Doxology)
இது நற்கருணை மன்றாட்டின் முடிவுரையாகும். என்றாலும் இதுவே நற்கருணை மன்றாட்டின் சிகரமாக அமைந்துள்ளது. எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் இந்த இறைபுகழ் ஒரே வகையாக அமைந்திருக்கிறது. திருப்பலியின் இறையியல்பையும் நோக்கத்தையும் மிகச் சுருக்கமாக, ஆனால் தெளிவாக எடுத்துரைக்கிறது. தூய ஆவியாரால் ஒன்றிணைக்கப்பட்ட திருஅவை இயேசுகிறிஸ்து வழியாக தந்தையாகிய கடவுளுக்கு உரிய வாழ்த்தும் வணக்கமும் ஆராதனையும் அளிக்கிறது. நற்கருணை மன்றாட்டின் இந்த இறுதிப் பகுதியைத் திருப்பலிக்குத் தலைமையேற்று நிகழ்த்தும் அருள்பணியாளர் பாட அல்லது பறைசாற்ற, மக்கள் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி இப்புகழுரையை உறுதிப்படுத்துகினறனர், தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். இதைப் பெரிய ‘ஆமென்’ என்று சொல்வதுண்டு. இந்த இறுதி புகழுரையை திருப்பணியாளர் மட்டுமே பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இது நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாகும். எவ்வாறு நற்கருணை மன்றாட்டில் எந்த ஒரு செபத்தையும் சொல்ல மக்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல்தான் இங்கும். இந்த இறுதிபுகழுரையில் வரும் ‘இவர்’ இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்றது. மேலும், அருள்பணியாளர் திருதட்டையும், கிண்ணத்தையும் தூக்கிப் பிடித்து நிற்பதால், அப்ப இரச குணங்களுள் பிரசன்னமாயிருக்கும் இயேசுவையே, ‘இவர்’ குறிக்கிறது. கூட்டுத்திருப்பலியில் திருதட்டுடன் அப்பத்தை ஒருவரும், இரசக் கிண்ணத்தை மற்றொருவரும் தூக்கிப் பிடிப்பர். ஏனைய கூட்டுப் பலியாளர் வேறு அப்பப் பாத்திரங்களை தூக்கிப் பிடிப்பது முறையானது எனக் கூறமுடியாது; அவசியமும் இல்லை.

4. நற்கருணை மன்றாட்டுகளின் சிறப்பு பண்புகள்
நற்கருணை மன்றாட்டின் அமைப்பு கூறுகளை விளக்கியபின் அவற்றில் இழையோடும் சில பண்புகளைப் பற்றிய விளக்கம் இங்கு இடம் பெறுகிறது.

4.1. நினைவாக்கம் (Anemnesis)
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று நம் ஆண்டவர் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். இன்று நாம் அப்பத்தைப் பிட்டும், கிண்ணத்தைப் பகிர்ந்தும் கொள்வதின் வழியாக கிறிஸ்து தம்மையே பகிர்ந்தளித்ததை நினைவு கூர்கிறோம்.
விவிலியத்தில் ‘நினைவுகூர்தல்’ என்பது செயலாக்கம் உடைய இரு பண்புகளைக் கொண்டது. ஒன்று கடவுள் மீட்புக்கடுத்த வாக்குறுதிகளில் பிரமாணிக்கம் தவறமாட்டார் என்பதை மக்களுக்கு நினைவூட்டுதலாகும். இது மக்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கும். மற்றொன்று அதே மீட்புக்கடுத்த வாக்குறுதிகனைக் கடவுளுக்கும் நினைவுப்படுத்துதலாகும். அதாவது, மக்கள் கடவுளின் திருமுன் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவற்றைக் காட்டி அவரது மீட்பின் வாக்குறுதிகளை மீண்டும் செயலாக்க மன்றாடுவது. எனவே நினைவாக்கம் வெறும் குறித்துக் காட்டுதல் மட்டுமல்ல, செயலூக்கமும், படைக்கும் ஆற்றலு முடைய ஒரு செயல்.
இதன் அடிப்படையில் யூதர்கள் பாஸ்கா வைக் கொண்டாடும் போது கடவுளுடைய அரும் பெரும் செயல்களை நினைவுக்குக் கொண்டுவந்து பறைசாற்றினர். தங்கள் முன்னோர்களுக்குக் கடவுள் செய்த அதே மீட்புச்செயல்களை இப்பொழுதும் தங்களுக்குச் செய்ததாகவும் அதனால் அதன் பயனை தாங்கள் தூய்ப்பதாகவும் உணர்ந்தனர். எனவே இறைவனை உளமாற புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இன்றும் திருப்பலி கொண்டாட்டத்தில் இது நடைபெறுகிறது. நற்கருணை மன்றாட்டு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வுகள், அதாவது மீட்கும் ஆற்றலுடைய அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை முனைப்பான (எஸஷ்ஸஷ்d) முறையில் நினைவு கூறப்படுகின்றன. திருப்பலியில் பங்கு பெறுவோர் இங்கே இப்பொழுது மீட்கப்படுவதாக உணரமுடிகிறது. இயல்பாகவே அவர்கள் இறைவனை புகழ்ந்து நன்றிகூற உந்தப்படுகின்றனர்.

4.2. புகழுரையும் நன்றிகூறலும்
நற்கருணை வழிபாட்டிற்குச் சிறப்பளிப்பது புகழ்ச்சியும் நன்றியுமாகும். இவை இரண்டும் ஒரே பொருளுடையவை என மேலே குறிப்பிடப்பட்டது. இப்புகழுரை கடவுள் தம் திருமகனின் பலி வழியாக நமக்கு மீட்பளித்துள்ளார் என்பதை உயிராற்றல் உள்ளமுறையில் உணர்வதால், இயல்பாகவே நமது எதிர்விளைவும், பதிலுரையும் புகழ்ச்சியாகவும் நன்றியாகவும் உருவெடுக்கிறது.

4.3. இறைஞ்சி மன்றாடுதல் (Supplication)
புகழ்ச்சியும் நன்றியும் நிறைந்த ஆர்ப்பரிப்பு, கடவுள் தம் மீட்கும் செயலை, இப்பொழுது இங்கு தம் மக்கள் சார்பாக தொடர்ந்து செய்யவும் புதுப்பிக்கவும் வேண்டும் என்று மன்றாட திருகுழுமத்தைத் தூண்டுகிறது. இது நினைவாக்கத்தின் விளைவுமாகும். நினை-வாக்கத்தோடு இறைஞ்சி மன்றாடுவதும் இணைந்து செல்ல வேண்டும் என்பது கடவுளுடன் மனிதன் கொண்டிருக்கும் உறவின் தன்மைக்குத் தேவைப்படுகிறது. நற்கருணை வழிபாட்டில் தம் திருமகனின் சாவு ‡ உயிர்ப்பின் பேறு பலன்களால் நம்மை மீட்கும்படி தந்தையாகிய இறைவனிடம் மன்றாடப்படுகிறது. இறைவனின் மீட்புத்திட்டம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் முற்றுப்பெறும் வரை, அவரை அனுப்ப வேண்டுமென்று இறைஞ்சுகிறோம். இக்கண்ணோக்கில், நினைவாக்கம் கிறிஸ்துவின் மீட்புச்செயலின் ஓர் அருள்அடையாள வடிவமாகும். இதன் வழியாக, இன்னும் முற்றுபெறாத மீட்பின் வாக்குறுதியை நிறைவு செய்யும்படி தந்தையிடம் மன்றாடுகிறோம்.

4.4. காணிக்கை (பலி)
நாம் செய்த மன்றாட்டுகள் ஏற்கப்பட்டு நமக்குப் பயன் அளிக்கும் வகையில் நாம் நமது காணிக்கைகளை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இக்காணிக்கை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படுவதால் நாம் இயேசுகிறிஸ்துவையே கடவுளுக்குக் காணிக்கை யாக்குகிறோம். இதில்தான் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி அமைந்துள்ளது. இயேசுகிறிஸ்து கடவுளின் உகந்த மகனாகையால் அவர் ஏற்றுக்கொள்ளபடுவார். அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாம் இறைஞ்சி மன்றாடினதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிபாடு நமக்கு உண்டு.