மகனாகிய கடவுள் (God the Son) என்பவர் அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆள் ஆவார். தந்தையாம் கடவுளின் நித்திய வாக்காக இவரே விளங்குகிறார். ஆபிரகாமின் வழிமரபில் தாவீது குலத்தவராக தோன்றிய இறைமகன் இவரே. கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதராகி, நமது மீட்புக்காக சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே இவர்.
இறையியல்
தந்தையாம் கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிறப்பதால் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளை ‘மகன்’ என்று அழைக்கிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தவர். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை (same substance) கொண்டவர். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன.
மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணிலிருந்து இறங்கினார்; தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதர் ஆனார்; இவர் பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வருவார்; அவரது அரசுக்கு முடிவே இராது.
"இறைத் தந்தையின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். இவர் தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர்." (2)
வெளிப்பாடு
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” என்று திருத்தூதர் யோவான் (1:1-4,14) குறிப்பிடுகிறார்.
“விண்ணகத்திலுள்ள என் தந்தை” (மத்தேயு 12:50) என்றும், “என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருக்கிறார்” (லூக்கா 22:29) என்றும் இயேசு உரிமையுடன் போதிக்கிறார்; “தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?” (யோவான் 10:36) என்று கேள்வி எழுப்புகிறார். “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” (யோவான் 6:44) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவரது இறைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.
“முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்” என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் (1:1-2) காண்கிறோம். “அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர். தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார்” (திருப்பாடல் 107:19,20) என்ற வார்த்தைகள் இயேசுவின் மீட்புச் செயலை சுட்டிக் காட்டுகின்றன.
இயேசு கிறிஸ்து
“கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக “இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்” (பிலிப்பியர் 2:6-11) என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார்.
“கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; தீர்ப்பு வழங்குவோரிடம் நியாயமாகத் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்” (1பேதுரு 2:21-24) என்று திருத்தூதர் பேதுரு குறிப்பிடுகிறார்.
விளக்கம்
மூவொரு கடவுளில் இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து பிறக்கும் இறை வாக்கை நாம் மகன் என்று அழைக்கிறோம். தந்தையான இறை சிந்தனையோடு, மகனாகிய இறை வாக்கு தொடக்கம் முதலே ஒன்றித்திருக்கிறார். இறை சிந்தனையில் இருந்து இறை வாக்கு வெளிப்படும் நிகழ்வையே பிறத்தல் என்று அழைக்கிறோம். அதாவது, இறைமை என்ற ஒரே பொருள்மையில் தந்தையிடம் இருந்து மகன் பிறக்கிறார். ஆகவே, தந்தையாம் கடவுள் கொண்டிருக்கிற இறைத்தன்மை, அவரது மகனிடமும் உள்ளது.
படைப்பு என்பது தந்தைக்கு உரியதாக இருப்பது போன்று, மீட்பு என்பது மகனுக்கு உரியதாக இருக்கிறது. யார் வழியாக அனைத்தும் படைக்கப்பட்டனவோ, அவர் வழியாகவே அவை மீட்கப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்: “விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” (கொலோசையர் 1:16). ஆகவே, “இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்க கடவுள் திருவுளம் கொண்டார்” (கொலோசையர் 1:20).
கடவுளின் உருவமாகத் தோன்றிய இயேசுவில், இறை வாக்காகிய மகன் மட்டுமே மனிதரானார் என்று விசுவசிக்கிறோம். ஒரு மனிதரால் உச்சரிக்கப்படும் ஒரு சொல், வரி வடிவத்தின் வழியாக அவரது உடலுக்கு வெளியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அவ்வாறே, இறை வாக்கு தன்னை உருவத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆகவே, வாக்காகிய மகன் இறை பொருள்மையைத் தாண்டி மனித உருவிலும் தோன்றினார். கடவுள் மனிதராகி நம்மிடையே வாழ்ந்ததால், நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினை பெற்றுக் கொண்டோம்.
No comments:
Post a Comment