திருத்தூதர்களின் ஒப்பறிக்கை (Apostle’s Creed) என்பது, இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களின் விசுவாச ஒப்புதல் ஆகும். திருச்சபையின் தொடக்க காலம் முதலே, நம்பிக்கை அறிக்கை பாதுகாக்கப் பெற்று வருகிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படையான நம்பிக்கை கோட்பாடுகள் இதில் அடங்கியுள்ளன.
பொது வடிவம்
(1) விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். (2) அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். (3) இவர் தூய ஆவியால் கருவாகி கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். (4) பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். (5அ) பாதாளத்தில் இறங்கி, (5ஆ) மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். (6) விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். (7) அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். (8) தூய ஆவியாரை நம்புகின்றேன். (9) புனித கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகின்றேன்; புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். (10) பாவ மன்னிப்பை நம்புகின்றேன். (11) உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். (12) நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
பன்னிரு பகுதிகள்
திருத்தூதர்களின் ஒப்பறிக்கையில் உள்ள விசுவாச ஒப்புதலின் பகுதிகள் பற்றி, முதல் நூற்றாண்டில் இருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்களின் குறிப்புகளில் ஆங்காங்கே காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் சபை போதகரான பெல்பார்த்துஸ் என்பவர் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு பின்வருமாறு சாற்றிக் கூறுகிறார். பகுதி 1: திருத்தூதர் பேதுரு, பகுதி 2: திருத்தூதர் யோவான், பகுதி 3: திருத்தூதர் பெரிய யாக்கோபு, பகுதி 4: திருத்தூதர் அந்திரேயா, பகுதி 5அ: திருத்தூதர் பிலிப்பு, பகுதி 5ஆ: திருத்தூதர் தோமா, பகுதி 6: திருத்தூதர் பர்த்தலமேயு, பகுதி 7: திருத்தூதர் மத்தேயு, பகுதி 8: திருத்தூதர் சிறிய யாக்கோபு, பகுதி 9: திருத்தூதர் சீமோன், பகுதி 10: திருத்தூதர் யூதா ததேயு, பகுதிகள் 11-12: திருத்தூதர் மத்தியா.
பழைய வழக்கு
(1) பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். (2) அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். (3) இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார். (4) போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். (5) பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். (6) பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். (7) அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். (8) பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன். (9) பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்; புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன். (10) பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். (11) சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். (12) நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.
திருமுழுக்கில்
குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தந்தையின் ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தூய ஆவியாரையும், புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவு ஒன்றிப்பையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்ப்பையும், முடிவில்லா வாழ்வையும் நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.
வரலாறு
தூய ஆவியாரின் தூண்டுதலால் பன்னிரு திருத்தூதர்களும் இணைந்து, இந்த விசுவாச அறிக்கையை உருவாக்கியதாக திருச்சபை மரபு கூறுகிறது. தொடக்க காலம் முதலே கிறிஸ்தவ திருமுழுக்கு சடங்கில், திருத்தூதர்களின் ஒப்பறிக்கை கேள்வி-பதில் வடிவில் பயன்படுத்தப் பெற்று வருகிறது. கி.பி. 390ல் திருத்தந்தை சிரீசியசுக்கு மிலான் சங்கத்தில் இருந்து வந்த மடலில், ‘திருத்தூதர்களின் ஒப்பறிக்கை’ பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தற்போதைய முழு வடிவிலான ‘திருத்தூதர்களின் ஒப்பறிக்கை’, கி.பி. 710ல் பிர்மீனியுஸ் என்பவரது எழுத்துக்களில் காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெல்பார்த்துஸ் என்ற பிரான்சிஸ்கன் சபை போதகர், இதன் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு சாற்றிக் கூறுகிறார். தற்போது திருமுழுக்கு மற்றும் செபமாலையில் இந்த ஒப்பறிக்கை பயன்படுகிறது.
No comments:
Post a Comment