மூவொரு கடவுள் (Triune God) அல்லது அதி தூய திரித்துவம் (Most Holy Trinity) என்பது, கிறிஸ்தவத்தின் அடிப்படை கடவுள் கொள்கை ஆகும். ஒரே கடவுளில் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. ஒரே உருவத்தில் உள்ள மூன்று ஆட்களில், தந்தை (கண்), மகன் (ஆட்டுக்குட்டி), தூய ஆவியார் (புறா) ஆகியோரைக் காட்டுவது ஒருவித அடையாள முறை ஆகும்.
இறையியல்
அனைத்தையும் படைத்த ஒரே கடவுள் தமது இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்தன்மையில் மூவராகவும் இருக்கிறார். இந்த ஒரே கடவுள் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்லத் தன்மையிலும், எல்லையற்ற ஞானத்திலும், பராமரிப்பிலும், விருப்பத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். தம்மையே மோசேக்கு வெளிப்படுத்தியது போன்று, இவர் ‘இருக்கின்றவராக இருக்கிறார்’. திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போல், இவர் ‘அன்பாய் இருக்கிறார்’.
தந்தை, மகன், தூய ஆவியார் என்று தம்மையே வெளிப்படுத்தும் கடவுள் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த கடவுளின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது. இவ்வாறு உடனொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று இறை ஆட்களில், ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்குகின்றது.
இயல்புகள்
கடவுள் பின்வரும் ஆறு இயல்புகளைக் கொண்டிருப்பதாக திருச்சபை போதிக்கிறது:
(1) கடவுள் தாமாய் இருக்கிறார்: கடவுளின் பெயரை வினவிய மோசேயிடம், “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” (விடுதலைப் பயணம் 3:14) என்று அவர் பதில் அளிக்கிறார். இவ்வாறு, அவர் தம்மிலே தாமாக இருக்கிறார், அவரது இருப்புக்கு வேறு யாரும் காரணமல்ல என்று அறிகிறோம்.
(2) கடவுள் தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்: “முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே” (திருவெளிப்பாடு 22:13) என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் எப்பொழுதும் இருக்கின்றவராகவும், அனைத்திற்கும் முதலாகவும் முடிவுமாகவும் இருப்பதால், அவருக்கு தொடக்கமோ முடிவோ இல்லை என்பது தெளிவு. (42)
(3) கடவுள் உடல் இல்லாதவராய் இருக்கிறார்: “கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” (யோவான் 4:24) என்று இயேசு கூறுகிறார். உருவமே இல்லாத கடவுளுக்கு உடல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதி.
(4) கடவுள் அளவில்லாத சகல நன்மையும் கொண்டவராய் இருக்கிறார்: “நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். அப்போது நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்” (லூக்கா 6:35) என்று இயேசு கூறுகிறார். ஆகவே, கடவுள் நன்மைகளின் ஊற்றாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
(5) கடவுள் எங்கும் நிறைந்தவராய் இருக்கிறார்: “உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!” (திருப்பாடல் 139:7,8) என்று தாவீது கூறுகிறார். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே இதன் பொருள்.
(6) கடவுள் எல்லாவற்றிற்கும் தொடக்க காரணராய் இருக்கிறார்: “என் தலைவராகிய ஆண்டவரே! உம் ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!” (எரேமியா 32:17) என்று எழுதப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்திற்கும் தொடக்க காரணராய் இருப்பவர் கடவுளே என்பது தெளிவு.
வெளிப்பாடு
ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியவர் இறைமகன் இயேசுவே. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” (மத்தேயு 10:32) என்றும், “தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்” (யோவான் 5:19) என்றும் இயேசு கூறுவது அவரது இறைத்தன்மையைக் காட்டுகிறது.
“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” (யோவான் 14:26) என்ற வார்த்தைகள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையிலான உறவை வெளிப்படுத்துகின்றன. “கடவுள் ஒருவரே” (யோவான் 5:44) என்று போதித்த இயேசு கிறிஸ்து, “தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத்தேயு 28:19) கூறியதில் இருந்து கடவுளில் மூன்று ஆட்கள் இருப்பதை அறிகிறோம்.
வரலாறு
திருத்தூதர்களைத் தொடர்ந்து அவரது சீடர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்ற போதனையை வழங்கினார். திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு ஆயர் இக்னேசியுஸ் (-110), மறைசாட்சியான யுஸ்தீன் (-165) ஆகியோர் இது குறித்து எழுதியுள்ளனர். அந்தியோக்கு மறைமுதுவர் தியோபிலுஸ் (-185) என்பவரே, கடவுளும் அவரது வார்த்தையும் அவரது ஞானமும் திரித்துவமாக விளங்குவதாக கூறி, ‘திரித்துவம்’ என்ற வார்த்தையை கடவுளோடு முதலில் தொடர்புபடுத்தினார். ஆனால், கிறிஸ்தவ எழுத்தாளரான தெர்த்தூலியனே (-230), தந்தை, மகன், தூய ஆவியாரை உள்ளடக்கியதே தூய திரித்துவம் என்ற வரையறையை முதலில் உருவாக்கியவர்.
இரனேயுஸ் (-202), அலெக்சாந்திரியாவின் கிளமென்ட் (-215), அலெக்சாந்திரியா ஆயர் அத்தனாசியுஸ் (-373) உள்ளிட்ட திருச்சபை தந்தையர்களும் மூவொரு கடவுள் கோட்பாட்டை பாதுகாக்கும் போதனைகளை வழங்கினர். கி.பி. 325ல் கூடிய நிசேயா பொதுச்சங்கம், தந்தையாம் கடவுளுடன் ஒரே இறைத்தன்மை கொண்ட மகனாக இயேசு கிறிஸ்து திகழ்கிறார் என்று அறிக்கையிட்டது. 381ஆம் ஆண்டு கூடிய முதல் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம், தூய ஆவியாரின் இறைத்தன்மையைத் தெளிவுபடுத்தியது. ஹிப்போ ஆயர் அகுஸ்தீன் (-430), இறையியலாளர் தாமஸ் அக்குயினாஸ் ஆகியோர் திரித்துவம் குறித்த ஆழ்ந்த புரிதல்களை தங்கள் எழுத்துக்களில் வழங்கியுள்ளனர்.
கோட்பாடு
ஒரே கடவுளை நம்புகிறோம்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
தந்தையிடம் இருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடம் இருந்து பிறந்தவர், கடவுளின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளின்று உண்மை கடவுளாக, பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர், தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன; மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் விண்ணகத்தில் இருந்து இறங்கி மனிதரானார்.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிரளிப்பவருமான தூய ஆவியாரையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.
விளக்கம்
மூவொரு கடவுளில் தந்தை இறை சிந்தனையாகவும், மகன் இறை வாக்காகவும், தூய ஆவியார் இறை செயலாகவும் உள்ளனர். சிந்தனையில் இருந்து சொல் பிறப்பது போன்று, தந்தையிடம் இருந்து மகன் பிறக்கிறார். சிந்தனை மற்றும் சொல்லில் இருந்து செயல் விளைவது போன்று, தந்தை மற்றும் மகனிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார்.
தந்தையாம் கடவுளே அதி தூய திரித்துவத்தின் மூலமாக இருக்கிறார். இருப்பினும், சிந்தனையிலேயே சொல்லும் செயலும் ஒன்றித்திருப்பது போன்று, மகனும் தூய ஆவியாரும் தந்தையில் ஒன்றித்து இருக்கின்றனர். ஆகவே அவர்கள் மூன்று ஆட்களாய் இருந்தாலும், கடவுளுக்குரிய ஒரே பொருள்மையில் (same substance) தங்களை வெளிப்படுத்துவதால் ஒரே கடவுளாய் இருக்கின்றனர்.
இவ்வாறு, இறை சிந்தனையாகிய தந்தையும், இறை வாக்காகிய மகனும், இறை செயலாகிய தூய ஆவியாரும் ஒரே இறைமையில் நித்தியத்திற்கும் தனித்து இயங்குகின்றனர். ஆகவே, தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியாரும் கடவுள்; ஆனால், மூன்று கடவுள்கள் அல்லர், ஒரே கடவுள். ஏனெனில், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று இறை ஆட்களில் ஒரே கடவுளைக் கண்டு வழிபடுகிறோம்.
முடிவாக
கடவுள் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மை மூன்று ஆட்களாக நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். இவ்வாறே, படைக்கப்படாத கடவுளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பிறகு நித்திய ஒளியிலும், கடவுளின் நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைப்பு பெற்றுள்ளோம்.
No comments:
Post a Comment