அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 23, 2018

தந்தையாகிய கடவுள்

தந்தையாகிய கடவுள் (God the Father) என்பவர் அதி தூய திரித்துவத்தின் முதல் ஆள் ஆவார். இஸ்ரயேல் மக்களின் கடவுளாகத் தம்மை வெளிப்படுத்தியவரும், இயேசு கிறிஸ்து தமது தந்தையாக அறிமுகம் செய்தவரும் இவரே. மூவொரு கடவுளில் மூலமாகவும் முதன்மையாகவும் இவரே விளங்குகிறார்.

இறையியல்
இறை வாக்காகிய மகனை நித்தியத்திற்கும் பிறப்பிப்பதால் மூவொரு கடவுளின் முதல் ஆளை ‘தந்தை’ என்று அழைக்கிறோம். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தமது வாக்கின் வழியாக அனைத்தையும் படைத்து, தமது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்.

புலனறிவுக்கு அறிமுகமற்ற விதத்தில் கடவுளை தந்தையாக இயேசு வெளிப்படுத்தினார்: அவர் படைத்தவராக இருப்பதால் மட்டும் தந்தையன்று; அவர் தமது ஒரே மகனுடனான உறவின் காரணமாக நித்தியத்திற்கும் தந்தையாக இருக்கிறார். தமது தந்தையுடனான உறவினால் மட்டுமே இயேசு நித்திய மகனாக இருக்கிறார்.


தந்தையாம் கடவுள் (அடையாள ஓவியம்)

"விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்." (1)

இஸ்ரயேலில்
இஸ்ரயேலில், உலகைப் படைத்தவர் என்ற முறையில் கடவுள் “தந்தை” என்று அழைக்கப்பட்டார். அதற்கும் மேலாக, கடவுளின் உடன்படிக்கை மற்றும் “அவரது உரிமை மக்கள்” என்ற இஸ்ரயேலின் சட்டத்தின் வழியாக அவர் தந்தையாக இருக்கிறார். தம் பிள்ளைகள் அனைவர் மீதும் அன்புநிறை அக்கறையும் நன்மைத்தனமும் கொண்ட தந்தையாக அவர் இருக்கிறார். மிகச் சிறப்பாக அவர் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்களுக்கும், அவரது பாதுகாப்பில் இருப்போருக்கும் தந்தையாக இருக்கிறார்.
ஆபிரகாமின் அழைப்பில் இந்த மனித குலத்திற்கு மீண்டும் தம்மை அறிமுகம் செய்து கொண்ட கடவுளில் தந்தையின் பண்பைக் காண்கிறோம். மோசேயிடம், ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று தம்மை வெளிப்படுத்திய கடவுளில் தந்தையையே இஸ்ரயேல் மக்கள் கண்டனர். “நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்” (எரேமியா 31:33) என்று இறைவாக்கினர்கள் வழியாக உடன்படிக்கை செய்த தந்தை இவரே. “ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை” (எசாயா 63:16).

வெளிப்பாடு
“இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்” (மத்தேயு 23:9) என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். “உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்” (மத்தேயு 5:44,45) என்று அவர் போதித்தார். இவ்வாறு, கடவுளை மனிதர் அனைவரின் தந்தையாக இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், கடவுளைத் தமது தனிப்பட்ட தந்தையாகவும் இயேசு அறிமுகம் செய்கிறார்: “என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருக்கிறார்” (லூக்கா 22:29). நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவான் 16:32). “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” (மத்தேயு 10:32) என்ற இயேசுவின் வார்த்தைகள் இறைத்தந்தையுடனான அவரது நெருங்கிய உறவைக் காட்டுகின்றன.

விளக்கம்
படைப்பு செயலில் கடவுளின் மூன்று ஆட்களின் பங்கும் இருந்தாலும், தந்தையையே நாம் படைப்பின் காரணராகக் காண்கிறோம். ஏனெனில், படைப்பு என்பது சிந்தனையில் கருவாகி, சொல்லில் பிறப்பெடுத்து, செயலில் நிறைவடைகிறது. இறை சிந்தனையாகிய தந்தையிலேயே படைப்புகள் அனைத்தும் வடிவம் பெற்றன. இறை சிந்தனையில் தோன்றிய படைப்புகளே, இறை வாக்கின் வழியாக வெளிப்பட்டு, இறை செயலில் அவற்றின் நிறைவைக் கண்டன.

அதே நேரத்தில், படைப்புகள் தோன்றும் முன்பே கடவுளில் தந்தை இருக்கிறார். எவ்வாறெனில், மகனாகிய கடவுளைப் பிறப்பிக்கிறவரே தந்தை என்று அழைக்கப்படுகிறார். மனித முறையில் நாம் சிந்திப்பது போல, இது ஓர் உயிரில் இருந்து மற்றோர் உயிர் பிறப்பது போன்ற நிகழ்வு அன்று. மாறாக, ஒரு மூலத்தில் இருந்து மற்றொரு மூலம் தனியாக பிரியும் நிகழ்வு. அதாவது, சிந்தனையோடு ஒன்றித்திருக்கும் சொல் பிரிந்து தனியாக வெளிப்படுவது போன்றது.

No comments:

Post a Comment