தந்தையாகிய கடவுளின் சிந்தனையிலேயே நாம் வாழும் இந்த உலகம் வடிவம் பெற்றது. ஆகவே, இறைத்தந்தையே படைப்புகளின் காரணராக விளங்குகிறார். இருப்பினும் தமது வாக்காகிய இறைமகன் வழியாக, தூய ஆவியாரின் செயலால் தந்தை இவ்வுலகைப் படைத்தார். ஆகவே, விவிலியம் கூறும் மூவொரு கடவுளே ‘படைப்பின் கடவுள்‘ (God of the creation) என்பது தெளிவு.
இயேசு கிறிஸ்து
“விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!” (மத்தேயு 6:9) என்று தம் சீடர்களுக்கு வேண்ட கற்றுக் கொடுத்த இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்” (லூக்கா 10:21) என்று புகழ்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறு தந்தையாம் கடவுளே, படைப்புகளின் காரணராக இருக்கின்றார் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார். “விண்ணகத் தந்தை நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்” (மத்chதேயு 5:45) என்று இயேசு போதித்ததும் படைப்புகள் மீதான இறைத்தந்தையின் அதிகாரத்துக்கு சான்று பகர்கின்றன.
"முதலில், விண்ணுலகும் மண்ணுலகும் உருவற்று வெறுமையாக இருந்தன. கடவுள் தமது வாக்கின் வழியாக அனைத்தையும் படைத்தார்."
இறையியல்
“தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்” (தொடக்க நூல் 1:1) என விவிலியம் கூறுகிறது. நாம் காண்பவை, காணாதவை, ஆவி இயல்புடையவை, பருப்பொருள் சார்ந்தவை அனைத்தையும் கடவுளே படைத்தார். அதாவது கண்ணுக்கு புலப்படாத வானதூதர்களையும், காணக்கூடிய உலகையும், சிறப்பாக மனிதரையும் படைத்தவர் தந்தையாகிய கடவுளே என்பது திருச்சபையின் நம்பிக்கையாக உள்ளது. படைப்பு செயலில் கடவுளின் மூன்று ஆட்களின் பங்கும் இருக்கிறது என்றாலும், தந்தையின் திருவுளத்திலேயே படைப்புகள் முதன்மையாக வடிவம் பெற்றன. ஆகவேதான், “விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்” என்று அறிக்கையிடுகிறோம்.
“வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது” (திருப்பாடல்கள் 19:1). இறைத்தந்தையையே படைப்புகளின் காரணராக காண்கிறோம் என்றாலும், தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த வாக்காகிய மகனால் அனைத்தும் உண்டாயின (யோவான் 1:1-3). கடவுளின் வாக்காகிய கிறிஸ்து வழியாகவே, விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை அனைத்தும் படைக்கப்பட்டன (கொலோசையர் 1:16). மேலும், தூய ஆவியாரின் அசைவாடலே படைப்பு செயலுக்கு நிறைவை வழங்கியதாக காண்கிறோம். “உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப் பெறுகின்றன” (திருப்பாடல்கள் 104:30).
இஸ்ரயேலர்
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து தங்களை மீட்டு வழிநடத்திய கடவுளே, இயற்கை முழுவதையும் படைத்தவர் என்பதை இஸ்ரயேல் மக்கள் முழுமையாக நம்பினர். ஆகவேதான், விவிலியத்தின் தொடக்கமே கடவுளின் படைப்புச் செயலைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் அனைத்தும் உருவற்று வெறுமையாக இருந்த நிலையில், ஒன்றுமில்லாமையில் இருந்து தமது வாக்காலும் செயலாலும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் கடவுள் படைத்தார் என்று தொடக்க நூல் கூறுகிறது. படைப்புச் செயலை ஆறு கட்டங்களாக பிரிக்கும் குருக்கள் மரபு ஆசிரியர், “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” என்று குறிப்பிடுகிறார்.
விவிலியத்தின் பல இடங்களிலும் படைப்புகளின் மேன்மைக்காக கடவுள் புகழப்படுகிறார். “ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகில் அடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்தி விட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்” என்று திருப்பாடல் 104:24 குறிப்பிடுகிறது.
“ஆண்டவரே, உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்; படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாது இருந்தால் எதுதான் காப்பாற்றப்படக் கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்பு கூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன.” என்று சாலமோனின் ஞானம் 11:17,23-26 கூறுகிறது.
No comments:
Post a Comment