அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 23, 2018

வானதூதர்கள்

வானதூதர்கள் (Angels) என்போர் கடவுளுக்கு பணிவிடை செய்ய அவரால் படைக்கப்பட்ட உடலற்ற ஆவிகளாக இருக்கின்றனர். இருப்பினும், வானதூதர்கள் பல்வேறு உருவங்களைக் கொண்டிருப்பதாக விவிலியத்தில் காண்கிறோம். மரபு சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும் வானதூதர்களுக்கு சிறகுகள் கொண்ட மனித உருவம் வழங்கப்படுகிறது.
விண்ணகத்தில் தூதர்கள்
"வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்." (யோவான் 1:51)

இறையியல்
எல்லாம் வல்ல மூவொரு கடவுளே வானதூதர்களைப் படைத்தார். முழுமையான ஆவிக்குரிய படைப்புகளான வானதூதர்களுக்கு அறிவும் விருப்பமும் உண்டு. அவர்கள் ஆள்தன்மை கொண்ட அழிவில்லாப் படைப்புகள், காணக்கூடிய படைப்புகளைவிட அதிக நிறைவைக் கொண்டவர்கள். அவர்களது மகிமையின் ஒளி இதற்குச் சான்று பகர்கின்றது. அவர்கள் தங்களது முழுமையான இருப்பால் இறைவனின் பணியாளர்களாகவும் தூதுவர்களாகவும் இருக்கின்றனர் (திருப்பாடல்கள் 103:20-21).
வானதூதர்கள் அனைவரும் கடவுளுக்கு ஊழியம் புரியும் ஆவிகள் (எபிரேயர் 1:14). அவர்கள் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் (மத்தேயு 18:10). வானதூதர்கள் ஆண்டவரைத் தொடர்ந்து போற்றிக் கொண்டே இருக்கின்றனர் (எசாயா 6:3). வானதூதர்கள் என்ற பெயர் அவர்களது பணியைக் குறிக்கிறது. ஆவிகளான அவர்கள், கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் பாலங்களாக, இணைப்பாளர்களாக, தூதுவர்களாக வானதூதர்கள் செயல்படுகின்றனர்.

ஒன்பது குழுக்கள்
யூத மற்றும் கிறிஸ்தவ மரபுகளின் அடிப்படையில், வானதூதர்கள் ஒன்பது குழுக்களாக செயல்படுகின்றனர் என நம்புகிறோம். “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர்” (கொலோசையர் 1:16) என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடும் அனைவரும் வானதூதர்களே. அவர்களது பணிகளின் அடிப்படையில், அவர்கள் மூன்று வட்டங்களாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வட்டத்திலும் மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் வட்டம்
சுடரொளி வீசுவோர் (பத்திசுவாலகர்), புகழ்ந்தேற்றுவோர் (நாதகிருத்தியர்), அரியணையில் அமர்வோர் (பத்திராசனர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் முதல் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் கடவுளைப் புகழ்ந்து போற்றி வணங்குகிறவர்களாக உள்ளனர்.
(1) சுடரொளி வீசுவோர் அல்லது சேராபீன்கள் (Seraphim) என்னும் வானதூதர்கள் கடவுள் மீதான அன்பாலும், ஆர்வத்தினாலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்டவரின் அரியணையை சூழ்ந்து நிற்கின்றனர்; சேராபீன்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருக்கின்றன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டுள்ளனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்திருக்கின்றனர்; மற்ற இரண்டால் பறக்கின்றனர். இவர்கள், “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது” என்று உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். (எசாயா 6:1-7)

(2) புகழ்ந்தேற்றுவோர் அல்லது கெருபுகள் (Cherubim) என்னும் வானதூதர்களை ஆண்டவரின் அரியணையை சுற்றி நிற்கும் நான்கு உயிர்களாக திருவெளிப்பாடு நூல் காட்டுகிறது. அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம்போலும், இரண்டாவது இளங்காளை போலும், மூன்றாவது மனிதன் போலும், நான்காவது பறக்கும் கழுகைப் போலும் முக அமைப்பு கொண்டிருக்கின்றன. இவ்வுயிர்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளும் புறமும் கண்கள் நிறைந்த ஆறு சிறகுகள் இருக்கின்றன. “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று இந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கின்றன. (திருவெளிப்பாடு 4:6-8)

(3) அரியணையில் அமர்வோர் (Thrones or Ophanim) என்னும் வானதூதர்களை திருவெளிப்பாடு நூலில் இருபத்துநான்கு மூப்பர்களாக காண்கிறோம். இவர்கள் அரியணையில் அமர்ந்து கடவுளின் நீதிக்கும், ஆட்சியுரிமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிக் கொண்டே இருக்கின்றனர். (திருவெளிப்பாடு 11:16-18) இவர்களின் உருவம், வளையத்தில் பல கண்கள் கொண்ட நெருப்பு சக்கரம் போன்று இருக்கும் என்று நம்பப்படுகிறது. புனித பவுலும் (கொலோசையார் 1:16) அரியணையில் அமர்வோரை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் வட்டம்
ஒழுங்கு செய்வோர் (ஞானாதிக்கர்), புனிதத்தில் வல்லோர் (சத்துவகர்), அதிகாரம் கொண்டோர் (பலவத்தர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் இரண்டாம் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் விண்ணகப் பணிகளை கவனிக்கிறவர்களாக உள்ளனர்.
(4) ஒழுங்கு செய்வோர் (Dominions or Hashmallim) என்னும் வானதூதர்கள் பிரபுத்துவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்களின் கீழுள்ள வானதூதர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துகின்றனர். அரிதாக சில தருணங்களில் இவர்கள் மனித உருவில் தங்களை வெளிப்படுத்துவது உண்டு. இவர்கள் உலக நாடுகளின் பொறுப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். ஞானாதிக்கரின் உருவம் இரண்டு சிறகுகளைக் கொண்ட மனிதரைப் போன்று இருக்கும். மேலும், இவர்கள் செங்கோலில் அல்லது வாளின் கைப்பிடியில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டமும் காணப்படுகிறது.

(5) புனிதத்தில் வல்லோர் (Virtues or Strongholds) என்னும் வானதூதர்கள் விண்ணகப் பொருட்களை கண்காணிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். பிரபஞ்சத்தின் இயக்க முறைமைகளை இவர்களே ஒழுங்குபடுத்தி பராமரிக்கின்றனர். “புனிதத்தில் வல்லோர் என்ற பெயரே அவர்களின் அசைக்க முடியாத வல்லமையை, கடவுளை ஒத்த ஆற்றல்களைக் குறிக்கிறது. இறை வாழ்வில் இருந்து தம் பலவீனத்தால் விலகாமல், புண்ணியத்தின் அதிமிகத் தேவையில் நிலைத்து வளர்கின்றனர். இவர்கள் புண்ணியத்தின் ஊற்றாகவும், மிகை நிறைவாகவும் திகழ்கின்றனர்” என்று டயோனைசியுஸ் புனைவு நூல் கூறுகிறது.

(6) அதிகாரம் கொண்டோர் (Powers or Authorities) என்னும் வானதூதர்கள், ஆட்சியாளர் என்ற வானதூதர்களோடு இணைந்து அதிகாரம் செலுத்துகின்றனர் என்று திருத்தூதர் பவுல் (எபேசியர் 3:10) குறிப்பிடுகிறார். அதிகாரம் கொண்டோர் என்ற வானதூதர் மனச்சான்றைத் தாங்குவோராகவும், வரலாற்றைக் காப்போராகவும் இருக்கின்றனர். இவர்கள் கடவுளுக்காகப் பிரமாணிக்கத்துடன் போரிட உருவாக்கப்பட்ட வானதூதர்கள். இவர்கள் மனிதரிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வதாலேயே இப்பெயரைப் பெறுகின்றனர்.

மூன்றாம் வட்டம்
ஆட்சியாளர் (பிராதமிகர்), தலைமை தாங்குவோர் (அதிதூதர்), தொடர்பு கொள்வோர் (தேவதூதர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் மூன்றாம் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் விண்ணகத்தின் தூதுவர்களாகவும், வீரர்களாகவும் உள்ளனர்.
(7) ஆட்சியாளர் (Principalities or Rulers) என்னும் வானதூதர்கள், அதிகாரம் கொண்டோர் என்ற வானதூதர்களோடு இணைந்து ஆட்சி புரிகின்றனர். ஆட்சியாளர் தலையில் மகுடமும், கையில் செங்கோலும் கொண்டிருப்பர். அதிகாரம் கொண்டோரின் கட்டளைகளை நிறைவேற்றுவதும், பூவுலகுக்கு குறிக்கப்பட்ட ஆசிகளை வழங்குவதும் இவர்களின் பணியாக உள்ளது. இவர்கள் மக்கள் குழுக்களை கண்காணித்து, கற்பிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் இருக்கின்றனர். மனிதரின் அறிவியல் மற்றும் கலை ஆர்வத்தை இவர்களே தூண்டுகின்றனர்.

(8) தலைமை தாங்குவோர் (Archangel) என்னும் வானதூதர்கள் தீமைகளுக்கு எதிரான போர் வீரர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடவுளின் திருமுன் நின்று பணி செய்கின்றனர். தலைமை வானதூதர்களின் எண்ணிக்கை ஏழு என்பது பொதுவான நம்பிக்கை. “கடவுளுடைய ஏழு ஆவிகள்” என்று திருவெளிப்பாடு 3:1 கூறுவது இவர்களை பற்றியே. கத்தோலிக்க மரபின்படி மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகிய மூவரும் முக்கியமான அதிதூதர்களாக கருதப்படுகின்றனர்.

(9) தொடர்பு கொள்வோர் (Angels or Malakhim) என்னும் வானதூதர்கள் மனிதருக்கு இறைசெய்தியை வழங்கும் தூதுவர்களாக செயல்படுகின்றனர். உயிருள்ளவற்றின் நலன்களுக்கு பொறுப்பானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் மனிதர்களின் பாதுகாவலர்களாகவும் செயல்படுகின்றனர். தலைமை தாங்குவோரும் தொடர்பு கொள்வோராக செயல்படுவது உண்டு. அதிதூதர் கபிரியேல் கன்னி மரியாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்ததை இதற்கு சான்றாக கூறலாம்.

செயல்பாடு
கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம், வானதூதர்களைப் பற்றிய யூத, கிறிஸ்தவ நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது. வானதூதர்கள் ஆண்டவரின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர் (தொடக்க நூல் 22:11). கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு வரும் தூதுவர்களாக செயல்படுகின்றனர் (லூக்கா 1:11). மனித மீட்பைக் குறித்து அறிந்து கொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள் (1பேதுரு 1:12). உலக மீட்பரின் பிறப்பு வானதூதர் வழியாகவே கன்னி மரியாவுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 1:28). கடவுளின் திட்டத்துக்கு ஏற்றவர்களை வழிநடத்தும் பணியை வானதூதர்கள் செய்கின்றனர் (மத்தேயு 1:20).
ஒவ்வொரு மனிதரின் வாழ்வோடும் ஒரு வானதூதருக்கு தொடர்புள்ளது (மத்தேயு 18:10). கடவுளிடம் வேண்டும் மன்றாட்டுக்கு பதிலளிக்க வானதூதர்கள் வருகின்றனர் (திருத்தூதர் பணிகள் 12:5-10). நல்லோர் இறக்கும் வேளையில் வானதூதர்கள் துணையாக இருக்கின்றனர் (லூக்கா 16:22). இயற்கை மீது அதிகாரம் கொண்டவர்களாகவும், ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளாகவும் வானதூதர்கள் உள்ளனர் (திருவெளிப்பாடு 7:1-2). “ஆண்டவர் தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்” (எபிரேயர் 1:7).

படைப்பின் தொடக்கத்திலும் மீட்பின் வரலாறு முழுவதிலும் கடவுளோடு உடனிருந்து, இறைத்திட்டத்தை நிறைவேற்றத் துணைபுரிந்தவர்கள் வானதூதர்கள். “மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?” (எபிரேயர் 1:14). பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு முழுவதும் வானதூதர்களின் கவனமான கண்காணிப்பாலும் மன்றாட்டாலும் சூழப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவரது அருகிலும் பாதுகாவலராகவும் ஆயராகவும் இருந்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்ற வானதூதர்களை காவல் தூதர்கள் என்று அழைக்கிறோம்.

No comments:

Post a Comment