நிசேயா ஒப்பறிக்கை (Nicene Creed) என்பது, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வெளியிட்ட விசுவாச ஒப்புதல் ஆகும். நிசேயா பொதுச்சங்கம் உருவாக்கிய இந்த ஒப்பறிக்கை, பின்னர் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் திருத்தி விரிவாக்கம் செய்யப்பட்டது. கிறிஸ்தவத்தின் முதன்மை இறையியல் கோட்பாடுகள் இதில் அடங்கியுள்ளன.
முதல் வடிவம்
ஒரே கடவுளை நம்புகிறோம்; காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். அனைத்தும் இவர் வழியாகவே படைக்கப்பட்டன; மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார். இவர் பாடுபட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்றார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட வரவிருக்கின்றார். தூய ஆவியாரையும் நம்புகிறோம்.
முழு வடிவம்
ஒரே கடவுளை நம்புகின்றேன்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன; மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காக பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில், சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்து[ம் மகனிடமிருந்தும்] புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரையும் நம்புகின்றேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே புனித கத்தோலிக்க திருத்தூதுவ திருச்சபையை நம்புகின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் ஏற்றுக்கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
பழைய வழக்கு
ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறுஉலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
வரலாறு
இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்து ஆரியுஸ் என்ற குரு பரப்பி வந்த தப்பறைக்கு பதில் கொடுக்கும் விதமாக, கி.பி. 325ல் பேரரசர் கொன்ஸ்தாந்தீன் நிசேயாவில் பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்டினார். அதில் நடந்த விவாதங்களின் விளைவாக ‘நிசேயா ஒப்பறிக்கை’ உருவானது. அதன்பிறகு, தூய ஆவியாரின் இறைத்தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் 381ஆம் ஆண்டு, முதலாம் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் இந்த ஒப்பறிக்கை திருத்தி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் ஒப்புதலில் காணப்பட்ட பன்மைக்கூறுகள் ஒருமையில் மாற்றம் செய்யப்பட்டன.
கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் பங்கேற்ற கிழக்கத்திய ஆயர்கள், “தந்தையிடம் இருந்து புறப்படும் தூய ஆவியார்” என்று அறிக்கையிட்டதை மேற்கத்திய ஆயர்கள் ஏற்கவில்லை. மேற்கத்திய இறையியலுக்கு ஏற்ப கி.பி. 447ல் திருத்தந்தை புனித பெரிய லியோ, “தந்தையிடமிருந்தும் மகனிடம் இருந்தும் தூய ஆவியார் புறப்படுகிறார்” என்பதை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். அதன்பிறகு, மேற்கத்திய திருச்சபையின் ‘நிசேயா ஒப்பறிக்கை’யிலும் இந்த வாய்ப்பாடு சேர்க்கப்பட்டது. அக்காலம் முதல் தற்காலம் வரை, நிசேயா ஒப்பறிக்கையைத் திருப்பலி வழிபாட்டில் பயன்படுத்தி வருகிறோம்.
No comments:
Post a Comment