இயேசு கிறிஸ்து (Jesus Christ) என்பவர் மனிதராக தோன்றிய மகனாகிய கடவுள் ஆவார். அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆளான இவரை இறைமகன் என்று அழைக்கிறோம். தந்தையாகிய கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு, தூய ஆவியாரின் வல்லமையால் தூய கன்னி மரியாவிடம் கருவாகி மனிதராக பிறந்தார். உலகில் இறையாட்சியை நிறுவிய அவர், பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு சென்று, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.
வாக்கான கடவுள்
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” என்று திருத்தூதர் யோவான் (1:1-4,14) குறிப்பிடுகிறார்.
“நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்” (யோவான் 8:23,42) என்று இயேசு கூறுகிறார். அவர் கடவுளிடம் இருந்து வந்த வாக்காக இருப்பதால், அவரை இறைமகன் என்று அழைக்கிறோம். மேலும், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 8:58) என்ற இயேசுவின் வார்த்தைகள், மனிதராகத் தோன்றும் முன்பே அவர் கடவுளோடு ஒன்றித்திருக்கிறார் என்பதை உறுதி செய்கின்றன.
பிறப்பு: கி.மு. 6
பணி: கி.பி. 27-30
இறப்பு: கி.பி. 30
உயிர்ப்பு: கி.பி. 30
கன்னியிடம் பிறப்பு
பாவத்திற்கு அடிமையான மனித குலத்தை மீட்க, தம் ஒரே பேறான மகனை உலகிற்கு அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். தமது மீட்புத் திட்டத்தில் ஒத்துழைக்குமாறு, மரியா என்ற கன்னிப் பெண்ணை கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். காலம் நிறைவேறியபோது, கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்று கூறினார்.
“இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேட்ட மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்று வானதூதர் மொழிந்தார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். இவ்வாறு கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால், கன்னியான மரியா இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுக்கும் பேறுபெற்றார். இவ்வாறு, மனித சிந்தனைகளுக்கு மேற்பட்ட விதத்தில் கடவுள் மனிதரானார்.
இறையாட்சி பணி
கடவுளின் ஆட்சியை நிறுவவே ஆண்டவர் இயேசு மண்ணுலகிற்கு வந்தார். கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து, பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் மனித குலத்துக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளை வழங்கும் பணிக்காகவே அவரது வாழ்நாட்களை செலவிட்டார். மக்கள் கடவுளிடமும், மற்ற மனிதர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பித்தார். சமயத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை அடக்கி ஆண்டு வந்த தலைவர்களின் தவறான கொள்கைகளை கண்டித்தார்; மக்களின் கடினமான மனப்போக்கையும் கண்டனம் செய்தார். தீய வழியில் இருந்து விலகி, தூய வாழ்வு வாழுமாறு மக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
கடவுளின் ஆட்சியைக் குறித்த செய்தியை எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயேசு உவமைகள் வழியாக எடுத்துரைத்தார். பெண்களையும், குழந்தைகளையும் புறக்கணித்த யூத சமுதாயத்தில் இயேசு அவர்களுக்கு தகுந்த மதிப்பளித்தார். இழிவாக கருதப்பட்ட ஏழைகள், பாவிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரோடு உறவாடினார். பாவிகளை மன்னித்து, அவர்கள் புது வாழ்வு வாழ உதவி செய்தார். தன்னை நாடி வந்த பார்வையற்றோர், பேச்சற்றோர், கேட்கும் திறனற்றோர், உடல் ஊனமுற்றோர், தீய ஆவி பிடித்தோர், தொழுநோயாளர் என பலரையும் இயேசு அற்புதமாக குணப்படுத்தினார். இறந்தவர்களையும் அவர் உயிருடன் எழுப்பினார்.
இறந்து உயிர்த்தார்
இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று கூறியதோடு, யூத சமயத் தலைவர்களின் போலியான வெளிவேட வாழ்வையும் கண்டித்தார். மக்கள் பலரும் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியதால், சமயத் தலைவர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதனால் கோபம் அடைந்த யூத சமயத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினர். பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவனான யூதாசுக்கு பணம் கொடுத்து, இயேசுவைக் காட்டிக் கொடுக்க செய்தனர். அவரை கைது செய்து, யூத தலைமைச் சங்கத்தில் மரண தண்டனை விதித்தனர். ரோமையர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால், தண்டனை நிறைவேற்றுவதற்காக அவரை ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் கொண்டு சென்றனர்.
இயேசு தம்மை ‘இறைமகன்’ என்றும், ‘அரசன்’ என்றும் கூறிக் கொள்வதாக சொல்லி, அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு பிலாத்திடம் யூத சமயத் தலைவர்கள் முறையிட்டனர். பிலாத்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இயேசுவுக்கு தண்டனை வழங்கினான். அவர் சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, தாம் முன்னுரைத்தபடியே மூன்றாம் நாளில் மாட்சிக்குரிய உடலோடு அவர் உயிர்த்தெழுந்தார். சீடர்களுக்கு நாற்பது நாட்கள் காட்சி அளித்த இயேசு, தாம் சாவை வென்று உயிரோடு இருப்பதை உறுதி செய்தார்.
மீண்டும் வருவார்
இறுதியாக தம் சீடர்களை எருசலேமுக்கு அருகிலுள்ள மலை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற இயேசு, “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; அரும் அடையாளங்களையும் செய்வர். நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்” என்று கூறினார்.
இவற்றைச் சொன்னபின்பு, சீடர்கள் கண்கள் முன்பாக இயேசு விண்ணகத்திற்கு எழுந்து சென்றார். மேகம் ஒன்று அவர்கள் பார்வையிலிருந்து அவரை மறைத்து விட்டது. அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர். உலகின் முடிவில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு மாட்சியுடன் மீண்டும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.
இறையியல்
“தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்” (யோவான் 5:19,22,26) என்றும், “தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” (யோவான் 10:38) என்றும் இயேசு கூறுவது அவரது இறைத்தன்மையை பறைசாற்றுகிறது.
இயேசு கிறிஸ்துவிடம் இறைத்தன்மை, மனிதத்தன்மை என்ற இரண்டு இயல்புகள் உள்ளன. தந்தையாம் கடவுளுடன் ஒரே பொருள்மை (same substance) கொண்டவர் என்பதால், அவர் இறைத்தன்மையைப் பெற்றிருக்கிறார். கன்னி மரியாவிடம் பிறந்தவர் என்பதால், அவர் மனிதத்தன்மை கொண்டிருக்கின்றார். இருப்பினும், அவரது இரு இயல்புகளும் ஒன்றுக்கொன்று கலக்கவோ பிரிக்கவோ முடியாதவையாக உள்ளன. ஆகவே, இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் முழுமையான மனிதராகவும் முழுமையான கடவுளாகவும் இருக்கின்றார். ஏனெனில், இறை பொருள்மை கொண்ட கடவுளின் வாக்காகிய மகனே தம்மைத் தாழ்த்தி மனித உடலெடுத்தார் (பிலிப்பியர் 2:7).
முடிவாக
இயேசு கிறிஸ்துவே வரலாற்றில் தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றார்; உயிரியலில் ஒரு கன்னிப் பெண்ணிடம் பிறந்தார். வேதியியலில் அவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்; மருத்துவத்தில் நோயாளரையும், உடல் குறைபாடுகளையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்தினார், இறந்தோரை உயிரோடு எழுப்பினார்; பொருளாதாரத்தில் இரண்டு மீன்களையும், ஐந்து அப்பங்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்; இயற்பியலில் புவிஈர்ப்பு விசையை மீறி விண்ணேற்றம் அடைந்தார்; ஆன்மிகத்தில் அவரே வழியாய் இருக்கிறார்; இறையாட்சியில் அமைதியின் அரசராக இருக்கின்றார்.
உலக வரலாற்றில் வாழ்ந்தவர்களில் மிகப்பெரியவர் இயேசு. அவருக்கு பணியாளர்கள் இல்லை, எனினும் அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தார்கள். அவர் பட்டம் பெறவில்லை, எனினும் அவரை ‘போதகர்’ என்று அழைத்தார்கள். அவரிடத்தில் மருந்து இல்லை, எனினும் அவரை ‘நலமளிக்கிறவர்’ என்று அழைத்தார்கள். அவரிடம் ராணுவம் இருந்ததில்லை, எனினும் அரசர்கள் அவருக்கு பயந்தார்கள். அவர் எந்தப் போரிலும் வெற்றிப் பெறவில்லை, எனினும் அவர் உலகத்தை வென்றார். அவர் இறந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார், எனினும் அவர் இன்றும் வாழ்கிறார். ஆம், இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள்!