அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 23, 2018

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து (Jesus Christ) என்பவர் மனிதராக தோன்றிய மகனாகிய கடவுள் ஆவார். அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆளான இவரை இறைமகன் என்று அழைக்கிறோம். தந்தையாகிய கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு, தூய ஆவியாரின் வல்லமையால் தூய கன்னி மரியாவிடம் கருவாகி மனிதராக பிறந்தார். உலகில் இறையாட்சியை நிறுவிய அவர், பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு சென்று, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.

வாக்கான கடவுள்
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” என்று திருத்தூதர் யோவான் (1:1-4,14) குறிப்பிடுகிறார்.

“நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்” (யோவான் 8:23,42) என்று இயேசு கூறுகிறார். அவர் கடவுளிடம் இருந்து வந்த வாக்காக இருப்பதால், அவரை இறைமகன் என்று அழைக்கிறோம். மேலும், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 8:58) என்ற இயேசுவின் வார்த்தைகள், மனிதராகத் தோன்றும் முன்பே அவர் கடவுளோடு ஒன்றித்திருக்கிறார் என்பதை உறுதி செய்கின்றன.


ஆண்டவர் இயேசு கிறிஸ்து

பிறப்பு: கி.மு. 6

பணி:   கி.பி. 27-30

இறப்பு:  கி.பி. 30

உயிர்ப்பு: கி.பி. 30

கன்னியிடம் பிறப்பு
பாவத்திற்கு அடிமையான மனித குலத்தை மீட்க, தம் ஒரே பேறான மகனை உலகிற்கு அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். தமது மீட்புத் திட்டத்தில் ஒத்துழைக்குமாறு, மரியா என்ற கன்னிப் பெண்ணை கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். காலம் நிறைவேறியபோது, கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்று கூறினார்.

“இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேட்ட மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்று வானதூதர் மொழிந்தார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். இவ்வாறு கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால், கன்னியான மரியா இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுக்கும் பேறுபெற்றார். இவ்வாறு, மனித சிந்தனைகளுக்கு மேற்பட்ட விதத்தில் கடவுள் மனிதரானார்.

இறையாட்சி பணி
கடவுளின் ஆட்சியை நிறுவவே ஆண்டவர் இயேசு மண்ணுலகிற்கு வந்தார். கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து, பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் மனித குலத்துக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளை வழங்கும் பணிக்காகவே அவரது வாழ்நாட்களை செலவிட்டார். மக்கள் கடவுளிடமும், மற்ற மனிதர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பித்தார். சமயத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை அடக்கி ஆண்டு வந்த தலைவர்களின் தவறான கொள்கைகளை கண்டித்தார்; மக்களின் கடினமான மனப்போக்கையும் கண்டனம் செய்தார். தீய வழியில் இருந்து விலகி, தூய வாழ்வு வாழுமாறு மக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

கடவுளின் ஆட்சியைக் குறித்த செய்தியை எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயேசு உவமைகள் வழியாக எடுத்துரைத்தார். பெண்களையும், குழந்தைகளையும் புறக்கணித்த யூத சமுதாயத்தில் இயேசு அவர்களுக்கு தகுந்த மதிப்பளித்தார். இழிவாக கருதப்பட்ட ஏழைகள், பாவிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரோடு உறவாடினார். பாவிகளை மன்னித்து, அவர்கள் புது வாழ்வு வாழ உதவி செய்தார். தன்னை நாடி வந்த பார்வையற்றோர், பேச்சற்றோர், கேட்கும் திறனற்றோர், உடல் ஊனமுற்றோர், தீய ஆவி பிடித்தோர், தொழுநோயாளர் என பலரையும் இயேசு அற்புதமாக குணப்படுத்தினார். இறந்தவர்களையும் அவர் உயிருடன் எழுப்பினார்.

இறந்து உயிர்த்தார்
இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று கூறியதோடு, யூத சமயத் தலைவர்களின் போலியான வெளிவேட வாழ்வையும் கண்டித்தார். மக்கள் பலரும் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியதால், சமயத் தலைவர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதனால் கோபம் அடைந்த யூத சமயத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினர். பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவனான யூதாசுக்கு பணம் கொடுத்து, இயேசுவைக் காட்டிக் கொடுக்க செய்தனர். அவரை கைது செய்து, யூத தலைமைச் சங்கத்தில் மரண தண்டனை விதித்தனர். ரோமையர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால், தண்டனை நிறைவேற்றுவதற்காக அவரை ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் கொண்டு சென்றனர்.

இயேசு தம்மை ‘இறைமகன்’ என்றும், ‘அரசன்’ என்றும் கூறிக் கொள்வதாக சொல்லி, அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு பிலாத்திடம் யூத சமயத் தலைவர்கள் முறையிட்டனர். பிலாத்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இயேசுவுக்கு தண்டனை வழங்கினான். அவர் சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, தாம் முன்னுரைத்தபடியே மூன்றாம் நாளில் மாட்சிக்குரிய உடலோடு அவர் உயிர்த்தெழுந்தார். சீடர்களுக்கு நாற்பது நாட்கள் காட்சி அளித்த இயேசு, தாம் சாவை வென்று உயிரோடு இருப்பதை உறுதி செய்தார்.

மீண்டும் வருவார்
இறுதியாக தம் சீடர்களை எருசலேமுக்கு அருகிலுள்ள மலை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற இயேசு, “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; அரும் அடையாளங்களையும் செய்வர். நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்” என்று கூறினார்.

இவற்றைச் சொன்னபின்பு, சீடர்கள் கண்கள் முன்பாக இயேசு விண்ணகத்திற்கு எழுந்து சென்றார். மேகம் ஒன்று அவர்கள் பார்வையிலிருந்து அவரை மறைத்து விட்டது. அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர். உலகின் முடிவில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு மாட்சியுடன் மீண்டும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.

இறையியல்
“தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்” (யோவான் 5:19,22,26) என்றும், “தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” (யோவான் 10:38) என்றும் இயேசு கூறுவது அவரது இறைத்தன்மையை பறைசாற்றுகிறது.

இயேசு கிறிஸ்துவிடம் இறைத்தன்மை, மனிதத்தன்மை என்ற இரண்டு இயல்புகள் உள்ளன. தந்தையாம் கடவுளுடன் ஒரே பொருள்மை (same substance) கொண்டவர் என்பதால், அவர் இறைத்தன்மையைப் பெற்றிருக்கிறார். கன்னி மரியாவிடம் பிறந்தவர் என்பதால், அவர் மனிதத்தன்மை கொண்டிருக்கின்றார். இருப்பினும், அவரது இரு இயல்புகளும் ஒன்றுக்கொன்று கலக்கவோ பிரிக்கவோ முடியாதவையாக உள்ளன. ஆகவே, இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் முழுமையான மனிதராகவும் முழுமையான கடவுளாகவும் இருக்கின்றார். ஏனெனில், இறை பொருள்மை கொண்ட கடவுளின் வாக்காகிய மகனே தம்மைத் தாழ்த்தி மனித உடலெடுத்தார் (பிலிப்பியர் 2:7).

முடிவாக
இயேசு கிறிஸ்துவே வரலாற்றில் தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றார்; உயிரியலில் ஒரு கன்னிப் பெண்ணிடம் பிறந்தார். வேதியியலில் அவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்; மருத்துவத்தில் நோயாளரையும், உடல் குறைபாடுகளையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்தினார், இறந்தோரை உயிரோடு எழுப்பினார்; பொருளாதாரத்தில் இரண்டு மீன்களையும், ஐந்து அப்பங்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்; இயற்பியலில் புவிஈர்ப்பு விசையை மீறி விண்ணேற்றம் அடைந்தார்; ஆன்மிகத்தில் அவரே வழியாய் இருக்கிறார்; இறையாட்சியில் அமைதியின் அரசராக இருக்கின்றார்.

உலக வரலாற்றில் வாழ்ந்தவர்களில் மிகப்பெரியவர் இயேசு. அவருக்கு பணியாளர்கள் இல்லை, எனினும் அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தார்கள். அவர் பட்டம் பெறவில்லை, எனினும் அவரை ‘போதகர்’ என்று அழைத்தார்கள். அவரிடத்தில் மருந்து இல்லை, எனினும் அவரை ‘நலமளிக்கிறவர்’ என்று அழைத்தார்கள். அவரிடம் ராணுவம் இருந்ததில்லை, எனினும் அரசர்கள் அவருக்கு பயந்தார்கள். அவர் எந்தப் போரிலும் வெற்றிப் பெறவில்லை, எனினும் அவர் உலகத்தை வென்றார். அவர் இறந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார், எனினும் அவர் இன்றும் வாழ்கிறார். ஆம், இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள்!

மகனாகிய கடவுள்

மகனாகிய கடவுள் (God the Son) என்பவர் அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆள் ஆவார். தந்தையாம் கடவுளின் நித்திய வாக்காக இவரே விளங்குகிறார். ஆபிரகாமின் வழிமரபில் தாவீது குலத்தவராக தோன்றிய இறைமகன் இவரே. கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதராகி, நமது மீட்புக்காக சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே இவர்.

இறையியல்
தந்தையாம் கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிறப்பதால் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளை ‘மகன்’ என்று அழைக்கிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தவர். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை (same substance) கொண்டவர். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன.

மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணிலிருந்து இறங்கினார்; தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதர் ஆனார்; இவர் பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வருவார்; அவரது அரசுக்கு முடிவே இராது.

மகனாகிய கடவுள்

"இறைத் தந்தையின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். இவர் தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர்." (2)

வெளிப்பாடு
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” என்று திருத்தூதர் யோவான் (1:1-4,14) குறிப்பிடுகிறார்.

“விண்ணகத்திலுள்ள என் தந்தை” (மத்தேயு 12:50) என்றும், “என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருக்கிறார்” (லூக்கா 22:29) என்றும் இயேசு உரிமையுடன் போதிக்கிறார்; “தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?” (யோவான் 10:36) என்று கேள்வி எழுப்புகிறார். “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” (யோவான் 6:44) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவரது இறைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

“முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்” என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் (1:1-2) காண்கிறோம். “அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர். தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார்” (திருப்பாடல் 107:19,20) என்ற வார்த்தைகள் இயேசுவின் மீட்புச் செயலை சுட்டிக் காட்டுகின்றன.

இயேசு கிறிஸ்து
“கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக “இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்” (பிலிப்பியர் 2:6-11) என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார்.

“கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; தீர்ப்பு வழங்குவோரிடம் நியாயமாகத் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்” (1பேதுரு 2:21-24) என்று திருத்தூதர் பேதுரு குறிப்பிடுகிறார்.

விளக்கம்
மூவொரு கடவுளில் இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து பிறக்கும் இறை வாக்கை நாம் மகன் என்று அழைக்கிறோம். தந்தையான இறை சிந்தனையோடு, மகனாகிய இறை வாக்கு தொடக்கம் முதலே ஒன்றித்திருக்கிறார். இறை சிந்தனையில் இருந்து இறை வாக்கு வெளிப்படும் நிகழ்வையே பிறத்தல் என்று அழைக்கிறோம். அதாவது, இறைமை என்ற ஒரே பொருள்மையில் தந்தையிடம் இருந்து மகன் பிறக்கிறார். ஆகவே, தந்தையாம் கடவுள்  கொண்டிருக்கிற இறைத்தன்மை, அவரது மகனிடமும் உள்ளது.

படைப்பு என்பது தந்தைக்கு உரியதாக இருப்பது போன்று, மீட்பு என்பது மகனுக்கு உரியதாக இருக்கிறது. யார் வழியாக அனைத்தும் படைக்கப்பட்டனவோ, அவர் வழியாகவே அவை மீட்கப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்: “விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன” (கொலோசையர் 1:16). ஆகவே, “இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்க கடவுள் திருவுளம் கொண்டார்” (கொலோசையர் 1:20).

கடவுளின் உருவமாகத் தோன்றிய இயேசுவில், இறை வாக்காகிய மகன் மட்டுமே மனிதரானார் என்று விசுவசிக்கிறோம். ஒரு மனிதரால் உச்சரிக்கப்படும் ஒரு சொல், வரி வடிவத்தின் வழியாக அவரது உடலுக்கு வெளியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அவ்வாறே, இறை வாக்கு தன்னை உருவத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆகவே, வாக்காகிய மகன் இறை பொருள்மையைத் தாண்டி மனித உருவிலும் தோன்றினார். கடவுள் மனிதராகி நம்மிடையே வாழ்ந்ததால், நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினை பெற்றுக் கொண்டோம்.

தந்தையாகிய கடவுள்

தந்தையாகிய கடவுள் (God the Father) என்பவர் அதி தூய திரித்துவத்தின் முதல் ஆள் ஆவார். இஸ்ரயேல் மக்களின் கடவுளாகத் தம்மை வெளிப்படுத்தியவரும், இயேசு கிறிஸ்து தமது தந்தையாக அறிமுகம் செய்தவரும் இவரே. மூவொரு கடவுளில் மூலமாகவும் முதன்மையாகவும் இவரே விளங்குகிறார்.

இறையியல்
இறை வாக்காகிய மகனை நித்தியத்திற்கும் பிறப்பிப்பதால் மூவொரு கடவுளின் முதல் ஆளை ‘தந்தை’ என்று அழைக்கிறோம். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தமது வாக்கின் வழியாக அனைத்தையும் படைத்து, தமது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்.

புலனறிவுக்கு அறிமுகமற்ற விதத்தில் கடவுளை தந்தையாக இயேசு வெளிப்படுத்தினார்: அவர் படைத்தவராக இருப்பதால் மட்டும் தந்தையன்று; அவர் தமது ஒரே மகனுடனான உறவின் காரணமாக நித்தியத்திற்கும் தந்தையாக இருக்கிறார். தமது தந்தையுடனான உறவினால் மட்டுமே இயேசு நித்திய மகனாக இருக்கிறார்.


தந்தையாம் கடவுள் (அடையாள ஓவியம்)

"விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்." (1)

இஸ்ரயேலில்
இஸ்ரயேலில், உலகைப் படைத்தவர் என்ற முறையில் கடவுள் “தந்தை” என்று அழைக்கப்பட்டார். அதற்கும் மேலாக, கடவுளின் உடன்படிக்கை மற்றும் “அவரது உரிமை மக்கள்” என்ற இஸ்ரயேலின் சட்டத்தின் வழியாக அவர் தந்தையாக இருக்கிறார். தம் பிள்ளைகள் அனைவர் மீதும் அன்புநிறை அக்கறையும் நன்மைத்தனமும் கொண்ட தந்தையாக அவர் இருக்கிறார். மிகச் சிறப்பாக அவர் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்களுக்கும், அவரது பாதுகாப்பில் இருப்போருக்கும் தந்தையாக இருக்கிறார்.
ஆபிரகாமின் அழைப்பில் இந்த மனித குலத்திற்கு மீண்டும் தம்மை அறிமுகம் செய்து கொண்ட கடவுளில் தந்தையின் பண்பைக் காண்கிறோம். மோசேயிடம், ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று தம்மை வெளிப்படுத்திய கடவுளில் தந்தையையே இஸ்ரயேல் மக்கள் கண்டனர். “நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்” (எரேமியா 31:33) என்று இறைவாக்கினர்கள் வழியாக உடன்படிக்கை செய்த தந்தை இவரே. “ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை” (எசாயா 63:16).

வெளிப்பாடு
“இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்” (மத்தேயு 23:9) என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். “உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்” (மத்தேயு 5:44,45) என்று அவர் போதித்தார். இவ்வாறு, கடவுளை மனிதர் அனைவரின் தந்தையாக இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், கடவுளைத் தமது தனிப்பட்ட தந்தையாகவும் இயேசு அறிமுகம் செய்கிறார்: “என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருக்கிறார்” (லூக்கா 22:29). நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவான் 16:32). “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” (மத்தேயு 10:32) என்ற இயேசுவின் வார்த்தைகள் இறைத்தந்தையுடனான அவரது நெருங்கிய உறவைக் காட்டுகின்றன.

விளக்கம்
படைப்பு செயலில் கடவுளின் மூன்று ஆட்களின் பங்கும் இருந்தாலும், தந்தையையே நாம் படைப்பின் காரணராகக் காண்கிறோம். ஏனெனில், படைப்பு என்பது சிந்தனையில் கருவாகி, சொல்லில் பிறப்பெடுத்து, செயலில் நிறைவடைகிறது. இறை சிந்தனையாகிய தந்தையிலேயே படைப்புகள் அனைத்தும் வடிவம் பெற்றன. இறை சிந்தனையில் தோன்றிய படைப்புகளே, இறை வாக்கின் வழியாக வெளிப்பட்டு, இறை செயலில் அவற்றின் நிறைவைக் கண்டன.

அதே நேரத்தில், படைப்புகள் தோன்றும் முன்பே கடவுளில் தந்தை இருக்கிறார். எவ்வாறெனில், மகனாகிய கடவுளைப் பிறப்பிக்கிறவரே தந்தை என்று அழைக்கப்படுகிறார். மனித முறையில் நாம் சிந்திப்பது போல, இது ஓர் உயிரில் இருந்து மற்றோர் உயிர் பிறப்பது போன்ற நிகழ்வு அன்று. மாறாக, ஒரு மூலத்தில் இருந்து மற்றொரு மூலம் தனியாக பிரியும் நிகழ்வு. அதாவது, சிந்தனையோடு ஒன்றித்திருக்கும் சொல் பிரிந்து தனியாக வெளிப்படுவது போன்றது.

படைப்பின் கடவுள்

தந்தையாகிய கடவுளின் சிந்தனையிலேயே நாம் வாழும் இந்த உலகம் வடிவம் பெற்றது. ஆகவே, இறைத்தந்தையே படைப்புகளின் காரணராக விளங்குகிறார். இருப்பினும் தமது வாக்காகிய இறைமகன் வழியாக, தூய ஆவியாரின் செயலால் தந்தை இவ்வுலகைப் படைத்தார். ஆகவே, விவிலியம் கூறும் மூவொரு கடவுளே ‘படைப்பின் கடவுள்‘ (God of the creation) என்பது தெளிவு.

இயேசு கிறிஸ்து
“விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!” (மத்தேயு 6:9) என்று தம் சீடர்களுக்கு வேண்ட கற்றுக் கொடுத்த இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்” (லூக்கா 10:21) என்று புகழ்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறு தந்தையாம் கடவுளே, படைப்புகளின் காரணராக இருக்கின்றார் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார். “விண்ணகத் தந்தை நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்” (மத்chதேயு 5:45) என்று இயேசு போதித்ததும் படைப்புகள் மீதான இறைத்தந்தையின் அதிகாரத்துக்கு சான்று பகர்கின்றன.

படைப்பின் ஆறு நாட்கள்

"முதலில், விண்ணுலகும் மண்ணுலகும் உருவற்று வெறுமையாக இருந்தன. கடவுள் தமது வாக்கின் வழியாக அனைத்தையும் படைத்தார்."

இறையியல்
“தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்” (தொடக்க நூல் 1:1) என விவிலியம் கூறுகிறது. நாம் காண்பவை, காணாதவை, ஆவி இயல்புடையவை, பருப்பொருள் சார்ந்தவை அனைத்தையும் கடவுளே படைத்தார். அதாவது கண்ணுக்கு புலப்படாத வானதூதர்களையும், காணக்கூடிய உலகையும், சிறப்பாக மனிதரையும் படைத்தவர் தந்தையாகிய கடவுளே என்பது திருச்சபையின் நம்பிக்கையாக உள்ளது. படைப்பு செயலில் கடவுளின் மூன்று ஆட்களின் பங்கும் இருக்கிறது என்றாலும், தந்தையின் திருவுளத்திலேயே படைப்புகள் முதன்மையாக வடிவம் பெற்றன. ஆகவேதான், “விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்” என்று அறிக்கையிடுகிறோம்.

“வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது” (திருப்பாடல்கள் 19:1). இறைத்தந்தையையே படைப்புகளின் காரணராக காண்கிறோம் என்றாலும், தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த வாக்காகிய மகனால் அனைத்தும் உண்டாயின (யோவான் 1:1-3). கடவுளின் வாக்காகிய கிறிஸ்து வழியாகவே, விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை அனைத்தும் படைக்கப்பட்டன (கொலோசையர் 1:16). மேலும், தூய ஆவியாரின் அசைவாடலே படைப்பு செயலுக்கு நிறைவை வழங்கியதாக காண்கிறோம். “உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப் பெறுகின்றன” (திருப்பாடல்கள் 104:30).

இஸ்ரயேலர்
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து தங்களை மீட்டு வழிநடத்திய கடவுளே, இயற்கை முழுவதையும் படைத்தவர் என்பதை இஸ்ரயேல் மக்கள் முழுமையாக நம்பினர். ஆகவேதான், விவிலியத்தின் தொடக்கமே கடவுளின் படைப்புச் செயலைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் அனைத்தும் உருவற்று வெறுமையாக இருந்த நிலையில், ஒன்றுமில்லாமையில் இருந்து தமது வாக்காலும் செயலாலும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் கடவுள் படைத்தார் என்று தொடக்க நூல் கூறுகிறது. படைப்புச் செயலை ஆறு கட்டங்களாக பிரிக்கும் குருக்கள் மரபு ஆசிரியர், “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” என்று குறிப்பிடுகிறார்.

விவிலியத்தின் பல இடங்களிலும் படைப்புகளின் மேன்மைக்காக கடவுள் புகழப்படுகிறார். “ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகில் அடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்தி விட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்” என்று திருப்பாடல் 104:24 குறிப்பிடுகிறது.

“ஆண்டவரே, உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்; படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாது இருந்தால் எதுதான் காப்பாற்றப்படக் கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்பு கூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன.” என்று சாலமோனின் ஞானம் 11:17,23-26 கூறுகிறது.

மூவொரு கடவுள்

மூவொரு கடவுள் (Triune God) அல்லது அதி தூய திரித்துவம் (Most Holy Trinity) என்பது, கிறிஸ்தவத்தின் அடிப்படை கடவுள் கொள்கை ஆகும். ஒரே கடவுளில் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. ஒரே உருவத்தில் உள்ள மூன்று ஆட்களில், தந்தை (கண்), மகன் (ஆட்டுக்குட்டி), தூய ஆவியார் (புறா) ஆகியோரைக் காட்டுவது ஒருவித அடையாள முறை ஆகும்.

இறையியல்
அனைத்தையும் படைத்த ஒரே கடவுள் தமது இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்தன்மையில் மூவராகவும் இருக்கிறார். இந்த ஒரே கடவுள் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்லத் தன்மையிலும், எல்லையற்ற ஞானத்திலும், பராமரிப்பிலும், விருப்பத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். தம்மையே மோசேக்கு வெளிப்படுத்தியது போன்று, இவர் ‘இருக்கின்றவராக இருக்கிறார்’. திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போல், இவர் ‘அன்பாய் இருக்கிறார்’.

தந்தை, மகன், தூய ஆவியார் என்று தம்மையே வெளிப்படுத்தும் கடவுள் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த கடவுளின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது. இவ்வாறு உடனொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று இறை ஆட்களில், ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்குகின்றது.

மூவொரு கடவுள் (அடையாள ஓவியம்)

இயல்புகள்
கடவுள் பின்வரும் ஆறு இயல்புகளைக் கொண்டிருப்பதாக திருச்சபை போதிக்கிறது:
(1) கடவுள் தாமாய் இருக்கிறார்: கடவுளின் பெயரை வினவிய மோசேயிடம், “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” (விடுதலைப் பயணம் 3:14) என்று அவர் பதில் அளிக்கிறார். இவ்வாறு, அவர் தம்மிலே தாமாக இருக்கிறார், அவரது இருப்புக்கு வேறு யாரும் காரணமல்ல என்று அறிகிறோம்.

(2) கடவுள் தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்: “முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே” (திருவெளிப்பாடு 22:13) என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் எப்பொழுதும் இருக்கின்றவராகவும், அனைத்திற்கும் முதலாகவும் முடிவுமாகவும் இருப்பதால், அவருக்கு தொடக்கமோ முடிவோ இல்லை என்பது தெளிவு. (42)

(3) கடவுள் உடல் இல்லாதவராய் இருக்கிறார்: “கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” (யோவான் 4:24) என்று இயேசு கூறுகிறார். உருவமே இல்லாத கடவுளுக்கு உடல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதி.

(4) கடவுள் அளவில்லாத சகல நன்மையும் கொண்டவராய் இருக்கிறார்: “நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். அப்போது நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்” (லூக்கா 6:35) என்று இயேசு கூறுகிறார். ஆகவே, கடவுள் நன்மைகளின் ஊற்றாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

(5) கடவுள் எங்கும் நிறைந்தவராய் இருக்கிறார்: “உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!” (திருப்பாடல் 139:7,8) என்று தாவீது கூறுகிறார். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே இதன் பொருள்.

(6) கடவுள் எல்லாவற்றிற்கும் தொடக்க காரணராய் இருக்கிறார்: “என் தலைவராகிய ஆண்டவரே! உம் ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!” (எரேமியா 32:17) என்று எழுதப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்திற்கும் தொடக்க காரணராய் இருப்பவர் கடவுளே என்பது தெளிவு.

வெளிப்பாடு
ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியவர் இறைமகன் இயேசுவே. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” (மத்தேயு 10:32) என்றும், “தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்” (யோவான் 5:19) என்றும் இயேசு கூறுவது அவரது இறைத்தன்மையைக் காட்டுகிறது.
“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” (யோவான் 14:26) என்ற வார்த்தைகள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையிலான உறவை வெளிப்படுத்துகின்றன. “கடவுள் ஒருவரே” (யோவான் 5:44) என்று போதித்த இயேசு கிறிஸ்து, “தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத்தேயு 28:19) கூறியதில் இருந்து கடவுளில் மூன்று ஆட்கள் இருப்பதை அறிகிறோம்.

வரலாறு
திருத்தூதர்களைத் தொடர்ந்து அவரது சீடர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்ற போதனையை வழங்கினார். திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு ஆயர் இக்னேசியுஸ் (-110), மறைசாட்சியான யுஸ்தீன் (-165) ஆகியோர் இது குறித்து எழுதியுள்ளனர். அந்தியோக்கு மறைமுதுவர் தியோபிலுஸ் (-185) என்பவரே, கடவுளும் அவரது வார்த்தையும் அவரது ஞானமும் திரித்துவமாக விளங்குவதாக கூறி, ‘திரித்துவம்’ என்ற வார்த்தையை கடவுளோடு முதலில் தொடர்புபடுத்தினார். ஆனால், கிறிஸ்தவ எழுத்தாளரான தெர்த்தூலியனே (-230), தந்தை, மகன், தூய ஆவியாரை உள்ளடக்கியதே தூய திரித்துவம் என்ற வரையறையை முதலில் உருவாக்கியவர்.

இரனேயுஸ் (-202), அலெக்சாந்திரியாவின் கிளமென்ட் (-215), அலெக்சாந்திரியா ஆயர் அத்தனாசியுஸ் (-373) உள்ளிட்ட திருச்சபை தந்தையர்களும் மூவொரு கடவுள் கோட்பாட்டை பாதுகாக்கும் போதனைகளை வழங்கினர். கி.பி. 325ல் கூடிய நிசேயா பொதுச்சங்கம், தந்தையாம் கடவுளுடன் ஒரே இறைத்தன்மை கொண்ட மகனாக இயேசு கிறிஸ்து திகழ்கிறார் என்று அறிக்கையிட்டது. 381ஆம் ஆண்டு கூடிய முதல் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம், தூய ஆவியாரின் இறைத்தன்மையைத் தெளிவுபடுத்தியது. ஹிப்போ ஆயர் அகுஸ்தீன் (-430), இறையியலாளர் தாமஸ் அக்குயினாஸ் ஆகியோர் திரித்துவம் குறித்த ஆழ்ந்த புரிதல்களை தங்கள் எழுத்துக்களில் வழங்கியுள்ளனர்.

கோட்பாடு
ஒரே கடவுளை நம்புகிறோம்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.

தந்தையிடம் இருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடம் இருந்து பிறந்தவர், கடவுளின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளின்று உண்மை கடவுளாக, பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர், தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன; மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் விண்ணகத்தில் இருந்து இறங்கி மனிதரானார்.

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிரளிப்பவருமான தூய ஆவியாரையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.

விளக்கம்
மூவொரு கடவுளில் தந்தை இறை சிந்தனையாகவும், மகன் இறை வாக்காகவும், தூய ஆவியார் இறை செயலாகவும் உள்ளனர். சிந்தனையில் இருந்து சொல் பிறப்பது போன்று, தந்தையிடம் இருந்து மகன் பிறக்கிறார். சிந்தனை மற்றும் சொல்லில் இருந்து செயல் விளைவது போன்று, தந்தை மற்றும் மகனிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார்.

தந்தையாம் கடவுளே அதி தூய திரித்துவத்தின் மூலமாக இருக்கிறார். இருப்பினும், சிந்தனையிலேயே சொல்லும் செயலும் ஒன்றித்திருப்பது போன்று, மகனும் தூய ஆவியாரும் தந்தையில் ஒன்றித்து இருக்கின்றனர். ஆகவே அவர்கள் மூன்று ஆட்களாய் இருந்தாலும், கடவுளுக்குரிய ஒரே பொருள்மையில் (same substance) தங்களை வெளிப்படுத்துவதால் ஒரே கடவுளாய் இருக்கின்றனர்.

இவ்வாறு, இறை சிந்தனையாகிய தந்தையும், இறை வாக்காகிய மகனும், இறை செயலாகிய தூய ஆவியாரும் ஒரே இறைமையில் நித்தியத்திற்கும் தனித்து இயங்குகின்றனர். ஆகவே, தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியாரும் கடவுள்; ஆனால், மூன்று கடவுள்கள் அல்லர், ஒரே கடவுள். ஏனெனில், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று இறை ஆட்களில் ஒரே கடவுளைக் கண்டு வழிபடுகிறோம்.

முடிவாக
கடவுள் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மை மூன்று ஆட்களாக நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். இவ்வாறே, படைக்கப்படாத கடவுளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பிறகு நித்திய ஒளியிலும், கடவுளின் நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைப்பு பெற்றுள்ளோம்.

நிசேயா ஒப்பறிக்கை

நிசேயா ஒப்பறிக்கை (Nicene Creed) என்பது, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வெளியிட்ட விசுவாச ஒப்புதல் ஆகும். நிசேயா பொதுச்சங்கம் உருவாக்கிய இந்த ஒப்பறிக்கை, பின்னர் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் திருத்தி விரிவாக்கம் செய்யப்பட்டது. கிறிஸ்தவத்தின் முதன்மை இறையியல் கோட்பாடுகள் இதில் அடங்கியுள்ளன.

முதல் வடிவம்
ஒரே கடவுளை நம்புகிறோம்; காண்பவை, காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். அனைத்தும் இவர் வழியாகவே படைக்கப்பட்டன; மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார். இவர் பாடுபட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்றார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட வரவிருக்கின்றார். தூய ஆவியாரையும் நம்புகிறோம்.

நிசேயா பொதுச்சங்கத்தின் விசுவாச ஒப்புதல்

முழு வடிவம்
ஒரே கடவுளை நம்புகின்றேன்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன; மனிதரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காக பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில், சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்து[ம் மகனிடமிருந்தும்] புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரையும் நம்புகின்றேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே புனித கத்தோலிக்க திருத்தூதுவ திருச்சபையை நம்புகின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் ஏற்றுக்கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

பழைய வழக்கு
ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறுஉலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

வரலாறு
இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்து ஆரியுஸ் என்ற குரு பரப்பி வந்த தப்பறைக்கு பதில் கொடுக்கும் விதமாக, கி.பி. 325ல் பேரரசர் கொன்ஸ்தாந்தீன் நிசேயாவில் பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்டினார். அதில் நடந்த விவாதங்களின் விளைவாக ‘நிசேயா ஒப்பறிக்கை’ உருவானது. அதன்பிறகு, தூய ஆவியாரின் இறைத்தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் 381ஆம் ஆண்டு, முதலாம் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் இந்த ஒப்பறிக்கை திருத்தி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் ஒப்புதலில் காணப்பட்ட பன்மைக்கூறுகள் ஒருமையில் மாற்றம் செய்யப்பட்டன.

கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் பங்கேற்ற கிழக்கத்திய ஆயர்கள், “தந்தையிடம் இருந்து புறப்படும் தூய ஆவியார்” என்று அறிக்கையிட்டதை மேற்கத்திய ஆயர்கள் ஏற்கவில்லை. மேற்கத்திய இறையியலுக்கு ஏற்ப கி.பி. 447ல் திருத்தந்தை புனித பெரிய லியோ, “தந்தையிடமிருந்தும் மகனிடம் இருந்தும் தூய ஆவியார் புறப்படுகிறார்” என்பதை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். அதன்பிறகு, மேற்கத்திய திருச்சபையின் ‘நிசேயா ஒப்பறிக்கை’யிலும் இந்த வாய்ப்பாடு சேர்க்கப்பட்டது. அக்காலம் முதல் தற்காலம் வரை, நிசேயா ஒப்பறிக்கையைத் திருப்பலி வழிபாட்டில் பயன்படுத்தி வருகிறோம்.

திருத்தூதர்களின் ஒப்பறிக்கை

திருத்தூதர்களின் ஒப்பறிக்கை (Apostle’s Creed) என்பது, இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களின் விசுவாச ஒப்புதல் ஆகும். திருச்சபையின் தொடக்க காலம் முதலே, நம்பிக்கை அறிக்கை பாதுகாக்கப் பெற்று வருகிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படையான நம்பிக்கை கோட்பாடுகள் இதில் அடங்கியுள்ளன.

பொது வடிவம்
(1) விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். (2) அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். (3) இவர் தூய ஆவியால் கருவாகி கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். (4) பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். (5அ) பாதாளத்தில் இறங்கி, (5ஆ) மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். (6) விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். (7) அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். (8) தூய ஆவியாரை நம்புகின்றேன். (9) புனித கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகின்றேன்; புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். (10) பாவ மன்னிப்பை நம்புகின்றேன். (11) உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். (12) நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

பன்னிரு திருத்தூதர்களின் விசுவாச ஒப்புதல்

பன்னிரு பகுதிகள்
திருத்தூதர்களின் ஒப்பறிக்கையில் உள்ள விசுவாச ஒப்புதலின் பகுதிகள் பற்றி, முதல் நூற்றாண்டில் இருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்களின் குறிப்புகளில் ஆங்காங்கே காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் சபை போதகரான பெல்பார்த்துஸ் என்பவர் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு பின்வருமாறு சாற்றிக் கூறுகிறார். பகுதி 1: திருத்தூதர் பேதுரு, பகுதி 2: திருத்தூதர் யோவான், பகுதி 3: திருத்தூதர் பெரிய யாக்கோபு, பகுதி 4: திருத்தூதர் அந்திரேயா, பகுதி 5அ: திருத்தூதர் பிலிப்பு, பகுதி 5ஆ: திருத்தூதர் தோமா, பகுதி 6: திருத்தூதர் பர்த்தலமேயு, பகுதி 7: திருத்தூதர் மத்தேயு, பகுதி 8: திருத்தூதர் சிறிய யாக்கோபு, பகுதி 9: திருத்தூதர் சீமோன், பகுதி 10: திருத்தூதர் யூதா ததேயு, பகுதிகள் 11-12: திருத்தூதர் மத்தியா.

பழைய வழக்கு
(1) பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். (2) அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். (3) இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னி மரியாளிடமிருந்து பிறந்தார். (4) போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். (5) பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். (6) பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். (7) அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். (8) பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன். (9) பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்; புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன். (10) பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். (11) சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். (12) நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.

திருமுழுக்கில்
குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தந்தையின் ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தூய ஆவியாரையும், புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவு ஒன்றிப்பையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்ப்பையும், முடிவில்லா வாழ்வையும் நம்புகின்றீர்களா?
பதில்: நம்புகின்றேன்.

வரலாறு
தூய ஆவியாரின் தூண்டுதலால் பன்னிரு திருத்தூதர்களும் இணைந்து, இந்த விசுவாச அறிக்கையை உருவாக்கியதாக திருச்சபை மரபு கூறுகிறது. தொடக்க காலம் முதலே கிறிஸ்தவ திருமுழுக்கு சடங்கில், திருத்தூதர்களின் ஒப்பறிக்கை கேள்வி-பதில் வடிவில் பயன்படுத்தப் பெற்று வருகிறது. கி.பி. 390ல் திருத்தந்தை சிரீசியசுக்கு மிலான் சங்கத்தில் இருந்து வந்த மடலில், ‘திருத்தூதர்களின் ஒப்பறிக்கை’ பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தற்போதைய முழு வடிவிலான ‘திருத்தூதர்களின் ஒப்பறிக்கை’, கி.பி. 710ல் பிர்மீனியுஸ் என்பவரது எழுத்துக்களில் காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெல்பார்த்துஸ் என்ற பிரான்சிஸ்கன் சபை போதகர், இதன் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு சாற்றிக் கூறுகிறார். தற்போது திருமுழுக்கு மற்றும் செபமாலையில் இந்த ஒப்பறிக்கை பயன்படுகிறது.

வானதூதர்கள்

வானதூதர்கள் (Angels) என்போர் கடவுளுக்கு பணிவிடை செய்ய அவரால் படைக்கப்பட்ட உடலற்ற ஆவிகளாக இருக்கின்றனர். இருப்பினும், வானதூதர்கள் பல்வேறு உருவங்களைக் கொண்டிருப்பதாக விவிலியத்தில் காண்கிறோம். மரபு சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும் வானதூதர்களுக்கு சிறகுகள் கொண்ட மனித உருவம் வழங்கப்படுகிறது.
விண்ணகத்தில் தூதர்கள்
"வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்." (யோவான் 1:51)

இறையியல்
எல்லாம் வல்ல மூவொரு கடவுளே வானதூதர்களைப் படைத்தார். முழுமையான ஆவிக்குரிய படைப்புகளான வானதூதர்களுக்கு அறிவும் விருப்பமும் உண்டு. அவர்கள் ஆள்தன்மை கொண்ட அழிவில்லாப் படைப்புகள், காணக்கூடிய படைப்புகளைவிட அதிக நிறைவைக் கொண்டவர்கள். அவர்களது மகிமையின் ஒளி இதற்குச் சான்று பகர்கின்றது. அவர்கள் தங்களது முழுமையான இருப்பால் இறைவனின் பணியாளர்களாகவும் தூதுவர்களாகவும் இருக்கின்றனர் (திருப்பாடல்கள் 103:20-21).
வானதூதர்கள் அனைவரும் கடவுளுக்கு ஊழியம் புரியும் ஆவிகள் (எபிரேயர் 1:14). அவர்கள் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் (மத்தேயு 18:10). வானதூதர்கள் ஆண்டவரைத் தொடர்ந்து போற்றிக் கொண்டே இருக்கின்றனர் (எசாயா 6:3). வானதூதர்கள் என்ற பெயர் அவர்களது பணியைக் குறிக்கிறது. ஆவிகளான அவர்கள், கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் பாலங்களாக, இணைப்பாளர்களாக, தூதுவர்களாக வானதூதர்கள் செயல்படுகின்றனர்.

ஒன்பது குழுக்கள்
யூத மற்றும் கிறிஸ்தவ மரபுகளின் அடிப்படையில், வானதூதர்கள் ஒன்பது குழுக்களாக செயல்படுகின்றனர் என நம்புகிறோம். “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர்” (கொலோசையர் 1:16) என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடும் அனைவரும் வானதூதர்களே. அவர்களது பணிகளின் அடிப்படையில், அவர்கள் மூன்று வட்டங்களாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வட்டத்திலும் மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் வட்டம்
சுடரொளி வீசுவோர் (பத்திசுவாலகர்), புகழ்ந்தேற்றுவோர் (நாதகிருத்தியர்), அரியணையில் அமர்வோர் (பத்திராசனர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் முதல் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் கடவுளைப் புகழ்ந்து போற்றி வணங்குகிறவர்களாக உள்ளனர்.
(1) சுடரொளி வீசுவோர் அல்லது சேராபீன்கள் (Seraphim) என்னும் வானதூதர்கள் கடவுள் மீதான அன்பாலும், ஆர்வத்தினாலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்டவரின் அரியணையை சூழ்ந்து நிற்கின்றனர்; சேராபீன்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருக்கின்றன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டுள்ளனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்திருக்கின்றனர்; மற்ற இரண்டால் பறக்கின்றனர். இவர்கள், “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது” என்று உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். (எசாயா 6:1-7)

(2) புகழ்ந்தேற்றுவோர் அல்லது கெருபுகள் (Cherubim) என்னும் வானதூதர்களை ஆண்டவரின் அரியணையை சுற்றி நிற்கும் நான்கு உயிர்களாக திருவெளிப்பாடு நூல் காட்டுகிறது. அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம்போலும், இரண்டாவது இளங்காளை போலும், மூன்றாவது மனிதன் போலும், நான்காவது பறக்கும் கழுகைப் போலும் முக அமைப்பு கொண்டிருக்கின்றன. இவ்வுயிர்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளும் புறமும் கண்கள் நிறைந்த ஆறு சிறகுகள் இருக்கின்றன. “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று இந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கின்றன. (திருவெளிப்பாடு 4:6-8)

(3) அரியணையில் அமர்வோர் (Thrones or Ophanim) என்னும் வானதூதர்களை திருவெளிப்பாடு நூலில் இருபத்துநான்கு மூப்பர்களாக காண்கிறோம். இவர்கள் அரியணையில் அமர்ந்து கடவுளின் நீதிக்கும், ஆட்சியுரிமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிக் கொண்டே இருக்கின்றனர். (திருவெளிப்பாடு 11:16-18) இவர்களின் உருவம், வளையத்தில் பல கண்கள் கொண்ட நெருப்பு சக்கரம் போன்று இருக்கும் என்று நம்பப்படுகிறது. புனித பவுலும் (கொலோசையார் 1:16) அரியணையில் அமர்வோரை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் வட்டம்
ஒழுங்கு செய்வோர் (ஞானாதிக்கர்), புனிதத்தில் வல்லோர் (சத்துவகர்), அதிகாரம் கொண்டோர் (பலவத்தர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் இரண்டாம் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் விண்ணகப் பணிகளை கவனிக்கிறவர்களாக உள்ளனர்.
(4) ஒழுங்கு செய்வோர் (Dominions or Hashmallim) என்னும் வானதூதர்கள் பிரபுத்துவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்களின் கீழுள்ள வானதூதர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துகின்றனர். அரிதாக சில தருணங்களில் இவர்கள் மனித உருவில் தங்களை வெளிப்படுத்துவது உண்டு. இவர்கள் உலக நாடுகளின் பொறுப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். ஞானாதிக்கரின் உருவம் இரண்டு சிறகுகளைக் கொண்ட மனிதரைப் போன்று இருக்கும். மேலும், இவர்கள் செங்கோலில் அல்லது வாளின் கைப்பிடியில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டமும் காணப்படுகிறது.

(5) புனிதத்தில் வல்லோர் (Virtues or Strongholds) என்னும் வானதூதர்கள் விண்ணகப் பொருட்களை கண்காணிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். பிரபஞ்சத்தின் இயக்க முறைமைகளை இவர்களே ஒழுங்குபடுத்தி பராமரிக்கின்றனர். “புனிதத்தில் வல்லோர் என்ற பெயரே அவர்களின் அசைக்க முடியாத வல்லமையை, கடவுளை ஒத்த ஆற்றல்களைக் குறிக்கிறது. இறை வாழ்வில் இருந்து தம் பலவீனத்தால் விலகாமல், புண்ணியத்தின் அதிமிகத் தேவையில் நிலைத்து வளர்கின்றனர். இவர்கள் புண்ணியத்தின் ஊற்றாகவும், மிகை நிறைவாகவும் திகழ்கின்றனர்” என்று டயோனைசியுஸ் புனைவு நூல் கூறுகிறது.

(6) அதிகாரம் கொண்டோர் (Powers or Authorities) என்னும் வானதூதர்கள், ஆட்சியாளர் என்ற வானதூதர்களோடு இணைந்து அதிகாரம் செலுத்துகின்றனர் என்று திருத்தூதர் பவுல் (எபேசியர் 3:10) குறிப்பிடுகிறார். அதிகாரம் கொண்டோர் என்ற வானதூதர் மனச்சான்றைத் தாங்குவோராகவும், வரலாற்றைக் காப்போராகவும் இருக்கின்றனர். இவர்கள் கடவுளுக்காகப் பிரமாணிக்கத்துடன் போரிட உருவாக்கப்பட்ட வானதூதர்கள். இவர்கள் மனிதரிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வதாலேயே இப்பெயரைப் பெறுகின்றனர்.

மூன்றாம் வட்டம்
ஆட்சியாளர் (பிராதமிகர்), தலைமை தாங்குவோர் (அதிதூதர்), தொடர்பு கொள்வோர் (தேவதூதர்) என்ற மூன்று குழுக்களைச் சேர்ந்த வானதூதர்கள் மூன்றாம் வட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த வானதூதர்கள் அனைவரும் விண்ணகத்தின் தூதுவர்களாகவும், வீரர்களாகவும் உள்ளனர்.
(7) ஆட்சியாளர் (Principalities or Rulers) என்னும் வானதூதர்கள், அதிகாரம் கொண்டோர் என்ற வானதூதர்களோடு இணைந்து ஆட்சி புரிகின்றனர். ஆட்சியாளர் தலையில் மகுடமும், கையில் செங்கோலும் கொண்டிருப்பர். அதிகாரம் கொண்டோரின் கட்டளைகளை நிறைவேற்றுவதும், பூவுலகுக்கு குறிக்கப்பட்ட ஆசிகளை வழங்குவதும் இவர்களின் பணியாக உள்ளது. இவர்கள் மக்கள் குழுக்களை கண்காணித்து, கற்பிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் இருக்கின்றனர். மனிதரின் அறிவியல் மற்றும் கலை ஆர்வத்தை இவர்களே தூண்டுகின்றனர்.

(8) தலைமை தாங்குவோர் (Archangel) என்னும் வானதூதர்கள் தீமைகளுக்கு எதிரான போர் வீரர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடவுளின் திருமுன் நின்று பணி செய்கின்றனர். தலைமை வானதூதர்களின் எண்ணிக்கை ஏழு என்பது பொதுவான நம்பிக்கை. “கடவுளுடைய ஏழு ஆவிகள்” என்று திருவெளிப்பாடு 3:1 கூறுவது இவர்களை பற்றியே. கத்தோலிக்க மரபின்படி மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகிய மூவரும் முக்கியமான அதிதூதர்களாக கருதப்படுகின்றனர்.

(9) தொடர்பு கொள்வோர் (Angels or Malakhim) என்னும் வானதூதர்கள் மனிதருக்கு இறைசெய்தியை வழங்கும் தூதுவர்களாக செயல்படுகின்றனர். உயிருள்ளவற்றின் நலன்களுக்கு பொறுப்பானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் மனிதர்களின் பாதுகாவலர்களாகவும் செயல்படுகின்றனர். தலைமை தாங்குவோரும் தொடர்பு கொள்வோராக செயல்படுவது உண்டு. அதிதூதர் கபிரியேல் கன்னி மரியாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்ததை இதற்கு சான்றாக கூறலாம்.

செயல்பாடு
கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம், வானதூதர்களைப் பற்றிய யூத, கிறிஸ்தவ நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது. வானதூதர்கள் ஆண்டவரின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர் (தொடக்க நூல் 22:11). கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு வரும் தூதுவர்களாக செயல்படுகின்றனர் (லூக்கா 1:11). மனித மீட்பைக் குறித்து அறிந்து கொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள் (1பேதுரு 1:12). உலக மீட்பரின் பிறப்பு வானதூதர் வழியாகவே கன்னி மரியாவுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 1:28). கடவுளின் திட்டத்துக்கு ஏற்றவர்களை வழிநடத்தும் பணியை வானதூதர்கள் செய்கின்றனர் (மத்தேயு 1:20).
ஒவ்வொரு மனிதரின் வாழ்வோடும் ஒரு வானதூதருக்கு தொடர்புள்ளது (மத்தேயு 18:10). கடவுளிடம் வேண்டும் மன்றாட்டுக்கு பதிலளிக்க வானதூதர்கள் வருகின்றனர் (திருத்தூதர் பணிகள் 12:5-10). நல்லோர் இறக்கும் வேளையில் வானதூதர்கள் துணையாக இருக்கின்றனர் (லூக்கா 16:22). இயற்கை மீது அதிகாரம் கொண்டவர்களாகவும், ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளாகவும் வானதூதர்கள் உள்ளனர் (திருவெளிப்பாடு 7:1-2). “ஆண்டவர் தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்” (எபிரேயர் 1:7).

படைப்பின் தொடக்கத்திலும் மீட்பின் வரலாறு முழுவதிலும் கடவுளோடு உடனிருந்து, இறைத்திட்டத்தை நிறைவேற்றத் துணைபுரிந்தவர்கள் வானதூதர்கள். “மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?” (எபிரேயர் 1:14). பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு முழுவதும் வானதூதர்களின் கவனமான கண்காணிப்பாலும் மன்றாட்டாலும் சூழப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவரது அருகிலும் பாதுகாவலராகவும் ஆயராகவும் இருந்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்ற வானதூதர்களை காவல் தூதர்கள் என்று அழைக்கிறோம்.

Wednesday, November 7, 2018

சாவை வெற்றி கொண்டார்

“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு” என்று இயேசு கிறிஸ்து கூறினார். தாம் சொன்னபடியே, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.
உயிர்த்த இயேசுவும் மகதலா மரியாவும்

மகதலா மரியா
மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து மரியா அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவான் 20:11-16)

பெண் சீடர்கள்
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. (மாற்கு 16:1-8)

ஆண் சீடர்கள்
சீடர்கள் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:36-43)
திருத்தூதர் தோமா
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 20:24-29)

இறந்தோரை உயிர்ப்பித்தார்

“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று இயேசு கிறிஸ்து கூறினார். இறந்து போன இலாசர் உள்ளிட்ட மூன்று பேருக்கு அவர் மீண்டும் உயிர் கொடுத்த நிகழ்வுகளை இங்கு காண்போம்.

இறந்த இலாசரை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

யாயிரின் மகள்
தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் இயேசுவைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை பின்தொடர்ந்தனர். அப்போது தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்து விட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட இயேசு தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார்.
அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். (மாற்கு 5:22-24,35-42)

நயீன் இளைஞர்
இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். (லூக்கா 7:11-16)

நண்பர் இலாசர்
பெத்தானியாவுக்கு இயேசு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார். இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளம் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.

“கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். (யோவான் 11:17-44)

உருமாற்றம் அடைந்தார்

இயேசு கிறிஸ்து இறைமகனே என்பதை நிரூபிக்கும் இரண்டு அற்புத நிகழ்வுகளை நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. முதலில் இயேசுவின் திருமுழுக்கு வேளையிலும், இரண்டாவதாக அவரது உருமாற்றத்திலும் இதைக் காண்கிறோம்.
இயேசு தோற்றம் மாறுகிறார்

திருமுழுக்கு
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:9-11)

உருமாற்றம்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 17:1-9)

புயலை அடக்கினார்

இயேசு கிறிஸ்து தாம் இயற்கை மீது அதிகாரம் கொண்ட கடவுள் என்பதை தமது அற்புதங்கள் மூலம் எண்பித்தார். கலிலேய ஏரியில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கியதையும், அவர் சபித்த அத்தி மரம் பட்டுப்போன நிகழ்வையும் இங்கு காண்போம்.
இயேசு புயலை அடக்குகிறார்

புயலை அடக்குதல்
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 8:22-25)

மரத்தை சபித்தல்
பெத்தானியாவை விட்டு அவர்கள் எருசலேமுக்கு திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். (மாற்கு 11:12-14,20)