அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, October 5, 2017

சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்

சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்

பழங்காலத்தில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேரவேண்டும் என்பதற்காகவே நிறைய மாணவர்கள் போட்டிபோட்டார்கள். ஏனென்றால் அவரிடம் சீடராக இருந்து பயிற்சிபெற்றவர்கள் யாவருமே சமுதாயத்தில் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். அந்த துறவியிடத்தில் அருணி என்ற இளைஞன் சீடராகச் சேர்ந்தான். அருணி மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருந்தான். துறவிக்கு அருணி எப்படிப்பட்டவன் என்பதைச் சோதித்துப் பார்க்க ஆசை. அதனால் அவர் அதற்கான  சரியான வாய்ப்பினையும் தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சரியான மழை பெய்துகொண்டிருந்தது. இதுதான் அருணியை சோதிப்பதற்கு சரியான தருணம் என்பதை உணர்ந்த துறவி அவனை அழைத்து, “அருணி! வெளியே அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கே அடைமழை பெய்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய தோட்டத்தின் கரையில்  ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, மழைத்தண்ணீர் மண்ணையெல்லாம் வெளியே இழுத்துக்கொண்டு போய்விடும். ஆகையால்,  நீ போய் நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை அடைத்துவிட்டு வா” என்றார். அதற்கு அருணி, “குருவே! இப்போதே நான் போகிறேன். நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அடைத்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான்.

அருணி வெளியே சென்ற நேரம் மழை ஓயாமல் பேய்ந்துகொண்டிருந்தது. அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோட்டத்திற்குச் சென்றான். தோட்டத்தில் துறவி சொன்னதுபோன்று ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அவன் தான் கொண்டுவந்திருந்த மண்வெட்டியைக் கொண்டு அவற்றை அடைத்தான். ஓரிடத்தில் மட்டும் உடைப்பு பெரிதாக இருந்தது. எனவே அவன் மண்வெட்டியைக் கொண்டு, மண்ணை அள்ளியள்ளிப் போட்டு உடைப்பை அடைத்துப் பார்த்தான். எவ்வளவோ போராடியும் அவனால் உடைப்பை அடைக்க முடியாவில்லை. அதனால் தானே அந்த உடைப்பின் நடுவே படுத்து, மண்சரிவைத் தடுத்தான்.

இந்த வேளையில் துறவி, தோட்டத்திற்குச் சென்ற அருணி இன்னும் திரும்பவில்லையே, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறியடித்துக்கொண்டு தன்னுடைய மற்ற சீடர்களோடு தோட்டத்திற்கு வந்தார். அங்கே அருணி உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் படுத்து, மயக்கமுற்ற நிலையில் இருந்தான். இதைப் பார்த்த துறவிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் அருணியை வெளியே தூக்கி எடுத்து, உடைப்பு இருந்த பகுதியில் எல்லா சீடர்களின் உதவியோடு மண்ணைப் போட்டு நிரப்பினார். பிறகு அருணியை தன்னுடைய துறவு மடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து, அவன் மயக்கம் தெளிவுறச் செய்தார். அருணி மயக்கத்திலிருந்து எழுந்த பிறகு துறவி அவனைப் பார்த்துச் சொனார், “அருணி! நீ உண்மையிலே என்னுடைய சீடர்களில் தலை சிறந்தவன். ஏனென்றால், நீ நான் சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்தாய். அதனால் நீயே ஒரு குருவாக மாறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உன்னிடத்தில் இருக்கின்றன. இன்றிலிருந்து நீதான் இந்த துறவுமடத்தின் குரு” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்தார்.

சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஓர் உண்மையான சீடனுக்கு அழகு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

மத்தேயு  21: 28-32 நமது சொல்லும் செயலும் ஒத்துப்போகவேண்டும் – ஒன்றாகவேண்டோம் என்ற சிந்தனையை வழங்குகின்றது. இந்த நற்செய்தியில்  ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் முதலாவது மகனோ ‘தோட்டத்திற்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, பின்னர் மனம்மாறி தோட்டத்திற்குச் சென்று, வேலைபார்க்கிறான். ஆனால் இரண்டாவது மகனோ, ‘தோட்டத்திற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு போகாமல் இருக்கிறான். இந்த இரு புதல்வர்களும் ஒருவிதத்தில் சொன்னது போன்று செய்யவில்லை தான். ஆனாலும் முதலாவது மகனோ போகவில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் போகிறான். அந்த விதத்தில் அவனை தந்தையின் திருவுளத்தினை நிறைவேற்றியவன் என்று சொல்லலாம். இரண்டாவது மகனோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய மனம்போன போக்கில் போனான். அதனால் அவன் தந்தைக் கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுவான் என்பது உறுதி.

கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7:21 ல் வாசிக்கின்றோம், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று. ஆகவே, நாம் இறைவார்த்தையை கேட்பவர்களாக, இறைவனை பெயருக்குத் தொழுபவர்களாக மட்டும் இருந்து விடாமல், இறைவனின் வார்த்தையின் படி வாழ்ந்துகாட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகு.

தூய பவுல் பிலிப்பியவருக்கு எழுதிய திருமுகம்   2: 1-11, “சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெறவில்லையா?” என்று (பிலி 2:1) கூறுவார். கிறிஸ்து இயேசு வாழ்வதைப் போதித்தார், போதித்ததை வாழ்ந்துகாட்டினார். ஆகவே, கிறிஸ்தவர்களாக நாம் வாசிப்பதை வாழ்வாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாம் சொல்வதற்கும், செய்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கின்றது. இத்தகைய ஓர் இடைவெளியை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

நம்முடைய முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இன்றைய உலகில் மக்கள் போதனையாளர்களுக்கு யாரும் செவிமடுத்து வாழ்வதில்லை. ஒருவேளை மக்கள் போதனையாளர்களுக்கு செவிமடுத்து வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் வெறுமனே போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் போதிப்பதை வாழ்வாக்குகிறார்கள்” என்று. ஆம், நமது வாழ்வு இறைவனுக்குப் பிரியமுள்ளதாக இருக்கவேண்டுமென்றால் நாம் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதை வாழ்ந்து காட்டவும் வேண்டும்.

இறைவார்த்தையை நாம் வாழ்ந்துகாட்டுவதற்கு நம்மிடத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்கும்போது நம்முடைய பாவங்கள், குற்றங்குறைகள்தான் தடையாக இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உடலில் அதிகமாக எடை வைத்திருக்கின்ற ஒருவர் மேலே ஏறிச்செல்வது எவ்வளவு கடினமோ, அதுபோன்றதான் தன்னகத்தில் குற்றங்குறைகள் உள்ள மனிதர் இறைவனைச் சேர்வதும் ஆகும்.. நாம் நம்மிடம் இருக்கும் குற்றங்குறைகளை அகற்றாவிட்டால் இறைவனை அடைவது மிகவும் கடினமாகும்.

இப்போது இறைவனை அடைவதற்கு என்ன செய்வது என ஆராய்ந்து  பார்ப்போம். இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகம் 18: 25-28, “நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச்சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால், தம் உயிரைக் காத்துக் கொள்வர்” என்று வாசிக்கின்றோம். ஆகவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்ற ஒருவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, இறைவனிடம் திரும்பி வரும்போது அவர் வாழ்வினைப் பெற்றுக்கொள்வார் என்பது உறுதி. நாம் நமது தீய வழியிலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு முதலும் முடிவுமாக நாம் செய்யவேண்டியது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து அல்லது கீழ்படிந்து வாழ்வதாகும்.

திருப்பாடல் 81:13 ல் வாசிக்கின்றோம், “என் மக்கள் எனக்குச் செவி சாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருக்கும்” என்று. ஆகவே, நாம் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து, நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டொழித்து தூய வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

திபா 25: 4-9  "ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.  எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்."

ஓர் ஊரில் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் இருந்தார். அவருடைய போதனையை கேட்க மக்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். அவருடைய போதனையைக் கேட்ட நிறைய மக்கள் மனம்மாறினார்கள்.

ஒருநாள் அவர் மக்களுக்கு வித்தியாசமான ஒரு போதனை நிகழ்த்தினார். அவர் மக்களிடத்தில், “நீங்கள் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுதடைந்துவிட்டால், அதை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “வாகனத்தை சரி செய்துவிட்டு மீண்டுமாக ஓட்டத் தொடங்குவோம்” என்றார்கள். “உங்கள் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த தொலைக்காட்சி பழுதடைந்துவிட்டால், என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கும் அவர்கள், “தொலைக்காட்சியிலுள்ள பழுதை நீக்கிவிட்டு, பார்ப்போம்” என்றார்கள.

இறுதியாக அவர் அவர்களிடத்தில், “உங்களுடைய வாழ்க்கையே பாவத்தில் சிக்குண்டு, பலவீனமாகக் கிடக்கிறதென்றால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். மக்கள் யாருமே அதற்குப் பதில் சொல்லவில்லை. அங்கே பெரிய அமைதி நிலவியது. அப்போது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “உங்கள் வாகனமோ அல்லது தொலைக்காட்சியோ பழுதடைந்துவிட்டால் அதனை உடனே சரிசெய்யும் நீங்கள், உங்களுடைய வாழ்க்கையே பாவத்தால் பழுதடைந்திருக்கும்போது, அதை ஏன் யாருமே சரிசெய்ய முன்வருவதில்லை” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அனைவரும், “நாங்கள் பாவத்தால் பலவீனமடைந்திருக்கும் எங்களுடைய வாழ்க்கையை மறுசீரமைப்போம். நல்வழியில் நடப்போம்” என்று உறுதியளித்தார்கள்.

ஆம், நாம் நம்முடைய வாழ்வில் இருக்கின்ற பாவக்கறைகளை அகற்றுக்கின்றபோதுதான் நாம் இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முடியும்.

ஆகவே, இறைவார்த்தை சொல்வதைப் போன்று நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதற்கு நம்முடைய வாழ்வில் இருக்கும் பாவக்கறைகளை எல்லாம் அகற்றிடுவோம். இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

– Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:

Post a Comment