அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, October 31, 2017

இறந்தோருக்காக செபம்

இறந்தோருக்காக செபம்


இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழத்ச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, சாவுக்குரிய எங்கள் உடலுக்கும் நீர் உயிர் அளிப்பவர் என்பதால், இறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக நாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம். உம் திருமகனோடு மகிமையில் உயிர்த்தெழும்படி இவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார். விசுவாசத்துடனும் விருப்புடனும் இவர் உண்ணும்படி வானக உயிருள்ள அப்பத்தை இவருக்கு அளித்தீர். நாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக செய்யும் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும். சாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து, உயிர்த்தெழும் நாளில் இவர் உம் திருமுன் வந்து சேரவும், உம் புனிதரோடு பேரின்ப மகிமையில் பங்குபெறவும் அருள்வீராக.


உயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே. உம் நண்பர் இலாசரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால் நீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப் புதுவா ழ்வும் மகிமையும் அளித்தருளும். உம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம். உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்கள், யாரும் நினையாத நிலையில் செப உதவி பெற இயலாதாவர்கள், குறிப்பாக ......... (பெயர்) ஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறோம்.


நயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து, உம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே, நாங்கள் அன்பு செய்தவரை இழந்து அழுது புலம்பும் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும். "இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு. இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை. இவருக்காக விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாயிருக்கிறது" என்ற திண்ணமான உண்மையை எண்ணி, நாங்கள் அமைதிபெற அருள்வீராக.


உமது பேரிரக்கத்தால் ஆண்டவரே, இவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும். உம் அடியார் ........(பெயர்) தம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை விரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

Thursday, October 5, 2017

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்''

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)

-- ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.
-- இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர்

''இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (மத்தேயு 21:31)

-- கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்ள வந்தார் இயேசு. அந்த அன்பு ஒருசில மனிதரை மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மனிதரையும் அரவணைக்கின்ற பண்புடையது. சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், பாவிகள் எனக் கருதப்பட்டவர்கள் போன்ற மக்களும் கடவுளின் அன்புக்கு உரியவர்களே என இயேசு கற்பித்தார். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று கேள்வி கேட்டனர் யூத குருக்களும் மக்களின் மூப்பர்களும். அவர்கள் யூத சமய நெறிகளை அறிந்தவர்கள், யூத சட்டத்தைத் தெரிந்தவர்கள். ஆனால் இயேசுவின் வழியாகக் கடவுள் தங்களோடு பேசுகிறார் என அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வார்த்தைகளால் மட்டுமே கூறினால் போதாது, செயல்கள் வழியாக அதைக் காட்டவேண்டும். யூத சமயத் தலைவர்கள் சமய நெறிப்படி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள்; ஆனால் உண்மையில் கடவுளின் விருப்பப்படி அவர்கள் நடக்கவில்லை. எனவே இயேசு அவர்களைப் பாhத்து: ''யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை'' என்று கூறினார் (மத் 21:32). ஆனால் மக்களால் பாவிகள் எனக் கருதப்பட்ட வரிதண்டுவோரும் விலைமகளிரும் திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறினார்கள். இவர்களை இயேசு போற்றுகிறார்.
-- கடவுளுக்குப் பணிவதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அவ்வாறு நாம் பணிந்து நடக்காவிட்டால் என்ன பயன்? பாவம் நிறைந்த இவ்வுலகில் குற்றம் செய்யாத மனிதர் யாருமே இல்லை. ஆனால் தவறு செய்தவர்களும் திருந்த முடியும் என நம் கடவுள் நமக்காகக் காத்திருக்கின்றார். ஒருவேளை கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும் நாம் உண்மையாகவே மனம் மாறி, கடவுளிடம் திரும்பிச் செல்ல இயேசு நம்மை அழைக்கிறார். ஆக, பாவ வாழ்வைத் துறந்துவிட்டு, கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை நாம் தழுவ வேண்டும். அப்போது கடவுளுக்கு நாம் ஏற்புடையோர் ஆவோம்.

மன்றாட்டு
இறைவா, சொல்லாலும் செயலாலும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

கடவுளின் உண்மையான மகன்

கடவுளின் உண்மையான மகன்

யூதர்களில் அதிகார வர்க்கத்தினர் கடவுளுக்கு கீழ்ப்படிவதாக சொல்லிக்கொண்டனர். ஆனால், உண்மையில் கீழ்ப்படியவில்லை. பாவிகளும், வரிதண்டுகிறவர்களும் மனம்போன போக்கில் வாழ்ந்தனர். கடவுளைப்பற்றி கவலை கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இறுதியில் கடவுளிடம் திரும்பி, திருந்தி வந்தனர். இதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம். இந்த நற்செய்தியில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய உண்மை, இரண்டு பேருமே பாராட்டப்படவில்லை. நடப்பது அப்படியே சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இரண்டுபேரில் யார் சிறந்தவர்? என்கிற கேள்வி இங்கே எழுப்பப்படவில்லை.
இரண்டு மகன்களுமே தந்தைக்கு திருப்தி தரவில்லை. இரண்டுபேருமே தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஆனால், இரண்டாவது மகன் முதல் மகனைவிட பரவாயில்லை என்கிற தொனியில் நற்செய்தி தரப்படுகிறது. ஒரு தந்தையின் உண்மையான மகன் என்று சொல்லப்படுகிறவர், தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதை அப்படியே செய்துமுடிக்கிறவர் தான். அதாவது, தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கையளிப்பது. தனது விருப்பங்களை விடுத்து, தந்தையின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பது. இயேசு உண்மையான மகனுக்கு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறார்.
நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள். நான் எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன்? என்ற கேள்வியை நாம் நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிகிற உண்மையுள்ள மகனாக மாற, முயல்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

வாக்குறுதி என்பது நமது வாழ்வின் அங்கமாக இருக்கிறது. நாம் பல இடங்களில் வாக்குறுதி கொடுக்கிறோம். நமது வாழ்வின் தொடக்கத்திலிருந்து, இறுதிவரை வாக்குறுதி கொடுக்கிறோம். அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படுகின்றபோது நாம் இறைவனின் முன்னிலையில், நமது வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது புதுப்பிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகமானது, வெற்று வாக்குறுதிகளால் நமக்கு நன்மை ஒன்றும் கிட்டாது என்பதையும், வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறபோதுதான், அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
இன்றைக்கு வாக்குறுதி கலாச்சாரங்கள் மலிந்தும், நலிந்தும் விட்டன. ஏனென்றால், வாக்குறுதிகள் கவர்ச்சிப்பொருளாக மாறிவிட்டன. அரசியல் தளத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள் தரப்படுகிறது. அந்த வாக்குறுதிகள் நிச்சயமாக செயல்படுத்தப்பட மாட்டாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நமது பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இதுவல்ல. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல், நாணிக்கோணி, மடிந்த வீரத்தலைமுறை நமது தலைமுறை. மீட்பின் வரலாற்றில், கடவுள் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதே பண்பாடு நமக்கும் இருக்க வேண்டும்.
கடவுள் முன்னிலையில் நாம் கொடுக்கிற வாக்குறுதிகளுக்காவது நாம் பிரமாணிக்கமாய் இருக்கிறோமா? வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம் நம்மிடையே இருக்கிறதா? வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாய் இருக்கிறோமா? சிந்திப்போம். செயல்படுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார்.
இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு கிடைக்கிறது. செயல்பாடும் முரண்பட்டதாகவே இருக்கிறது. “போகிறேன்” என்று சொல்கிற மகன் இறுதியாக போகவில்லை. ”போக மனம் இல்லை” என்று சொல்கிறவன் இறுதியில் போகிறான். இந்த மகன் தன் உள்ளத்தில் எண்ணுவதை பகிர்ந்து கொள்கிறான். அதை வெளிப்படுத்த, தந்தை என்ன நினைப்பாரோ? என்ற சிந்தனைகள் அவனுடைய உள்ளத்தில் எழவில்லை. இரண்டாவது மகன், தந்தையிடத்தில் நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடியவனாக இருக்கிறான். அது அவனுடைய செயலில் வெளிப்பட்டுவிடுகிறது.
கடவுள் முன்னிலையில் திறந்த உள்ளத்தினராக நாம் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். நமது பலவீனங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக நாம் வாழ வேண்டும். அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் கடவுள் விரும்புகிறார். அப்போதுதான் கடவுளின் அருளும் நம்மை வந்தடையும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

”உம் பாதைகளை அறியச் செய்தருளும்” - திருப்பாடல் 25: 4 – 9

”உம் பாதைகளை அறியச் செய்தருளும்” - திருப்பாடல் 25: 4 – 9

கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற முழுமையான அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிற உணர்வுகளாக இந்த திருப்பாடல் அமைந்திருக்கிறது. கடவுளிடம் எதற்காக செபிக்க வேண்டும்? செபிப்பதற்கு காரணம் எதுவாக இருக்க வேண்டும்? என்பதற்கு இது விளக்கம் தருகிறது. அது மட்டுமல்ல,கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற முழுமையான நம்பிக்கையையும், கடவுளை நோக்கி தன்னுடைய உள்ளத்தை எழுப்புகிற பாங்கையும் இந்த திருப்பாடல் விரிவாக எடுத்துரைக்கிறது.
திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரையில், தன்னுடைய பாதையை தொடக்கத்தில் கடவுள் அமைத்த வழியில் ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், பிறகு அவர் தன்னுடைய பாதையை தானே அமைத்துக்கொண்டார். கடவுள் அமைத்துக் கொடுத்த பாதையில் நடக்கவில்லை. அதனால், அவர் பெருத்த துன்பங்களையும், பல இழப்புக்களையும் வாழ்வில் சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை அனுபவம் தந்த பாடம், கடவுளின் மேன்மையை, மகிமையை, அவரது வார்த்தையின்படி, நடக்கக்கூடிய பாங்கை, அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. எனவே, இறைவன் வகுத்த பாதையில் நடக்க இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.
கடவுள் நாம் நேரிய வழியில் நடக்க வேண்டும் என்று, நமக்கான பாதையை உருவாக்கித் தந்திருக்கிறார். அந்த பாதையின் வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த சிந்தனையை வழங்கும் திருப்பாடல் ஆசிரியரின் வரிகளுக்கு நாம் செவிசாய்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

சொன்னது ஒன்று... செய்தது இன்னொன்று !

சொன்னது ஒன்று... செய்தது இன்னொன்று !

இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார்.
திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்--- ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.
மன்றாட்டு:
உண்மையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சொல்லுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எப்போதும்; இறைத்தந்தைக்குப் பிரியமானவர்களாக வாழும் அருளைத் தந்தருளும். ஆமென்.

சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்

சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்

பழங்காலத்தில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேரவேண்டும் என்பதற்காகவே நிறைய மாணவர்கள் போட்டிபோட்டார்கள். ஏனென்றால் அவரிடம் சீடராக இருந்து பயிற்சிபெற்றவர்கள் யாவருமே சமுதாயத்தில் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். அந்த துறவியிடத்தில் அருணி என்ற இளைஞன் சீடராகச் சேர்ந்தான். அருணி மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருந்தான். துறவிக்கு அருணி எப்படிப்பட்டவன் என்பதைச் சோதித்துப் பார்க்க ஆசை. அதனால் அவர் அதற்கான  சரியான வாய்ப்பினையும் தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சரியான மழை பெய்துகொண்டிருந்தது. இதுதான் அருணியை சோதிப்பதற்கு சரியான தருணம் என்பதை உணர்ந்த துறவி அவனை அழைத்து, “அருணி! வெளியே அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கே அடைமழை பெய்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய தோட்டத்தின் கரையில்  ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, மழைத்தண்ணீர் மண்ணையெல்லாம் வெளியே இழுத்துக்கொண்டு போய்விடும். ஆகையால்,  நீ போய் நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை அடைத்துவிட்டு வா” என்றார். அதற்கு அருணி, “குருவே! இப்போதே நான் போகிறேன். நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அடைத்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான்.

அருணி வெளியே சென்ற நேரம் மழை ஓயாமல் பேய்ந்துகொண்டிருந்தது. அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோட்டத்திற்குச் சென்றான். தோட்டத்தில் துறவி சொன்னதுபோன்று ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அவன் தான் கொண்டுவந்திருந்த மண்வெட்டியைக் கொண்டு அவற்றை அடைத்தான். ஓரிடத்தில் மட்டும் உடைப்பு பெரிதாக இருந்தது. எனவே அவன் மண்வெட்டியைக் கொண்டு, மண்ணை அள்ளியள்ளிப் போட்டு உடைப்பை அடைத்துப் பார்த்தான். எவ்வளவோ போராடியும் அவனால் உடைப்பை அடைக்க முடியாவில்லை. அதனால் தானே அந்த உடைப்பின் நடுவே படுத்து, மண்சரிவைத் தடுத்தான்.

இந்த வேளையில் துறவி, தோட்டத்திற்குச் சென்ற அருணி இன்னும் திரும்பவில்லையே, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறியடித்துக்கொண்டு தன்னுடைய மற்ற சீடர்களோடு தோட்டத்திற்கு வந்தார். அங்கே அருணி உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் படுத்து, மயக்கமுற்ற நிலையில் இருந்தான். இதைப் பார்த்த துறவிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் அருணியை வெளியே தூக்கி எடுத்து, உடைப்பு இருந்த பகுதியில் எல்லா சீடர்களின் உதவியோடு மண்ணைப் போட்டு நிரப்பினார். பிறகு அருணியை தன்னுடைய துறவு மடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து, அவன் மயக்கம் தெளிவுறச் செய்தார். அருணி மயக்கத்திலிருந்து எழுந்த பிறகு துறவி அவனைப் பார்த்துச் சொனார், “அருணி! நீ உண்மையிலே என்னுடைய சீடர்களில் தலை சிறந்தவன். ஏனென்றால், நீ நான் சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்தாய். அதனால் நீயே ஒரு குருவாக மாறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உன்னிடத்தில் இருக்கின்றன. இன்றிலிருந்து நீதான் இந்த துறவுமடத்தின் குரு” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்தார்.

சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஓர் உண்மையான சீடனுக்கு அழகு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

மத்தேயு  21: 28-32 நமது சொல்லும் செயலும் ஒத்துப்போகவேண்டும் – ஒன்றாகவேண்டோம் என்ற சிந்தனையை வழங்குகின்றது. இந்த நற்செய்தியில்  ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் முதலாவது மகனோ ‘தோட்டத்திற்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, பின்னர் மனம்மாறி தோட்டத்திற்குச் சென்று, வேலைபார்க்கிறான். ஆனால் இரண்டாவது மகனோ, ‘தோட்டத்திற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு போகாமல் இருக்கிறான். இந்த இரு புதல்வர்களும் ஒருவிதத்தில் சொன்னது போன்று செய்யவில்லை தான். ஆனாலும் முதலாவது மகனோ போகவில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் போகிறான். அந்த விதத்தில் அவனை தந்தையின் திருவுளத்தினை நிறைவேற்றியவன் என்று சொல்லலாம். இரண்டாவது மகனோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய மனம்போன போக்கில் போனான். அதனால் அவன் தந்தைக் கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுவான் என்பது உறுதி.

கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7:21 ல் வாசிக்கின்றோம், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று. ஆகவே, நாம் இறைவார்த்தையை கேட்பவர்களாக, இறைவனை பெயருக்குத் தொழுபவர்களாக மட்டும் இருந்து விடாமல், இறைவனின் வார்த்தையின் படி வாழ்ந்துகாட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகு.

தூய பவுல் பிலிப்பியவருக்கு எழுதிய திருமுகம்   2: 1-11, “சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெறவில்லையா?” என்று (பிலி 2:1) கூறுவார். கிறிஸ்து இயேசு வாழ்வதைப் போதித்தார், போதித்ததை வாழ்ந்துகாட்டினார். ஆகவே, கிறிஸ்தவர்களாக நாம் வாசிப்பதை வாழ்வாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாம் சொல்வதற்கும், செய்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கின்றது. இத்தகைய ஓர் இடைவெளியை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

நம்முடைய முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இன்றைய உலகில் மக்கள் போதனையாளர்களுக்கு யாரும் செவிமடுத்து வாழ்வதில்லை. ஒருவேளை மக்கள் போதனையாளர்களுக்கு செவிமடுத்து வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் வெறுமனே போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் போதிப்பதை வாழ்வாக்குகிறார்கள்” என்று. ஆம், நமது வாழ்வு இறைவனுக்குப் பிரியமுள்ளதாக இருக்கவேண்டுமென்றால் நாம் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதை வாழ்ந்து காட்டவும் வேண்டும்.

இறைவார்த்தையை நாம் வாழ்ந்துகாட்டுவதற்கு நம்மிடத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்கும்போது நம்முடைய பாவங்கள், குற்றங்குறைகள்தான் தடையாக இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உடலில் அதிகமாக எடை வைத்திருக்கின்ற ஒருவர் மேலே ஏறிச்செல்வது எவ்வளவு கடினமோ, அதுபோன்றதான் தன்னகத்தில் குற்றங்குறைகள் உள்ள மனிதர் இறைவனைச் சேர்வதும் ஆகும்.. நாம் நம்மிடம் இருக்கும் குற்றங்குறைகளை அகற்றாவிட்டால் இறைவனை அடைவது மிகவும் கடினமாகும்.

இப்போது இறைவனை அடைவதற்கு என்ன செய்வது என ஆராய்ந்து  பார்ப்போம். இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகம் 18: 25-28, “நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச்சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால், தம் உயிரைக் காத்துக் கொள்வர்” என்று வாசிக்கின்றோம். ஆகவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்ற ஒருவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, இறைவனிடம் திரும்பி வரும்போது அவர் வாழ்வினைப் பெற்றுக்கொள்வார் என்பது உறுதி. நாம் நமது தீய வழியிலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு முதலும் முடிவுமாக நாம் செய்யவேண்டியது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து அல்லது கீழ்படிந்து வாழ்வதாகும்.

திருப்பாடல் 81:13 ல் வாசிக்கின்றோம், “என் மக்கள் எனக்குச் செவி சாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருக்கும்” என்று. ஆகவே, நாம் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து, நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டொழித்து தூய வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

திபா 25: 4-9  "ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.  எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்."

ஓர் ஊரில் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் இருந்தார். அவருடைய போதனையை கேட்க மக்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். அவருடைய போதனையைக் கேட்ட நிறைய மக்கள் மனம்மாறினார்கள்.

ஒருநாள் அவர் மக்களுக்கு வித்தியாசமான ஒரு போதனை நிகழ்த்தினார். அவர் மக்களிடத்தில், “நீங்கள் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுதடைந்துவிட்டால், அதை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “வாகனத்தை சரி செய்துவிட்டு மீண்டுமாக ஓட்டத் தொடங்குவோம்” என்றார்கள். “உங்கள் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த தொலைக்காட்சி பழுதடைந்துவிட்டால், என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கும் அவர்கள், “தொலைக்காட்சியிலுள்ள பழுதை நீக்கிவிட்டு, பார்ப்போம்” என்றார்கள.

இறுதியாக அவர் அவர்களிடத்தில், “உங்களுடைய வாழ்க்கையே பாவத்தில் சிக்குண்டு, பலவீனமாகக் கிடக்கிறதென்றால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். மக்கள் யாருமே அதற்குப் பதில் சொல்லவில்லை. அங்கே பெரிய அமைதி நிலவியது. அப்போது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “உங்கள் வாகனமோ அல்லது தொலைக்காட்சியோ பழுதடைந்துவிட்டால் அதனை உடனே சரிசெய்யும் நீங்கள், உங்களுடைய வாழ்க்கையே பாவத்தால் பழுதடைந்திருக்கும்போது, அதை ஏன் யாருமே சரிசெய்ய முன்வருவதில்லை” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அனைவரும், “நாங்கள் பாவத்தால் பலவீனமடைந்திருக்கும் எங்களுடைய வாழ்க்கையை மறுசீரமைப்போம். நல்வழியில் நடப்போம்” என்று உறுதியளித்தார்கள்.

ஆம், நாம் நம்முடைய வாழ்வில் இருக்கின்ற பாவக்கறைகளை அகற்றுக்கின்றபோதுதான் நாம் இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முடியும்.

ஆகவே, இறைவார்த்தை சொல்வதைப் போன்று நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதற்கு நம்முடைய வாழ்வில் இருக்கும் பாவக்கறைகளை எல்லாம் அகற்றிடுவோம். இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

– Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

மழைக்காக ஜெபம்.

மழைக்காக ஜெபம்.

Image may contain: cloud and text

தப்பில்லாத கிரமத்தோடு சகலத்தையும் நடப்பிக்கிற சர்வேசுரா! நாங்கள் பிழைக்கவும் நடக்கவும் இருக்கவும் காரணமான கர்த்தாவே! எங்களுக்குப் போதுமான மட்டும் ததிமாரி பெய்யவும், தவச தானிய முதலான சம்பத்துக்கள் ஓங்கி அதிகரிக்கவும் கிருபை செய்தருளும். நாங்கள் அதிக தார்ப்பரியத்தோடு நன்றியறிந்த தர்ம நெறியில் நடந்து உமக்குத் திருப்பணிபுரிந்து மோட்ஷ சம்பத்தை நாடி அடைய அனுக்கிரகித்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும். 

 ஆமென்