பாடுகளின் குருத்து ஞாயிறு
பாடுகளின் குருத்து ஞாயிறு (Palm Sunday of the Passion) என்பது, இறைமகன் இயேசு கிறிஸ்து மக்களின் உற்சாக வரவேற்போடு எருசலேம் நகருக்குள் நுழைந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் நாளாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஆண்டவர் இயேசு புனித வெள்ளியன்று சிலுவையில் அனுபவித்த பாடுகளை நினைவுகூரும் ஞாயிறாகவும் இது உள்ளது. உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை இத்திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.
நாள்: மார்ச் 15 முதல் ஏப்ரல் 18க்குள்
வகை: பெருவிழா
பின்னணி
இயேசு தாம் பாடுபடுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு, தம் சீடரோடு எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, “உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்தார்கள்.
பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, “போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்” என்றனர். 40அதற்கு அவர் மறுமொழியாக, “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார்.
வரலாறு
குருத்து ஞாயிறு கொண்டாட்டங்கள் முதன்முதலில், கி.பி.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாக அறிகிறோம். 395ஆம் ஆண்டளவில், புனித வாரத்தின் முதல் நாளன்று ஒலிவ மலையில் இருந்து எருசலேம் நோக்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடத்தியதாக எத்தேரியா என்ற திருப்பயணி குறிப்பு எழுதி வைத்துள்ளார். பின்னர் இந்த வழக்கம், மற்ற இடங்களுக்கும் பரவியது. 6ஆம் நூற்றாண்டில்தான் புனித வாரத்தின் முதல் நாளுக்கு ‘குருத்து ஞாயிறு’ என்ற பெயர் ஸ்பெயின் நாட்டில் தோன்றியது. குருத்தோலை பவனிக்கு முன்பு குருத்தோலைகளை மந்திரிக்கும் வழக்கம் 8ஆம் நூற்றாண்டின் நடுவே உருவானது. பொபீயோ நகரத்தின் பழங்காலத் திருப்பலி நூலில் அதற்கான செபங்களைக் காண்கிறோம். ஞாயிறு திருவழிபாடுகள் உயிர்ப்பின் கொண்டாட்டமாக அமைந்துள்ளதால், பெருவிழாக்களின் பட்டியலில் குருத்து ஞாயிறு இடம்பெறுகிறது.
No comments:
Post a Comment