அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, October 9, 2020

ஆண்டவரின் உருமாற்றம் விழா

ஆண்டவரின் உருமாற்றம் விழா


ஆண்டவரின் உருமாற்றம் விழா (Feast of Transfiguration of the Lord) என்பது, இவ்வுலகில் மனிதராக வாழ்ந்த மகனாகிய கடவுள், திருத்தூதர்கள் முன்பாகத் தமது இறை மாட்சியை வெளிப்படுத்திய நிகழ்வை சிறப்பிக்கின்ற திருநாளாகும். இயேசு கிறிஸ்துவின் மேன்மையைப் போற்றும் இவ்விழாவை ஆகஸ்ட் 6ந்தேதி நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

நாள்: ஆகஸ்ட் 6

வகை: விழா

பின்னணி

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. இந்த நிகழ்வே, ஆண்டவரின் உருமாற்ற விழா கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக உள்ளது.

வரலாறு

தபோர் மலையின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இயேசு கிறிஸ்து உருமாற்றம் அடைந்தார் என்ற நம்பிக்கை, கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த நம்பிக்கையின் விளைவாக, அவ்விடத்தில் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் ஆகஸ்ட் 6ந்தேதி புனிதப்படுத்தி திறக்கப்பட்டது. அந்நாள் முதல், ஆண்டவரின் உருமாற்ற விழாவை ஆகஸ்ட் 6ந்தேதி சிறப்பிக்கும் வழக்கம் கிழக்கத்தியத் திருச்சபைகளில் தோன்றியது. 8ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய திருச்சபையின் சில பகுதிகளில் இவ்விழாவைக் கொண்டாடும் வழக்கம் உருவானது. 1456 ஜூலை 22ந்தேதி துருக்கியருக்கு எதிரான சிலுவைப் போரில் கிறிஸ்தவ வீரர்கள் வெற்றி பெற்றனர். அச்செய்தியை ஆகஸ்ட் 6ந்தேதி அறிந்த திருத்தந்தை 3ம் கலிக்ஸ்து, ஆண்டவரின் உருமாற்ற விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார். இதையடுத்து 1457ஆம் ஆண்டு முதல், இவ்விழா மேற்கத்திய திருச்சபையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாடுகளின் குருத்து ஞாயிறு

பாடுகளின் குருத்து ஞாயிறு

பாடுகளின் குருத்து ஞாயிறு (Palm Sunday of the Passion) என்பது, இறைமகன் இயேசு கிறிஸ்து மக்களின் உற்சாக வரவேற்போடு எருசலேம் நகருக்குள் நுழைந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் நாளாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஆண்டவர் இயேசு புனித வெள்ளியன்று சிலுவையில் அனுபவித்த பாடுகளை நினைவுகூரும் ஞாயிறாகவும் இது உள்ளது. உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை இத்திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

நாள்:  மார்ச் 15 முதல் ஏப்ரல் 18க்குள்

வகை: பெருவிழா

பின்னணி

இயேசு தாம் பாடுபடுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு, தம் சீடரோடு எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, “உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்தார்கள்.

பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, “போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்” என்றனர். 40அதற்கு அவர் மறுமொழியாக, “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார்.

வரலாறு

குருத்து ஞாயிறு கொண்டாட்டங்கள் முதன்முதலில், கி.பி.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாக அறிகிறோம். 395ஆம் ஆண்டளவில், புனித வாரத்தின் முதல் நாளன்று ஒலிவ மலையில் இருந்து எருசலேம் நோக்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடத்தியதாக எத்தேரியா என்ற திருப்பயணி குறிப்பு எழுதி வைத்துள்ளார். பின்னர் இந்த வழக்கம், மற்ற இடங்களுக்கும் பரவியது. 6ஆம் நூற்றாண்டில்தான் புனித வாரத்தின் முதல் நாளுக்கு ‘குருத்து ஞாயிறு’ என்ற பெயர் ஸ்பெயின் நாட்டில் தோன்றியது. குருத்தோலை பவனிக்கு முன்பு குருத்தோலைகளை மந்திரிக்கும் வழக்கம் 8ஆம் நூற்றாண்டின் நடுவே உருவானது. பொபீயோ நகரத்தின் பழங்காலத் திருப்பலி நூலில் அதற்கான செபங்களைக் காண்கிறோம். ஞாயிறு திருவழிபாடுகள் உயிர்ப்பின் கொண்டாட்டமாக அமைந்துள்ளதால், பெருவிழாக்களின் பட்டியலில் குருத்து ஞாயிறு இடம்பெறுகிறது.

Thursday, October 8, 2020

இயேசு சிலுவையில் சங். 22ம் சங்கீதத்தை ஏறெடுத்தாரா? என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? (மத். 27.46)

இயேசு சிலுவையில் சங். 22ம் சங்கீதத்தை ஏறெடுத்தாரா? என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? (மத். 27.46)

இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அதிக அறிவீனமானதாக இருக்கும் வார்த்தைகளாகக் கருதப்படுவது அவருடைய சிலுவைமொழிகளில் ஒன்றாகும். (1) இயேசு சிலுவையில் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?“ என்று கூறினார். (மத். 27.46) உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் கூட இயேசுவின் இக்கூற்று அதிக குழப்பதையே ஏற்படுத்தியுள்ளது. தேவனைப் பிதா என்று அழைத்துவந்த இயேசு, சிலுவையில் மரிக்கும்போது மட்டும் ஏன் தேவனே என அழைத்துள்ளார்? தேவனோடு எப்போதும் ஐக்கியப்பட்டிருந்த இயேசு ஏன் தேவனால் கைவிடப்பட்டிருந்தார்? எனும் கேள்விகள் நம் உள்ளத்தில் எழுவது இயற்கையே. இயேசுவின் கூற்றுக்கள் அனைத்தையும்விட இவ்வார்த்தைகள் வித்தியாசமானவையாய் இருப்பதனால், இன்று பலர் இவற்றை இயேசுவின் வாயிலிருந்து வந்தவைகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.(2) அதேசமயம் யெகோவாவின் சாட்சிகள் போன்ற இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் குழுக்கள் தமது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தையும் உபயோகித்து வருகின்றனர். 

இயேசுக்கிறிஸ்துவின்  இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல் ”ஏலி, ஏலி லாமா சபக்தானி” என்னும் வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக உள்ளது. “ஏலி“ எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை “என் தேவனே“ என அழைப்பதாகும். “லாமா சபக்தானி“ என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக “எலோயி“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது(3) உண்மையில் எச்சுவிசேஷசத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதையும், எதில் என் தேவனே எனும் வார்த்தை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடியாதுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்“ என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இயேசு எம்மொழியில் பேசியிருந்தாலும் அவரது வார்த்தைகள் புரிந்து கொள்வதற்கு சிரம்மானவைகளாகவே உள்ளன. 

இயேசு கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் கிறிஸ்தவர்கள் அவரது கூற்றுக்கு பலவிதமான அர்த்தங்களைக் கற்பித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வார்த்தைகளாக இருப்பதனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் முழுச் சங்கீத்த்தையும் தன் ஜெபமாக ஏறெடுத்திருக்க வேண்டும் எனச் சிலர் விளக்குகின்றனர். சங்கீதத்தின் இறுதிப் பகுதி விடுதலைக்கான மன்றாட்டாய் இருப்பதனால் (சங். 22.21-22) இயேசு உண்மையிலேயே தேவனால் கைவிடப்படவில்லை என்றும், 22ம் சங்கீதத்தை அவர் தன்னுடைய மரண நேரத்தின் தியானமாக்கியுள்ளதோடு அதைத் தன் ஜெபமாக ஏறெடுத்துள்ளார் என்றும் இவர்கள் தர்கிக்கின்றனர். (5) எனினும் மரிக்கும் தருவாயில் இயேசு 31 வசனங்கள் உள்ள “ஒரு சங்கீதத்தை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது பொருத்தமான ஒரு விளக்கமாக இல்லை (6) அத்தோடு இயேசு ஒரு வசனத்தை உபயோகிப்பதை ஆதாரமாகக் கொண்டு அவர் முழு சங்கீதத்தையும் சொன்னார் என முடிவிற்கு வருவது தவறாகும். இயேசு உண்மையில் முழு சங்கீதத்தையும் சிலுவையிலிருக்கும்போது  சொல்லியிருந்தால் சுவிஷேச நூலாசிரியர்கள் நிச்சியம் இதுபற்றி குறிப்பிட்டிருப்பார்கள்.(7) மேலும் “இயேசுவின் வார்த்தைகள் பயங்கரமானதொரு கதறலாக இருப்பதனால் அதை எவ்விதத்திலும் ஒரு வேதத் தியானமாகக் கருத முடியாது(8). அதேசமயம் இயேசு 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வரிகளைத் தான் சிலுவையிலிருக்கும்போது உபயோகித்தார் என உறுதியாக கூறமுடியாது. “அவர் சங்கீதத்தை உபயோகிக்காமல், ஏனைய சிலுவை மொழிகளைப் போல, மரணத் தறுவாயில், தன் அனுபத்தை இவ்வாறு கூறியிருக்கலாம். (9)    

சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு தன் வேதனைகளுக்கு மத்தியில், தான் தேவனால் கைவிடப்பட்டவிட்டேன் எனும் தவறான எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருதுகின்றனர். “இயேசு சிலுவையில் தனிமையில் இருந்தமையினால், தேவனும் தன்னைக் கைவிட்டுவிட்டோரோ என்று அவர் கேட்டுள்ளார்“(10) என்பதே இவர்களது விளக்கமாகும். ஆனால் இவர்கள் கூறுவதுபோல தேவனே நீர் என்னைக் கைவிட்டுவிட்டீரா என இயேசு கேட்கவில்லை. மாறாக ஏன் என்னைக் கைவிட்டீர் என்பதே அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகளாகும். “இயேசுவுக்கும் தேவனுக்குமிடையிலான உறவு சிலுவையில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்மைவிட இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். (11) இதைப் பற்றி இயேசுவை விட நமக்கு அதிகமாகத் தெரியும் என நம்மால் தர்க்கிக் முடியாது. (12) எனவே, இயேசு தேவனால் கைவிடப்பட்டார் எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், இயேசு தவறுதலாக இவ்வாறு கூறிவிட்டார் எனக் கருதுவது தவறாகும். இயேசுவின் வார்த்தைகள் “அவர் உண்மையிலேயே தேவனால் கைவிடப்பட்டார் என்பதையே அறியத் தருகின்றன. (13) 

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. (14). 

சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (15)

பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (16) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (17) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (18) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக.  இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Footnote & Reference

(1) இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன. இயேசுவின் சிலுவை மொழிகள் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சபை இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமையன்று அவரது ஏழு சிலுவை மொழிகளையும் தியானிப்பது வழமை.

(2) T.R. Glover, The Jesus of History, London 1917, p. 192

(3) இயேசுவின் சிலுவை மொழிகளில் இக்கூற்று மத்தேயுவிலும் மாற்குவிலும் உள்ளதோடு, இக்கூற்று மட்டுமே இவ்விரு சுவிஷேசங்களிலும் காணப்படும் ஒரேயொரு சிலுவை மொழியாக உள்ளது. ஏனைய ஆறு சிலுவை மொழிகளும் லூக்காவிலும் யோவானிலுமே குறிப்பிடப்பட்டுள்ளன. 

(4) Donald .A. Hagner, Matthew : The World Biblical Commentary, p 844

(5) M.Dibelius, from Tradition to Gospel, London, 1934, p. 193

(6) William Barclay, Mathew Vol. II in Daily Study Bible Edinburgh: St. Andrew Press, pp. 406-407

(7) Leon Morris, The Cross of Jesus Grand Rapids: Eerdmans Publishing Company, 1989, p71

(8) H. Maynard Smith, Atonement, London, 1925, p. 155

(9) Leon Morris, The Gospel According to Mathew, p. 721

(10) Karll Barth, Church Dogmatic IV, The Doctrine of Reconciliation, Edinburgh: 1958, p.168

(11) Leon Morris, The Gospel According to Mathew, p. 721

(12) Leon Morris, The Cross in the New Testament, Carlsle: Paternoster Press, 1995, p. 44

(13) Ibid 45

(14) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation of and Criticism of Christian Theology London : Student Christian Movement Press, P 149

(15) Peter. Green, Studies in the Cross, London, 1971,  p 101

(16) John. Marsh, The Fullness of Time, London 1952, p 100

(17) Leon. Morris, The Gospel According to Matthew, p. 722

(18) J.V.Langmead. Casserley, Christian Community. London, 1960, p 14


சிலுவை சுமத்தலின் சித்தாந்தம்!

சிலுவை சுமத்தலின் சித்தாந்தம்!

கிறிஸ்தவ வாழ்வு சிலுவை சுமக்கும் வாழ்க்கையாகும். நாம் இயேசுகிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றிச் செல்பவர்களாயின், சிலுவை சுமக்காதவர்களாக இருக்க முடியாது. “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34) என்று இயேசுகிறிஸ்து தெளிவாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, சிலுவை சுமக்காமல், அவரைப் பின்பற்றிச் செல்லமுடியாது என்பதனை அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது. எனினும் சிலுவை சுமத்தலின் சித்தாந்தம் என்ன என்பதனை அநேகர் அறியாதிருப்பதனால், இயேசுவின் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர்.

இயேசுகிறிஸ்து, தன்னைப் பின்பற்றி வருபவர்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறியதன் அர்த்தம், அவரைப் பின்பற்றுபவர்கள் மரத்தினால் ஒரு சிலுவையைச் செய்து அதை சுமந்துகொண்டு செல்லவேண்டும் என்பதல்ல. இயேசு உருவக மொழியிலேயே (figure of speech) இக்கட்டளையைக் கொடுத்துள்ளார். எனவே, சொல்லர்த்தமாய் (literally) இதைத் தவறாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் ஒரு மனிதன் சிலுவையைச் சுமந்து கொண்டு வீதியிலே சென்றால், அவன் மரண தண்டனையை அனுபவிக்கப் போகின்றான் என்பதனை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

எனவே, இயேசுகிறிஸ்து சிலுவையை எடுத்துக்கொண்டு வரும்படி கூறியது, தற்கொலை செய்துகொள்ள வரும்படி அழைக்கிறார் எனும் அர்த்தத்தைத் தருவதைப் போன்று உள்ளது. இக்கருத்து திருமறை உபதேசத்துக்கு முரணானது. எனவே, இயேசு கிறிஸ்து உருவக மொழியையே இங்கு உபயோகித்துள்ளார் என்பதனை மறவாது, அதனடிப்படையில் இக்கட்டளையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் இக்கட்டளையை சரியான விதத்தில் புரிந்துகொண்டு, சிலுவை சுமத்தலின் சித்தாந்தத்தைப் பிழையற விளக்கிய பெருமை அப்போஸ்தலனாகிய பவுலையே சேரும். சிலுவை சுமத்தலைப்பற்றிய இயேசுவின் உபதேசத்தை பலரும் பலவிதமாகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கையில், இந்தத் தப்பபிப்பிராயங்களை நீக்கி, உண்மையை உலகுக்கு விளக்கும் வண்ணம் பவுல், தான் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:24) என எழுதியுள்ளார்.

பவுலினுடைய விளக்கத்தில் இருந்து நாம் அறிந்துகொள்வது யாதெனில், சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்வதென்பது, நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதாகும். அதாவது, நமது மாம்சமும் மனதும் விரும்பும் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்யாமலிருப்பதாகும். “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலா.5:17). எனவே, நாம் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையாவிட்டால், மாம்சத்தின் கிரியைகளே (கலா. 5:19-21) நம்மில் காணப்படும். இவை நாம் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு தடையாய் அமைவதனால் (கலா.5:21), நாம் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாயின், மாம்சத்தின் கிரியைகளை உருவாக்கும் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தவர்களாயிருக்க வேண்டும். அப்போது மட்டுமே இயேசு கிறிஸ்து கூறியவண்ணம், நாம் நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றிச் செல்பவர்களாயிருப்போம்.

சிலுவையை எடுத்துக்கொண்டு செல்வதை பவுல், மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பிட்டிருப்பதிலிருந்து, இயேசுவின் இக்கட்டளையானது, நம்முடைய நடைமுறை வாழ்வுக்கான பிரயோகத்தை அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது. சிலுவை மரணத்தின் அம்சங்கள், நம் மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதைப்பற்றிய சத்தியங்களை நமக்கு அறியத்தருவதனால் அவைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து தியானிப்போம்.

(அ) கொடிய குற்றங்களுக்கான மரண தண்டனையாகும்

ரோம சாம்ராஜ்ஜியத்தில், கொடிய குற்றங்களை செய்தவர்களுக்கே சிலுவை மரணமானது தண்டனையாக வழங்கப்பட்டது. ஒரு மனிதனுக்கு சிலுவை மரணம் விதிக்கப்படுகிறதென்றால் அவன் கொடூரமான, மூர்க்கமான, பயங்கரமான, கொடிதான குற்றத்தைச் செய்தவனாகவே இருப்பான். இல்லையென்றால், அவனுக்கு வேறுவகையான தண்டனைகளே கொடுக்கப்படும். எனவே மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதைப் பற்றி பவுல் கூறும்போது, நமது மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் பயங்கரமான, கொடூரமான, மூர்க்கமான குற்றங்களைச் செய்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகிறார். எனவே நமது மாம்சத்தின் கிரியைகளை அழிப்பதற்காக நாம் அதை சிலுவையில் அறைய வேண்டும் என்பதனையே நமக்குத் தெரிவிக்கின்றார் என்பதனை மறுப்பதற்கில்லை.

மாம்சத்தின் ஆசை இச்சைகள் நிறைவேற்றப்படுவதினால் ஏற்படும் மாம்சத்தின் கிரியைகளான “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காம விகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே” (கலா.5:19-21) இவை யாவும் பெரிதான குற்றங்களாகும். ஏனெனில், இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (கலா.5:21) என வேதம் கூறுவதனால், இப்படிப்பட்டவைகளைச் செய்யத் தூண்டும் மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் கொடிதான குற்றங்களைச் செய்ய ஏதுவாயுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக அவைகளை நாம் சிலுவையில் அறைய வேண்டும்.

(ஆ) சிலுவை தண்டனை படிப்படியாக மரணத்தை ஏற்படுத்தும்

சிலுவை மரணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மற்றுமொரு விஷயம், ஒரு மனிதனை நாம் சிலுவையில் அறைந்தால் அவன் உடனடியாக மரித்துவிடமாட்டான். படிப்படியாகவே அவன் மரணமடைவான். கொஞ்சம் கொஞ்சமாகவே அவனுடைய உயிர்போகும். அதேபோலத்தான், நாம் நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தாலும், அவை உடனடியாக மரிக்காத படியால் நாம் பாவமற்றவர்களாக மாறிவிடமாட்டோம். ஆனால் படிப்படியாக மாம்சத்தின் ஆசைகளும் இச்சைகளும் குறைவடைந்து செல்லும். சிலுவை மரணம் படிப்படியாக ஏற்படும் மரணம் என்பதை பவுல் அறிந்திருந்தபடியால், அவர் மாம்ச ஆசை இச்சைகளை சிலுவையில் அறைவதைப் பற்றி எழுதும்போது, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்” என எழுதாமல் “சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அவர்கள் மாம்சத்தின் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அது இன்னும் மரிக்காமல் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது, படிப்படியாக மரித்துக்கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறார்.

மாம்சத்தின் ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைந்திருந்தாலும், அவை இன்னும் மரிக்கவில்லையெனும் உண்மையை மறந்தவர்களாக நாம் ஜீவிக்கக்கூடாது. நாம் இந்த உலகில் இருக்கும்வரை பாவ சுபாவம் நம்மை விட்டு நீங்குவதில்லை. எனினும் நாம் அதை சிலுவையில் அறைந்துள்ளமையினால், படிப்படியாக அதனது வல்லமை குறைவடைந்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அது மரணமடைந்து வருகின்றது.

(இ) சிலுவை மரணம் பயங்கரமான வேதனை தருவதாகும்

சிலுவை மரணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் இன்னுமொரு விஷயம், அது பயங்கர வேதனையைத் தரும் மரணமாகும். இது படிப்படியாக ஏற்படும் மரணம் என்பதனால், கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் தொங்கிக்கொண்டிருப்பது சித்திரவதைக்கொப்பான வேதனையைத் தரக்கூடியது. மாம்சத்தின் ஆசை இச்சைகளைச் சிலுவையில் அறைதலிலும் இத்தகைய வேதனையையே நாம் அனுபவிக்கின்றோம். ஏனெனில் மாம்சத்தின் ஆசை இச்சைகள் பாவத்தில் இன்பத்தைக் கண்டமையினால், அதை விட்டுவிட்டு, அந்த இன்பங்களை அனுபவிக்காமலிருப்பது நம் மனதுக்கு வேதனையைத் தருவதொன்றாகும்.

பொதுவாக, சிலுவை சுமத்தல் பாடுகளையே குறிக்கும். சிலுவையில் நாம் நம் மாம்சத்தின் ஆசை இச்சைகளை அறைந்தவர்களாக ஜீவிக்கும்போது, வேதனைகளை அனுபவிக்காமலிருக்க முடியாது. மோசேயைப்போல நாமும், “அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு,” (எபிரேயர் 11:25). சிலுவை மரணம் பயங்கர வேதனையைத் தரும் என்பதை உணர்ந்தவர்களாக, மாம்ச ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைய வேண்டும்.

(ஈ) சிலுவை மரணம் பரிதாபமற்ற முறையிலான மரணமாகும்.

சிலுவை மரணமானது கொடிய குற்றங்களைச் செய்தவர்கட்கு கொடுக்கப்படும் மரண தண்டனையாய் இருப்பதனால், அது பரிதாபமற்ற முறையிலான மரணமாயுள்ளது. ஒரு மனிதனைச் சிலுவையில் அறைந்து கொல்வது உண்மையிலேயே ஈவிரக்கமற்ற ஒரு செயலாகும். எனினும் கொடிய குற்றவாளிகட்கு இத்தகைய மரணமே ஏற்றது என்பதனால் இந்த முறையானது பரிதாபமற்றதாயுள்ளது. எனவே பவுலின் அறிவுறுத்தலில் இருந்து நமது மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும், கீழ்த்தரமானதும் இழிவானதும் கொடியதுமான குற்றங்களைச் செய்வதனால், அதற்காக நாம் பரிதாபப்படக்கூடாது. சிலுவையில் அறைவதே ஏற்ற செயல் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு மனிதனை சிலுவை மரத்தில் கட்டி, அவன் கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடித்து தொங்க வைப்பது உண்மையில் கொஞ்சம்கூட பரிதாபமே இல்லாத ஒரு செயல். இருந்தாலும் குற்றவாளி அத்தகைய தண்டனைக்கே தகுதியுடையவனாயிருப்பதனால், எவருமே பரிதாபப்படுவதில்லை.

அதேபோலதான் நாமும், நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதையிட்டு பரிதாபப்படக்கூடாது. மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகையாயிருப்பதனால் (ரோமர் 8:7) பரிதாபப்படுவது பாவமாகும். நம்முடைய மாம்சத்தின் ஆசைதானே என இரக்கப்படக்கூடாது. பரிதாபமற்ற முறையிலான சிலுவை மரணத்தை நாம் அதற்கு கொடுக்கவேண்டும்.

சிலுவை மரணமானது பரிதாபமற்றதாய், சிலுவையில் அறையப்பட்டவன் படிப்படியாக மரிப்பதனால், அவனுடைய மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை காவலாளர்கள் அவ்விடத்தை விட்டு நகரமாட்டார்கள். அவன் மரிக்கும்வரை அங்கேயே இருப்பார்கள். இல்லையென்றால் சிலுவையில் அறையப்பட்டவன் மீது பரிதாபம் கொண்ட எவராவது வந்து, ஆணிகளைக் கழற்றி, சிலுவையில் இருந்து எடுத்துக்கொண்டு போய் பிழைக்க வைத்துவிடலாம். இதேபோல, நாம் சிலுவையில் அறைந்த நம்முடைய மாம்ச ஆசை இச்சைகளுக்காக பரிதாபப்பட்டு, அறைந்த ஆணிகளைக் கழற்றி, சிலுவையில் இருந்து எடுத்துவிட்டால், மாம்சத்தின் ஆசை இச்சைகள் பழைய நிலையை அடைந்து, அதனுடைய பாவக்கிரியைகளைச் செய்ய ஆரம்பித்துவிடும். காவலாளர்கள் சிலுவையில் அறையப்பட்டவன் மரிக்கும்வரை அவனை சிலுவையில் தொங்க வைத்திருப்பதைப் போல், நாமும் பரிதாபப்படாமல், மரிக்கும்வரை மாம்ச ஆசை இச்சைகளை சிலுவையிலேயே வைத்திருக்க வேண்டும். மாம்சமானது இழிவான காரியங்களைச் செய்வதனால் அது பரிதாபமற்ற முறை யிலேயே மரிக்க வேண்டும்.

(உ) சிலுவை மரணமானது பகிரங்கமான முறையில் ஏற்படும் மரணமாகும்.

சிலுவை மரணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் இறுதியான விஷயம் அது பகிரங்கமாய் ஏற்படும் மரணமாகும். சிலுவையில் அறையப்படுபவன் யார் என்பதை அநேகமாக எல்லோரும் அறிந்துகொள்வார்கள். குற்றவாளிக்கு சிலுவை மரணம் தண்டனையாக வழங்கப்பட்டபின், அவன் மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையைத் தூக்கிக்கொண்டு, சிலுவையில் அறையப்படும் இடம்வரை செல்லவேண்டும். இவ்வாறு அவன் வீதி வழியே செல்லும்போது மக்கள் அனைவரும் அவன் யார் என்பதனை அறிந்துகொள்வார்கள். குற்றங்களுக்கு காரணமாயிருந்தவன் மரிக்கப் போவது அவர்களுக்கு தெரிந்துவிடும்.

நமது மாம்சத்தின் ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைவதும்கூட இவ்வாறு மக்களால் அறிந்துகொள்ளப்படுகிற ஒன்றாகும். நமது பழைய வாழ்க்கையைப் பற்றி அறிந்த மக்களால், தற்போது நமது வாழ்க்கை மாற்றமடைந்ததொன்றாகவும், பாவங்கள் விடப்பட்ட ஒரு வாழ்வாகவும் இருப்பதை அறிந்துகொள்ள ஏதுவாயிருக்க வேண்டும். பாவமார்க்கத்தை விட்டு நல்வழியில் செல்கிறோம் என்பது, நமது நடவடிக்கைகள் எடுத்துக் காட்டும் சாட்சியாயிருக்க வேண்டும். இது நம் மாம்ச ஆசை இச்சைகள் சிலுவையில் அறையப்பட்டுள்ளது என்பதற்கான பகிரங்க சாட்சியாக அமையும். நமது பழைய பாவ மாம்சம் மரணத்தை நோக்கிச் செல்கின்றது என்பதனை நம்மைச் சுற்றியுள்ளோர் அறியவேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் கட்டளையைக் கைக்கொண்டு, சிலுவை சுமத்தலின் சித்தாந்தத்தை அறிந்தவர்களாக, அவரைப் பின்பற்றிச் செல்கிறவர்களாய் நாம் இருக்கின்றோமா? சிலுவை மரணத்தின் மேற்கண்ட அம்சங்களை மனதிற்கொண்டவர்களாக, நாம் மாம்சத்தை யும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்த கிறிஸ்தவர்களாக ஜீவிக்க வேண்டியது நமது கடமையாகும். அப்போது மட்டுமே சிலுவை சுமக்கும் கிறிஸ்தவர்களாக நாம் திகழ்வோம்.

சிலுவையின் மேன்மையான அழைப்பு

சிலுவையின் மேன்மையான அழைப்பு

அன்பான சகோதர சகோதரிகளுக்கு நமக்காய் மரித்து உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும். இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார் [மத்தேயு:16:24].

சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக  இருந்தாலும் மறுபுறம்  கிறிஸ்துவின்  அன்பின், மன்னிப்பின், கிருபையின், மகிமையின் சின்னமாய் நம்மை மகிழ்விக்கிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்தில் அனுப்பி நம் எல்லாரையும் இவவசமாய் மீட்டு இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் கொடுத்து சிலுவையில் தொங்கினார். இந்த சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மேன்மையான அழைப்பை கொடுக்கிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்கிற அழைப்பின் குரலே அது. ஆம் அன்பானவர்களே நமக்காக சிலுவை சுமந்த இயேசு இந்த மேலான அழைப்பை எல்லா மனிதருக்கும் இலவசமாய் விடுக்கிறார். இரட்சிப்போடு இணைந்தது தான் சிலுவையின்  அழைப்பும். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இந்த அழைப்புக்கு பாத்திரவான்கள். அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து நாமும் அவரை பின்பற்ற வேதம் நமக்கு சொல்லும் ஆலோசனைகளை சிந்திப்போம்.

பொதுவான அழைப்பு

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்[மத்தேயு:16:24].அதாவது சாத்தானுக்கு அடிமைகளாய் வாழ்ந்த நம்மை தமது இரத்தத்தால் மீட்டெடுத்த தேவன்  நித்திய நித்தியமாய் அவரோடு வாழ வழியை காண்பித்து தன்னை  பின்பற்றுமாறு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இது நிர்பந்திக்கப்பட்ட அழைப்பு அல்ல மாறாக  ஒரு பொதுவான அழைப்பு [Choice is yours]. அதாவது ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்” என்று அழைக்கிறார். இயேசு கிறிஸ்து தான் சிலுவை சுமக்காமல் நம்மை சிலுவை சுமக்க அழைக்கவில்லை. சிலுவையை சுமந்து மரித்து  அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்து பரத்துக்கேறி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். சிலுவையின் பாடுகளை நன்கு உணர்ந்தவராய் பாடுகளின் முடிவில்  பலன் அளிக்கிறவராய் நம்மையும் அழைக்கிறார். அவர் சுமந்த பாரமான சிலுவையை சுமக்க அழைக்கவில்லை. உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்று என்று சொல்கிறார். சிலுவையின் பாடுகளை மட்டுமே  நினைத்து  கொண்டிராமல், இந்த அழைப்பின்  மகத்துவத்தையும்  அதின் பலனாகிய நித்திய ஜீவனையும் அவரோடு மகிமையில் பிரவேசிக்கும் அனுபவத்தையும்  உணரும் போது நாம் ஒருபோதும் இந்த அழைப்பை உதாசீனபடுத்த மாட்டோம். இன்றே தீர்மானிப்போம்.

சீஷத்துவ அழைப்பு

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் [லூக்கா:14:27]. இயேசு கிறிஸ்துவின் சிலுவை நம் ஒவ்வொருவரையும் தேவனின் மகிமையான ராஜ்ஜியத்தின்  சீடர்களாக அழைக்கிறது. இது ஒரு நிர்பந்திக்கப்பட்ட அழைப்பு அதாவது சிலுவை சுமக்காமல் சீஷனாய் இருக்கமுடியாது.

வேதம் கூறுகிறது  சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும் [மத்தேயு:10:28]. இன்றைய காலகட்டத்தில் நம் எல்லாருக்கும் இயேசு வேண்டும் சீஷத்துவ ஊழியம் வேண்டும் ஆனால் சிலுவை வேண்டாம். அதாவது சிலுவை சுமக்காமல் கிரீடம் வேண்டும். வேதம் கூறுகிறது “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” [லூக்கா:9:23]. நாம் அவரின் சீஷனாக பின்பற்றவேண்டுமானால் நம்மை வெறுமையாக்கி, அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக்கொண்டு  அவரை பின்பற்ற வேண்டும்.  

முதலாவது தன்னை தான் வெறுப்பது என்று சொல்லும் போது சுயத்தை சாகடிப்பது.நம் சுயம் சாம்பலாய் மாற வேண்டும். பவுல் கூறுகிறார் “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் [கலாத்தியர்:2:20]. அதாவது நம்முடைய பழைய மனுஷனையும், மாம்சத்தையும், ஆசை இச்சைகளையும், உலகத்தையும் சிலுவையில் அறைந்து ஆவியானவரின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை வெறுமையாக்கி இனி நான் அல்ல கிறிஸ்துவின் சித்தமே என் வாழ்வில் செயல்பட வேண்டும் என முழுவதுமாய் அர்ப்பணிப்பது. பவுல் கூறுகிறார். சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இயேசு  கூறுகிறார் “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால் அதினால் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துக் கொள்ளுவார்கள் [யோவான்:13:34-35]. ஆம் அன்பானவர்களே நம் சுயத்தை எப்போதும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது மாம்சத்தின் கிரியைகளை நம்மை விட்டு அகன்றுபோம். அப்பொழுது  பாவிகளாகிய நம்மேல் கிறிஸ்து காண்பித்த அன்பை பிறரிடத்தில் காண்பிப்பது எளிதாகும். மற்ற மனிதர்களை காணும்போது அவர்களுடைய தவறுகளை, அவர்கள் மேல் உள்ள பகையை அல்லது அவர்கள் நமக்கு செய்த தீமைகளை அல்ல, அவர்களையும் நம்மை மன்னித்தது போல இயேசு மன்னித்தார் என்னும் உணர்வு உண்டாகும்.

அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும். நாமும் கிறிஸ்துவின் சீஷர்களாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லை. இனி நான் அல்ல அவரே எல்லாம் என முடிவு செய்வோம்; ஆவி ஆத்துமா சரீரம் யாவற்றையும் அவர் பணிக்கே ஒப்புக்கொடுப்போம்.

இரண்டாவதாக வேதம் கூறுகிறது உன்  சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னை பின்பற்று. சிலுவை சுமப்பது என்பது உலகத்தின் பரியாசங்கள் நிந்தைகள் துன்பங்கள் அவமானங்கள் உபத்திரவங்கள் பாடுகள் அனைத்தையும் கிறிஸ்துவுக்காய் சகிக்கும் வாழ்க்கை. வேதம் கூறுகிறது இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள் [1பேதுரு:4:1]. நம்முடைய சிலுவை பாரமோ இலகுவோ கிறிஸ்துவின் நுகத்தை ஏற்று நல்ல போர்சேவகனாய் அவருக்காக பாடுகளை அனுபவிப்போம். ஜீவனற்றவர்களாய் இருந்த நமக்கு தமது இரத்தத்தினால் ஜீவனை கொடுத்த கிறிஸ்துவுக்காக ஜீவனையும் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சிலுவை நம்முடைய ஆத்துமாவின் நங்கூரம். பரமனிடம் நம்மை அழைத்து செல்லும் பாதையில் தடுமாற்றம் வராமல் தாங்கும் நங்கூரம். சிலுவை நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. பாரமான சிலுவை என்று எண்ணுவதை விட்டுவிட்டு நாம் அடையபோகும் மகிமையை உணர்ந்தவர்களாய்  மகிழ்ச்சியோடு சிலுவையை சுமப்போம்.

மூன்றாவதாக நாம் தினமும் சிலுவை சுமக்க வேண்டும்.வேதம் சொல்லுகிறது ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாய் இருக்கிறது அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர். சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரை பின்பற்றும் போது  இடுக்கமான வாசலுக்கு நேராய் நாம் வழி நடத்தப்படுக்கிறோம். பிரியமானவர்களே லெந்து நாட்களில் மட்டும் சிலுவையை குறித்து தியானித்து, தேவ சமூகத்தில் காத்திருந்து புனித வெள்ளி ஆராதனையில் சிலுவை பாடுகளை உணர்ச்சிபொங்க தியானித்து பின்பு அதை குறித்து கவலை அற்றவர்களாய் இருப்பது அல்ல கிறிஸ்தவ வாழ்வு. மழையோ வெயிலோ புயலோ காற்றோ தினமும் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து சிந்தித்து உனக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை சுமந்தது அவரை பின்பற்று என்பதே வேதத்தின் அழைப்பு. நாம் சுமக்கும் சிலுவையினால் பிறர் கிறிஸ்துவை ருசித்து இரட்சிப்பின் பாதையை கண்டுகொள்ளட்டும்.

பாத்திரராய் மாற்றும் அழைப்பு

“தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல [மத்தேயு:10:37-38]. நாம் எல்லாவற்றையும் விட்டு தேவனுக்கு முதலிடம் கொடுத்து சிலுவையை சுமக்கும் போது மட்டுமே நாம் அவருக்கு பாத்திரராய் மாறுகிறோம். உதாரணமாக அவருடைய சீஷர்களில் ஒருவன்  அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். நாம் பல நேரங்களில் நினைக்கலாம் நான் ஏன் குடும்பத்தை விட்டு செல்ல வேண்டுமா? அதினால் எனக்கு என்ன பயன்? தேவனுடைய வேலையை நாம் முதன்மையாக கருதி முழு முக்கியத்துவம் கொடுத்து எந்த சாக்குபோக்கும் சொல்லாமல்  செய்ய வேண்டும். ஒருமுறை பேதுரு இயேசுவிடம்  இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்று கேட்டதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.

எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள். நாம் படும் ஒவ்வொரு பிரயாசத்திற்க்கும் பலன் அளிக்கிறவர் நம் தேவன். வேதம் கூறுகிறது “நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும் படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவராய் இருக்கிறார் [2தெசலோனிக்கேயர்:1:5]. ஆமென்.

பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க அழைப்பு

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார் [மாற்கு:10:21]. ஐசுவரியமான தலைவனிடம்  உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு; பின்பு என்னை பின்பற்றி  என்று இயேசு சொன்ன போது அவன் மிகுந்த துக்கமடைந்தவனாய் போனான். இங்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவன் துக்கமடைந்தான் என தன் கொள்கையை மாற்றவில்லை.

நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம். ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார் [லூக்கா:12:21].

ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர் செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம். [Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]

மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற   தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.

இன்றைய  கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட  “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின்  போதனைகளை  நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில்  பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள்  முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.

கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி  சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும்  சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார்.  இயேசு கிறிஸ்துவின்  சீடர்கள்  அவர்  விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம். தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.

இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்

விசுவாசத்தில் முன்நடப்போம்

இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே

ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்.

இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா

உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா

கா்த்தா் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு அளித்திருக்கிறாா். இவ்வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி கொடுக்கப்படுகிறது. உறவுகள், பணிகள், கடமைகள், தெய்வ பக்தி என சன்மாா்க்க வாழ்வுகளை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

ஒவ்வொரு மனிதருக்கும் வேறு வேறு பணிகள் தரப்படுகின்றன. இதனை தெய்வ பணியாளா்கள் நமக்கு இறைவன் கொடுத்த சிலுவை பாதை என்பா். தம் பணியை சிறக்க செய்து, நம் சிலுவை பாதையை இறைவன் விரும்புகின்றபடி அமைக்கும்போது போற்றப்படுகிறோம்.

ஆண்டவராகிய இயேசுவின் சீடா் பேதுரு தம் வாழ்வு மிகவும் துன்பம் நிறைந்ததாகவும் பயந்து பயந்து வாழும் வாழ்க்கை உடையவராகவும் இருந்து தம் வாழ்வு சிறக்க எண்ணி இறைவனினிடம் வேண்டினாராம். தான் சுமக்கும் இந்த சிலுவை மிக கடினம் எனவே, லேசான சிலுவை தரும்படி வேண்டினாராம். உடனே, ஒரு தரிசனம் கண்டாராம்.

‘ஒரு பெரிய மாளிகை, கோடிக்கணக்கான சிலுவைகள் வைக்கப்படிருந்ததாம். இயேசு பேதுருவிடம் தன் சிலுவையை இறக்கி வைத்துவிட்டு தான் லேசாய் சுமக்கத்தக்க சிலுவையை தோ்ந்தெடுத்துக்கொள்ளும்படி பணித்தாராம். ஒவ்வொரு சிலுவையை தன் தோளுக்குப் பொருந்தும்படி வைத்து வைத்துப் பாா்த்து, ஒவ்வொன்றாய் கடந்து கடைசியில் வாசற்படி அருகே இருந்த சிலுவை தமக்கு மிகவும் பொருந்தும்படியானது’ என்று தோ்ந்தெடுத்தாராம். நகைத்த இறைவன், ‘பேதுரு நீ கொண்டு வந்து வைத்த சிலுவைதான் அது’ என்றாராம்.

ஆம், நம் வாழ்வில் சிலுவை என்ற பணி மிகவும் சிறக்க இறைவன் விரும்புகின்ற பக்தியுள்ளவராக, கடமை உணா்வுள்ளவராக எல்லாருக்கும் உதவும் வாழ்வு வாழ வேண்டும். நம் வாழ்வு இறைவன் கொடுத்தது. ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வந்தமை மனிதா்களாகிய நம் எல்லாரின் பாவம் போக்கும் சிலுவை சுமத்தலே ஆகும். பாவ நிவாரண பலியாக ஐந்து காயங்கள் மூலம் பரிசுத்த தமது ரத்தத்தையே தந்து நம்மை மீட்கவே வந்தாா்.

ரோம ஆட்சியாளா் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்படி தீா்ப்பு அறிவித்தான். யூதா்களும் வேத அறிஞா்களும் ரோம போா் வீரா்களும் இயேசுவை மரத்தால் ஆன சிலுவையை சுமந்துக்கொண்டு எருசலேம் வீதியில் நடக்கச் செய்தனா். இயேசு தூக்கபலமில்லாமல், உடல் காயங்களுடன் வலியோடு தள்ளாடி தூக்கிச் சுமந்து நடக்க முடியாமல் தரையில் விழுந்தாா். போா் வீரரின் சாட்டை அடியும் ஈட்டியால் குத்தப்படுதலும் தாங்க முடியாதவரானாா். போா் வீரா்கள் போகையில் வழியில் சிரேனே ஊரைச் சோ்ந்த சீமோன் எனப்பட்ட ஒரு மனிதனை அவா்கள் கண்டனா். இயேசு சுமந்து வந்த சிலுவையை சுமக்கும்படி அவனை பலவந்தம் பண்ணினாா்கள் (மத்தேயு 27: 32).

முன்பின் இயேசுவை அறியாத கிராமத்து சீமோன் இயேசுவுக்கு பதிலாக சிலுவையைச் சுமந்து நடந்தான். சீமோன் இயேசுவுக்காக சிலுவை சுமந்தது எப்போதும் போற்றி பேசப்படுகிறது. நமது வாழ்வும் ஒரு சிலுவைப்பாதை! இப்பாதையில் நாம் எப்படி நடக்கின்றோம், வாழ்கின்றோம்...? என்று எண்ணிப்பாா்க்க வேண்டும். இறைவனை வணங்கி உள்ளம் உருக தினமும் அவா் பெயா் சொல்லி வாழவேண்டும். சன்மாா்க்க நெறிமயமான வாழ்வாக பிறருக்கு உதவிச் செய்து அன்புப்பாராட்டி நோ்மையான வாழ்வுடையவராக வாழ்வோம்.

நம் பதவி, பணிகளில் நோ்மையாளராக கடமை செய்பவராக அதிகாரத்தில் தாழ்மையும் உண்மையும் உடையவராக வாழ்வோம். இப்படி வாழ்வோா் சீமோன் இயேசுவின் சிலுவை சுமந்தது போன்று சிலுவை சுமந்தவராக இயேசுவின் பின் செல்வோம்.


சிலுவையின் அடையாளங்கள்

 சிலுவையின் அடையாளங்கள்

சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.

சிலுவை, சீடராய் மாறுவதற்குரிய அடையாளம்; தன்னை பின்தொடர்ந்து வந்த திரளான ஜனங்களை பார்த்த ஏசு, தம்முடைய சீடர்களை நோக்கி, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (மத்தேயு 16:24) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:38)

தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாய் இருக்க மாட்டான். (லூக்கா 14:27) பின்பு அவர் எல்லோரையும் நோக்கி, ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23) மேற்கூறிய வேத வார்த்தைகள் எல்லாம் சீடராய் மாறுவதற்கான அடையாளமாக காணப்படுகிறது.

சிலுவை-கீழ்படிதலின் தாழ்மையின் அடையாளம்; ஏசு கிறிஸ்து பிதாவினுடைய சமூகத்தில் சிலுவையின் மரணபரியந்தம் வரை தாழ்மையும், கீழ்படிதலும் உள்ளவராய் காணப்பட்டார். அவர் மனித ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம்- அதாவது சிலுவையின் மரண பரியந்தமும், கீழ்படிந்தவராகி தன்னைத்தானே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8).

சிலுவை-சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளம்; நமக்கு எதிராகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும், இருந்த கையெழுத்தை குலைத்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணியடித்து துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு வெளியரங்கமான கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார். (கொலோசெயர் 2:14,15) ஆதலால் கல்வாரி சிலுவை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளமாய் காணப்படுகிறது.

சிலுவை-பொறுமையின் அடையாளம்; ஏசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.(எபிரெயர் 12:2) சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து சொன்னதான 7 ஜீவ வார்த்தைகளும் இன்றைக்கும் அனேகருடைய வாழ்வில் ஆறுதலையும், ஆனந்தத்தையும், நித்திய நம்பிக்கையையும், வாழ்க்கையில் மறு ரூபத்தையும் தந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமின்றி ஏசு சிலுவையில் அறையப்படும் போது பின் வரப்போகின்ற சந்தோஷத்தைபற்றி நினைத்ததின் மூலமாக அவமானத்தையும், பாடுகளையும் நினைக்காமல் சிலுவையை பொறுமையாக சகித்தார். சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.




என் வழி சிலுவை வழி

 என் வழி சிலுவை வழி

என்னை பின்பற்ற விரும்புகிறவர் எவரும்
தன்னலம் துறந்து தம் சிலுவையைத் சுமந்து
கொண்டு என்னை பின்பற்றட்டும் (மத் 16:24)
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட உணவு ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு பகல் பாராமல் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் வாழ்வு ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு இரவு ஓர் சிலுவை. ஆயிரம், இலட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோருக்கு எதிர்காலம் ஓர் சிலுவை. திருமண தம்பதியர்களுக்கு வயதான பெற்றோர்கள் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று ஆன்மீகவாதிகள் சிலுவை, உனக்கு நான் சிலுவை, எனக்கு நீ சிலுவை….. என்று இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகின்றோம். இதுவா இயேசு நம்மை சுமந்து கொண்டு பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை… இல்லவே இல்லை…

உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மையை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம், இன்பம் என்பது இல்லாமல் போகலாம், துன்பம் மட்டுமே துணையாகலாம், சொத்துக்கள் பறிபோகலாம், சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம் ஏன்? இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளைதான் ஏற்றுக் கொண்டு இயேசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். 

இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் இயேசுவும் வாழ்ந்து காட்டினார். தன் வழி பின்பற்ற விரும்புகிறவர்களையும் அதனால் கிடைக்கும் பாடுகளின் பயனையும் மூன்று முறை மலைமேல் தோன்றி இயேசு அறிவித்தார். தன்னை பின்பற்ற விரும்புகிறவர்கள் கடை பிடிக்க வேண்டிய தெய்வீக போதனைகளை மலைப் பொழிவாக கலிலேயா மலைமீது அறிவித்தார். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றேர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. (மத் 5:10.). தன்னுடைய இறுதி காலத்தில் கல்வாரியில் தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களின் துன்ப துயரத்தையும், வேதனை சோதனைகளையும் விளக்கி காட்டினார். தன்னை பின்பற்ற விரும்புபவனிடம் “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக் கூட இடமில்லை.” (மத் 8:20). இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாபோர் மலையில் தோன்றி நீதிக்காக, உண்மைக்காக துணிவோடு வாழ்கின்றவர்கள் உயிர்த்த யேசுவில் மகிமை அடைவார்கள் என்பதை வெளிப்படுத்தினார். “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துனை நல்லது” (லூக் 9:33). இத்தகைய அறிவிப்புகளை, அறிவித்ததோடு நின்றுவிடாமல் அதனை செயல் வடிவமாக மாற்றினார் இயேசு. இயேசுவின் காலத்தில் யூத மக்கள் உரோமை நாட்டினராலும், சதுசேயர்களாலும், பரிசேயர்களாலும் அடிமைப்பட்டு கிடந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இயேசு பரிசேயர்களுக்கு பாடம் புகட்டினார். தன்னை தூய்மையானவர்கள், சட்டங்களையும், மரபுகளையும் நுணுக்கமாய் கடைபிடிக்கும் கடவுள் பக்தர்கள் என்று சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் கட்டளைகளை நாங்கள் மீறலாம் என்று நியாயப்படுத்தி வாழ்ந்தவர்களை இயேசு "வெளிவேடகாரர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று கூறினார். மறுபுறம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சட்டங்களை வளைத்து, தங்களை உயர் வகுப்பினராக காட்டி, உரோமையோடு நல்லுறவு வளர்த்து, மக்களை ஏமாற்றி வாழ்ந்த சதுசேயர்களை “உங்களுக்கு ஐயோ கேடு, ஏன் என்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகின்றீர்கள், நீங்களோ அந்த சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள் (லூக் 11:46) என்று வசைப்பாடினார். இவைகள் எல்லாம் ஒரு விதத்தில் இயேசு ஏழைகளின் நீதிக்காக போராடிய போராட்டங்களே. இத்தகைய போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் முத்தாய்ப்பான மூன்று ஆணிகள், இந்த மூன்று ஆணிகளை தொடராக மாற்ற இயேசு நம்மை நோக்கி “தன்னலம் துறந்து பாடுகளின் சிலுவைகளை சுமந்து” வருவதற்கு ஆசைப்படுகின்றார். நாமும் பலவித சுமைகளை சுமக்கின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் இயேசு விரும்பும் சிலுவைகளா? என்பதை தெரியாமல் சுமக்கின்றோம். 

கற்பனைச் சிலுவை
இவர்கள் நிஜத்தை விட நிழலை நேசிப்பவர்கள். எதார்த்தத்தை விரும்பாமல், கற்பனையில் கோட்டை கட்டி கஸ்டப்படுபவர்கள். துன்பப்படும் மனிதனைப் பார்த்து துயரம் கொள்வார்கள், அந்த துயரத்தை மனதளவில் நிறுத்தி “அந்தோ, அய்யோ பாவம்” என்று கற்பனையிலே சிலுவையை சுமந்து கொள்வார்கள். நல்ல சமாரியனின், லேவியராக, குருவாக அடிப்பட்டவரை, அல்லல் படுவோரை, அநீதியைப் பார்த்து கற்பனையிலே சிலுவை சுமந்து கொண்டு சென்றுவிடுவார்கள். 

காற்றுச் சிலுவை
“கடவுளே உனக்கு கண் இல்லையா, காது இல்லையா?” என்று தானே உருவாக்கி கொள்ளும் சிலுவைக்கு கடவுளை பழித்துரைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் வானுயர கட்டிடம் கட்டுவார்கள், பூமிக்கு அடியில் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள், தன் சொந்தம் வளர வேண்டும் என்று தன் உறவிலே பிள்ளைக்கு திருமணம் செய்வார்கள். இப்படி போன்ற விதைகளை விதைத்துவிட்டு சுனாமி, பூகம்பம் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அறுவடை செய்வார்கள். இத்தகைய சிலுவைகளைத் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வார்கள். 

மரச்சிலுவை
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறுவார்கள். இதுதான் யேசு விரும்பிய மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைபடுத்தி வாழும் பணக்கார முதலைகளிடமும் போராடுபவர்கள். கொத்தடிமை, இலஞ்சம், ஊழல் வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள்…… போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து “ஐயோ பாவம்” என்று நினைத்து விடாமல் அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் மனித சிலுவையாக, நல்ல சமாரியனாக மாற்றம் அடைய முடியும். இதைத்தான் இயேசு “நீதியை நிலை நாட்ட வேட்கைக் கொண்டோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்” (மத் 5:6) என்றார். 

எனவே சாவுக்கு சாவுமணி அடித்துவிட்டு, துன்ப துயரங்களையும் இயேசுவின் போதனைகளையும் ஏற்று, துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி பிறருக்காய் படும் வேதனைகளை, துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் நம்மால் ஒரு இயேசுவை உருவாக்க முடியவில்லையே? உருவாக்குவோம், நாளைய வரலாறு நமது பெயரை வாழ்த்த வைப்போம்….
சிலுவை வழி…… ஓர் சுகமான வழி…..

சகோ. ஆரோக்கிய தாஸ்

புனிதமாக மாறிய சிலுவை

 புனிதமாக மாறிய சிலுவை


சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

சிலுவை மரணத்தண்டனை என்பது ரோமர்கள் ஏற்படுத்துவது ஆகும். சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை சாபமாக இருந்த சிலுவை அதன் பிறகு புனிதமாக மாறியது. இதனால் பல வீடுகளிலும், ஆலயங்களையும், கல்லறைகளிலும் கூட அடையாளங்களாக இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது அவர் பிறப்பதற்கு முன்னும் அதில் அவர் மரிப்பதற்கு முன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்னுரைக்கப்பட்டு வந்த தேவனுடைய தெளிவான தீர்க்கத்தரிசனமாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் அவரது பிறப்பு பெயர் உள்பட அவரது பாடு, மரணம், உயர்த்தெழுதல், என அனைத்தும் அவரை குறித்து முன்னுரைக்கப்பட்ட படியே நடந்தது என்பதை நாம் அறியவேண்டும்.

இனி அவருடைய வருகையிலும் அப்படியே நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் மரிக்கிற ஒவ்வொருவருடைய மரணங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு அவசியம் என்ன? ஐயோ இன்னும் இருந்திருக்கலாமோ? அதற்கு இதுதான் முடிவா? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு. என்ன சொன்னாலும் ஏற்க முடியாத நிலையும் அதில் நமக்கு உண்டு. ஆனால் இயேசுவின் சிலுமை மரணம் அப்படியல்ல. அது தேவப்பார்வையில், தேவசித்தத்தின்படி அவசியம் என்பதாகவே இருந்தது. அவருடைய மரணத்தை குறித்து பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டுள்ள பல அவசியமான காரணங்களுள் இரண்டை இங்கு குறிப்பிடுகிறேன் கவனியுங்கள். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாய் இருக்கிறார் (1 யோவான்:2:2).

இந்த வசனத்தின் வேதம் நமக்கு 2 விஷயங்களை காட்டுகிறது. ஒன்று பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அதாவது நாம் செய்யும் பாவங்களுக்காக அவரை பலியாக ஒப்புக்கொடுக்க தேவன் நினைத்தது. இரண்டாவதாக சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலி அதாவது அனைத்து உலகின் பாவங்களுக்காகவும், மக்களின் பாவங்களுக்காகவும் அவரை கல்வாரி சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க சித்தமானது.

எபிரேயர் 9:22-ல் ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஆகவேதான் இயேசுவின் சிலுவை மரணம் அவசியமாயிருந்தது. அதில் சிந்தப்பட்ட ரத்தத்தினாலேயே மாத்திரம் இரட்சிப்பு அல்லது மீட்பு மனிதனுக்கு உண்டாகிறது. இந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் இந்த தவக்காலத்தில் பரிசுத்த இயேசு நமக்காக சிலுவையில் அனுபவித்த பாடுகளை நினைத்து நாம் அவருடைய வேத வாக்கியங்களின் படி கீழ்படிந்து வாழ்வோமாக.

Wednesday, October 7, 2020

சிலுவையில்(ன்) உறவு

 சிலுவையில்(ன்) உறவு

நம்பிக்கையின் மக்களாகிய நமக்கு, இயேசுவின் பிறப்பு, அவருடைய போதனைகள், அவர் செய்த பணிகள், அவருடைய பாடுகள், அவருடைய சிலுவை மரணம் ஆகிய அனைத்தும் இறைதிட்டத்தின் ஒரு பகுதியே. சிலுவை மரணத்தால் இயேசு நம்மை (படைப்பு அனைத்தையும்) பாவத்தின் விலையாக இருந்த சாவிலிருந்து மீட்டெடுத்தார்.

jesus_before_pilateஇயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு இவை அனைத்தும் எதார்த்த நிகழ்வுகள். உரோமை அரசை எதிர்த்த குற்றத்திற்காக கிடைத்த தண்டனையே சிலுவை மரணம். சிலுவை ஒரு அவமானத்தின் அடையாளம். இதைத்தான் பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து (சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து) கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:23-24).

சிலுவையில் அறையப்பட்ட இயேசுதான் தன் வாழ்வு என்றும் அவரைத்தவிர தனக்கு எதுவும் முக்கியமல்ல என்றும் உலகிலுள்ள மற்றனைத்தும் குப்பை என கருதும் அளவுக்கு பவுல் அடிகளார் துணிந்து விடுகிறார். அவர் சொல்லுகிறார்: “நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.” (1 கொரி 2:2). மேலும், “நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.” (கலாத் 6:14) மேலும், “உண்மையில், என்னைப் பொறுத்த மட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.” (பிலிப் 3:8).

ஆம் அன்புக்குறியவர்களே! இயேசுவின் மரணம் அதுவும் சிலுவை மரணம் பவுலடிகளாருக்கு வாழ்வாகவும் வழியாகவும் மாறிவிடுகின்றது. அப்படியெனறால் இயேசு சிலுவையில் என்னதான் செய்தார்? சிலுவை மரணத்தின் பயன் என்ன என்று கேட்போமென்றால் அதற்கும் பவுல் அடிகளார் கூறும் பதில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றது. அவர் கூறுகிறார்: “நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.” (கொலோ 2:14) அவர் சிலுவையில் தொங்கிய அந்த நேரத்தில் நம் பாவ கடன்பத்திரத்தை ஒவ்வொன்றாக அழிக்கிறார். அதுமட்டுமல்ல மேலும் மக்களிடையே இருந்த பிரிவினையை தகர்த்தெரிந்து ஒற்றுமையை உண்டுபண்ணுகிறார்: “அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.” (எபே 2:14). இதுதான் பவுலடிகளார் கண்ட சிலுவை மரணம்.

jesus on the crossசிலுவையில் தொங்கிய இயேசு துன்பவேதனையை அனுபவித்தார். அந்த துன்ப வேளையிலும் அவர் கடவுளோடும் மற்றவரோடும் உறவாடினார். மேலும் சிலுவையில் அவர் கூறிய கூற்றுகளை நான்கு நற்செய்தியாளர்களும் நமக்கு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவை:


1. ஏலி, ஏலி லெமா சபக்தானி? (மத் 27:46) எலோயி, எலோயி லெமா 
சபக்தானி (மாற் 15:34) 2. தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது
என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை. (லூக்கா 23:34) 3. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக
உமக்குச் சொல்கிறேன் (லூக் 23:43) 4. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46) 5. தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம்,
'இவரே உம் தாய்" என்றார். (யோவா 19:26-27) 6. தாகமாய் இருக்கிறது என்றார் (யோவா 19:28) 7. இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து
ஆவியை ஒப்படைத்தார் (யோவா 19:30)

சிலுவையில் இயேசு கூறிய இந்த ஏழு கூற்றுகள் அவரைப்பற்றியும், அவர் தந்தையோடு கொண்டிருந்த உறவைப் பற்றியும், மக்களோடு கொண்ட உறவைப் பற்றியும், அவரின் பணியின் நிறைவைப்பற்றியும் பேசுகின்றன என்று கூறினால் அதுவும் மிகையாகாது. இயேசு தன் இயலாமையை பற்றி பேசவில்லை. அவர் தனது தோல்வியைப்பற்றி பேசிப் புலம்பவில்லை. தனது வெறுப்பையோ, கோபத்தையோ அவர் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது சரியாகத்தான் இருந்திருக்கும். அது அவரின் நீதியின் குறலாக இருந்திருக்கும். ஆனால் அவரின் தனது பொதுப்பணி காலத்தின் போது சொன்ன போதனைகள் அனைத்தும் இறைவனைப்பற்றியும் இறையாட்சியைப்பற்றியம் தான் இருந்தது. அவர் செய்த நல்ல செயல்கள் அனைத்தும் குணமளித்தன, உயிர் கொடுத்தன, உறவை வளர்த்தன. அதேபோல சிலுவையில் இயேசு கூறிய அந்த ஏழு கூற்றுகளும் கடவுளோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களில் அவர் உருவாக்க இருந்த உறவை வெளிப்படுத்தின.

கடவுளோடு கொண்டிருந்த உறவு

கடவுள் தன்னோடு உடனிருக்கிறார் என்பதை போதித்து வந்தார் இயேசு. இயேசுவின் வாழ்வும் போதனையும் கடவுளின் உடனிருப்பின் அடையாளம், வெளிப்பாடு என்பது நமது நம்பிக்கை. ஆகவேதான் இயேசு உரிமையோடு கேட்கின்றார்: “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்ற கருத்தை இந்த கூற்று வழியாக அறிவிக்கின்றார். இந்த கூற்று திருப்பாடல் 22 உள்ளது. இயேசு இந்த திருப்பாடலை 22 (நம்பிக்கையின் திருப்பாடல்) முழுமையாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது வேண்டியிருக்க வேண்டும். இதுதான் இயேசு கடவுளோடு கொண்டிருந்த நம்பிக்கை உறவு.

அதேபோல “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” என்ற கூற்றின் வழியாக மீண்டும் தந்தையோடு கொண்டிருந்த உறவை வெளிப்படுத்துகிறார். பிறர் குற்றங்களை மன்னிப்பது தந்தை இயேசுவுக்கு கொடுத்த பணிகளில் ஒன்று. மன்னித்தல் வழியாக இயேசு இறை-மனித உறவை மீண்டும் சரிசெய்கிறார். எவ்வாறு மோசே பாலை நிலத்தில் வணங்கா கழுத்தைக் கொண்ட இஸ்ராயேல் மக்களுக்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று மன்றாடினாரோ அதேபோல இங்கு இயேசு மக்களின் மன்னிப்புக்காக மனறாடுகிறார்.

தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று கூறுவதன் வழியாக தன்னை கடவுள்தான் இவ்வுலகிற்கு அனுப்பினார் என்றும், அதுவும் ஒரு பணிக்காக அனுப்பினார் என்றும், அந்த பணியின் நிறைவாக தனது உயிரையே மீண்டும் கடவுளிடம் ஒப்படைக்கின்றார் என்றும் இயேசு கூறுகிறார். மேலும் ஒப்படைத்தல் என்பது கடவுள் இயேசுவின் மேல் கொண்டுள்ள உரிமையை வெளிப்படுத்துகிறது. ஆகவே கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்தியது, கடவுள் இயேசுவின் மேல் கொண்ட உரிமையை வெளிப்படுத்தியது, அவர்களிடையே இருந்த உறவு தந்தை-மகன் உறவு என்பதையும் வெளிப்படுத்தியது.

பாவிகளோடு கொண்ட உறவு

“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை”. இயேசு இவ்வுலகிற்கு வந்தது மக்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தர. சிலுவை மரத்தில் இதையே மன்றாட்டாக வைக்கிறார் இயேசு. தனது மரணத்தின் வழியாக மக்களுக்கு மன்னிப்பை பெற்றுத்தந்து இறை-மனித உறவை புதுப்பிப்பது மட்டுமன்றி மக்களுக்காக பரிந்துபேசுபவராக மக்களோடு தன்னை இனைத்து மக்களோடு தனக்குள்ள உறவை ஆழப்படுத்துகிறார். மக்களோடு மக்களாக, மக்களோடு தானும் ஒன்றான (பாவம் தவிற) உறவு.

“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று கூறி தான் இவ்வுலகிற்கு வந்தது மீட்புப்பணிக்காக என்பதை வெளிப்படுத்துகிறார். குற்றவாளிகளோடு ஒன்றாக சிலுவையில் துன்பப்பட்டாலும் தான் குற்றவாளி அல்ல என்பதையும் அதேநேரத்தில் குற்றவாளிகளை இறைவனோடு ஒன்றினைப்பதுவே தனது தலையான பணி என்பதை நிருபித்துவிடுகிறார். எனவே பாவிகளோடு கொண்டுள்ள உறவு மீட்பர்-மக்கள் உறவு என்பதை வெளிப்படுத்துகிறார்.

சீடர்களோடு கொண்ட உறவு

jesus and maryதம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்" என்றார்
. மரியாள்தான் இயேசுவின் முதல் சீடத்தி என்ற உண்மை திருச்சபையின் துவக்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது. இயேசு கருவாக உருவாகியதிலிருந்து கல்லரையில் அடக்கம் செய்யப்படும் வரை இயேசுவை பின்தொடர்ந்தவர் மரியா ஒருவர்தான். இயேசுவின் அன்புச்சீடர் சிலுவை அடியில் நின்றுகொண்டிருந்தார் அவரும் இயேசுவை பின்தொடர்ந்த காலம்தொட்டு கல்லரைவரை அவருக்கு சீடராக இருந்தவர். இயேசு தனது மரணத்திற்கு முன்பாக இந்த சீடர்களிடையே ஒரு குடும்ப உறவை (தாய்-மகன்) வளர்க்கிறார். சீடர்களிடையே ஒரு குடும்ப உறவு இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார். இந்த உறவை பினைக்கும் பாலம் இயேசுதான்.

தான் தன்னில் கொண்ட உறவு

“தாகமாய் இருக்கிறது” என்றார் மேலும் 'எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறுவதன் வழியாக தான் யார் என்பதையும் எதற்காக இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் அழாகாக சித்தரித்துக் காட்டுகிறார். இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது உணவெனக்கூறியிருக்கிறார் (யோவான் 4:34) இந்த இறைதிட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது குறிக்கோள் என்றும் அதுவே தனது தாகம் என்றும் கூறுகிறார். தான் இவ்வுலகிற்கு வந்தது இறைதிட்டத்தை நிறைவேற்ற மேலும் அது நிறைவேற்றுவதுதான் தன் வாழ்வின் நோக்கம் என்றிருந்தவர் அது நிறைவேறியபோது எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தனது வாழ்வை நிறைவு செய்கிறார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இயேசுவின் சிலுவை மரணம் உறவில் நிறைவு காண்பதற்காவே என்று கூறலாம். இறைமனித உறவு, பாவிகளிடையே உள்;ள உறவு, சீடர்களிடையே உள்ள உறவு, தனக்குள்ளே உள்ள உறவு போன்ற எல்லா உறவுகளும் சிலுவையில் முழுமை அடைகின்றன. இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போமென்றால் இயேசு தன்னையே மையமாக வைத்து தனக்கு மேல் உள்ள கடவுளின் உறவு, தன்னைச் சுற்றிஉள்ள மக்கள் (பாவிகள்) உறவு, மேலும் தனக்கு கீழ் உள்ள (பின் வருகின்ற) சீடர்கள் உறவு ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்க்கிறார், ஒன்று படுத்துகிறார், ஒன்றாக்குகிறார். இயேசுவில் எல்லா உறவுகளும் ஒன்றாகுகிறது. சிலுவையில் தொங்கும் இயேசு சிலுவை மரணம் வழியாக உறவை (ஒரே உறவு) ஒன்றாக்குகிறார்.

அருள்தந்தை ஜேம்ஸ் தெயோபிலஸ்​கோ.புதூர்-மதுரை