உணர்ந்த, உயர்ந்த, உகந்த, உண்மையான ஜெபமும், வேதாகமும் ஓவ்வொரு கிறிஸ்த்துவனுக்கும் இதுவே.ஆதி முதல் அத்தனையையும் உரக்க உரைக்கும் சாட்சியமே இந்த வார்த்தைகள். மூன்றில் மொத்தத்தையும் அடக்கிய வலிமையான அதிகாரபூர்வ பரப்புரையே. ஆராய அதிக ஆழம் கொண்ட இவ்வார்தைகளுக்கான மேலோட்டமான ஒட்டாடையாய் உரைக்கிறேன்.
படைத்தான், படிப்பித்தான் இருப்பினும் புரியாமல் பித்தனான படைப்புகளே மனிதம். தான் இம்மண்ணில் பிறக்க ஆணையிட்டவனின் ஆசை என்ன? தன் பிறவிக்கான பெருங்காரணம் என்ன? என அறிய நேரமும் இல்லாமல் நேசமும் இல்லாமல் இருக்கின்றோம். வாழ்விற்கான வார்த்தைகளையும், வாழ்வதற்கான வழிமுறைகளையும் தெளிவாகவும், துள்ளியமாகவும் உரைத்தவர்களே இம்மூவர்.
பிதா- பத்து கட்டளைகள்.
படைத்தவனுக்கு கட்டளை பிறப்பிக்க முழு ஆதிகாரம் உண்டு. அவர் ஆணையாய் செய்ய வேண்டிய ஒழுங்குமுறைகளையும், செய்ய கூடாத செயல்களையும் விவரித்துள்ளார்.தகப்பனாய் தன் பிள்ளைகளை ஒழுக்க வாழ்வில் வழிநடத்த விரும்பி கட்டளைகளை ஆணையிட்டார்.அந்த அதிகாரப்பூர்வ ஆளுமை சாமானிய தகப்பினிலும் உள்ளது போலான ஒன்று. ஒழுக்கமே ஞானத்தின் முதல்படி- அமைதியான வாழ்விற்கான அடித்தளம் என்பதை தெளிவாக உணர்த்தியவர் தான் நம் பிதா.
சுதன்-அன்பு கட்டளைகள்.
தந்தையாய் அவர் பணித்த ஆணைகளை , இறைசுதன் மனிதனாய் பிறந்து, வாய்க்கிழிய வாழ்வாக்க கடினமான கட்டளைகள் என வாதடியவர்கள் முன்னிலையில் 10 கட்டளைகளையும் வாழ்ந்து காட்டி,அமைதி பெற இதுவே ஒரே வழி என்று அமைதியை வாழ்த்தாக அறிவித்தவரே இம்மாவீரன்.அனுபவபூர்வ ஞானியாய் 10 கட்டளைகளை இரண்டை சுருக்கி இன்னா செயல்களை தவிர்க்க இனிய எளிய செயல்கள் இரண்டை கட்டளையாய் மனித குலத்திற்கு தந்தார். தகப்பனாய் அவர் பணித்த ஒழுங்குமுறை கட்டளைகளை கடைபிடிக்க ஓர் உயிர் நிறைந்த காரணத்தை காரியத்தை வகுத்து கொடுத்துள்ளார் நம் சுதன்.
தூயஆவி- கனிகளும்,கொடைகளும் மற்றும் 7 பாவத்திற்கு எதிரான புண்ணியங்களும்.
வார்த்தையிலும் கூறி, வாழ்ந்தும் காட்டி தெளிவு பெறா மனித நிலையை பார்த்து வெதும்பிய தகப்பனாய்- விரிவாய் பாமரன் மொழியில், கோடிட்ட வார்த்தைகளால்(bullet points) வாழ்வை வாழ்க்கையாக வாழ தூயஆவியின் கனிகள் என பன்னிரெண்டையும் வகுத்து இக்கனிகளை உட்கொள் உன் ரத்தநாளங்களில் ஓட விடு, இவை ஏழு சாவான பாவங்களான கொடிய நோய்களை உன் உள்ளத்திலிருந்து அகற்றி, தூய ஆவியின் கொடைகள் நிறைந்த அழகு நிறை வாழ்க்கையை பெறுவாய் என்றார்.
பத்து கட்டளைகளை கடைப்பிடிக்கவும், இரண்டு அன்பு கட்டளைகளை வாழ்வாக்கவும் ஏதுவான வழிமுறைகளையும், செயல் முறைகளையும் விளக்கியவரே தூயஆவி.
எதையும் பின்பற்ற, கடைபிடிக்க காரணமும் காரியமும் தேடும் மனிதமனம். பலன் இல்லையேல் பல்லை கூட பிடுங்க விட மாட்டோம். நாம் படைத்தவனுக்கு தெரியாத படைப்பின் குணம். எனவே தான் பலனாய் தூய ஆவியின் கொடைகளை சாமானிய மனிதனுக்கும் கொடுக்க முன்வந்தார் கடவுள். இந்த கொடை பேறுபலனே- படைத்தவனையும், படைபிற்கான முதன்மை பொருளை தேடுபவனுக்கே இக்கோடை அருளப்படும்.
பிதா - பின்பற்ற வேண்டியவற்றையும், சுதன் - பின்பற்ற வேண்டியதற்கான காரண காரியத்தையும், தூய ஆவி - பின்பற்ற ஏதுவான வழிமுறைகளையும் அழகுற, தெளிவாக, துள்ளியமாக விளக்கி உரைதுள்ளனர். இம்மூவர் பெயராலே, அருளப்பட்ட வாக்குகளை வாழ்வாக்குவேன் என்று துணிந்து கூறும் பிரதிக்கிணையே.
பிதா,சுதன், தூயஆவியின் பெயராலே. ஆமென்.
No comments:
Post a Comment