அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 26, 2018

என்ன போதித்தார்?

மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்று இயேசு கிறிஸ்து போதித்தார். நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுத்த அவர், உண்மையை நிலைநாட்ட துன்புறவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.

பொதுவான சந்தேகம்
“மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்கா 12:49) என்றும், “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத்தேயு 10:34) என்றும் இயேசு போதித்தார். “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியதால், ‘கண்ணுக்கு கண்’ போன்ற பழைய ஏற்பாட்டு சட்டங்களை அவர் ஆதரித்தார். ஆனால், அவரது உண்மை முகத்தை மறைத்து, அவர் அன்பை போதித்ததாக கிறிஸ்தவர்கள் கதை அளக்கின்றனர் என்று ஒரு பிரிவினர் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.

"மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்."

சட்டத் தெளிவு
“‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38-39) “‘உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” (மத்தேயு 5:43-45) “நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டு கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” (மாற்கு 7:13) என்று இயேசு கண்டிக்கிறார். இவ்வாறு, மனித விருப்பத்துக்கு ஏற்ப வளைக்கப்பட்ட சட்டங்களுக்கு பதிலாக, மனிதகுல நலனுக்கான கடவுளின் சட்டங்களை இயேசு தெளிவாக போதித்தார்.

நிறைவேற்றவே
“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே. ஆனால், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் மறைநூல் பகுதிகளைக் குறித்தே இயேசு கூறினார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” (லூக்கா 24:44) என்று உயிர்த்த இயேசு நினைவூட்டியதாக நற்செய்தியில் காண்கிறோம். ஆகவே, இயேசுவின் வாழ்வும் போதனைகளுமே திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவு செய்கின்றன. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக மன்றாடிய இயேசு, அன்பையே போதித்தார் என்று உறுதியாக கூற முடியும்.

தீயும் வாளும்
“உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்” (யோவான் 18:37) என்ற இயேசுவின் வார்த்தைகளில், “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்” (லூக்கா 12:49) என்று அவர் கூறியதன் பொருளை உணர முடிகிறது. அதாவது கடவுளைப் பற்றிய உண்மையை அறியும் ஆர்வத்தையே, தீ என்று உருவகமாக இயேசு குறிப்பிடுகிறார். உண்மையை ஏற்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே பிளவு ஏற்படும் என்பதை வாள் என்ற உருவகத்தால் இயேசு விளக்குவதைக் காண்கிறோம்: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.” (மத்தேயு 10:34-37) தம்மைப் பின்பற்றுவோர் அனைவரும் துன்பத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போதித்த ஆண்டவர் இயேசுவை அன்பின் வடிவாக மட்டுமே பார்க்க முடியும்.

திருமணம் ஆனவரா?

இயேசு கிறிஸ்துவுக்கு மனைவியோ பிள்ளைகளோ இருந்ததாக நற்செய்தி எதிலும் கூறப்படவில்லை. ஆகவே, அவர் திருமணம் செய்திருந்தார் என்று கூறுவது உண்மைக்கு முரணான ஏமாற்று வேலையே என்பது தெளிவு.

பொதுவான சந்தேகம்
இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுப்பதற்காக, அவர் மகதலா மரியாவை மணம் முடித்திருந்தார் என்று கூறுவது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களின் வழக்கமாக இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியரான டா வின்சி (1452-1519) வரைந்த ‘இறுதி இரவுணவு’ ஓவியத்தில் திருத்தூதர் பேதுருவுக்கு செவிகொடுக்கும் யோவானை (யோவான் 13:24), மகதலா மரியா என்று சிலர் தவறாக கூறுகின்றனர். யூத சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளும், ‘பிலிப்பு நற்செய்தி’ என்ற மூன்றாம் நூற்றாண்டு மறைவு நூலும், விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தியும் இயேசு திருமணம் செய்ததற்கான சான்றுகளை வழங்குவதாக அவர்கள் சந்தேகம் அடைகின்றனர்.

“யாரைப் பற்றிக் கூறுகிறார் எனக் கேள்.”

துறவற சமூகம்
யூதர்களின் வழக்கப்படி முப்பது வயதை எட்டிய ஆண் திருமணம் செய்வது கட்டாயம் என்பதால், இயேசு கிறிஸ்து திருமணம் செய்திருக்க வேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறானது என்பதற்கு இயேசுவின் காலத்தில், சாக்கடலை ஒட்டிய கும்ரான் பகுதியில் வாழ்ந்த எஸ்ஸேனியர்களே சான்றாக உள்ளனர். மெசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த எஸ்ஸேனிய பிரிவைச் சேர்ந்த ஆண்கள், திருமண உறவை விலக்கித் துறவற வாழ்வில் ஈடுபட்டிருந்தனர். இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாக விளங்கிய திருமுழுக்கு யோவானும் எஸ்ஸேனிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அக்காலத்தில் எஸ்ஸேனிய துறவிகளின் வாழ்வால் கவரப்பட்ட பலரும், திருமணம் செய்யாமல் தாமதித்து வந்தனர். இத்தகையச் சூழலில், இறையாட்சி குறித்து போதித்து வந்த இயேசுவைத் திருமணம் செய்ய வேண்டுமென உறவினர்கள் வற்புறுத்தி இருக்க வாய்ப்பில்லை.

பிலிப்பு நற்செய்தி
‘பிலிப்பு நற்செய்தி’ என்ற மறைவு நூலில், மகதலா மரியாவை இயேசு முத்தமிட்டார் என வருவதால் இருவரும் திருமணம் செய்திருந்தனர் என கூறுகின்றனர். மகதலா மரியா என்பவர் ‘ஏழு பேய்கள் பிடித்திருந்ததாக’ கருதப்பட்ட கொடிய நோயில் இருந்து இயேசுவால் குணமாக்கப் பெற்றவர். யோவன்னா, சூசன்னா போன்ற பெண்களோடு சேர்ந்து, அவரும் இயேசுவுக்கு பணிவிடை செய்து வந்ததாக லூக்கா (8:2-3) நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆகவே, இயேசுவின் பெண் சீடர்கள் பலரில் மகதலா மரியாவும் ஒருவர் என்பது தெளிவு. மரியா மீண்டும் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க இயேசு அவர் மீது சிறப்பாக அன்பு காட்டினார் என்பதையே, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நூலின் ஆசிரியர் ‘முத்தமிட்டார்’ என்ற வார்த்தையால் கற்பனையாக குறிப்பிடுகிறார். உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா (யோவான் 20:14) என்பதில் இருந்து, இறைமகன் மீதான அவரது அன்பை உணரலாம்.

குருவும் சீடரும்
“என்னை இப்படி பற்றிக் கொள்ளாதே” (யோவான் 20:17) என்று மகதலா மரியாவிடம் இயேசு கூறிய வார்த்தைகள், இருவருக்கும் இடையே அதிகமான நெருக்கத்தைக் காட்டுவதாக சிலர் கருதுகின்றனர். இது கணவன் – மனைவி உறவில் வெளிப்படும் நெருக்கத்தை ஒத்ததாக இருக்கிறது என்றும் அவர்கள் கற்பனையாக வாதம் செய்கின்றனர். உயிர்த்த இயேசுவுக்கும் மகதலா மரியாவுக்கும் இடையிலான உரையாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்று உள்ளது. “மரியா” என்று பெயர் சொல்லி இயேசு அழைத்தபோது, ‘அன்பரே’ என்றோ, ‘கணவரே’ என்றோ அவர் பதில் கூறவில்லை; “போதகரே” என்ற வார்த்தையே மகதலா மரியாவின் பதிலாக இருந்தது. இறந்துபோன தமது தலைவர் இயேசுவை, உயிர்ப்பின் நாயகராக கண்டதாலேயே மரியா அவரைப் பற்றிக் கொள்கிறார். இது குருவுக்கும் சீடருக்கும் இடையிலான உறவே என்பது வெளிப்படையாகத் தெரிவதால், இதை திருமண உறவாகக் கற்பனை செய்வது தவறு.

சோதனை எதற்காக?

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றதும் பாலை நிலத்தில் அலகையால் சோதிக்கப்பட்டதாக நற்செய்தியாளர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த சோதனையில் வெற்றி பெற்றதன் வழியாக அவர் தம்மை இறைமகன் என்று நிரூபித்துள்ளார்.

பொதுவான சந்தேகம்
‘இயேசு திருமுழுக்கு பெற்ற பின்பு அலகையினால் சோதிக்கப் படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்’ (மத்தேயு 4:1) என்று நற்செய்தி கூறுகிறது. நாற்பது நாட்கள் நோன்பிருந்த பிறகு, இயேசுவின் முன்பு தோன்றிய அலகை அவரை சோதித்ததாக வாசிக்கிறோம். இதைக் கொண்டு, சாத்தானால் சோதிக்கப்பட்ட ஒருவர் எப்படி இறைமகனாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மனிதரே கடவுளின் திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அவரை சோதிக்கும்போது, கடவுளை எதிரியாக நினைக்கும் சாத்தான் அவரை சோதிப்பது சாதாரண நிகழ்வே.

“அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது.”

வார்த்தையால் வாழ்வு
இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தாம் இறைமகன் என்று இயேசு நிரூபித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார். (மத்தேயு 4:2-4) கடவுளின் பிள்ளைகள், உணவுக்காக சாத்தானின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை என்பதே இயேசுவின் பதிலடி. கடவுளின் வார்த்தையாகிய தம்மாலேயே மனிதருக்கு வாழ்வு கிடைக்கும் என்று கூறி அலகை மீது இயேசு வெற்றி கொள்கிறார்.

சோதிக்க வேண்டாம்
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இங்கு இயேசுவின் மீட்புச் செயலைத் தடுப்பதற்காக, அவரை தற்கொலை செய்யுமாறு அலகை தூண்டுகிறது. இயேசு அதனிடம், “‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார். (மத்தேயு 4:5-7) தேவையான நேரத்தில் கடவுள் அற்புதம் செய்வார் என்றாலும், ஒரு அதிசயம் நிகழும் என நம்பி கடவுளை சோதிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறி அலகையை மீண்டும் வெல்கிறார் இயேசு.

கடவுளே உயர்ந்தவர்
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. இங்கு, அதிகாரமும் பதவியும் பெறுவதற்காக தன்னை வணங்குமாறு அலகை சோதிக்கிறது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார். (மத்தேயு 4:8-10) அதாவது, இறைமகன் அலகையின் காலில் விழுவது நடக்காத காரியம் என்று சொல்லி, இயேசு அலகையை விரட்டி விடுகிறார். இயேசுவை விட்டு அலகை அகன்றதும், வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத்தேயு 4:11) இவ்வாறு தாம் இறைமகன் என்று நிரூபித்த இயேசு, நாமும் அவரைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறார்.

திருமுழுக்கு ஏன்?

இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு என்பது முதல் கிறிஸ்தவர்களுக்கு ஒரு மறைபொருளாகவே இருந்தது. இயேசுவை விடவும் திருமுழுக்கு யோவான் பெரியவரோ என்று சிந்திக்கத் தூண்டினாலும், அப்படி இல்லை என்பதே இந்த நிகழ்வு நமக்கு தரும் செய்தி.

பொதுவான சந்தேகம்
“நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று இயேசுவிடம் திருமுழுக்கு யோவான் கேட்டதாக மத்தேயு (3:14) நற்செய்தியில் வாசிக்கிறோம். அப்படியெனில், திருமுழுக்கு கிறிஸ்தவத்தின் புகுமுகச் சடங்கு என்பதால், இயேசு அதை நிறைவேற்றினார் என்று நற்செய்தியாளர்கள் தாங்களே எழுதியிருப்பார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. இயேசு கிறிஸ்து ‘மானிடரின் பாவம் போக்கத் தோன்றிய இறைமகன்’ என்பதே திருத்தூதர்கள் காலம் முதல் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், மனந்திரும்பிய பாவிகளுக்கு யோவான் கொடுத்த திருமுழுக்கை இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்”

பாவநிலை ஏற்றார்
“நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்” (2கொரிந்தியர் 5:21) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், இயேசுவில் நிறைவேறிய இறைத்தந்தையின் திட்டத்தை வெளிப்படுத்துகின்றன. தூயவரான இயேசு கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகத் திருமுழுக்கு பெறுவது தந்தையாம் கடவுளின் திட்டமாக இருந்தது. ஆகவேதான், “கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை” (மத்தேயு 3:15) என்று யோவானிடம் இயேசு பதிலளிக்கிறார். இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தாலும், அவர் பாவிகளை மீட்க இவ்வுலகிற்கு வந்தவர் என்பதை அவரது திருமுழுக்கு உணர்த்துகிறது.

தொடக்க அடையாளம்
ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் சாதாரண மனிதராக, யூத சமூகத்தின் ஓர் உறுப்பினராக மட்டுமே வாழ்ந்த இயேசு, தந்தையாம் இறைவனின் பணியை உரிமையோடுத் தொடங்க இந்த திருமுழுக்கு வழி வகுக்கிறது. “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” (மாற்கு 1:11) என்ற விண்ணகத் தந்தையின் வார்த்தைகள், இயேசுவின் பணிக்குத் தெளிவானத் தொடக்கத்தை அளிக்கின்றன. ‘இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது’ (லூக்கா 3:21-22) என நற்செய்தியில் வாசிக்கிறோம். இறைமகன் இயேசுவின் மீட்புச் செயல் அவரது திருமுழுக்கில்தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது என்பதையே தூய ஆவியாரின் வருகை உணர்த்துகிறது.

சான்றுக்கு வாய்ப்பு
“எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” (மத்தேயு 3:11) என்று போதித்து வந்த யோவான், இயேசுவை அடையாளம் கண்டு சான்று பகர்வதற்கான வாய்ப்பை அவரது திருமுழுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதைக் காண்கிறோம். “இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னை விட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்” (யோவான் 1:29-34) என்ற யோவானின் சான்று, இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகிறது.

மறைந்த வாழ்வு

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் அற்புதகளின் வழியாக, அவரது இறைத்தன்மையை தெளிவுபடுத்துவது மட்டுமே நற்செய்தி ஆசிரியர்களின் முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவேதான், அவரது இறையாட்சி பணிக்கு முந்திய நிகழ்வுகள் அதிகமாக நற்செய்திகளில் இடம் பெறவில்லை.

பொதுவான சந்தேகம்
நற்செய்தியை முதலில் எழுதிய மாற்கும், இறுதியாக எழுதிய யோவானும் இயேசுவின் பிறப்பு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் குழந்தைப் பருவத்திற்கு பிறகு, மத்தேயு நேரடியாக அவரது திருமுழுக்கு நிகழ்வை எடுத்துரைக்கிறார். இடையே பன்னிரு வயது சிறுவனாக இயேசுவைக் காட்டும் லூக்காவும், அதன் பின்பு முப்பது வயது இளைஞராகவே அவரை அறிமுகம் செய்கிறார். நற்செய்திகளில் காணப்படாத பதினெட்டு ஆண்டுகளில், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு இயேசு சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று சிலர் கூறுகின்றனர். யூத மரபுகள் சிலவற்றை இயேசு கண்டிப்பதால், அவர்களுக்கு இத்தகைய சந்தேகம் எழுகிறது.

"இவர் தச்சர் அல்லவா!"

நாசரேத்தில் வாழ்ந்தார்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு குறித்து நற்செய்திகள் குறிப்பிடாத இடைவெளியை, பலரும் தங்களது கற்பனைக்கு ஏற்ப நிரப்பிக் கொள்கின்றனர். இயேசு வெளிநாட்டுக்குச் சென்று கிரேக்க ஞானத்தையோ, புத்த மதத்தின் நெறிகளையோ கற்றிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையிலான கருத்தை முன்வைக்கின்றனர். இந்த கருத்து தவறானது என்பதை லூக்கா நற்செய்தியாளர் தமது நூலில் தெளிவாக பதிவு செய்துள்ளார். ‘அவர் பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்’ (லூக்கா 2:51,52) என்ற வார்த்தைகள், அவர் நாசரேத்திலே வாழ்ந்தார் என்பதையே எடுத்துரைக்கின்றன.

ஞானத்தில் மிகுந்தார்
ஒவ்வொரு யூத சிறுவனும் பதின்மூன்று வயது முதல் திருச்சட்டத்தைக் கடைபிடிப்பது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை இயேசு கிறிஸ்து பன்னிரு வயதிலேயே தொடங்கி விட்டார் என்பதை பதிவு செய்வதற்காகவே, அவர் எருசலேம் கோவிலில் தங்கிய நிகழ்வை லூக்கா பதிவு செய்கிறார். ஆகவேதான், ‘இயேசு போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார்’ (லூக்கா 2:46) என்று அவர் குறிப்பிடுகிறார். சிறுவன் இயேசுவுக்கு திருச்சட்டம் மீது ஆர்வம் ஏற்பட்டிருந்ததை இங்கு காண்கிறோம். யூத சமூகப் பின்னணியில், மகனுக்கு திருச்சட்டத்தை கற்பிப்பது தந்தையின் முக்கிய கடமையாக இருந்தது. ‘அவர் பெற்றோருடன் சென்று அவர்களுக்குப் பணிந்து நடந்தார்’ (லூக்கா 2:51) என்ற வார்த்தைகள், இயேசுவின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் பணியில் யோசேப்பும் மரியாவும் உதவினர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

மனிதருக்கு உகந்தார்
‘இயேசு நாசரேத்தை அடைந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்’ என்ற லூக்காவின் (2:51,52) கூற்று, அவர் எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை என்பதை உறுதி செய்கிறது. நாசரேத்து தொழுகைக் கூடத்தில் நடைபெற்ற மறைநூல் வகுப்புகளில், இயேசுவும் பங்கேற்று பயிற்சி பெற்றார் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் விளைவாகவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பிக்கும் போதகர் என்ற நிலையை அடைந்தார். ஆனால், யூதர்களின் சட்டத்திற்கு எதிரான சிந்தனைகள் இயேசுவில் உருவாக யோசேப்பும் மரியாவும் காரணமாக இருந்தனர். மேலும், நாசரேத்து ஊரினர் இயேசுவைத் ‘தச்சர்’ என்று அழைத்ததாக மாற்கு நற்செய்தி (6:3) கூறுகிறது. ஆகவே, தமது வளர்ப்புத் தந்தை யோசேப்பிடம் இருந்து அவர் தச்சுத் தொழிலையும் கற்றிருந்தது தெளிவு. இதையே, நற்செய்தியாளர் லூக்கா சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.

சகோதர சகோதரிகள்

இயேசு கிறிஸ்துவுக்கு பல சகோதர சகோதரிகள் இருந்ததாக நற்செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் இயேசுவின் தாய்க்கு பிறந்தவர்கள் என்று கருதுவதை விடவும், உறவுமுறை சகோதர சகோதரிகள் என்பதே ஏற்புடையதாக உள்ளது.

பொதுவான சந்தேகம்
இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த நாசரேத்து மக்கள், “இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” (மாற்கு 6:2,3) என்று கூறியதாக நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆகவே, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் இருந்ததாக சிலர் கருதுகின்றனர். கிரேக்க மூலத்தில் நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் ‘அதெல்போஸ்’ என்ற வார்த்தை ரத்த உறவு கொண்ட சகோதர்களைக் குறிக்கிறது என்பதால், அவர்களது சந்தேகம் வலுவடைந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

“அம்மா, இவரே உம் மகன்!”
“இவரே உம் தாய்!”

உறவின் சகோதரர்
யூத வழக்கத்தின்படி, ஒருவரது நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஆதாரமாக விவிலியத்திலும் நம்மால் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், “நாம் சகோதரர்” (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, “நீ என் சகோதரன்” (தொடக்கநூல் 29:15) என அழைத்ததாக வாசிக்கிறோம். விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், ‘சகோதரர்’ என்று வரும் இடத்தில் புரிதலுக்காக ‘உறவினர்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்ற இயேசுவின் கூற்றிலும் ‘சகோதரர்’ என்பதைக் குறிப்பிட, ‘அதெல்போஸ்’ என்ற வார்த்தையே இடம் பெற்றுள்ளது. இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது.

இயேசுவைத் தேடி
‘ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்’ என்று லூக்கா (2:41-42) நற்செய்தி கூறுகிறது. இங்கு இயேசுவின் சகோதர, சகோதரிகள் எவரும் அவர்களுடன் சென்றதாக நற்செய்தியாளர் குறிப்பிடவில்லை. எருசலேம் கோவிலிலேயே தங்கிவிட்ட நிலையில், மரியாவும் யோசேப்பும் மட்டுமே இயேசுவைத் தேடிச் சென்றதாக (லூக்கா 2:45) எழுதப் பட்டுள்ளது. யோசேப்புக்கும் மரியாவுக்கும் வேறு பிள்ளைகள் இருந்திருந்தால், அவர்களும் இயேசுவைத் தேடிக்கொண்டு உடன் சென்றார்கள் என்ற குறிப்பு இருந்திருக்கும். இதிலிருந்தே, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்பது உறுதியாகிறது.

யோவான் பொறுப்பில்
இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியா என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை, ‘இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியா’ என நற்செய்தியாளர் யோவான் (19:25) குறிப்பிடுகிறார். ‘அவர்களுள் மகதலா மரியாவும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்’ என மாற்கு (15:40) நற்செய்தியில் வாசிக்கிறோம். இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாவை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமோன் உள்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்திகளில் கூறப்படும் எவரும், அவரது உடன்பிறந்த ரத்த உறவுகள் இல்லை என்பதே உண்மை.

மூதாதையர் பட்டியல்

இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை மத்தேயு, லூக்கா ஆகியோர் எழுதிய இரண்டு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். ஆபிரகாம் மற்றும் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு என்பதையே இருவரின் பட்டியல்களும் உறுதி செய்கின்றன.

பொதுவான சந்தேகம்
யூத சமூகத்தில் ஒருவரின் தந்தை வழியாகவே, அவரது வழிமரபு உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, இயேசுவின் தந்தையாக கருதப்பட்ட யோசேப்பின் முன்னோர்கள் பட்டியலை நற்செய்தியாளர்கள் தருகின்றனர். மெசியாவாகிய இயேசு அரச வழிமரபில் தோன்றியவர் என்பதை உறுதி செய்யவே, மத்தேயுவும் லூக்காவும் அவரது மூதாதையர் பட்டியலை வழங்குகின்றனர். மத்தேயு நற்செய்தியில் 1:1-17 வசனங்களும், லூக்கா நற்செய்தியில் 3:23-38 வசனங்களும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை வழங்குகின்றன. ஆபிரகாமில் தொடங்கி இயேசு வரை 42 தலைமுறைகளை மத்தேயுவும், இயேசு தொடங்கி ஆதாம் வரை 77 தலைமுறைகளை லூக்காவும் பதிவு செய்கின்றனர். இந்த பட்டியல்களில் எண்ணிக்கை மட்டுமின்றி, பெயர்களிலும் வேறுபாடு காணப்படுவதால் இவற்றில் யார் தரும் பட்டியல் சரியானது என சந்தேகம் எழுகிறது.

“தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!”

மத்தேயு நற்செய்தி
குலமுதுவர் ஆபிரகாம் மற்றும் அரசர் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு கிறிஸ்து என்பதை நற்செய்தியாளர்கள் இருவருமே உறுதி செய்கின்றனர். ஆபிரகாம் தொடங்கி இயேசு வரை 42 தலைமுறை பட்டியலை வழங்கும் நற்செய்தியாளர் மத்தேயு, அவற்றை மூன்று 14 தலைமுறைகளாக பிரித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், தாவீது என்ற பெயருக்கு உரிய எண் மதிப்பு 14 என்பதே. ‘ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமாகிய இயேசு கிறிஸ்து’ என்று தமது நற்செய்தி நூலைத் தொடங்கும் மத்தேயு (1:1), தாவீதின் வழிமரபில் தோன்றிய மெசியா இயேசுவே என்பதை உறுதிப்படுத்தவே இந்த எண் முறையைக் கையாள்கிறார். மேலும், தாவீதின் வழிமரபில் அவருக்குப்பின் ஆட்சி செய்த அரசர்களை இயேசுவின் முன்னோராகக் காட்டுவதன் வழியாக, யூதர்கள் எதிர்பார்த்த மெசியாவின் அரசை இயேசுவே அமைக்கிறார் என்று மத்தேயு விளக்குகிறார்.

லூக்கா நற்செய்தி
நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவில் தொடங்கி ஆதாம் வரை மூதாதையர் பட்டியலைத் தலைகீழாக வழங்குகிறார். முதல் ஆதாமால் பாவத்திற்கு உட்பட்ட இந்த உலகம், புதிய ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலால் புதிய படைப்பாகிறது என்பதை அவர் உணர்த்துகிறார். ஆகவேதான், இயேசு திருமுழுக்கு பெற்று தமது பணியைத் தொடங்கும் இடத்தில் அவரது மூதாதையர் பட்டியலை லூக்கா வைத்துள்ளார். இயேசுவை யூதர்களின் மெசியாவாகக் காட்டும் மத்தேயு நற்செய்தியின் நோக்கத்திற்கு மாறாக, அவரை உலக மீட்பராக வெளிப்படுத்தும் எண்ணம் லூக்கா நற்செய்தியில் வெளிப்படுகிறது. முதல் மனிதரான ஆதாம் வரை தலைமுறை வரிசையை நீட்டுவதன் வழியாக, இயேசு வழங்கும் மீட்பு உலக மக்கள் அனைவருக்கும் உரியது என்பதை லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கிறார்.

பெயர் வேறுபாடு
இரண்டு மூதாதையர் பட்டியல்களும் வேறுபட இறையியல் பார்வை மட்டுமே காரணமில்லை. யூதர்களின் ‘சகோதர திருமணச் சட்டமே’ மத்தேயு, லூக்கா ஆகியோர் தரும் மூதாதையர் பட்டியல் வேறுபட காரணம் என்பது அறிஞர்களின் கருத்து. மரியாவின் கணவர் யோசேப்பின் தந்தையாக லூக்கா குறிப்பிடும் ‘ஏலி’ மகப்பேறின்றி இறந்திருக்க வேண்டும். ஆகவே, ஏலிக்கு வழிமரபு ஏற்படுத்தும் கடமையுள்ள நெருங்கிய உறவினரான (ரூத்து 2:20) ‘யாக்கோபு’ அவரது மனைவியை மணந்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் மகனாக பிறந்தவரே மரியாவின் கணவரான யோசேப்பு. உயிரியல் முறைப்படி யோசேப்பின் தந்தை யாக்கோபே என்றாலும், யூத சட்டப்படி ஏலியே தந்தை என்று கருதப்பட்டார். ஆகவே, ‘யாக்கோபின் மகன் யோசேப்பு’ என மத்தேயு குறிப்பிடுவதும், ‘யோசேப்பின் தந்தை ஏலி’ என லூக்கா கூறுவதும் சரியே. இதன் காரணமாகவே, அவர்களின் முன்னோர்களின் பெயர்களில் வேறுபாடு காணப்படுகிறது.

இயேசு பிறந்த காலம்

இயேசு கிறிஸ்து எப்போது, எங்கு பிறந்தார் என்பதை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் எடுத்துரைக்கின்றனர். இயேசு பிறந்த ஊர் பெத்லகேம் என்று இருவரும் கூறுவது போன்றே, அவர் கி.மு.4க்கு முன்பு பிறந்தார் என்பதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர்.

பொதுவான சந்தேகம்
இயேசு பிறந்தபோது யூதேயாவை ஆட்சி செய்ததாக மத்தேயு நற்செய்தி கூறும் ஏரோது அரசன், கி.மு.4ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டதாக அறிகிறோம். “சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அதன்படி, யோசேப்பும் மரியாவும் பெயரைப் பதிவு செய்ய பெத்லகேமுக்கு சென்றபோதே இயேசு பிறந்தார்” என்று லூக்கா (2:2-7) எழுதுகிறார். ஆனால், கி.பி.6ஆம் ஆண்டில்தான் சிரியாவின் ஆளுநராக குரேனியு நியமிக்கப் பெற்றார் என்பது வரலாறு. இதன் காரணமாக, மத்தேயு, லூக்கா நற்செய்திகளுக்கு இடையில் பத்து ஆண்டுகள் இடைவெளி காணப்படுவதாக நினைப்பதே பலரின் பிரச்சனை. இரண்டு நற்செய்திகளையும் சரியாக வாசித்தால், குரேனியு பற்றிய தகவலை சேர்த்தது வரலாற்றுக் குழப்பத்தில் லூக்கா செய்த சிறிய பிழையே என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

ஏரோது அரசன்
அர்க்கெலாவின் தந்தையான பெரிய ஏரோது யூதேயாவில் ஆட்சி செய்த வேளையில் இயேசு பிறந்தார் என்று மத்தேயு நற்செய்தியில் (2:1) காண்கிறோம். யூதர்களின் அரசராக பிறந்த குழந்தையைக் கொலை செய்ய ஏரோது வீரர்களை அனுப்பியதாகவும், அப்பொழுது இயேசுவுக்கு ஏறக்குறைய இரண்டு வயது என்றும் மத்தேயு குறிப்பிடுகிறார். யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்றே லூக்கா நற்செய்தி நூலிலும் (1:5) எழுதப்பட்டுள்ளது. ஆகவே பெரிய ஏரோது இறக்கும் முன்பே, இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்பது உறுதியாகிறது. ஏரோது அரசன் கி.மு.4ஆம் ஆண்டு இறந்தான் என வரலாறு உறுதி செய்வதால், அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

விண்மீன் அடையாளம்
இயேசு பிறந்த வேளையில் விண்மீன் அடையாளம் ஒன்று தோன்றியதாகவும், அதைக் கண்டு கீழ்த்திசை ஞானிகள் சிலர் அவரை வணங்க வந்ததாகவும் மத்தேயு (2:1-2) குறிப்பிடுகிறார். இத்தகைய விண்மீன் அடையாளம் கி.மு.7 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தோன்றியதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கி.மு.7ஆம் ஆண்டில் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்ததால், விண்மீன் போன்ற தோற்றம் ஏற்பட்டது. கி.மு.5ல் வால்நட்சத்திரம் ஒன்று எழுபது நாட்கள் பூமிக்கு அருகில் வந்ததாக சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளது. புதிய விண்மீனை அரச பிறப்புக்கு அடையாளமாக காணும் கிரேக்க சோதிடர்களின் மரபு, இயேசு பிறந்த காலத்தில் பல நாடுகளிலும் பரவியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆதலால், கி.மு.5ல் ஏற்பட்ட விண்மீன் தோற்றத்திற்கு முன்பே இயேசு பிறந்து விட்டார் என்று அறிகிறோம்.

அகுஸ்து சீசர்
அகுஸ்து சீசர் கட்டளைப்படி ரோமப் பேரரசு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற வேளையில் இயேசு பிறந்ததாக லூக்கா நற்செய்தி (2:1-7) கூறுகிறது. ரோமப் பேரரசில் கி.மு.28, 8 மற்றும் கி.பி.14ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்கிறது. கி.மு.8ல் அகுஸ்து சீசர் (கிமு.63-கி.பி.14) பிறப்பித்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையை யூதேயாவில் செயல்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.மு.6ல் அங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்த வேளையில், இயேசு பிறந்திருக்க வேண்டும். மூன்றாம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இரு ஆண்டுகள் முன்பு சிரியாவின் ஆளுநராக குரேனியு இருந்ததால், அவரது பெயரை லூக்கா தவறுதலாக இணைத்துள்ளார்.

வரலாற்றில் வாழ்ந்தவர்

இயேசு கிறிஸ்து உண்மையாக வரலாற்றில் வாழ்ந்த மனிதரே என்பதற்கு விவிலியத்திற்கு வெளியிலும் சான்றுகள் உள்ளன. கிறிஸ்தவ சமயத்தைச் சாராத சில பழங்கால ஏடுகளிலும் இயேசுவைப் பற்றிய பதிவுகள் உள்ளன.

பொதுவான சந்தேகம்
இயேசு கிறிஸ்துவைத் தங்கள் தலைவராகவும் கடவுளாகவும் கொண்டாடிய கிறிஸ்தவர்களே, அவரைப் பற்றி பல நூல்களையும் கடிதங்களையும் எழுதியுள்ளனர். அவரைப் பற்றி நற்செய்தி நூல்கள் தரும் செய்தி ஒரு கதை போன்று இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆகவே, இயேசு உண்மையாக வாழ்ந்த நபராக இருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களின் சந்தேகம். ரோம பேரரசைப் பொறுத்த வரையில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட பல குற்றவாளிகளில் இயேசுவும் ஒருவர் அவ்வளவுதான். ஆயினும், அவரை சிலுவையில் அறைந்து கொன்றது பற்றி, ஆளுநர் பிலாத்து தமது ‘பணிகள்’ என்ற அறிக்கையில் எழுதியிருந்ததாக குறிப்புகள் உள்ளன. கிறிஸ்தவம் சாராத வேறு சிலரின் சான்றுகளை இங்கு காணலாம்.

"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்."

பிளாவியு யோசேப்பு
பிளாவியு யோசேப்பு (கி.பி.37-97) என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் தாம் எழுதிய ‘யூத மரபு வரலாறு’ என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரது நடத்தை நல்லதாக இருந்தது; அவர் குற்றமற்றவராக இருந்தார். யூதர்களி லும், மற்ற நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் அவரது சீடர்களானார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் சீடத்துவத்தை விட்டுவிடவில்லை. இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவர்கள் அறிவித்தார்கள்; அதன்படி, இறைவாக்கினர்கள் முன்னுரைத்த மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்.”

கொர்னேலியு தாசித்து
கொர்னேலியு தாசித்து (கி.பி.55-120) என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் தாம் எழுதிய ரோம வரலாற்று நூலில் பின்வருமாறு கூறுகிறார்: “தாமே ரோமுக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக, நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர் மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறிஸ்தவர்கள் என்று மக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்த கிறிஸ்து திபேரியு ஆட்சிக் காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார்.”

மாராவும் லூசியனும்
சிரியாவைச் சார்ந்த மாரா பார் செரப்பியன் (கி.பி.52-145), இயேசுவைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “யூதர்கள் தங்கள் ஞானமுள்ள அரசரை (இயேசுவை) கொன்றதால் என்ன இலாபம் அடைந்தார்கள்? அதன்பிறகு அவர்களின் அரசு அழிக்கப்பட்டது. இந்த ஞானமுள்ள அரசர் நன்மைக்காக இறந்தார்; அவரது போதனைகளின்படியே அவர் வாழ்ந்து காட்டினார்.” கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கேலிப் பேச்சாளர் லூசியன் (கி.பி.125-180), “சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு தனிப்பட்ட மனிதரை (இயேசுவை), கிறிஸ்தவர்கள் இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள்” என்று கிண்டலாக குறிப்பிடுகிறார்.

யூத போதனை நூல்
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யூத போதனை நூல் (தால்மூத்) பின்வரும் தகவலைத் தருகிறது: “பாஸ்கா விழாவுக்கு முன்தினம் மாலையில், இயேசு கழுவில் (சிலுவையில்) கொலையுண்டார். அதற்கு நாற்பது நாட்கள் முன்பாக, ‘அவர் மாய வித்தைகள் (அற்புதங்கள்) வழியாக இஸ்ரயேலை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதால், கல்லால் எறிந்து கொல்லப்பட இருக்கிறார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்வந்து, அவருக்காக பரிந்து பேசலாம்’ என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக யாரும் வராததால் அவர் கொல்லப்பட்டார்.”

Friday, December 21, 2018

பிதா, சுதன், தூய ஆவியின் பெயராலே ஆமென்.

உணர்ந்த, உயர்ந்த, உகந்த, உண்மையான ஜெபமும், வேதாகமும் ஓவ்வொரு கிறிஸ்த்துவனுக்கும் இதுவே.ஆதி முதல் அத்தனையையும் உரக்க உரைக்கும் சாட்சியமே இந்த வார்த்தைகள். மூன்றில் மொத்தத்தையும் அடக்கிய வலிமையான அதிகாரபூர்வ பரப்புரையே. ஆராய அதிக ஆழம் கொண்ட இவ்வார்தைகளுக்கான மேலோட்டமான ஒட்டாடையாய் உரைக்கிறேன்.
படைத்தான், படிப்பித்தான் இருப்பினும் புரியாமல் பித்தனான படைப்புகளே மனிதம். தான் இம்மண்ணில் பிறக்க ஆணையிட்டவனின் ஆசை என்ன? தன் பிறவிக்கான பெருங்காரணம் என்ன? என அறிய நேரமும் இல்லாமல் நேசமும் இல்லாமல் இருக்கின்றோம். வாழ்விற்கான வார்த்தைகளையும், வாழ்வதற்கான வழிமுறைகளையும் தெளிவாகவும், துள்ளியமாகவும் உரைத்தவர்களே இம்மூவர்.

பிதா- பத்து கட்டளைகள். 
படைத்தவனுக்கு கட்டளை பிறப்பிக்க முழு ஆதிகாரம் உண்டு. அவர் ஆணையாய் செய்ய வேண்டிய ஒழுங்குமுறைகளையும், செய்ய கூடாத செயல்களையும் விவரித்துள்ளார்.தகப்பனாய் தன் பிள்ளைகளை ஒழுக்க வாழ்வில் வழிநடத்த விரும்பி கட்டளைகளை ஆணையிட்டார்.அந்த அதிகாரப்பூர்வ ஆளுமை சாமானிய தகப்பினிலும் உள்ளது போலான ஒன்று. ஒழுக்கமே ஞானத்தின் முதல்படி- அமைதியான வாழ்விற்கான அடித்தளம் என்பதை தெளிவாக உணர்த்தியவர் தான் நம் பிதா.

சுதன்-அன்பு கட்டளைகள்.
தந்தையாய் அவர் பணித்த ஆணைகளை , இறைசுதன் மனிதனாய் பிறந்து, வாய்க்கிழிய வாழ்வாக்க கடினமான கட்டளைகள் என வாதடியவர்கள் முன்னிலையில் 10 கட்டளைகளையும் வாழ்ந்து காட்டி,அமைதி பெற இதுவே ஒரே வழி என்று அமைதியை வாழ்த்தாக அறிவித்தவரே இம்மாவீரன்.அனுபவபூர்வ ஞானியாய் 10 கட்டளைகளை இரண்டை சுருக்கி இன்னா செயல்களை தவிர்க்க இனிய எளிய செயல்கள் இரண்டை கட்டளையாய் மனித குலத்திற்கு தந்தார். தகப்பனாய் அவர் பணித்த ஒழுங்குமுறை கட்டளைகளை கடைபிடிக்க ஓர் உயிர் நிறைந்த காரணத்தை காரியத்தை வகுத்து கொடுத்துள்ளார் நம் சுதன்.

தூயஆவி- கனிகளும்,கொடைகளும் மற்றும் 7 பாவத்திற்கு எதிரான புண்ணியங்களும். 
வார்த்தையிலும் கூறி, வாழ்ந்தும் காட்டி தெளிவு பெறா மனித நிலையை பார்த்து வெதும்பிய தகப்பனாய்- விரிவாய் பாமரன் மொழியில், கோடிட்ட வார்த்தைகளால்(bullet points) வாழ்வை வாழ்க்கையாக வாழ தூயஆவியின் கனிகள் என பன்னிரெண்டையும் வகுத்து இக்கனிகளை உட்கொள் உன் ரத்தநாளங்களில் ஓட விடு, இவை ஏழு சாவான பாவங்களான கொடிய நோய்களை உன் உள்ளத்திலிருந்து அகற்றி, தூய  ஆவியின் கொடைகள் நிறைந்த அழகு நிறை வாழ்க்கையை பெறுவாய் என்றார்.
பத்து கட்டளைகளை கடைப்பிடிக்கவும், இரண்டு அன்பு கட்டளைகளை வாழ்வாக்கவும் ஏதுவான வழிமுறைகளையும், செயல் முறைகளையும் விளக்கியவரே தூயஆவி.
    
எதையும் பின்பற்ற, கடைபிடிக்க காரணமும் காரியமும் தேடும் மனிதமனம். பலன் இல்லையேல் பல்லை கூட பிடுங்க விட மாட்டோம். நாம் படைத்தவனுக்கு தெரியாத படைப்பின் குணம். எனவே தான் பலனாய் தூய ஆவியின் கொடைகளை சாமானிய மனிதனுக்கும் கொடுக்க முன்வந்தார் கடவுள். இந்த கொடை பேறுபலனே- படைத்தவனையும், படைபிற்கான முதன்மை பொருளை தேடுபவனுக்கே இக்கோடை அருளப்படும்.

பிதா - பின்பற்ற வேண்டியவற்றையும், சுதன் - பின்பற்ற வேண்டியதற்கான காரண காரியத்தையும், தூய ஆவி - பின்பற்ற ஏதுவான  வழிமுறைகளையும் அழகுற, தெளிவாக, துள்ளியமாக விளக்கி உரைதுள்ளனர். இம்மூவர் பெயராலே, அருளப்பட்ட வாக்குகளை வாழ்வாக்குவேன் என்று துணிந்து கூறும் பிரதிக்கிணையே. 

பிதா,சுதன், தூயஆவியின் பெயராலே.                                                     ஆமென்.

ஆமென் என்ற வார்த்தையை சொல்லுவதில் கவனம் தேவை !!!

நாம் ஆமென் என்ற வார்த்தையை பொதுவாக ஜெபங்கள் முடியும் போது சொல்லுவோம். இப்போதெல்லாம் மறை செய்தியாளர்கள் தங்கள் செய்தி கொடுக்கும் போது இடை இடையே ஆமென் என்ற வார்த்தையை சொல்லுவார்கள். சில சபைகளில் இந்த ஆமென் என்ற வார்த்தையை  வெகு சரளமாக சொல்லுவார்கள் சில  வேளைகளில் எதற்கு ஆமென் என்று சொல்லுகின்றோம் என்று அறியாமலே சொல்லுவார்கள். ஆமென் என்ற வார்ததைக்கு அப்படியே ஆகட்டும் என்றே அர்த்தம்  ஆக இந்த வார்த்தைக்கு நாம் ஏன் அதிக கவனமாய் சொல்ல வேண்டும் ???
இந்த வார்த்தைக்கு நாம் வெகு கவனம் செலுத்த வேண்டிய காரணம். அது நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின்  பெயர் தான் என்றால் நீங்கள் எல்லாம் அசந்து போவீர்கள்.
“இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே" (தி. வெ. 3 : 14) இந்த இறை வார்த்தைகளில் நாம் காண்கின்றோம்  ஆமென் எனப்படுபவரும் என்று எழுது என்று யோவானுக்கு கடடளை ஈடுபவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான். அவரே தன் பெயரை இவ்வாறு வெளி விடுகின்றார்.  அதாவது விண்ணகத்தில் உள்ள கோடான கோடி வான தூதர்களும் மற்றும் உள்ள உயிர்களும் ஆண்டவரை ஆமென் என்றே அழைத்தன . கிறிஸ்து இம்மண்னுலகிற்கு வந்த பின் அவர் பெயர் இயேசு என்று வைக்கப் பட்டது. இயேசு அபிஷேகம் பண்ணப் படடவர் என்பதால் தான் கிறிஸ்து என்றும் அழைக்கப் படடார்.
ஆக விண்ணும் மண்ணும் தோன்றும் முன்பே, இயேசுவை வான தூதர்கள்  "" ஆமென் "" என்று தான் அழைத்தார்கள். தந்தையாம் கடவுள்  எதையாவது விரும்பி அல்லது எதையாவது படைக்க வேண்டும் என்று நினைத்து விரும்பினால்  இரண்டாம் ஆளாகிய இயேசு  தந்தையின் விருப்பம் அறிந்து ஆமென் என்று சொல்லுவார். இவர் ஆமென் என்று சொன்ன உடனே பரிசுத்த ஆவியானவர் தன்பெரும் வல்லமையோடு  தந்தை விரும்பிய காரியத்தை செய்து முடிப்பார்.  தந்தை விரும்பிய போதிலும் இயேசு ஆமென் என்று சொல்ல வில்லை என்றால் பரிசுத்த ஆவியானவர் செயல் பட மாட்டார். இதை வான தூதர்கள் கண்டு இவர் ஆமென் என்று சொல்ல வில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பதை அறிந்து இவர் எப்போது ஆமென் என்று சொல்லுவார் என்று காத்து இருப்பார்கள் . இயேசு ஆமென் என்று சொல்லிய உடனே விண்ணகமே பெரும் குரலெழுப்பி ஆர்ப்பரிக்கும்.
இதை தான் யோவான் தன் நற்செய்தியில் இவ்வாறு கூறுகின்றார்
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;
அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.✠  ( யோவான் 1 : 1 - 3 )
எனவே யோவான் தெளிவாக கூறுகின்றார் தொடக்கத்தில் வாக்கு இருந்தது  என்று அந்த வாக்கு அதாவது அந்த வார்த்தை  '''ஆமென்  "" என்பது தான். அந்த ஆமென் கடவுளாயும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டான எதுவும் அவரால் அன்றி எதுவும்  உண்டாகவில்லை  என்பதில் நமக்கு தெளிவாகின்றது .
நாம் இது வரை ஆதியிலே வாக்கு இருந்தது என்று சொல்லு கின்றோம். வாக்கு என்பது வார்த்தை தான். அந்த வார்த்தை என்ன வென்று  யோவான் முதற்கொண்டு கூற துணிவு பெறவில்லை. ஏனென்றால் அது உன்னதமானது என்பதை அவர் உணர்ந்து இருந்தார்.
ஆண்டவராகிய இயேசு ஆமென் என்று சொல்லி தான் விண்ணுலக மகிமையை துறந்து மண்ணில் மனிதனாக பிறந்தார். ஆமென் என்று சொல்லி தான் சிலுவை பாடுகளை ஏற்று கொண்டார்.
“என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்.  ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்”  என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.✠ (மத் 26 : 38)  எனவே தந்தையின் விருப்பம் நிறைவேற்றவே இயேசு ஆமென் என்ற வார்த்தையை உபயோகிக்க அவரது பெயரும்  ஆமென் என்றே அழைக்கப்பட்ட்து. விண்ணும் மண்ணும் தோன்றும் முன்னே இப்பெயர் இயேசுவிற்க்கு வைக்கப்பட்டது. இயேசு தன் வாழ்நாளில் என்றுமே தன்னை இயேசு என்று சொல்லி கொண்டது இல்லை. ஆனால் திருவெளிப்பாட்டில் இயேசுவே தன் பெயரை ஆமென் என்றே வெளிப்படுத்தியுள்ளார்.
நாமும் தெரிந்தோ தெரியாமலோ நம் ஜெபவேளையில் இயேசுக் கிறிஸ்துவின் பெயராலே  என்று சொல்லி இயேசுவின் உண்மை பெயரான  *ஆமென்*  என்ற பெயரையே உறுதி படுத்துகின்றோம்.  திருப்பலியிலும் கூட கிறிஸ்துவின் சரீரம் என்று குருவானவர் கூறி  இயேசுவின் உடலை நாம் பெரும் போதும் "" ஆமென்'' என்று சொல்லியே பெறுகின்றோம்.
ஒரு ரகசியம் உங்களின் துன்ப வேளையிலும், வேதனைகளிலும்  என்ன செய்வோம் என்று தவிக்கும் போது  நீங்கள் இயேசுவின் பெயரான  ஆமென்  என்று சொல்லுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை காண்பீர்கள் '''''''''''' ஆமென் ''''''''''''