திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள்
கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது, இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையில் அவ்வப்போது பெரும் பிளவுகள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.
மார்சியன் (Marcionism)
கி.பி. 144 அளவில் மார்சியன் என்பவர் ஒரு பிளவுக்கு அடிகோலினார். கிறித்தவ சபை பழைய ஏற்பாட்டைப் புறக்கணித்து, புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் வாதாடினார். அவரது கொள்கை (Marcionism) திருச்சபையால் கண்டிக்கப்பட்டது.
"ஆரியுசு கொள்கை" (Arianism)
கி.பி. 318இல் ஆரியுசு (Arius) என்பவர் இன்னொரு பிளவுக்கு வழிவகுத்தார். "ஆரியுசு கொள்கை" (Arianism) என்று அழைக்கப்படும் இக்கோட்பாட்டின்படி, கிறித்தவம் "தந்தை" என்று அழைக்கும் கடவுள் தம் "மகன்" இயேசுவைவிட உயர்ந்தவர். தந்தைக் கடவுள் தொடக்கமும் முடிவும் இன்றி எக்காலமும் இருப்பவர்; ஆனால் "மகன்" என்னும் இயேசு தந்தையால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெய்வப்பண்போடு "படைக்கப்பட்டார்"; படைப்புப் பொருள் என்னும் விதத்தில் இயேசு தம்மைப் படைத்த தந்தையை விடக் குறைந்தவரே. - திருச்சபை இக்கொள்கையைக் கண்டித்தது. திருச்சபைக் கொள்கைப்படி, இயேசு தம் தந்தையாகிய கடவுளோடு எந்நாளும் இருந்துவருகிறார். இருவரிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. இருவரும் கடவுள் தன்மையில் ஒருவரொருவருக்கு சமநிலையில் உள்ளனர். இயேசு தந்தையின் படைப்பு என்பது தவறு. இயேசு பற்றிய சரியான பார்வையை கி.பி. 325இல் கூடிய முதலாம் நிசேயா சங்கம் வரையறுத்தது.
"கிழக்கு-மேற்கு பிளவு" (East-West Schism)
கி.பி. 1054இல் "பெரும் பிளவு" ("Great Schism") என்று அறியப்படுகின்ற "கிழக்கு-மேற்கு பிளவு" (East-West Schism) நிகழ்ந்தது. கி.பி. 70இல் எருசலேம் நகர் அழிந்ததிலிருந்தே கிறித்தவத்தின் மைய இடம் உரோமையாக மாறிற்று. அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா என்னும் பெருநகர்களில் கிறித்தவம் வலுப்பெற்றிருந்த போதிலும் உரோமையின் முக்கியத்துவம் மேலோங்கியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. உரோமைப் பேரரசின் தலைநகர் என்னும் அளவிலும், தொடக்க காலக் கிறித்தவக் குழு உரோமையில் குடியேறியிருந்தது என்னும் அளவிலும் உரோமை முக்கியத்துவம் பெற்றது. மேலும் தொடக்க காலத் தலைவருள் ஒருவராகிய புனித பவுல் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்தார். அதுபோலவே புனித பேதுருவும் அங்கு இறந்தார். பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதல்வராகக் கருதப்பட்டார்; உரோமையின் ஆயராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே அவரின் வழிவந்த உரோமை ஆயர்கள் பிற கிறித்தவக் குழுக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உரோமை நகர் படிப்படியாக முக்கியத்துவம் இழந்த காலகட்டத்தில் உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பைசான்டியம் (Byzantium) முக்கியத்துவம் பெற்றது. அங்கே கான்சுதாந்திநோபுள் (Constantinople) என்னும் புதிய துணைத் தலைநகர் உருவாயிற்று. அந்நகரும் கிறித்தவ சபைகளுள் வலிமை பெற்றது. ஆனால் மேற்குப் பகுதியில் அமைந்த உரோமைக்கும் கிழக்குப் பகுதியில் அமைந்த கான்சுதாந்திநோபுளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு இறையியல் காரணங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிய இழுபறி 1054இல் பெரும் பிளவாக வெடித்தது. திருச்சபையும் கிழக்கு-மேற்கு என்று பிரிந்தது. மேற்கு சபை "உரோமை கத்தோலிக்க திருச்சபை" என்றும் கிழக்கு சபை ஆர்த்தடாக்சு திருச்சபை அல்லது மரபுவழி திருச்சபை (Orthodox Church) என்றும் பெயர் பெற்றன.
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation)
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.
சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.
கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும். முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.
சூழல்
முதன் முதலில் கத்தோலிக்க திருச்சபையின் சில குருக்கள், திருச்சபையின் சில அதிகாரிகள் செய்த செயல்களை கண்டிக்கத் துவங்கப்பட்டது சீர்திருத்த இயக்கம் ஆகும். முதன் முதலில் பலன்களைக் குறித்து மார்ட்டின் லூதர் கேள்வி எழுப்பினார். ஆதலால் அவர் 3 ஜனவரி 1521 திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இதுவே கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட முக்கிய காரணமாகும். லூதருக்கு முன்பே ஜான் விக்லிஃப் மற்றும் ஜேன் கஸ் என்பவர்கள் திருச்சபையினை சீர்திருத்த முயன்றனர் என்பது குறிக்கத்தக்கது.
31 அக்டோபர் 1517இல் விடென்பெர்க், சேக்சோனியில் துவங்கியது இவ்வியக்கம். சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார். இவற்றில் திருச்சபையையும், அதன் மேல் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தையும் பலன்கள் விற்பனையையும், உத்தரிப்பு நிலைக்குறித்த திருச்சபையுன் போதனைகளையும் அவர் கண்டித்து இருந்தார். 1517-1521க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மரியாள் குறித்த கத்தோலிக்க நம்பிக்கை, புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டுகள், அருட்சாதனங்களின் நிலை, துறவு நிலை, கற்பு நிலை, சமயம் சார்ந்தவற்றில் அரசியல் குறுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க்கத் தொடங்கினார். இவர் அகுஸ்தீன் சபை குருவாக இருந்ததால் ஹிப்போவின் அகஸ்டீனுடைய படிப்பினைகள் பலவற்றிற்கு புது விளக்கம் அளித்தார்.
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிரிந்து போகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் கால்வினும் என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிறுவினர். ஆங்கிலிக்கம் இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் கத்தோலிக்க மறுமலர்ச்சி விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.
கிறித்தவச் சீர்திருத்த இயக்கமும் அச்சு இயந்திரமும் மக்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் பயனாக பலர் கருதுகின்றனர். 1534இல் லூதர் வெளியிட்ட செருமனிய விவிலியம் பாமர செருமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்ததது அவரின் இயக்கத்திற்கு பெரிதும் உதவியது.
சமய சீர்திருத்தத்திற்கான காரணங்கள்
போப்பாண்டவரின் தலைமையின்கீழ் செயல்பட்டுவந்த கிறிஸ்துவ திருச்சபையானது தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்று விளங்கியது. இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய முறையில் திருச்சபையானது ஒரு நிலமானிய நிறுவனமாக வளர்ந்து, எண்ணற்ற நிலத்தையும் வளத்தையும் கொண்டு காணப்பட்டது. அதேவேளையில், போப்பாண்டவர்கள் அரசியல் செல்வாக்குகள் அதிகம் பெற்று, அரசியல் நடவடிக்கைகளில் தலையீடு செய்தனர். மேலும், தங்களது ஆன்மீகப் பணியையும் புறக்கணித்து வந்தனர். குருமார்களுடன் சேர்ந்து ஆடம்பர வாழ்க்கையில் தம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். கி. பி. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆறாம் அலெக்சாண்டர், இரண்டாம் ஜூலியஸ், பத்தாம் லியோ முதலான போப்பாண்டவர்கள் திருச்சபையின் மதிப்பு, கண்ணியம் ஆகியவற்றைச் சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மறுமலர்ச்சி இயக்கம் மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்திருந்தது. விவிலியத்தை அவர்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தனர். அதன் காரணமாக, திருச்சபை மற்றும் குருமார்களின் செயற்பாடுகள் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதை மக்கள் உணரத் தொடங்கினர். சீர்திருத்த இயக்கம் உருவாவதற்கு முன்னரே, பல்வேறு இலக்கியச் சிந்தனையாளர்கள் திருச்சபையில் காணப்பட்ட ஆடம்பர வாழ்க்கை மற்றும் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்க்கத் தொடங்கியிருந்தனர்.
சீர்திருத்தவாதிகளின் நிலை
ஆங்கிலேயரான ஜான் வைகிளிப் (1330 - 1384) என்னும் சிந்தனையாளர் போப்பாண்டவரின் அதிகாரத்தையும் பிற குறைபாடுகளையும் விமர்சனம் செய்தார். மேலும், விவிலியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால், இவர் சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்பட்டார்.
அதுபோல், எராஸ்மஸ் (1466 - 1536) என்பவர், தன்னுடைய முட்டாள்களின் கப்பல் என்னும் புத்தகத்தில் மத குருமார்கள் கடைப்பிடித்துவந்த மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டித்து எழுதியிருந்தார். இந்த நூல் கி. பி. 1509 இல் பதிப்பிக்கப்பட்டது.
போஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் (1369 - 1415) என்பார் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அரும்பாடுபட்டார். ஹஸ்சின் எழுத்துகள் திருச்சபையினரால் கடும் கண்டனத்திற்கு ஆளாகின. மேலும், அவர் திருச்சபைக்கு எதிரான குற்றங்களுக்காக உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டார். இத்தகைய முன் முயற்சிகள் பதினாறாம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கின.
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம்
இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி தொடக்கத்தில் மார்டின் லூதர்கிங்கிற்கு எதிரான போப்பாண்டவரை ஆதரித்து வந்தார். இதன்காரணமாக, அவர் சமயக் காவலர் எனப் போப் பத்தாம் லியோவால் போற்றப்பட்டார். இருவருக்குமான இந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்காமல் முறிந்துபோனது. எட்டாம் ஹென்றி அரசியை மணவிலக்கு செய்துவிட்டு, ஆன்பொலின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இத்திருமணத்திற்கு போப் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, பாராளுமன்றத்தின் உதவியை நாடினார் ஹென்றி. இவரது இந்த நடவடிக்கைக் காரணமாக, இங்கிலாந்து பாராளுமன்றம் ஆதிக்கச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, மன்னர் இங்கிலாந்துத் திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இந்த புதிய திருச்சபை ஆங்கிலிக்கத் திருச்சபை என்றழைக்கப்பட்டது. எட்டாம் ஹென்றி கத்தோலிக்கக் கோட்பாடுகளில் எந்தவித முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆறாம் எட்வர்டு ஆட்சிக் காலத்தில்தான், இத்திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியது. மேலும், வழிபாட்டு விதிமுறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
விளைவுகள்
சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக கிறிஸ்துவ சமயத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டண்டுகள் என்று இரு பிரிவினர் உருவாயினர். இந்த வேறுபாட்டால் சமயப் பாகுபாடுகளும், ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவில் சமயம் சார்ந்த போர்களும் ஏற்பட்டன. விவிலியம் நூலைப் படித்து சமயக் கருத்துகளின் பயன்பாடுகளை மக்கள் உணர்ந்து கொண்டனர். புரொட்டசஸ்டண்டுகள் விவிலிய விளக்கங்களைத் தம் விருப்பம்போல் புரிந்துகொண்டனர். இதனால் சுய சிந்தனை பெருகியது. இதன்காரணமாக, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகள் வளரத் தொடங்கின. திருச்சபையில் மேற்கொள்ளப்பட்ட மக்களாட்சி நடைமுறைகளால் தேசிய, குடியரசு கருத்துகள் பெருகின. அதேசமயம், தங்களுக்கான திருச்சபைகளைப் பல்வேறு நாடுகள் ஏற்படுத்திக்கொண்டன. தேசியத் திருச்சபைகள் போப்பாண்டவரின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. புரோட்டஸ்டன்ட் மற்றும் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, திருச்சபை தூய்மைப்பட்டது. உயரிய ஒழுக்க நெறிகள் பின்பற்றப்பட்டுப் போதிக்கப்பட்டன.
முடிவும் தாக்கமும்
முப்பதாண்டுப் போரில் (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.
1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு டென்மார்க், சுவீடன் மற்றும் பிரான்சு ஆதரவளித்தது. எசுப்பானியா, ஆசுதிரியா, செருமனியின் பெரும்பகுதி மற்றும் இத்தாலியில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக பலர் நம்பினர். இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.
வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு அரசும் தத்தம் நாட்டின் சமயத்தினை முடிவு செய்யவும்
தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது
இது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட் இதனை ஏற்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர். ஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயக்கத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுள் மொராவியம் மற்றும் மெதடிசம் குறிக்கத்தக்கன. மக்ஸ் வெபர் சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாகக் கூறியுள்ளார். இவ்வியக்கதின் தாக்கம் அறிவொளிக் காலத்திலும் பகுத்தறிவியத்திலும் காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
மேற்கூறிய பிளவுகளுக்கு நடுவிலும் கத்தோலிக்க சபை உலக வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றிவந்துள்ளது. அச்சபை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பரவுவதற்கு வழிவகுத்தது. மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற பகுதிகளிலும் கிறித்தவம் பரவ கத்தோலிக்க திருச்சபை பெரும் தூண்டுதல் அளித்தது. இச்சபை சாதாரண மக்களும் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி உலகின் பல பகுதிகளில் கல்விக் கூடங்களையும் பல்கலைக் கழகங்களையும் நிறுவியது. நோயாளரின் பராமரிப்புக்காக மருத்துவ மனைகளை ஏற்படுத்தியது. மேலை நாடுகளில் துறவியர் இயக்கம் தோன்றவும் அதன்மூலம் கல்வியறிவு மற்றும் தொழிலறிவு வளரவும் உதவியது. பல்வேறு கவின்கலைகள், இசை, இலக்கியம், கட்டடக்கலை, அறிவியல் ஆய்வுமுறை, நடுவர்குழு வழி நீதி வழங்கும் முறை ஆகியவற்றை வளர்த்தெடுத்தது. மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்க மறுத்தோரைத் தண்டிக்கும் வழியாகவும், சிலுவைப் போர்கள் நிகழ்த்தியதன் வழியாகவும் உரோமை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் குறைபாடுள்ளதாகச் செயல்பட்ட சூழ்நிலைகளும் உண்டு.
No comments:
Post a Comment