சிலுவையின் நிறம்!!
சிவப்பு! நீலம்! வெள்ளை!!
"பின்பு இயேசு அனைவரையும் நோக்கி, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு பின்பற்றட்டும்' என்றார்" - லூக். 9:23
இயேசுவின் சீடர்களையும், சிலுவையையும் பிரிக்க முடியாது. கிறிஸ்தவர்களுக்கு அழகு சேர்ப்பது சிலுவை தான். சிலுவைகளும், துன்பங்களும் ஒன்றல்ல. இந்த இரண்டையும் சிறிது வித்தியாசப்படுத்தி பார்ப்பது நல்லது. துன்பங்கள் நம்மைப் பக்குவப்படுத்த, பலப்படுத்த வாழ்க்கையின் எதார்த்தங்களைச் சந்திப்பதற்கு வருபவை. சிலுவைகள் இயேசுவின் பொருட்டு நமக்கு அருளப்படுபவை. இந்த சிலுவைகள் தான் நமக்கு மீட்பையும் நிலைவாழ்வையும் தருபவை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு கிறிஸ்தவளும் அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவிகளின் வாழ்வு இந்தச் சிலுவைகளை ஊடறுத்துச் செல்ல வேண்டும். சிலுவையே இல்லாத கிறிஸ்தவன் உண்மையான இயேசுவின் சீடனாக இருக்க முடியாது. சிலுவைகளின் மூன்று நிறங்கள். அதில் நமது சிலுவையின் நிறம் என்ன??
சிவப்பு சிலுவை:
மறைசாட்சிகள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் திருச்சபைக்கு வித்தாக இருக்கிறது. இயேசுவுக்காக, நற்செய்தி மதிப்பிடுகளுக்காக இரத்தம் சிந்தி மறைச்சாட்சிகளாக மரிப்பது சிவப்புச் சிலுவையாகும். திருச்சபை மறைச்சாட்சிகளின் இரத்தத்தால் தோய்த்து எடுக்கப்பட்டது. மறைச்சாட்சிகளின் பாடுகளாலும், இரத்தத்தாலும் திருச்சபை ஊக்கம் பெருகிறது. உள்நாட்டு போரினாலும், இஸ்லாமியப் பிரிவினைவாதிகளாலும் நிர்மூலமாகிக் கொண்டு வருகிறது சீரியா. இம்மண்ணிலே நரகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் சிரியாவிற்குச் சென்றால் போதும். சிரியா நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் ISIS தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனுபவிக்கின்ற சிலுவையின் நிறம் சிவப்பு. மலைவாழ் பழங்குடியின மக்களுக்காகப் போராடிய அருட்சகோதரி ராணி மரியா 52 முறை கத்தியால் குத்தப்பட்டு மறைச்சாட்சியாக மரித்தார். இவர் அரவணைத்த சிலுவையின் நிறம் சிவப்பு. 2016 இல் ஏமன் நாட்டில் MC அருட்சகோதரிகள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் அனுபவித்த சிலுவையின் நிறம் சிவப்பு. உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கிறிஸ்தவன் / கிறிஸ்தவள் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைச்சாட்சிளாக மரிக்கின்ற போது இவர்கள் அனுபவிக்கின்ற சிலுவையின் நிறம் தான் சிவப்பு!!
நீலச் சிலுவை:
நம் உடம்பின் மேல்புறத் தோலில் தெரியும் நீல நிறம் நோயின் அறிகுறி, நம் உடம்பில் நச்சுத் தன்மை கலந்து இருக்கிறது என்பதை நீல நிறம் வெளிகாட்டும். இயேசுவுக்குச் சான்று பகர பல்வேறு புற வெளிப்பாடுகள் இருக்கின்றன. நம் உடலில் ஏற்படுகின்ற தீராத வியாதிகளை ஏற்றுக் கொண்டு கடவுளை மகிமைப்படுத்துவது. இயேசு அனுபவித்த அதே வலியை, வேதனையை நம் உடலில் தாங்கிச் சிறிய சிறிய தியாகத்தினால் கடவுளை மகிமைப்படுத்துவது நீலச் சிலுவையாகும். பொதுநிலையினர் மட்டுமல்லாது, அர்ப்பணிக்கப்பட்ட துறவறத்தார் புற்று நோய், எலும்புருக்கி நோய், இன்னும் மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத கொடுரமான நோய்களை ஏற்றுக் கொண்டு கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள். இத்தகைய சிலுவைகளின் நிறம் நீலம். இப்பேர்ப்பட்ட தீராத வியாதிகளை யாரும் விரும்பி தேர்ந்தெடுப்பது இல்லை. ஆனால் வந்த வியாதிகளை இறையரசிற்காக கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தை இயேசுவின் புனித தெரெசா தனது 24 வது வயதில் எழும்புருக்கி வியாதியால் இறந்தார். ஆனால் அவர் வாழ்ந்த போது அவர் எழுதிய புத்தகங்கள் பல பாவிகள் மனம் திருந்தி கடவுளிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. சாதாரண தெரெசாவாக வாழ்ந்த அவர் புனித தெரெசாவாக உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் புனித தெரெசாவுக்கு "இறைப்பணியின் பாதுகாவலி" என்ற சிறப்பை வழங்கினார். நம் மண்ணில் வாழ்ந்த புனித அல்போன்சா தன் சிறிய வயதில் எண்ணற்ற வியாதிகளைத் தாங்கிக் கொண்டு, புண்ணிய வாழ்வைத் தேர்ந்துக் கொண்டார்.
இதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், நமக்கு வரும் உடல் உபாதைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும் தந்தையாம் கடவுள் தன் மகன் இயேசுவின் சிலுவை பாடுகளில் நாமும் பங்குக் கொள்ள பொன்னான வாய்ப்பு கொடுக்கிறார் என்று மகிழ்ச்சியடைய முயற்சி செய்து நமது உடல் வலியை தந்தையாம் கடவுளுக்கு இயேசுவின் சிலுவை பாடுகளுடன் சேர்த்து ஒப்புக் கொடுப்போம்.
வெள்ளைச் சிலுவை:
ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் இயேசுவை உண்மையாகவும், நெருக்கமாகவும் பின்பற்ற விரும்புகிறோம். இயேசு கூறிய மதிப்பீடுகளை அச்சுப் பிசகாமல் அப்படியே வாழ்வாக்க விரும்புகிறோம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அப்படி அமைவதில்லை. இயேசுவைப் பின்பற்ற ஒரு படி முன்னேறும் போது பல தீய சக்திகள் நம்மைப் பின்னோக்கி இழுக்கின்றன. இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவதன் பொருட்டு பல மனம் சார்ந்த வேதனைகளை அனுபவிக்க நேரிடும். மன உளச்சல்கள், தவறாகப் புரிந்துக்கொள்ளுதல், துரோகம், உதாசீனப்படுத்துவது, புறம்பேசுவது, நற்பெயரைக் கெடுப்பது, அவமானங்கள், நாம் செய்கின்ற நல்ல பணிகளை விமர்சிப்பது, மொட்டை கடிதம் போடுவது, சாதிய வேறுபாடுகள்........ இதுபோன்ற எதிர்மறையான தாக்கங்களை நாம் அனுபவிப்பது வெள்ளைச் சிலுவையாகும். இத்தகையான எதிர்மறையான தாக்கங்கள் வெளி உலகத்திலிருந்தும், கிறிஸ்தவச் சமுதாயத்திடமிருந்தும், துறவற அமைப்புகளிடமிருந்தும் வரலாம்.
நம் அருகில் இருப்பவர்களே நமக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதுண்டு. இறைப்பணியில் முழு வீச்சாக களத்தில் இறங்கிப் பணி செய்துக் கொண்டிருப்போம். ஆனால், அதற்கு இடையூறாகப் பல சக்திகள் நம்மை முடக்கிப்போடும். இயேசுவின் சீடர்கள் இயேசுவின் பொருட்டும், நற்செய்தியை வாழ்வாக்குவதன் பொருட்டும் மக்கள் பணியில் தம்மையே கரைத்துக் கொள்ளும்போதும் ஏற்படும் அவமானங்கள், மன உளைச்சல்கள், யாரிடமும் சொல்லி அழமுடியாத வேதனைகள்...... இவற்றை எல்லாம் வெள்ளைச் சிலுவை என்கிறோம். "எனது பெயரின் பொருட்டு எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் இறுதிவரை மன உறுதியோடு இருப்பவர் மட்டும் மீட்பு பெறுவர்" - மாற்கு 13:13.
முதியவர்களுக்குப் புகலிடம் கொடுத்த அருட்தந்தை டாம் SDO தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டார். இவர் அனுபவித்த சிலுவையின் நிறம் வெள்ளை. வட இந்தியாவில் மக்கள் பணி செய்த அருட்தந்தை அருள்தாஸ் இந்து மதவாதிகளால் நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தப்பட்டார். இவர் அனுபவித்த சிலுவையின் நிறம் வெள்ளை.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் இயங்கும் புனித வளனார் கருணை இல்லத்தில் சாகும் தருவாயில் இருக்கின்ற முதியவர்களுக்குப் புகலிடம் கொடுத்தார் அருட்தந்தை தாமஸ். கருணை இல்லத்தின் பெயரையும், அருட்தந்தையின் பெயரையும் கெடுத்து களங்கப்படுத்தியது சமூக ஊடகங்களும் இந்து மதவாதிகளும். இந்த அருட்தந்தை அனுபவித்த சிலுவையின் நிறம் வெள்ளை.
இயேசுவின் உண்மையான சீடர்கள் ஒவ்வொருவரும் இந்தச் சிலுவைகளில் ஏதேனும் ஒன்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் இந்தச் சிலுவைகள் தான் நமக்கு மீட்பையும், நிலை வாழ்வையும் கொடுப்பது.
"சிலுவைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளும்போது நாம் இயேசுவின் பாடுகளை நம் உடலில் தாங்கிக் கொள்கிறோம். இந்த சிலுவைகள் நமக்கு மகிழ்ச்சியையும், கிறிஸ்துவின் பாடுகளில் பங்காளர்களாகவும் நம்மை மாற்றுகிறது" - பில. 3:11.
சிலுவையே வாழ்க!!
எங்கள் நம்பிக்கை நீயே!!
சிலுவைப் பாடுகள் உள்ளத்தை நிறைக்க!!
நல்லவர்க்கு அருளை நல்கிடும் சிலுவை!!
பாவிகளின் பாவம் போக்கிடுவாயே!!!!
நன்றி:
நம் வாழ்வு இதழ் - 25.03.2018
அருட்சகோ. J,எலியாஸ் SH
No comments:
Post a Comment