†இறைவன் வரைந்த ஓவியம் - திருக்குடும்பம்†
அன்புள்ள கணவன்...
பண்புள்ள மனைவி...
கீழ்படியும் பிள்ளைகள்... இவையே திருக்குடும்பத்தின் ஆணிவேர்"
'ஓவியன் ஒருவனுக்கு உலகில் தலை சிறந்த ஒர் ஓவியம் வரைவதற்கு நீண்ட நாள் ஆசை. எனவே சிறந்த ஒரு பொருளையும், இடத்தையும், தேடி அலைந்தான்.
அப்போது ஒரு குருவைச் சந்தித்து, 'உலகில் சிறந்த உயர்ந்த பொருள் எது?" என்று கேட்க. அவர் 'விசுவாசம்" என்றார். பின் ஒர் இராணுவ வீரரிடம் கேட்க அவர் 'அமைதி, சமாதானம்" என்றார். மூன்றாவதாக ஓர் இளம் பெண்ணிடம் கேட்க அவள் 'அன்பு" என்றாள். வீட்டிற்கு திரும்பி வருகின்றான் அப்போது பிள்ளைகளின் கண்களில் விசுவாசத்தையும், நடத்தையில் கீழ்ப்படிவையும், தன் மனைவியின் கண்களில் அன்பையும், அணுகுமுறையில் பண்பான பணிவையும், இவ்வாறு வீட்டில் அமைதியையும், பார்க்கின்றான். எனவே குடும்பமே உலகில் தலை சிறந்த பொருள் என உணர்ந்து 'தம் குடும்பத்தையே ஓவியமாக வரைகின்றான்.
திருமணத்தால் குடும்பம் அமைகின்றது. குடும்பத்தில் தான் மனிதவாழ்வு மலர்கின்றது. அந்த மலர்வுக்கு அன்பே அடிப்படைக் காரணமாக அமைகிறது. அன்பை அடிப்படையாக கொண்டு வாழுகின்ற குடும்பத்தை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். இப்படியாக அன்பில் கட்டப்பட்டு, பாசத்தில் உருவாக்கப்பட்டு, மனித வாழ்வு மலர்ந்த குடும்பமாக வாழ்ந்ததுதான் திருக்குடும்பம்.
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"
"குடும்பம் ஒரு கோயில்"
"குடும்பம் ஒரு மலர்த்தோட்டம்"
"குடும்பமே இறைவன் வாழும் இல்லம்"
"குடும்பம் ஒரு சின்ன சமுதாயம்"
"குடும்பம் கடவுளின் கொடை"
என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். இவ்வாறான நல்லதொரு குடும்பமாக இறைபிரசன்னம் நிறைந்த குடும்பமாக விளங்கியதே மரியாள் சூசை, இயேசு இணைந்த குடும்பமாகும். இக்குடும்பத்தில் வளமை பொங்கவில்லை, செல்வம் செழிக்கவில்லை, இருப்பினும் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தது. ஏனென்றால் அங்கு கடவுளின் பிரசன்னமும், கடவுள் பயமும் இருந்தது.
எமது தாய் திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவின் அடுத்த வாரத்தில் திருக்குடும்ப பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இயேசு மரி சூசை எனும் திருக்குடும்பம், குடும்ப வாழ்வுக்கு முன்னோடியாக இருக்கின்றனர். இன்றைய குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாற குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கு வேண்டும் என்பதைக் திருக்குடும்பம் அழகாக வாழ்ந்து காட்டியிருக்கின்றது.
✠ புனித சூசையப்பர்:
1. நீதிமான் - மத் 1: 19
2. மரியாளை ஏற்றுக் கொண்டார் - மத் 1:24
3. கடின உழைப்பாளி - மத் 13:55
விவிலியத்தில் இவரைப்பற்றி அதிகமாக கூறப்படாவிட்டாலும், தொழிலாளர்களின் பாதுகாவலராக, திருச்சபை குடும்பங்களின் பாதுகாவலராக இறைத்திட்டத்தில் செயற்படுபவராக காட்டப்படுகின்றார்.
✠ அன்னை மரியா:
1. ஆண்டவருக்கு அடிமையானவர் - லூக் 1:38
2. கணவனை நேசித்து அவரோடு பெத்லகேமிற்குச் சென்றார் - லூக் 2:5
3. பக்தியுள்ளவர். அதனால் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு தம் கணவரோடு எருசலேம் ஆலயம் சென்றவர் - லூக் 2: 42
இத்தகைய பண்புகளோடு நல்ல தாயாக, இன்ப துன்பங்களை ஏற்றுக் கொள்ளும், பெண்ணாக அடக்கம் அமைதி இறையருள் பெற்றவராக வாழ்ந்து வந்தவர்.
✠ இயேசு:
1. பெற்றோருக்கு பணிந்து மதித்து வாழ்ந்தவர் - லூக் 2:51
2. அனைவருக்கும் உகந்தவராக வாழ்ந்தவர் - லூக் 2:52
3. ஞானம் பெற்றவராய் இருந்தார். - லூக் 2:40
இவ்வாறு இயேசு மரி சூசை கொண்டிருந்த பண்புகளை வாழ்வாக்கும் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமாகும். ஆகவே எமது குடும்பங்களை நினைப்போம்.
எனது குடும்பத்தில் உறவுகள் சிறந்து விளங்குகின்றதா? ஒருவருக்கொருவர் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளை குடும்பங்கள் கட்டியெழுப்புகின்றதா?
✠ இன்றைய குடும்பங்களுக்குத்தேவையானது
- ஒருவர் ஒருவரை வாழ்த்துதல்
- பொது இடங்களில் புண்படுத்தாது இருத்தல்
- கணவன் - மனைவி மதித்து வாழ்தல்
- நல்வழிப்படுத்தல்
- ஒருவர் ஒருவருக்கு தியாகம் செய்தல்
- குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தைச் செலவிடுதல்
- தினமும் குடும்பமாக செபித்தல்
✠ குடும்பத்திற்கு தேவையற்றது
- பிறரோடு ஒப்பிட்டு பேசாதிருத்தல்
- பாராபட்சம் காட்டாமல் இருத்தல்
- புறக்கணித்து பேசாதிருத்தல்
- வசதியை வைத்து மதிப்பிடாமல் இருப்பது
ஆகவே இன்றைய குடும்பங்கள் உறவின் பாலங்களாக இருக்கவேண்டும். பகையை பாசத்தால் வெல்ல வேண்டும். இறைபிரசன்னத்தாலும், செபத்தாலும்,அன்புறவாலும் குடும்பத்தை கோயிலாக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு குடும்பமும் இறைவன் வரைந்த ஓவியமாக மாறும்.
நன்றி.
திருக்குடும்பம் பெருவிழா வாழ்த்துக்கள்.