அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, December 8, 2019

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பொந்தியு பிலாத்து சீசருக்கு அனுப்பிய அறிக்கை...

பாகம்: 5.

இயேசுவுக்கு அசம்பாவிதமான உபத்திரவம் ஏற்படக்கூடும் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டது. எருசலேமிலே தீர்க்கத்தரிசிகளைக் கல்லெறிந்து கொலை செய்வது ஒரு புதிய காரியமல்ல. இராயருக்கும் மனு தாக்கல் செய்யப்படும். எப்படியிருந்தாலும், என்னுடைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. Parathian யுத்தம் முடிந்தவுடன் ஆவன செய்யப்படும் என்று வாக்களித்திருந்தார்கள்.

குழப்பங்களைக் கட்டுப்படுத்தும் சிரமங்களைத் தவிர்க்கவும், பட்டணத்தின் அமைதியை நிலை நிறுத்தவும், அரசாங்கம் இழிவான நிலைக்கு வராமலிருக்கவும் நான் ஒரு முறையைக் கையாண்டேன். அதாவது, அரசாங்க காரியாலயத்திற்கு வருமாறு இயேசுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். இயேசு வந்தார். என்னுடைய சரீரத்தில் ஸ்பானிய-ரோம இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. நசரேயன் வந்த பொழுது நான் என் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கால்கள் பளிங்குத் தரையில் இரும்புச் சங்கிலியினால் பிணைக்கப்பட்டது போன்ற உணர்வுடன், நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்ந்தேன். என் ஒவ்வொரு அவயவமும் நடுங்கினது. இவ்வளவிற்கும் நசரேயன் குற்றமற்றவராய் அமைதியாயிருந்தார்.

“நான் இங்கு இருக்கிறேன்”, என்று சொல்வதற்கு அடையாளமாய், அவர் என் அருகில் வந்தார். ஆனாலும் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து எழவில்லை. நான் இந்த அதிசயமான, ஆச்சரியப்படத்தக்க இயேசுவைக் கண்டு, பயந்து ஆராய்ந்து கொண்டிருந்தேன். எண்ணற்ற சித்திரக்காரர்கள் வரைந்திருக்கும் அநேகக் கடவுள்களின் ஓவியங்களையும், வீரர்களின் ஓவியங்களையும் மனதில் ஆராய்ந்து, இந்த மகானை ஒருவரும் ஓவியமாக்கவில்லையே என்று மிகவும் நடுங்கி, அவரின் அருகில் செல்ல அஞ்சினேன். கடைசியில், தைரியத்தை வரவழைத்து, “இயேசுவே”, என்றேன். என் நாக்கு அவரின் பெயரை உச்சரிக்க இயலாமல் தடுமாறியது. “நாசரேத் ஊரானாகிய இயேசுவே, கடந்த மூன்று ஆண்டுகளாய் நான் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தேன். அதற்காக நான் சிறிதேனும் வருத்தம் அடையவில்லை. தங்களுடைய வார்த்தைகள் ஞானிகளின் வசனங்களாயிருக்கின்றன. தாங்கள் சாக்ரடீஸ் அல்லது பிளேட்டோ  இவர்களுடைய சரித்திரத்தைப் படித்திருக்கிறீர்களா? அந்த எல்லா தத்துவ ஞானிகளையும் விட தங்களுடைய உரையாடலில் கெம்பீரமான சாந்தம் நிறைந்திருப்பதால், அவர்களைவிட தாங்கள் மேலான ஸ்தானத்தில் வீற்றிருக்கிறீர்கள். இதைப் பற்றி ரோமாபுரி அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறேன்.

நான் அந்த அரசாங்கத்தின் எளிய பிரதிநிதியாக இங்கிருக்கிறேன். தங்களுக்கு உரித்தான எல்லா சுதந்திரங்களையும் வழங்கினதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் தங்களுடைய பிரசங்கங்கள் சக்தியுள்ளதாய், நாளடைவில் வளர்ந்து வந்து விரோதிகளை உண்டாக்கியிருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சாக்ரடீசுக்கு பகைவர்கள் உண்டாகி அவர்களால் அவர் மரணமடைந்தார். தங்களுக்கு அதைவிட பலமடங்கு சக்தி வாய்ந்த விரோதிகள் உண்டாயிருக்கிறார்கள். அதற்குக் காரணம் உங்களுடைய பிரசங்கங்கள். அவைகள், அவர்களுடைய குணாதிசயங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தின. மேலும், தங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததினால், என் மேலும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். நான் மறைமுகமாய்த் தங்களோடு சேர்ந்து கொண்டு எபிரேயர்களுக்குக் கொடுத்திருக்கும் அற்பமான ரோம அரசின் அதிகாரங்களையும் அபகரித்துக் கொள்வதாயும் எண்ணுகிறார்கள். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் (அரச உத்தரவு அல்ல) தாங்கள் எச்சரிக்கையாய், நிதானத்தோடு இனி பேச வேண்டும்.

ஏனெனில், தங்களுடைய சத்துருக்கள் கூடி புத்தியில்லாத ஜனங்களைக் கொண்டு, கிளர்ச்சி உண்டு பண்ணி, என்னை அரச அதிகாரத்தடன் ஏதாவது செய்யும்படி தூண்டுவார்கள் என்று சொன்னதற்கு, நசரேயனாகிய இயேசு சாந்தமாய் அளித்த பதில் என்னவெனில், “உலகத்தின் இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் உண்மையான ஞானத்தினால் உண்டாகவில்லை. மலைப் பள்ளத்தாக்குகளின் நடுவே கரைபுரண்டு பேரிரைச்சலோடு ஓடிவரும் பெரு வெள்ளத்தை நில் என்று சொன்னால் என்ன நடக்கும்? –

பள்ளத்தாக்கிலுள்ள எல்லா மரங்களையும் வேரோடு பெயர்த்துக் கொண்டு போய்விடும் அல்லவா? பெருவெள்ளம் என்ன சொல்லும் தெரியுமா? நான் என்னை சிருஷ்டித்தவருக்கும், இயற்கை விதிகளுக்கும் தான் கீழ்ப்படிவேன். கடவுளுக்கு மாத்திரம் தான் பெருவெள்ளம் எங்கே ஓடுகிறதென்று தெரியும். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், “சாரோனின் ரோஜா மலருமுன் குற்றமற்றவரின் உதிரம் பூமியில் சிந்தப்படும்”, என்றார்.

நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, வேகத்தோடு, “உங்களுடைய உதிரம் சிந்தப்பட மாட்டாது”, என்று சொன்னேன். என் மனதில், தங்களின் ஞானத்தை சீர்தூக்கிப் பார்க்கையில், குழப்பக்காரரும், பெருமைக்காரரும், ரோம அரசால் அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை அவமதிக்கிறவருமாகிய பரிசேயரைப் பார்க்கிலும் தாங்கள் எவ்வளவோ மேலானவர். அவர்கள், இராயருக்கு விரோதமாய் இரகசியக் கூட்டம் போட்டும், கல்வியறிவு இல்லாத மக்களிடம், “இராயர் ஒரு கொடுங்கோல் மன்னன்,” என்று போதித்தும், தங்களுக்கு அழிவைத் தேடுகிறார்கள். அகம்பாவம் நிறைந்த பிச்சைக்காரர்கள்! ஸைபீரியா தேசத்து ஓநாய்கள்! சில சமயங்களில் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு கொடூரமானச் செயல்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். நான் தங்களுக்கு அவர்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பேன். என்னுடைய அரசாங்கம் தங்களுக்கு, இரவும் பகலும் ஒரு அடைக்கலப் பட்டணமாயிருக்கும்,” என்றேன்.

இயேசுவோ, சாதாரணமாய்த் தலையை அசைத்து, தெய்வீகப்
புன்னகையுடன் சொன்னதாவது, “பூமியிலும், அதன் தாழ்விடம் வரையிலும், மனுசக் குமாரனுக்கு பாதுகாப்பு கிடைக்காத நாட்கள் வரப் போகிறது. வானாதி வானங்களை அவர் சுட்டிக்காட்டி, “நீதிமான்களுக்கு அடைக்கலம் அங்கே இருக்கிறது: தீர்க்கத்தரிசிகளின் புத்தகங்களில் எழுதியிருப்பவை நிறைவேற வேண்டியது அவசியம்,” என்று சொன்னார்.

நான் அவரை, “வாலிபனே,” என்று அழைத்து, “தயவு செய்து என்னுடைய வேண்டுகோளை அரசாங்க உத்தரவாக ஏற்றுக் கொள்வாயாக. இந்த இராஜ்யத்தில் சமாதானத்தை நிறுவும் உத்தரவாதம் என் பொறுப்பில் உள்ளது. உங்களுடைய பேச்சைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறவராய் இருக்க வேண்டும். என்னுடைய உத்தரவை மீறி நடக்காதிருங்கள். மீறினால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே? என்னுடைய சந்தோசம் உங்களோடு இருப்பதாக – போய் வாருங்கள்,” என்றேன்.

அதற்கு அவர், “உலகத்தின் இளவரசே, நான் உலகத்தில் யுத்தம் நடத்த வராமல், சமாதானம், அன்பு, மனுசர் மேல் பிரியம், இவைகளையே கொண்டு வந்திருக்கிறேன். Augustus Ceasar, பிறந்த அதே நாளில் நானும் பிறந்தேன். Augustus, ரோம ராஜ்யத்திற்கு சமாதானம் அளிக்கிறார்.

உபத்திரவங்கள் என்னிடத்திலிருந்து புறப்படாது. மற்றவர்களிடமிருந்து அவைகளை நான் எதிர்பார்க்கிறேன். நான் அவைகளை, என் பிதாவிற்குக் கீழ்ப்படிந்து. அவர் சித்தப்படி ஏற்றுக் கொள்வேன். அவர் எனக்கு வழிகாட்டியாயிருக்கிறார். உங்கள் உலக ஞானத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள். மரண வாசலில் இருக்கும் ஒரு கைதியைக் கைது செய்ய உங்களுக்கு அதிகாரம் கிடையாது,” என்று சொல்லிக் கொண்டே, பிரகாசமான நிழல் போல் அரண்மனையின் திரைச்சீலையின் பின்னால் மறைந்து போனார். அவர் முன்னிலையில் நான் என்னை விடுவித்துக் கொள்ள முடியாத பிரமாண்டமான பாரத்திலிருந்து, விடுதலை பெற்றேன்.

அந்நாட்களில், கலிலேயா நாட்டை ஆட்சி புரிந்த ஏரோதுவிடம், இயேசுவின் விரோதிகள், அவரைப் பழி வாங்கும் நோக்கத்துடன் முறையிட்டார்கள். ஏரோது தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் இயேசுவைக் கொலை செய்ய அனுமதித்திருக்கலாம். ஆனால், ஒருவேளை, தன்னுடைய உயர் பதவியின் நிமித்தமோ, அல்லது பாராளுமன்றம் இச்செயலை விரும்புமோ? அல்லது என்னைப் போல் இயேசுவுக்குப் பயந்துதான் இயேசுவைக் கொலை செய்ய அனுமதியாமலிருந்தாரோ தெரியவில்லை. ஒரு ரோம அதிகாரி யூதர்களோடு ஐக்கியமாய் இருக்கக் கூடாது. முன்பு ஒருமுறை, ஏரோது என் அரண்மனைக்கு வந்திருந்த பொழுது, பல காரியங்களைப் பற்றி பேசிய பின்பு, இந்த நசரேயனைக் குறித்து என் அபிப்பிராயம் என்னவென்று கேட்டார்.

நான் சொன்னதாவது, “இயேசு, என் பார்வையில், பெரிய தத்துவ ஞானிகளில் ஒருவர். அவருடைய பிரசங்கங்கள் குழப்பம் உண்டாக்கக் கூடியவைகள் அல்ல என்றும், ரோம அரசாங்கம், அவர் பேசுகிறதற்கு ஒரு தடையும் விதிக்கத் தேவையில்லை என்றும் சொன்னேன்.” எனக்கு சந்தோசமாய் வந்தனம் செய்து விட்டுச் சென்றார்.

யூதருடைய விசேஷமான பஸ்கா பண்டிகை நெருங்கி வருகிற படியால், எப்பொழுதும் போல், அதைக் கொண்டாட ஆவலாய்க் காத்து இருந்தார்கள். பட்டணம் பெரியக் கூட்டத்துடன் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. நசரேயனைத் தீர்த்துக்கட்டி விட வேண்டுமென்று சிலர் துடித்துக் கொண்டிருந்தனர்;. அவர்கள் ஆலயத்திலுள்ள பொக்கிசத்தைச் செலவு செய்து திரளான ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிறதாக, என்னுடைய ஆட்கள் சொன்னார்கள். அபாயங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு ரோம நூற்றுக்கதிபதி அவமானப் படுத்தப்பட்டான். நான் சிரியா தேசத்து அதிகாரியை எனக்கு உதவி செய்ய, நூறு பேர்கொண்ட ஒரு படையும், குதிரைப் படையும் வேண்டுமென்று எழுதியிருந்தேன். அவர் மறுத்து விட்டார்.

நான் தன்னந் தனியாக, மிகவும் சொற்பமான ஆட்களைக் கொண்ட படையை வைத்து, குழப்பம் நிறைந்த ஒரு பட்டணத்தை அடக்கத் திராணியற்றவனாய்த் திகைத்துக் கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய என்னால் இயலும்?.

அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். அவர்களுக்கு என் பெயரில் நம்பிக்கை கிடையாது. மூன்று பெரிய சதிக் கூட்டங்கள் இயேசுவுக்கு எதிராக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.

முதலாவதாக, சதுசேயரும், ஏரோதியர்களும் இரட்டை நோக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் நசரேயனை மனமார வெறுத்து, ரோம அரசாங்கத்தை அதம் பண்ண இருந்தார்கள். நான் ரோம ராஜ்யத்து மன்னருடைய சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு, பட்டணத்திற்குள் பிரவேசித்ததை, பெரிய குற்றமாக எண்ணியிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் ஆலயத்தின் பொக்கிசத்திலிருந்து பணத்தை எடுத்து வீணாயச் செலவு செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று எண்ணவில்லை. மற்றொரு சம்பவம் என்னவென்றால், நான் ஆலய பொக்கிசத்திலிருந்து பணம் எடுத்து பொது மக்களுடைய அவசரத் தேவைக்காகச் செலவு செய்ய வேண்டும் என்றதை மறுத்து விட்டார்கள். இதுவும் அவர்கள் மனதில் குற்றமாய்க் குடி கொண்டிருந்தது.

பரிசேயர்கள் இயேசுவின் பயங்கர விரோதிகள். அவர்களுக்கு அரசாங்கத்தைப் பற்றிய அக்கறையே கிடையாது. நசரேயனாகிய இயேசு, மூன்று வருட காலமாய், அவர்கள் பயங்கரமாய்ச் செய்து வந்த தப்பிதங்களையெல்லாம் அவர் போன இடங்களிலெல்லாம் கண்டித்துக் கொண்டே வந்தார். இதை அவர்கள், மனதில் பழிவாங்கும் நோக்கத்துடன் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

தனித்து நின்று செயல்பட கோழைத்தனமாயிருந்தபடியால் அவர்கள் சதுசேயரையும், ஏரோதியரையும் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள். மேலும் ஜனக்கூட்டம், சதி ஆலோசனைகளின்படி குழப்பங்கள் உண்டு பண்ணியதால், தங்களுக்கு ஆதாயம் தரும் வழிகளை உண்டாக்கிக் கொண்டார்கள்.

இயேசு பிரதான ஆசாரியன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் மரண தண்டனை விதிக்கப் பெற்றார்;. பின்பு, பிரதான ஆசாரியன், காய்பாவிடம் இயேசுவை அனுப்பி வைத்தான். அவன் தன்னுடையக் கைதியை என்னிடம் அனுப்பி, அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்று ஊர்ஜிதப் படுத்தப் பிரயாசப் பட்டான்.

இயேசு ஒரு கலிலேயன் ஆனபடியால், ஏரோதின் ஆட்சிக்குட்பட்டவர் என்று கூறி அவரை இங்கு அனுப்பினான். தன்னைவிட்டு வேறு எங்காவது போய்த் தொலையட்டும் என்ற நோக்கத்தோடு அவரை இங்கு அனுப்பி வைத்தான். ஜனங்கள் அலை அலையாய் வந்து கூடி விட்டார்கள். யூதேயா நாட்டு ஜனங்கள் யாவரும் திரளாய் வந்து விட்டார்கள். எருசலேம் நகர மலைச்சரிவில் இருந்து பட்டணம்
முழுவதும் ஜனசமுத்திரம் நிறைந்து வழிந்தது.

நான் கால் (Gaul)  தேசத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்திருந்தேன். அவள் பின்னால் நடக்கப் போகும் காரியங்களை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி தனக்கு இருப்பது போல் பாவிப்பாள். அவள், அழுது புலம்பி, என் கால்மாட்டில் வீழ்ந்து, அந்த பரிசுத்தமான மனிதனுக்கு யாதொரு தீங்கும் செய்யக் கூடாது என்று என்னைக் கண்டிப்பாய் எச்சரித்தாள். நேற்று இரவு நான் அவரை ஒரு தரிசனத்தில் கண்டேன். தண்ணீரின் மேல் நடந்து கொண்டிருந்தார்.

காற்றை செட்டைகளாய் பாவித்து மேகங்களின் மேல் பறந்து சென்றார். அவர் புயல் காற்றுடனும், நீரில் வாழும் மீன்களுடனும் சம்பாஷித்தார். எல்லாம் அவருக்குக் கீழ்ப்படிந்தன. பாருங்கள், கெதரோன் மலையிலிருந்து உதிரம் வெள்ளம் போல் புரண்டு வருகிறது. ராயருடைய சிலை முழுவதும் Genocide--ஆல் நிறைகிறது.

அரண்மனையின் தூண்களில் வெடிப்பு ஏற்படுகிறது. சூரியனோ, தன்னை முக்காடு போட்டு மூடிக் கொண்டு, கல்லறையினுள் புலம்பிக் கொண்டிருக்கிறது. ஜயோ! பிலாத்துவே, துன்பங்கள் உன் வாசலண்டையில் காத்துக் கிடக்கிறது. தங்களுடைய மனைவியின் ஆணைக்குச் செவிமடுக்காவிடில், ஒரு ரோம அதிகாரிக்கு நேரிடும் சாபங்களுக்கு ஆளாவீர். சீசருடைய கோபத்திற்கும் உட்படுவீர் என்றாள்.

இந்தத் தருணத்தில், பளிங்கு ஏணிப்படிகள் கூட்டத்தின் பாரச்சுமை தாங்க முடியாமல் முனங்கிற்று. நசரேயன் என்னிடத்தில் கொண்டு வரப்பட்டார். நான் நீதிமண்டபத்திற்கு என்னுடைய காவலருடன் சென்று, அதிகாரத்தோடு, அவர்களிடம், “என்ன வேண்டும்,?” என்று கேட்டேன்.

“நசரேயனைக் கொல்ல வேண்டும்”, என்றார்கள்.
“என்ன குற்றத்திற்காக?”.
“அவன் தேவதூஷணம் சொன்னான். தேவாலயத்தைப் பற்றி தீர்க்கத் தரிசனம் சொன்னான். தன்னை தேவகுமாரன் என்றும், மேசியாவும், யூதருடைய ராஜாவும் நான் தான் என்றும் சொன்னான்”.

“ரோம அரசாங்கம் இந்த மாதிரி குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்காது”, என்றேன்.

“சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”, என்று குழம்பி நின்ற கூட்டத்தினர் கூக்குரலிட்டார்கள்.

கோபாவேசத்தோடு நின்ற ஜனசமுத்திரம் போட்ட கூக்குரலில் அரண்மனையின் அஸ்திபாரமே அதிர்ந்து கொடுத்தது.

இந்த பயங்கர கூட்டத்தின் நடுவில், ஒரே ஒரு ஜென்மம் மாத்திரம் சாந்தமாய், சமாதானத்தோடு நின்று கொண்டிருந்தது! அது நசரேயனாகிய இயேசுவே.!!

எத்தனையோ வழிகளில் நசரேயனைக் காப்பாற்ற நான் முயற்சி செய்தும் தோல்வியுற்றேன். கடைசியில் ஒரே ஒரு வழி மட்டும் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டு அவருடைய உயிரைக் காப்பாற்றலாம் என்று அவர்களிடம் அந்த வழியைக் கூறினேன்.

யூதர்களின் பஸ்கா பண்டிகை தோறும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். ஆகையால், இயேசு என்ற அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை விடுதலை செய்யலாமா?, என்றேன். ஆனால் ஜனங்களோ, “இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்றார்கள்.

நான் திரும்பவும் அவர்களுடன் பேசினேன்.

 நீங்கள் சொல்வது சரியல்ல, சட்ட விரோதமானது. எந்தக் குற்றவாளியும் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்த பின்பு தான் நியாயாதிபதி தண்டனை விதிக்க வேண்டும். தண்டனையும் சனகரீம் சங்கத்தின் அனுமதி பெற்றதற்கு அடையாளமாக தலைவரின் கைச்சாத்தும் உடையதாயிருக்க வேண்டும். தண்டனையை விதித்த அன்றே அதனை நிறைவேற்றக் கூடாது. மறுநாளும், சனகரீம் சங்கம் திரும்பவும் முழு நடவடிக்கைகளையும் ஆராய வேண்டும். இதுதான் அவர்கள் சட்டம். மேலும், நியாயஸ்தலத்தின் வாசலில் ஒருவன் கொடி பிடித்து நிற்க வேண்டும். மற்றொருவன் சற்று அப்பால் குதிரை மேல் இருந்து கொண்டு, குற்றவாளியின் பெயரையும், அவன் செய்த குற்றத்தையும் எல்லாருக்கும் கேட்கும் படியாய் உரத்த சத்தமிட்டுச் சொல்ல வேண்டும். சாட்சிகளின் பெயரையும் கூறவேண்டும். அதில் யாராவது குற்றவாளிக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். குற்றவாளியும் மூன்று தடவை திரும்பி ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்.

இந்த எல்லா முறைகளையும் கூறி நான் பிரயாசப்பட்டும் அவர்கள் அவரை, “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்”, என்று கூக்குரலிட்டார்கள். முடிவாக, வேறுவழியின்றி, இயேசுவை நான் வாரினால் அடிப்பதற்கு உத்தரவிட்டேன். ஒருவேளை அவர்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் இது அவர்களுடைய கோபத்தைத்தான் அதிகப்படுத்தியது. அடுத்தாற் போல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, “நான் என்னுடைய விசாரணையில் மரணத்துக்கேதுவான ஒரு குற்றமும் இயேசு செய்யவில்லை”, என்று சொல்லி, ஜனக்கூட்டத்தின் முன்பாக என் கைகளைக் கழுவினேன். ஒரு பிரயோஜனமும் இல்லை.

இந்த அக்கிரமக்காரர் அவருடைய ஜீவனின் மேல் தாகம் கொண்டிருந்தார்கள். என்னுடைய அனேக சிவில் விவகாரங்களில் கோபம் அடைபவர்கள் உண்டு, ஆனாலும் இந்தக் கூட்டத்தைப் போல் நான் என் ஆயுள் நாட்களில் ஒரு கூட்டத்தையும் கண்டதில்லை. உண்மையைக் கூறினால், எல்லாப் பாகங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமில் கூடி இருந்தார்கள்.

ஜனத்திரள் நடந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், சுழற்காற்று மனித அலைகளை உருட்டிக் கொண்டு, நீதி மன்றத்திலிருந்து சீயோன் மலை மட்டும் கொண்டு போனது போலிருந்தது. கூட்டமோ, கூச்சலிட்டுக் கொண்டும், அலறிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் போனதைப் போல் நான் ஒரு இடத்திலும், ஒரு சந்தர்ப்பத்திலும் கேள்விப் பட்டதேயில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக, மழைக் காலத்து மாலை நேரம் போல, பகல் இருளாகிக் கொண்டிருந்தது. மகத்தான ஜீலியஸ் சீசர் மரணத்தோடு நடந்தது போல் இருந்தது. மார்ச் மாத Ides போல இருந்தது. நானோ மாகாண கவர்னராக, ஒரு குழப்பம் நிறைந்த நிலையில், அரண்மனைத் தூணில் சாய்ந்து கொண்டு, வெறி கொண்ட ஜனத்திரள், ஒருபாவமும் இல்லாத பரிசுத்தனாகிய நசரேயனை, கொலைக் களத்திற்கு இழுத்துக் கொண்டுப் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் போய் விட்டார்கள். எருசலேம் பட்டணத்தில் வாசம் செய்தவர்களை மரண ஊர்வலம் சிதறடித்திருந்தது. ஒரு வெறுமையும், மனவருத்தமும் என்னை மூடிக் கொண்டது. என்னுடைய காவலர்கள் குதிரைப்படையில் சேர்ந்து கொண்டனர். நூற்றுக்கதிபதியோ அதிகாரத்தோடு ஒழுங்கைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். நான் தனியாய் விடப்பட்டேன். என்னுடைய நொறுங்குண்ட இருதயம், அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் ஆராய்ந்து, இது கடவுளுடைய சரித்திரத்தைக் குறிப்பதேயல்லாமல் மனிதர்களைப் பற்றியதல்ல என்று தீர்மானித்தது. கொல்கதா மலை மேட்டிலிருந்து காற்று மூலமாய் வந்த ஓசையுடன் கூடிய சத்தம், ஒருநாளும் கேள்விப் பட்டிராததும், பிராண வேதனையுடையதுமாயிருந்தது.

கார்மேகம் ஆலயத்தின் கோபுரத்திலும், எருசலேம் பட்டணத்தின் மேலும் இறங்கி இருட்டடித்தது. மிகவும் பயங்கரமான அடையாளங்கள் பூமியிலும், வானத்திலும் காணப்பட்டன. Dionysius-ம், Areopagite-ம், இந்த அடையாளங்களைக் கண்டு விட்டு, ஒன்று சிருஷ்டி கர்த்தா துன்பப்பட வேண்டும், அல்லது பூலோகமே சின்னா பின்னமாகிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்களாம்.

இந்த பயங்கரமான சம்பவங்கள் இயற்கையில் நேர்ந்து கொண்டிருக்கும் போது, எகிப்து தேசத்தின் கீழ்ப்பாகத்தில் மிகவும் பயங்கரமான பூமியதிர்ச்சி உண்டாகி எல்லா ஜனங்களையும் மரண பயத்திற்குள் ஆழ்த்தியதோடல்லாமல், மூடநம்பிக்கையில்லா யூதர்களையும் மரண வேதனையடையச் செய்தது. அந்திரேயாவிலுள்ள ஒரு வயோதிக ஞானமுள்ள Belthasar எனும் யூதன், அதே நேரத்தில் அதிர்ச்சியடைந்து மரித்துப் போனார். அவர் பயத்தால் மரித்தாரோ, அல்லது துக்க மேலீட்டால் மரித்தாரோ என்று திட்டவட்டமாய்ப் புலப்படவில்லை. ஆனால் அவர் நசரேயனுடைய நெருங்கிய அந்தரங்க நண்பராயிருந்தார்.

இரவின் முன் நேரத்தில், நான் சால்வையை எடுத்து, என்னை மூடிக் கொண்டு பட்டணத்தின் வழியாகக் கொல்கதா மேட்டு மலையின் பிரதான வாசலுக்கு நேராக நடந்து சென்றேன். அந்த நேரத்தில், பலியின் நடவடிக்கைகள் எல்லாம் முடிவடைந்திருந்தன. கூட்டம் கலைந்து, அவரவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். என்றாலும் உண்மையாக அவர்கள், திகிலடைந்தவர்களாகவும், கிலேசமடைந்தவர்களாகவும், ஆபத்துக்களை எதிர்நோக்கினவர்களாகவும், மௌனமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கண்களால் கண்ட சம்பவங்களே, அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. மேலும, எனது சிறிய ரோமப்படை கழுகின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை மூடி மறைத்துக் கொண்டு துயரம் தாங்கொண்ணாமல் புலம்பிக் கொண்டு போனது. சில யூதப் படையிலுள்ளவர்கள் நான் அறியாத பாசையில் என்னவெல்லாமோ உளறிக் கொண்டே போனார்கள்.
மற்றவர்கள், ரோமாபுரியார்களை, இயேசு அற்புதங்களினால் மடங்கடித்த செயல்களை மறுபடியும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். சில சமயங்களில், மனிதர்கள் சிறு குழுக்களாய் நின்று விடுவார்கள். கல்வாரி மலை மேட்டைத் திரும்பிப் பார்ப்பார்கள். அசைவற்று மரம் போல் நின்று ஏதாவது அதிசய சம்பவம் நேரிடும் என்று எண்ணினார்கள்.

நான் துக்கமும், சஞ்சலமும் நிறைந்தவனாய் அரண்மனைக்குத் திரும்பினேன். நசரேயனுடைய இரத்தம் சிந்தப்பட்டிருந்த மாடிப்படிகளின் வழியாய் வரும் பொழுது ஒரு வயது சென்ற மனிதன், பரிதாபமாய்க் கெஞ்சும் பாவனையில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் அநேக ரோமாபுரியார்கள், மாலை மாலையாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அவன் என் கால்மாட்டில் வீழ்ந்து கதறி அழுதான்.

அந்த வயோதிபன் அழுவதைக் கண்டதும், நான் முன்பே துக்கம் நிறைந்தவனாய் இருந்தபடியால், நானும் சேர்ந்து அழுதேன். அந்த வயோதிபனை ஒருக்காலும் நான் கண்டதில்லை. உண்மையாய்ச் சொல்லப் போனால், நான் கண்ட அநேகரின் கண்களில், தொடர்ந்து அவர்கள் அழுததால், கண்ணீரே இல்லாதிருந்தது.

நான் என் ஆயுளில் இப்படி அளவு கடந்த விரோதத்துடன் யாரும் நடந்து கொண்டதைக் காணவில்லை. அவரைக் காட்டிக் கொடுத்தவரும், விலைபேசி விற்றவரும், அவருக்கு எதிராய்ப் பொய்சாட்சி சொன்னவரும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டவர்களும், அவன் இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும் என்றவர்களும், கோழைகளைப் போல அடங்கி, தங்கள் பற்களைக் காடியால் கழுவினார்கள். இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுதலும், மரணத்துக்குப் பின் நல்லவர்களும், கெட்டவர்களும் தனித்தனியாய் பிரிக்கப்படுவார்கள் என்று முன்பே போதித்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியானால், அது இந்த பெரிய ஜனக் கூட்டத்திலேயே ஆரம்பமாயிற்று என்று நான் திட்டவட்டமாய் நம்புகிறேன்.

அந்த வயோதிபனை நோக்கி, “தகப்பனே, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?”, என்று என் மனவருத்தத்தை உள்ளடக்கிக் கொண்டு விசாரித்தேன். அவர் முழங்காலில் நின்று கொண்டு மிகவும் பணிவன்புடன், “நான் அரிமத்தியா ஊரானான யோசேப்பு. நான் நசரேயனாகிய இயேசுவை நல் அடக்கம் செய்ய தங்களிடம் அனுமதி கோரி நிற்கிறேன்” என்றார்.

“உங்களுடைய விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தேன்”, என்று சொல்லி, அதே நேரத்தில் Manilus ஜ சில படைவீரர்களுடன் அனுப்பி, இயேசுவை நல் அடக்கம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன்.

சில நாட்கள் சென்ற பின், இயேசுவினுடைய கல்லறை வெறுமையாயிருந்தது. அவருடைய சீஷர்கள், இயேசு தாம் முன் அறிவித்தபடியே உயிர்த்தெழுந்தார் என்று தேசம் முழுவதும் பறைசாற்றினார்கள். சிலுவையில் அறைந்த சம்பவத்தை விட உயிர்த்தெழுதல் அதிகக் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது. நான் இதை உண்மையாய்ச் சொல்ல முடியாது. என்றாலும், நான் தீர விசாரித்தேன். நீங்களும் ஆராய்ந்து பார்த்து, நான் தப்பிதமாய்ச் சொல்லிவிட்டேனோ என்று ஏரோது சொன்னதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவின் சடலத்தை தனக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்த கல்லறையில் நல் அடக்கம் செய்தான். இயேசுவின் உயிர்த்தெழுதலை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கல்லறையைக் கட்டியிருந்தானோ? அல்லது, வேறு ஒரு கல்லறையைக் கட்ட நினைத்திருந்தானோ? எனக்குச் சொல்ல முடியவில்லை.

அடக்கம் செய்யப்பட்ட மறுநாள், ஒரு ஆசாரியன் என்னிடத்தில் வந்து, இயேசுவின் சரீரத்தை சீஷர்கள் திருடிக் கொண்டு போய் விட்டு, அவர் முன்பே அறிவித்தபடி, மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்லுவார்கள் என்று நாங்கள் நிச்சயமாய் நம்புகிறோம் என்றான். நான் உடனே அவனை Malcus- என்ற ரோமாபுரி அரசாங்க சேனைத் தலைவனிடம் அனுப்பி, எத்தனை யூதப் போர்வீரர்கள் தேவைப்படுமோ, அத்தனை வீரர்களைக் கொண்டு காவல் புரியும்படி ஏற்பாடு செய்தேன். அவர்கள் நினைத்தது போல் ஏதாவது நடந்து விட்டால், ரோம ராஜ்யத்தைக் குறை கூற முடியாமற் போகுமல்லவா?

கல்லறை வெறுமையாக்கப் பட்டதைக் குறித்து பிரமிப்பு உண்டான உடனே, நானும் மிகவும் பயந்து, ஏதாவது சம்பவிக்குமோ என்று அஞ்சினேன்.

என்னிடத்தில் வந்து உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொன்ன Islam-ஐ வரவழைத்தேன். அவன் முழு விவரமும் சொன்னான். அவர்கள், ஓர் அழகான மெல்லிய வெளிச்சம் கல்லறையின் மேல் பிரகாசிக்கக் கண்டார்களாம். உடனே இயேசுவுக்குச் சொந்தமான பெண்கள் யாராவது யூதர் வழக்கப்படி சடலத்திற்குக் கந்தவர்க்கம் பூச வந்திருப்பார்கள் என்று நினைத்ததுமில்லாமல், அவர்கள் எப்படி இவ்வளவு காவலர்களையும் கடந்து கல்லறையண்டை வந்தார்கள் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமான ஒளியில் மூழ்கியதோடல்லாமல், கூட்டம் கூட்டமாய், மரித்தோர்கள் தங்கள் கல்லறைத் துணிகளுடன் அங்கு எழும்பி நிற்பதையும் கண்டு அதிசயித்தானாம். அந்தக் கூட்டத்தினர் யாவரும் ஏகோபித்து முழங்கின சப்தம் அந்தப் பிரதேசத்தையே நிரப்பிவிட்டது. அவன் ஒரு நாளும் கேட்டு அனுபவித்திராத இனிய நாதமுள்ள சங்கீதம், பூமியிலும், ஆகாயத்திலும் கடவுளைத் துதித்துப் பாடிக் கொண்டே இருந்தது. அதே வேளையில், பூமியானது மனக் கலக்கத்தையும், வேதனையையும் உண்டாக்கத் தக்கதாக சுழன்று கொண்டிருந்தபடியால், என் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க முடியவில்லை. என் மூளையும் குழம்பி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய் விட்டது என்றான்.

“உனக்குப் புத்தி தெளிந்த பிறகு நீ என்ன நிலையிலிருந்தாய்”, என்று கேட்டதற்கு, “நான் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்தேன்”, என்றான். “ஒருவேளை நீ திடீரென்று தூக்கத்திலிருந்து விழிப்படைந்ததினால் உண்டான மயக்கமாயிருக்கலாம்”, என்றதற்கு, “நான் ஒருநாளும் வேலை நேரத்தில் உறங்க மாட்டேன், அப்படிச் செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்”, என்றான். “நானும் உறங்கினேன், மற்ற போர்ச் சேவகர்களும் உறங்கினார்கள்”;. “எவ்வளவு நேரம் நீடித்திருந்தது?”, என்று நான் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, ஒருவேளை ஒரு மணி நேரமாயிருக்கலாம்”, என்றான். “சரி, இதற்குப் பிறகு, நீ இயேசுவின் கல்லறைக்குப் போனாயா?”, என்று கேட்டதற்கு, “நான் போகவே இல்லை... எனக்கு மிகவும் பயமாக இருந்தது”, என்றான்.

“உன்னிடத்தில் ஆசாரியர்கள் கேள்விகள் கேட்டார்களா?”, என்றதற்கு,
“ஆம், கேட்டார்கள். நான் தூங்கி விட்டேன், பூமி அதிர்ச்சி வந்தது என்று சொல்லும் படியாகவும், இயேசுவின் சீஷர்கள்தான் அவருடைய சடலத்தைக் களவாடிச் சென்றார்கள் என்று சொல்லும் படியாகவும், அப்படிச் சொன்னால் பணம் தருவதாகவும் சொன்னார்கள்”, என்றான். அவனோ உறங்காமல் இருந்திருக்கிறான், இயேசுவின் சடலம் அங்கு இல்லை என்பதுவும் அவர்கள் சொல்லித்தான் தெரியுமாம். “அந்த ஆசாரியர்களின் சொந்த அபிப்பிராயம் என்ன?, என்று சொல்”, என்றதற்கு, “இயேசு ஒரு மனிதரல்ல, மரியாளுடைய மகனும் அல்ல, கன்னிமரியம்மாளின் வயிற்றில், பெத்லகேம் ஊரில் பிறக்கவும் இல்லையாம்”, என்றான்.

யூதருடைய இந்த அனுமானம் உண்மையானால், அவர்கள் சொல்வது சரியாயிருக்கலாம். குயவன் கையில் உள்ள களிமண் எப்படியெல்லாம் செய்யப்படுமோ அது போல அவர் இஷ்டப்படி எல்லாம் நடந்தது. அவருடைய சிநேகிதரும், சத்துருக்களும் அப்படியே நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழும்பப் பண்ணினார், கடல் கொந்தளிப்பை சாந்தப்படுத்தினார், காற்றை அதட்டினார், கடலிலிருந்து மீனைப் பணத்தோடு வரவழைத்தார். மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அவரால் செய்ய முடிந்தது. இன்னும் இது போல அநேகக் காரியங்கள் அவரால் செய்ய முடியும். யூதர்களும் இதற்குச் சாட்சிகள். இவைகளையெல்லாம் நேரில் பார்த்ததினால், யூதருக்கு அவர் மேல் பகை உண்டாயிற்று. அவர்மேல், அவர் குற்றம் செய்ததாகவோ, அல்லது அவர் சட்டத்தை மீறினதாகவோ நீதி விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், எந்த ஒரு தனி நபருக்கும் விரோதமாக அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆயிரமாயிரம் ஜனங்களுக்கும், அவர் நண்பர்களுக்கும், விரோதிகளுக்கும் இவை யாவும் நன்கு தெரியும். Malcus சிலுவையின் அடிவாரத்தில் நின்று கொண்டு, “உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன்”, என்று சொன்ன சாட்சியை நானும் இப்போது தைரியமாகச் சொல்லத் தயாராய் இருக்கிறேன்.

இப்போதும் மகாகனம் பொருந்திய ராஜாவே, நான் என்னால் கூடிய வரையில் பிரயாசப்பட்டு, முழு விபரங்களையும் சேகரித்து, தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். தாங்களே முழுவதையும் படித்து ஆராய்ந்து, நான் எவ்விதம் இந்தக் காரியத்தில் நடந்து கொண்டேன் என்று தீர்மானியுங்கள்.

Antipater இந்தக் காரியத்தில் என்னைப் பற்றி அநேக கடினமான காரியங்களைச் சொல்லியிருப்பதாய் அறிகிறேன்.

தங்களுடைய உண்மையும், நன்றியுமுள்ள ஊழியன், மிக்க வந்தனங்களுடன் முடிக்கிறேன்.

-பொந்தியு பிலாத்து (Pontius Pilate)
( Reported in Mount Zion.  Reporter dt. June,1974.)


அனுப்பி உதவியவர்: பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.

(இந்த அறிக்கையை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த T.எபநேசர் அவர்கள் பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன் அவர்களின் தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

Sunday, September 1, 2019

பூசையால் மனந்திருப்பப்பட்ட ஒரு ப்ரொட்டஸ்டான்ட் சபை உறுப்பினர்

பூசையால் மனந்திருப்பப்பட்ட ஒரு ப்ரொட்டஸ்டான்ட் சபை உறுப்பினர்

இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ப்ரொட் டஸ்டாண்ட் சபையினரின் குழு ஒன்று, ஃப்ளோரன்ஸ் மேற்றிராசனக் கோவிலில் திவ்விய பலிபூசை நடந்த போது அங்கிருந்தது. பூசை நிறைவேற்றிய குரு மிக ஆழ்ந்த பக்தியோடு பூசை நிறைவேற்றினார். ஆனால் அந்நியர் குழு ஒன்று தாம் செய்வதையெல்லாம் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. அந்தக் குழுவில் உள்ள சிலர், தங்கள் வினோதப் பிரியத்தைத் தீர்த்துக் கொண்டவர்களாக, பீடத்தின் அருகில் தாங்கள் இருந்த இடங்களிலிருந்து நகர்ந்து, இந்தக் கோவிலின் அழகிய அம்சங்களைக் காணப் போய்விட்டார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாம் இருந்த இடத்திலேயே அசையாமல் இருந்து, பூசை முடியும் வரை குருவானவரின் ஒவ்வொரு அசை வையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

பீடத்திலிருந்து சாக்றிஸ்திக்குச் சென்ற குருவானவரின் முகத்தில் வெளிப்பட்ட விசுவாச உணர்வும், வெளிப் படையான மகிழ்ச்சியும் இந்தப் பிரிவினை சபைக்காரரை மிக ஆழ்ந்த விதமாகப் பாதித்தது, அவருடைய மனதை சத்தியத்தைக் கொண்டு தாக்கியது. இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தவுடன் இந்த மனிதர் ஒரு கத்தோலிக்க குருவைத் தேடிச் சென்று, அடிப்படை ஞான உபதேசத்தை ஆர்வத்தோடு முழுமையாகக் கற்றுக் கொண்ட பின், ஞான ஸ்நானம் பெற்று, பக்தியார்வமிக்க கத்தோலிக்கராக மாறினார்.

பக்தியோடு செய்யப்படும் பூசைகளில் ப்ரொட்டஸ்டாண்ட்கள், அல்லது அவிசுவாசிகள் கலந்து கொள்ள நேரும்போதெல்லாம், நாம் இப்போது குறிப்பிட்ட ஆங்கிலேயரைப் போலவே, அவர்கள் எந்த அளவுக்கு மிக ஆழமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களில் பலர் மனந்திரும்பி, சத்தியத் திருச்சபையில் உட்படு கிறார்கள், இது மிக அடிக்கடி நிகழ்கிறது என்று எந்த தயக்கமுமின்றி நான் சொல்கிறேன்.

அவசரமாகவும், பக்தியும், வணக்கமும் இன்றியும் செய்யப்படும் பூசைகள்

அவசர அவசரமாகவும், உரிய பக்தியும், வணக்கமும் இல்லாமலும் செய்யப்படும் பூசைகளில் பங்கு பெறுவோர் மனங்களில் இந்தப் பூசைகள் விளைவிக்கிற மோசமான பாதிப்புகள் இதற்கு முன் சொல்லப்பட்ட நற்பாதிப்பு களிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

பதின்மூன்றாம் சிங்கராயரின் பூசை!

பதின்மூன்றாம் சிங்கராயரின் பூசை!

வணக்கத்துக்குரிய ஒரு குரு சொல்வதாவது: ''பாப்பரசர் 13-ம் சிங்கராயரின் பூசை ஒன்றில் பங்குபெற நான் ஒருமுறை அனுமதிக்கப்பட்டேன். பூசையைப் பற்றி நான் என் வாழ்வில் வாசித்த எந்த ஒரு புத்தகமும், நான் கேட்ட எந்த ஒரு பிரசங்கமும் அப்படிப்பட்ட ஒரு பாதிப்பை என் மனதில் அதற்கு முன் ஏற்படுத்தியதேயில்லை .

அந்த மகிழ்ச்சியான நாளுக்குப் பின் பதினைந்து வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்று வரை பரிசுத்த பிதாவின் அந்தப் பூசையை என்னால் மறக்கவே முடியவில்லை. அவரிடம் வெளிப்பட்ட பக்தியைக் கண்டு பாவிக்க நான் எவ்வளவோ முயன்றும், என் பூசைகளில் அத்தகைய பக்தியை என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை.

அப்போது பாப்பரசருக்கு எண்பத்தைந்து வயதாகி யிருந்தது. அவர் மிகவும் பலவீனமாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. மிகவும் குனிந்தபடிதான் அவர் சிற்றாலயத்திற்குள் பிரவேசித்தார். ஆனாலும் பலிபீடத்தை நோக்கிச் செல்கையில், அவர் ஒரு புதிய உயிராலும், ஒரு புதிய ஆற்றலாலும் நிரப்பப்பட்டார்.

தேவ பக்தியால் கிரகிக்கப்பட்ட நிலையில் அவர் திவ்விய பலிபூசையைத் தொடங்கினார். அவருடைய அடக்கவொடுக்கமும், அசைவுகளும், வார்த்தைகளை மெதுவாகவும், தெள்ளத் தெளிவாகவும் அவர் உச்சரித்த விதமும், கடவுளின் பிரசன்னத்தில் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டின. தேவ வசீகர நேரத்தில், அவரது முகம் ஓர் அழகிய ஒளியால் ஒளிர்ந்தது, அவரது அற்புதமான கண்கள் சுடர் வீசின, அவரது பாவனை முழுவதுமே, சர்வ வல்லப சர்வேசுரனோடு உரையாடிக் கொண்டிருக்கிற ஒருவருடைய பாவனையாக இருந்தன.

மகா உத்தமமான வணக்கத்துடன் அவர் தம் கரங் களில் அப்பத்தை எடுத்து, தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்தார். எப்பேர்ப்பட்ட அதிசயத்தைத் தாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் முழுவதுமாக உணர்ந் திருந்தார் என்பது அவருடைய தோற்றத்தில் தெளிவாக வெளிப்பட்டது.

அதன்பின் மோட்சத்தில் சர்வேசுரனுடைய சிம்மா சனத்திற்கு முன்பாக இருப்பவரைப் போல அவர் முழந்தா விட்டார். பின் எழுந்து தேவ அப்பத்தை உயர்த்தி, பரவசப் பட்டவராக அதை உற்றுநோக்கினார். அதன்பின் மெது வாக அதை இறக்கி, திருமேனித் துகிலில் அதை வைத்தார்.
மகா பரிசுத்த இரத்தத்தின் வசீகரத்தின் போதும், இதே மேலான உணர்வுகளையும், உயிருள்ள விசுவாசத் தையும் அவர் வெளிப்படுத்தினார்.

அந்நேரம் தொடங்கி, திவ்விய நன்மை அருந்துவது வரையில் ஒவ்வொரு கணமும் அவரது பக்தியார்வத்தை எங்களால் வெளிப்படையாகக் காண முடிந்தது.

ஆஞ்ஞஸ் தேயியின் போது அவர் கடவுளோடு நேருக்கு நேராகப் பேசுபவரைப் போலத் தோன்றினார்.

எத்தகைய நேசத்தோடு அவர் திவ்விய அப்பத்தை உட்கொண்டு, சேசுநாதருடைய திரு இரத்தத்தைப் பருகினார் என்பதை விளக்கிக் கூற எனக்குத் துணிவில்லை.

இவ்வளவிற்கும் பூசை மிக நீண்டதாக இருக்க வில்லை. இந்த முழு திருச்சடங்கும் எளிமையானதாக இருந்தது. ஆனாலும், நான் சொன்னது போல, இந்த ஐம்பது நீண்ட வருடங்களாக அது எப்போதும் என் கண்களுக்கு முன்பாக இருந்து வரும் அளவுக்கு அது என் மனதை வெகுவாகப் பாதிப்பதாக இருந்தது.''

மனிதர்களில் அதிக மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்!

மனிதர்களில் அதிக மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்!

அர்ச்சியசிஷ்டவர்கள் மட்டுமல்ல, பக்தியுள்ள குருக்களும் கூட பூசை நிறைவேற்றும்போது மிக ஆழ்ந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். பின்வருவனவற்றை அறிந்திருப்பது அவர்களுக்குப் போது மானதாக இருக்கிறது:

1. அவர்கள் கடவுளுடனேயே ஒரு நேரடியான, நெருங்கிய , தனிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; அவரைக் கரங்களில் ஏந்துகிறார்கள், அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவருடன் உரையாடுகிறார்கள்; அவரும் வாக்குக் கெட்டாத நேசத்தோடு அவர்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

2. சகல சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சத்தில் அவருக்குத் தருவதை விட மேலான மகிமையை, அவரே ஆசிக்கக்கூடிய அனைத்திலும் மேலான மகிழ்ச்சியையும் மகிமையையும், குருக்கள் அவருக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

3. குருக்கள் தங்கள் மீதும், உலகத்தின் மீதும், தங்கள் சொந்த நாட்டின் மீதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறார்கள்.

4. குருக்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த சம்மனசுக்களின் படையணிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள்.

5. இறுதியாக, அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள பரிசுத்த ஆன்மாக்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறார்கள்.

பக்தியும், நல்லறிவும் கொண்ட ஒரு குரு இதையெல்லாம் அறிந்திருந்தும், அவற்றின் காரணமாக மகிழ்ச்சியால் நிரப்பப்படாமல் இருப்பது எப்படி?

புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.

புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.

தேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு புறமதத்தவனான ஒரு பிரபு மனந்திரும்பின புதுமை.

சாக்ஸனி தேசத்தில் அக்காயானியான விட்டிக்கின் என்னும் பிரபு ரோமாபுரி இராயனோடு சண்டை செய்த போது இராயன் வெற்றிபெற்றதால் அவன் சமாதானமாய்ப் போனான். இராயன் பாளையம் நீங்கி போவதற்கு முன் நாற்பது நாள் ஒருசந்தியின் கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை அங்கே மகா ஆடம்பரத்தோடு கொண்டாடினான் சாக்ஸன் பிரபு. 

ரோமபுரி இராயனும் மற்றக் கிறிஸ்தவர்களும் அந்தத் திருநாளில் செய்த காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசி போல இராயனின் பாளையத்துக்குப் போனான். திருநாள் முடியுமட்டும் அவனங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளையெல்லாம் நன்றாய் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப்பார்த்து விட்டிக்கின் என்று அறிந்து, இராயனிடத்தில் சொன்னான்.

இதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய இராயனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். இராயன் இவனைக் கண்டு வரவேற்று "நீர் இங்கே வரவிரும்பினால் மகிமையோடு வராமல் இந்த நீசவேசத்தோடு வருவதேன்? " என்று வினவினான். இதற்கு விட்டிக்கின் "இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று பார்க்கவே மாறுவேடத்துடன் வந்தேன்" என்றான்.

இராயன் "என்ன பார்த்தீர்கள்" என்று கேட்டதற்கு, அவன்" நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன :

வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் துக்கமாயிருந்து, சனிக்கிழமை சந்தோசமாயிருந்தீர். இரண்டாவது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் நல்ல குழந்தையை கண்டதுமல்லாமல், தேவரீரும் சேவகரும் நன்மை வாங்கினபோது அந்தக் குழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர்கள் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும், சில சேவகர்கள் வாயில் கஸ்தியோடு கட்டாயம்போல போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நானறியேன். தேவரீர் துக்கமாய் இருந்ததற்குக் காரணம் இன்னதென்றும் அறியேன் என்றான்.

இராயன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு "வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய கர்த்தர் இயேசுநாதருடைய திருமரணத்தின் சடங்குக்குகளைச் செய்ததினால் அவர் திருமரணத்தின் பேரில் நாம் வைத்த இரக்கத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கு செய்ததினால் அன்றைக்கு நாங்கள் சந்தோஷமாயிருந்தோம்" என்று சொன்னான்.

பிறகு இராயன் தேவநற்கருணையின் இரகசியத்தையும் சொல்லி "திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுநாதரை நான் காணதிருக்கையில் அவரை நீர் கண்டதினால் முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியதிருக்கிறது. சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை வாங்கியதால் அதிலிருக்கிற இயேசுநாதர் அவர்கள் வாயிலே கட்டாயமாய்ப் போவதைக் கண்டீர்" என்று சொன்னான். அந்தத் பிரபு இதையெல்லாம் கேட்ட பிறகு கிறிஸ்தவ மதத்தில் சேர அவனுக்கு ஆசை வந்தது. உடனே உபதேசம் கேட்டு மேற்றிராணியாரான புனித எரிபேர்த் என்பவர் கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு இராயனே ஞானத்தகப்பனாயிருந்தான்.

அன்பான இறைமக்களே! அந்த ரோமாபுரி இராயன் இயேசுநாதர் பேரில் வைத்த இரக்கத்தினால் பெரிய வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக்கிழமையில் மனவருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள். வெள்ளிக் கிழமைதோறும் கர்த்தர் நமக்காக அனுபவித்த துன்பங்களை சிந்தனை செய்து அவர் பேரில் உங்களுக்கு இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும்.

சேவகர்கள் தேவநற்கருணை வாங்கும் போது இயேசுநாதர் சில சேவகர்களிடம் சந்தோஷமாய் எழுந்தருளினார். சில சேவகர்களிடம் துக்கத்தோடு எழுந்தருளினார். கர்த்தர் உங்களிடத்தில் சந்தோஷமாய் எழுந்தருளத்தக்கதாக நீங்கள் அருளுயிரோடு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் தேவநற்கருணை உங்களுக்கு நன்மையாயிருக்கும். சாவானபாவத்தோடு நன்மை வாங்குபவர்களுக்கு அந்த தேவநற்கருணை தானே ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.

Wednesday, August 21, 2019

திவ்விய நற்கருணையை கழுதை வணங்கிய புதுமை!

திவ்விய நற்கருணையை கழுதை வணங்கிய புதுமை!

ஒரு முறை பதிதன் ஒருவன் அர்ச்சியசிஷ்ட அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான்.

அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல் மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டு வாரும்.

கழுதை முதலில் புல் தின்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. 

அந்தோணியார் கையில் திவ்விய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு  முன் வைக்க பட்டு இருந்த புல் கட்டுகளைப் பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது.

அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

சிறு அதிபதி ரோமைச்சக்கரவர்த்தியான புதுமை!

சிறு அதிபதி ரோமைச்சக்கரவர்த்தியான புதுமை!

தேவநற்கருணை கொண்டு போகிற குருவானவருக்கு ஒருவன் உதவி செய்ததினால் அவனுக்கு கிடைத்த அற்புதம்.

ஜெர்மனியில் ஹாப்ஸபுர்கு என்ற பிரதேசத்தின் அதிபதியாகிய ரொதொல்ப் என்பவர் ஒருநாள் காட்டில் வேட்டையாடுகிற போது ஒரு குருவானவர் மரணபடுக்கையில் இருந்த ஒருவனுக்கு தேவநற்கருணை எடுத்துக் கொண்டு அந்த காட்டு வழியாக கால் நடையாய் போனார்.

அதிபதி இவரைக் கண்டு நினைத்ததாவது: இந்தக் குருவானவர் கொண்டு போகிற தேவநற்கருணையில் மன்னருக்கு மன்னராகிய இயேசுநாதர் இருக்கிறார் அல்லவா. அப்பேர்பட்டவரைக் கொண்டு போகிற குருவானவர் கால்நடையாய்ப் போக, நீச மனிதனாகிய நான் குதிரைமேல் போகலாமோ? இது நியாயமல்லவென்று நினைத்துக் குதிரையை விட்டு இறங்கி அந்த குருவானவரைத் தன் குதிரை மேல் ஏறிப்போகச் சொல்லி மன்றாடினான்.

அப்படியே குருவானவர் குதிரை மேல் ஏறின பிறகு அதிபதி குதிரைப் பக்கத்தில் ஒரு ஊழியனைப் போலப் போனான். நோயாளியின் வீட்டை அடைந்த பிறகு, குருவானவர் தேவநற்கருணையை நோயாளிக்கு கொடுக்கிறபோது, அதிபதி மாகா தாழ்ச்சியோடு முழங்காலிலேயிருந்தான். பிறகு, அதிபதி குருவானவரை மறுபடியும் குதிரை மேல் ஏறச்சொல்லி நீரும் சகதியுமுள்ள அந்தப் பாதையிலே கால் நடையாய் நடந்து அவருடைய கோயில் வரையில் கூடப் போனான்.

அங்கே போனபிறகு அதிபதி தன் குதிரையைக் காண்பித்து "இந்தக் குதிரை அரசர்களுக்கெல்லாம் அரசராகிய இயேசுநாதரை சுமந்ததினால் இந்தக் குதிரையின் மேல் நான் ஏறத்தகுதியற்றவன்" என்று சொல்லி அந்தக் குதிரையை கோவிலுக்கு கொடுத்து விட்டான். குருவானவர் இந்த அதிபதியின் விசுவாசத்தைக்கண்டு "தேவநற்கருணையைக் குறித்து நீர் இன்று செய்த புண்ணியத்தினால்உமக்கு இயேசுநாதர் அதிக பாக்கியம் கொடுப்பார் " என்றார் .

பிறகு ஒரு புண்ணியவதி அந்த அதிபதியைப் பார்த்து "நீர் தாழ்ச்சியோடு தேவநற்கருணைக்கு மகிமை செலுத்தினதற்காக உமக்கும் உமது குடும்பத்திற்கும் தேவநற்கருணையில் இருக்கிற ஆண்டவர் மிகுந்தவெகுமானமும் பாக்கியமும் கொடுப்பார்" என்றாள். அவ்வண்ணமே இந்த அதிபதிக்கு ரோமைச்சக்கரவர்த்தி என்கிற பெரிய பட்டம் வந்தது.

அன்பான கிறிஸ்தவ நண்பர்களே! உங்களுக்கு குருவானவர் கோவிலிலே தேவநற்கருணை கொடுக்கிறபோது நீங்கள் மிகுந்த தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும். தேவநற்கருணையில் பக்தியில்லாத சிலபேர்கள் அந்தச் சமயத்திலே முழங்காலில் இராமல் பட்டமரம் போல் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும், பயமில்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள் .

நீங்கள் தேவநற்கருணைக்குஎவ்வளவு தாழ்ச்சியுள்ள ஊழியம் செய்வீர்களோ, இறைமகன் அவ்வளவு வெகுமானமும், பாக்கியமும் உங்களுக்கு கொடுப்பார். அந்த அதிபதி தன் குதிரை ஒருமுறை மாத்திரம் இயேசுநாதரை சுமந்ததினால் தான் அதில் ஏறக்கூடாதென்றான் .

சகோதரரே! நீங்கள் தேவநற்கருணை வாங்கினால் உங்களுடைய உடலில் இயேசுநாதர் தாமே அநேகமுறை இருந்தார் அல்லவா? சாவான பாவம் இயேசுநாதர் இருந்த உங்களுடைய நாவிலும் இருதயத்திலும் இருக்கிறது நியாயமோ?

அந்த அதிபதி, தன் குதிரை இயேசுநாதரை சுமந்ததினால் அதை இயேசுநாதருக்குத் ஒப்புக் கொடுத்ததைப் போல, உங்களுடைய நாவிலும், இருதயத்திலும் தேவநற்கருணை வழியாகக் இறைமகன் எழுந்தருளி இருந்ததினால் அவைகளை முழுவதும் இந்த ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் .

எப்படியெனில், நாக்கைக் கொண்டு இயேசுநாதருக்கு தோத்திரம் சொல்லுவதேயல்லாமல், அவருக்குப் பொருந்தாத வார்த்தை சொல்லாமல் இருப்பது. இருதயத்திலே தேவன் வருவதற்கு அதைத் திறந்து வைக்கவேண்டும். தீய எண்ணங்கள் உள்ளே வராமல் கவனமாய் அதை அடக்க வேண்டும் .

Saturday, August 17, 2019

நற்கருணையில் நடந்த பிற புதுமைகள்

நற்கருணையில் நடந்த புதுமைகள்

பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சைரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும். கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திருரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகிரைர்கள்.

நற்கருணை புதுமையின் வகைகள்:

நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோ- இல நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நர்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம்(எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கேடாமளிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமளிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது.

பிற நற்கருணை புதுமைகள்

நற்கருணை பங்கிருப்பதாக எண்ணற்ற புதுமைகள் கூறப்படுகின்றன, அவற்றுள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றது

ஆம்ஸ்ற்றெர்டம் (Amsterdum) லிருந்து வரும் கூற்றானது 1345ம் ஆண்டு ஒரு குருவானவர் ஓர் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதருக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். அவர் அக்குடும்பத்தினரிடம் அம்மனிதர் அதை எறிந்துவிட்டால், அவர்களும் அதை எடுத்து நெருப்பில் எறிந்து விட வேண்டுமென்று கூறினார். அம்மனிதன் அதை எறிந்து விட்டான். குருவின் வேண்டுகோள்படியே அவர்களும் அதை நெருப்பில் எறிந்து விட்டார்கள். மறுநாள் காலை ஒரு பெண்மணி தீயை குறைக்க வந்தாள். அவள் அப்பமானது விழிம்பில் ஒளியுடன் சூழப்பட்டு இருப்பதை கண்டாள். இது ஒருவாறு மனித செரிமானப் பகுதியைய்ம், தீயையும் கடந்து விட்டதாகவே தோன்றினாலும் பாதிப்பேதும் அடையவில்லை.

மற்றொரு கூற்றின்படி, பவேரியா (Bavaria)ல் உள்ள ஒரு விவசாயி, எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பத்தை திருப்பலியிலிருந்து வீட்டிற்கு அது தனது குடும்பத்திற்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்தான். இருந்தாலும் அவன் தான் செய்வது மாபரும் தவறு என்ற உணர்வினால் மனம் நொந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக கோவிலுக்குச் செல்ல திரும்பினான். அங்ஙனம் அவன் திரும்பியதும் அந்த அப்பமானது கையிலிருந்து பறந்து சென்று தரையில் இறங்கியது. அவன் அதைத் தேடினான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் திரும்பிச்சென்று உடன் பல கிராம வாசிகளுடனும் குருவுடனும் வந்தான். அவர்கள் அது சற்று தொலைவிளிருப்பதைக் கண்டார்கள். அவர்களோ அதை எடுக்க குனிந்தனர். அதுவோ மீண்டும் பறந்து சென்று மிதந்த வண்ணம் தரையில் அமர்ந்து மறைந்தது. இந்நிகழ்வு ஆயருக்கு அறிவிக்கப்பட்டு அவரும் அவ்விடம் வந்து அதை எடுக்க முயல அது மீண்டும் பறந்து சற்று அதிக நேரம் தொங்கி கீழே விழுந்து மறைந்தது.

நற்கருணை அற்புதங்கள் - விளக்கம்!

நற்கருணை அற்புதங்கள் - விளக்கம்! 

கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசம் மற்றும் போதனைப்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாகவும், இரசம் அவரது இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. 

இது பொருள் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை தனித்தனியே ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார், 

சீர்திருத்த காலத்துக்கு பிறகு, நற்கருணை மீதான பக்தி முயற்சிகள் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு சிலை வழிபாடாக கருதப்பட்டன. ஆனாலும் கத்தோலிக்க திருச்சபை, நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் இருப்பதை இன்றளவும் நம்பி ஏற்று வருகிறது. இதற்கு காரணம் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு நற்கருணை அற்புதங்கள் ஆகும். 

நற்கருணை அற்புதங்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நற்கருணை அப்பமும் இரசமும், உண்மையான சதையாகவும் இரத்தமாகவும் மாறுதல். 
2. நற்கருணை அப்பம் பல ஆண்டுகள் அழியாமல் இருத்தல். 
3. நற்கருணையின் பிரசன்னத்தால் அதிசயங்கள் நிகழ்தல். 

பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சை ரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும்.

கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திரு இரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகின்றார்கள். 

நற்கருணை புதுமையின் வகைகள்: நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோவில் நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நற்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம் (எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கெடாமலிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமலிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது. 

இயேசுவுக்கு புகழ் !!! மாமரித்தாயே வாழ்க !! தாயே நீரே எங்கள் தஞ்சம்

நடமாடுவோம்…. நற்கருணை இயேசுவோடு….!.

நடமாடுவோம்…. நற்கருணை இயேசுவோடு….!.
வி.ப24:3-8 எபி9:11-15 மாற்14:12-16 22-26

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவருக்கும் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவின் வாழ்த்துக்கள்.திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பவுல் சொன்னது என் நினைவுக்கு வருகிறது..”நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது”. திருச்சபையின் பிரிய உறுப்பினர்களாகிய நாம் இப்பெருவிழாவில் வீதிகளில் நற்கருணை பிரசன்னத்தோடு பவனி செல்வதுபோல என்றும் நற்கருணை இயேசுவோடு நடமாடி சாட்சி பகர சமூகமாக குடும்பமாக உறுதி எடுப்போம். 

கிறிஸ்தவ அழைப்பிற்கு பிராமாணிக்க பற்றுதலோடுயிருந்ததற்காக 21வருடங்களாக சிறையிலிருந்த சீன நாட்டு பேராயர் டோமினிக் டாங் மிக தைரியத்தோடு ஆற்றுதலோடு ஜந்துவருட இருண்ட அறையிலிருந்ததருணத்தில் இரண்டு மணிநேரம் தான்விரும்பியதை செய்ய வாய்ப்புகொடுக்கப்பட்டு வெந்நீரில் குளிக்கமணுமா……உடை மாற்றனுமா…..வெளியில் நடைபயிற்சி செய்யனுமா…..யாருக்காவது தொலைபேசியில் பேசனுமா….கடிதம் எழுதனுமா…..என்று கேட்டபொழுது ஆயர் டோமினிக் பதில்சொன்னது நான் நற்கருணை திருப்பலி நிறைவேற்றவிரும்புகிறேன் என்பதாகும். 

வியட்னாமில் இயேசுசபையை சார்ந்த ஜோசப் டோன் ஜந்து ஆண்டுகளாக சிறைக்கைதியாகயிருந்தபொழுது மறைவாக போரட்டங்களுக்கு மத்தியில் சககைதிகளோடு இரவில் பலசிறைக்கைதிகள் உறக்கத்திலிருக்கும்பொழுது திருப்பலி நிறைவேற்றியதை ஆனந்த கண்ணீரோடு இவ்வாறு நினைவு கூறுகிறார். “என் போர்வையே என் பீடமானது…என் சிறைஉடையே என் திருப்பலி ஆடையானது…..நான் அத்தருணத்தில் மனிதத்தோடும் அனைத்து படைப்புகளோடும் ஒன்றித்துபோனேன்”. என்பதே. 

இங்கிலாந்தின் புனித ஜோன் ஆப் ஆர்க் 1431-ல் சிறையிலிருந்தபொழுது மரணதண்டனையான எரிகின்ற நெருப்பிற்கு அழைத்துச்செல்வதற்கு முன்பாக உங்களுடைய இறுதி விருப்ப வேண்டும் உணவு என்ன என வினவியபொழுது அவள் சொன்னது நற்கருணை என்றாள். 

எவ்வாறு இவர்களின் அன்றாட வாழ்வின் நடைமுறையோடு நற்கருணை ஒன்றானதோ அதுபோல நாமும் நடமாடவேண்டும் நற்கருணை இயேசுவோடு என்ற அழைப்பை இன்றை திருவிழா நமக்கு சொல்லி அழைப்புவிடுக்கிறது

. மூன்று வாசகவார்த்தைகளும் முழுமையான பலி நிறைவுபெற்ற அன்பின் வாக்குறுதி நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் இயேவே என்பதை எடுத்துச்சொல்கிறது. இரத்தமில்லாத பலியில்லை. யூத எபிரேய வழக்கத்தில் இரத்தத்தில் தான் மனித உயிர் இருக்கிறது என பெரிய நம்பிக்கை நிலவியது. எனவேபலிசெலுத்தும் தருணத்தில் இரத்தம் சிந்தப்பட்டது பொழியப்பட்டது தெளிக்கப்பட்டது. துவக்கத்தில் இறைவன் தனிப்பட்ட நபர்களை அழைத்து அவர்களோடு தன் அழைப்பு அன்பு உடன்படிக்கையை செய்தார்.அபிராம்-ஈசாக்-யாக்கோபு போன்ற தலைவர்களாவர். பின்பு இனத்தோடு மோசேவழியாக முழு இஸ்ராயேல் சமூகத்தோடு நாட்டு மக்களோடு உடன்படிக்கைசெய்தார். 

இன்றைய முதல் வாசகவரிகளில் நாம் காண்பதுபோல உடன்படிக்கையின் பலகைகளைபெற்றபிறகு மலைஅடிவாரத்தில் நன்றியுணர்வோடு நன்றிபலியாக பாஸ்கா இரவு கடத்தலில் கிடைக்கப்பெற்ற தலைப்பிள்ளைகள் பன்னிரென்டுபேரை எரிபலி செய்ய அனுப்பி கொண்டு வந்த இறைச்சியை உணவாகவும் அதன் இரத்தத்தை சிறிது பீடத்தின்மேலும் மற்றதை கூடியிருப்போர் மேலும் தெளித்தார். எரிபலியின் வழியாக எரியும் புகை இறைவனை சேர்ந்தடைந்து தொடுகிறது தங்கள் வேண்டுதல் நன்றி என எண்ணினர். கொல்லப்பட்ட விலங்குகளின் வழியாக செலுத்தப்பட்ட பலிகள் சடங்காக மாறின பலிசெலுத்தும் குருக்கள் அர்த்தத்தை இழந்தனர். இரவும் பகலும் கொல்லப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டது. எருசலேம் கண்ணுக்கு தெரிவதற்கு முன்பு எருசலேமின் இரத்த வாடை உணரப்பட்டது என்றுசொல்லப்பட்டு வந்தது. 

எனவே நற்செய்தியில் இயேசு செயலால் உடன்படிக்கையை முழுமையாக்குகிறார்..எடுத்து…நன்றிசெலுத்தி…பிட்டு…அனவைருக்கும் கொடுத்து உண்ணுங்கள் …பருகுங்கள் என்ற அனைத்தும் வார்த்தைகளை கடந்த அர்த்தமுள்ள செயல்களாகும். 

பழைய உடன்படிக்கை….புதிய உடன்படிக்கை….என்ன வேறுபாடுகள்? 
பழையது கறைகளோடு குறைந்துபோனது….புதியது நிறைவானது முழுமையானது…
பழையது வெளிப்புற சுத்தம் கொடுத்தது…புதியது உள்ளத்து தூய்மை பெற்றுதந்தது…
பழையதில் விலங்குகள் கட்டாயப்படுத்தி கொல்லபட்டன…புதியதில் சுயவிருப்பத்தோடு இயேசு தன்னையே பலியாக்கினார்... 
பழையது சட்டத்தின் கட்டாயம்…புதியது அன்பின் செயல்…
பழையதில் மோசே கருவியாக செயல்பட்டார்……புதியதில் இயேசுவே பலிசெலுத்துபவராக..பலிபொருளாக பலிபீடமாக ஆனார்….
பழையது முறிந்த உடன்படிக்கை…..புதியது முடிவில்லா உடன்படிக்கை…..
நான் சொல்லவிருப்பது நாம் கொண்டாடும் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவின் வரலாற்று பின்னணி அற்புத புதுமை நிகழ்வாகும். 1263-ம் ஆண்டு ஜரோப்பிய தேசத்து செக்குடியரசின் பிராகுவேயிலிருந்து ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றிய பல்வேறு கேள்விகள் குழப்பங்கள் நம்பிக்கை குறைபாடுகள் சிந்தனைகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் இத்தாலியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அத்திருப்பலியில் அர்ச்சிப்பு வார்த்தைகள சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாகமாறி இரத்தம் கசிய துவங்கியது. .இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்குப்பிறகு 1264-ம்ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பன் இதன் நினைவாக செய்தியாக இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை சிறப்பிக்க கட்டளைபிறப்பித்தார். இந்த அற்புதநிகழ்விற்கு பிறகுதான் அவ்வாலயத்தில் துவங்கி பல இடங்களில் நற்கருணை பவனி பகிரங்கமாக தெருக்களில் பயணமாகி வாழும் இயேசு நம்மத்தியில் நடமாடுகிறார் என்ற நற்கருணை இயேசுவோடு மக்கள் அன்றாட வாழ்வில் நடமாடதொடங்கினர். 2011-ல் மே மாதத்தில் இந்த அற்புத பிரசன்னத்தில் திருப்பலியில் இணைந்து செபித்தது புல்லரிக்ககூடிய முழுமனதை தொடக்கூடிய உணர்வு அனுபவத்தைதந்தது. இன்றும் அந்த இரத்தகறைப்பட்ட கார்ப்பரோல் (விரிப்பு துணியும்) குருவானவர் திருப்பலியாற்றிய இடமும் பாதுகாக்கப்பட்டு நம்பார்வையில் படும்பொழுது புரியஇயலா உணர்வையும் புதுவாழ்வில் புதுஅழைப்பை பெற்று தருகிறது. 

நான் அன்றாட வாழ்வில்….அனுதின நிகழ்வுகளில்…..சந்திக்கும் உறவுகளோடு…போராடும் தருணங்களில்…நற்கருணை இயேசுவோடு நடமாட தயாரா!-ஆமென். 

இது விசுவாசத்தின் மறைபொருள்

இது விசுவாசத்தின் மறைபொருள்
இச 8:2,3,14-16
1கொரி 10:16,17
யோவா 6:51-58
‘நற்கருணை இயேசு கிறிஸ்துவை முழுமையாகவும், நிறைவாகவும், பிரசன்னப்படுத்தும் அருளடையாளம்: பிற பிரசன்னங்களைவிட நிறைவாக இயேசு கிறிஸ்துவை பிரசன்னப்படுத்துவது நற்கருணை. நற்கருணை முழுமையாக இயேசு கிறிஸ்துவை தன்னகத்தே கொண்டுள்ளது. நற்கருணையே எல்லா அருளடையாளங்களின் நோக்கமும் நிறைவுமாக அமைகின்றது (திருவழிபாடு 7, விசுவாசத்தின் மறைபொருள் 38).
இன்று ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். ஆண்டவருடைய திருவுடல் திருஇரத்தப்பெருவிழா விசுவாசத்தின் மறைபொருளாக விளங்கும் நற்கருணையை திறந்த மனதுடன் ஆழமான விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு ஆண்டவருடைய திருப்பிரசன்னத்தை முழுமையாகப் புரிந்து வாழ அழைப்புவிடுக்கிறது. ‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ (அலளவநசரைஅ கனைநi) என்று திருப்பலியில் எழுந்தேற்றத்தின்போது நாம் அறிக்கையிடுவதை ஆழ்ந்து பொருளுணர்ந்து அறிக்கையிடவேண்டும். நற்கருணையைப்பற்றி குறிப்பிடும்போது அது புலப்படுத்தும், "3"> திருவிருந்து,(Communion) திருப்பலி, (Sacrifice), திருப்பிரசன்னம் (Presence)ஆகிய மூன்று கோட்பாடுகளை இறையியலாளர்கள் முன்வைப்பர். இவற்றுள் திருப்பிரசன்னம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்து திருப்பலி வழியாக கிடைக்கப்பெறும் ‘நற்கருணைப் பிரசன்னம்’ என்றால் அது மிகையன்று: திருவிருந்தாக தொடங்கிய நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னம் பற்றிய விசுவாசப்போதனை முதல் நூற்றாண்டிலேயே ஆதித்திருச்சபைக் கண்டுணர்ந்தது.
1264 ஆம் ஆண்டு திருத்தந்தையால் ‘டிரான்சித்தூருஸ்’ என்ற ஆணை வழியாக இன்று நாம் கொண்டாடும் ‘ இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அறிமுகப்படுத்தப்பட்டது. 

நற்கருணைப் பிரசன்னம்
புனித ஜஸ்டின் (+155) தன் எழுத்துக்களில் இயேசுவின் நற்கருணைப் பிரசன்னத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஒவ்வொரு விசுவாசியும் எந்த உணவும் உண்பதற்கு முன் நற்கருணைப் பெற முயற்சிக்க வேண்டும்: விசுவாசத்தோடு அவர்கள் நற்கருணையை உண்டால் கொல்லும் நஞ்சு கூட அவர்களுக்கு தீங்கிழைக்காது’ என்று திருத்தூதர் மரபு எடுத்துரைக்கிறது. புனித அகுஸ்தினார், ‘கிறிஸ்துவின் திருவுடலை வணங்காமல் ஒருவர் அதனை உண்ணக்கூடாது’ என்று ஆணைப்பிறப்பிக்கிறார். என்கிறார். புனித சிரிலும் நற்கருணைப் பெறும்போது எப்படி மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார். இப்படித் திருச்சபை தொடக்கத்திலிருந்தே நற்கருணையைப் போற்றி வந்துள்ளது. நற்கருணை ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை வெளிப்படுத்தும் உன்னதமான அருளடையாளம். ஆகையால் கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கருணையை –நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை- முழுமையாக உணர்ந்து விசுவசித்து அதற்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டும். 
‘இது என் உடல்’ என்று சொன்ன ஆண்டவர் பொய் சொல்லமாட்டார்: ‘இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். ஆகையால் இயேசு கிறிஸ்துவே ஏற்படுத்திய நற்கருணை அழியாச்சின்னமாக, அவருடைய திருப்பிரசன்னதை;தை வலிந்து எண்பிக்கும் அருட்சாதனமாக எந்நாளும் விளங்குகிறது. ‘உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்’(மத் 28:20) என்ற சொன்ன ஆண்டவர் நற்கருணை வாயிலாகவும் நம்மிடம் பிரசன்னமாகிறார். ஆகையால் திருப்பலியில் கலந்துகொள்ளும் குரு உட்பட ஒவ்வொருவரும் நற்கருணைமீது உரிய ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி பங்கேற்க வேண்டும். இது விசுவாசத்தின் மறைபொருள். 
திரித்தெந்து திருச்சங்கம் (13 டிசம்பர் 1545 முதல் மார்ச் 1547) இதனையே வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் உட்கருப்பொருள் மாற்றம் (வுசயளெரடிளவயவெயைவழைn) நிகழ்ந்து ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பிரசன்னம் உணரப்படுகிறது. நற்கருணைக்கு முன்பு செபிப்பதும், நோயில் இருப்போருக்கு வழியுணவாக நற்கருணையை வழங்குவதும், தொடக்கமுதல் இருந்து வரக்கூடிய பழக்கமாகும். 

5000த்திலிருந்து 11 வரை
ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் அற்புதம் செய்து ஐயாயிரம் பேரையும் (ஆண்கள் மட்டுமே கணக்கில் உள்ளது) வயிறார உண்ணச் செய்தபின் அண்டவர் கடல்;மீது நடக்கிறார். மீண்டும் அதே கரை அதே எண்ணிக்கையிலான மக்கள்: அப்போதுதான் ஆண்டவர் போதிக்க ஆரம்பிக்கிறார். யோவான் நற்செய்தி ஆறாம் அதிகாரம் முழுவதும் நற்கருணையைப் பற்றி ஆழமாக போதிக்கிறது. அங்கே ஆண்டவர் நற்கருணையைப் பற்றி தானே வானின்று இறங்கி வந்து உணவு என்பதைப் பற்றிப் போதிக்கிறார். 
முதன் முறையாக ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்று (6:35) இயேசு கூறுகிறார். முதன் முறை சொன்ன போது அங்கே முணு முணுப்பு எழுகிறது. ‘இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? என்று (6:41) அவருடைய குலம் கோத்திரம் குடும்பச்சூழ்நிலை அலசி ஆராயப்படுகிறது. அதவாது எடுத்த எடுப்பிலேயே இதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஐயாயிரம் பேர் குறைந்து ஆயிரம் பேராக நிற்கின்றனர்.
ஆனாலும் ஆண்டவர் இயேசு தன்னுடைய நற்கருணைப் பிரசன்னத்தை வலியுறுத்துவதிலிருந்து பின்வாங்க வில்லை: மீண்டும், ‘வாழ்வு தரும் உணவு நானே’ (6:48) என்று ஆணித்தரமாக சொல்கிறார். மிஞ்சியிருந்த ஆயிரத்தவரிடையே மீண்டும் அதே சலசலப்பு. ‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? என்று எதிர்க்கேள்வி எழும்புகிறது. முதன் முதலில் குடும்பத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார்கள்: இரண்டாவது சூழலில் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். ஆயிரத்தவர் நூறு பேராகின்றனர். ஆனாலும் ஆண்டவர் இந்த விசுவாசத்தின் மறைபொருளை விளக்காமல் விடப்போவதில்லை. 
மீண்டும் மூன்றாவது முறையாக, விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே’ (6:58) என்று தன்னை அடையாளப்படுத்துகிறார். அதே எதிர்ப்பு அங்கே காணப்படுகிறது. ‘இதை ஏற்றுக்கொள்வது மிக் கடினம்: இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று ஒட்டுமொத்த வெறுப்பை உமிழ்ந்து இருந்த நூறுபேரும் கலைந்து பத்துக்களாகி நிற்கின்றனர். ஆண்டவர் இயேசு வெளிப்படையாகவே,சீடர்களிடம் ‘நீங்கள் நம்புவதற்கு தடையாக இருக்கிறதா? என்று கேட்ட கேள்வி நம் காதில் எதிரொலிக்கவில்லையா? 
மீண்டும் இயேசு போகாமல் மிஞ்சியிருந்த தம் பன்னிரண்டு சீடர்களிடம் ‘ நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (6:67)என்று ஒளிவு மறைவின்றி கேட்கிறார். அப்போதுதான் பேதுரு யாரிடம் போவோம்: வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே உள்ளன என்று சரணடைகிறார்.மிஞ்சியிருந்த பன்னிரண்டு பேரும் நிலைத்திருக்கவி;ல்லை: ‘உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ (6:70) என்று ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த அலகை யார்? என்பது நற்கருணையை இறுதி இராவுணவின் போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. நான் யாருக்கு அப்பத்துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன் தான் எனச் சொல்லி, அப்பத்துண்டைத் தோய்த்து .. .. யூதாசுக்குக் கொடுத்தார்: அவன் அப்பத்துண்டைப் பெற்றதும், சாத்தான் (அலகை) அவனுக்குள் நுழைந்தான்: .. வெளியே போனான்: அது இரவு நேரம். (யோவா 13:26, 27, 30) என்று இருளில் மறைந்த விசுவாசமில்லாத யூதாசை ....இப்படி 5000 பேரில் ஆரம்பித்து வெறும் 11 பேரில் வந்து நிற்கிறது. முதலாவதாக, ஒட்டுமொத்த மக்கட்கூட்டம் நிராகரித்தது: இரண்டாவதாக படித்த சமயத்தலைவர்கள் நிராகரித்தனர்: மூன்றாவதாக, பயிற்சிப்பெற்ற பனிரெண்டு சீடருள் ஒருவர் நிராகரித்தார். ஆனால் எம்மாவூஸ் அனுபவம் உட்பட உயிர்ப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த திருச்சபையும் நற்கருணையால் வாழ்வு பெற்றது: வாழ்வளிக்கும் அருட்சாதனத்தை வழங்கிட கருவியுமானது. 

விசுவாசத்தின் மறைபொருள்
‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ என்பது எத்துணை உண்மை. நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் உண்மையானது: உலகம் முடியும் வரை நிரந்தரமானது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆயிரமாயிரம் அற்புதங்கள் இதனைப் புலப்படுத்துகிறது. ‘இது என் உடல்: இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். ஆகையால் விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் முழுமையாக விசுவசிக்க வேண்டும். நற்கருணை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு, வாழ்வு, மறையுடல், சமத்துவம் ... என ஒவ்வொரு மதிப்பீடுகளும் நற்கருணையில் ஆண்டவர் பிரசன்னாமாயிருக்கிறார் என்ற விசுவசிக்காத நிலையில் நம்மால் அவற்றைக் கடைபிடிப்பது இயலாத காரியம். அவற்றை செயல்படுத்தினாலும் அர்த்தமில்லை. ‘உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்: நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ (விப33:15-16) என்று முறையிட்ட மக்களுக்கு ‘உங்களோடு என்றும் இருப்பேன்’ (யோசுவா 3:7) என்ற வாக்குறுதியை இறைவன் தந்தார். அவருடைய பிரசன்னமே அனைத்தையும்விட மேலானது. இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர்நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைப்பார் (திவெ21:3,4). என்ற இறைவாக்கு நற்கருணையில் உண்மையாகிறது. ஆகையால் தான் ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம் (யோவா14:27) என்று சொன்ன இம்மானுவேல் உலகை வென்றுவிட்டேன்’ என்று சொல்லி அதற்கு சாட்சியாய் இந்த நற்கருணைப் பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எனவே விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் விசுவசித்து வாழ்வோம்.

நற்கருணை மீது நாம் கொண்டிருக்கிற பிரசன்ன விசுவாசம் நம்முடைய அன்றாட பக்தி நடவடிக்கைகளில் வெளிப்பட வேண்டும்: நற்கருணை ஆண்டவரை தினமும் சந்திப்பதும், முடிந்த வரை அன்றாடம் திருப்பலியில் கலந்துகொள்வதும், நற்கருணை ஆராதனை, நற்கருணைச் சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றில் பங்கெடுப்பதும், நற்கருணை வாங்கிய பிறகு அவரோடு விசுவாசநிலையில் உரையாடுவதும், நற்கருணையைக் கைகளில் வாங்கும்போது கவனத்துடன் வாங்கி பராக்குக்கு இடம்கொடுக்காமல் உண்ணுவதும் உறவாடுவதும் ..என நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும்.
எல்லாவற்றைவிட கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணைமீது அதன் பிரசன்னத்தின்மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையில் செயலாக்கம் பெற வேண்டும். நற்கருணை விசுவாசம் செயலாக்கம் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரே குடும்பமாக ஒன்றித்து, ஒற்றுமையில் வளரும் போதுதான். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம், நமக்கு வலியுறுத்துகிறது. ‘நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்’ சிதைந்து கிடந்து கொரிந்து திருச்சபை, பிரிவினையில் வலிந்து நின்ற கொரிந்து திருச்சபை, ஒற்றுமையை வெளிப்படுத்தி நற்கருணையைச் செயலாக்கம் செய்தது. நாமும் பக்தி முயற்சியோடு நற்கருணையை சாதீயம் உட்பட அனைத்து பிரிவினைச் சக்திகளை அப்புறப்படுத்தி ஒரே உடலாய் ஒரே திருச்சபையாய் ஒன்றுபட்டு நிற்போம்.