உயிர்த்தெழுதல் வழியாக நிலை வாழ்வு தொடங்குகிறது என்று இயேசு கிறிஸ்து போதித்தார். இயேசுவே உயிர்த்தெழுதல் என்பதை அவர் தமது வாழ்விலேயே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
உயிர்ப்பு உண்மை
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்தால் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார். எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றி இறந்ததால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. அப்படியே இரண்டாம் மூன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது. அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்? அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே” என்று கேட்டனர்.
இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றி கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா? ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்” என்று கூறினார். (மத்தேயு 22:23-32)
நம்புவோர் வாழ்வர்
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். (யோவான் 11:21-27,41-44)