அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, June 27, 2018

விண்ணகம்

மரியாளின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா? 


"விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது." (திருவெளிப்பாடு 11:19) இறை இரக்கத்தின் அரியணையைத் தாங்கிய இந்த உடன்படிக்கைப் பேழையாகவே அன்னை மரியாள் செயல்படுகிறார். மோசேயின் சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழையின் வழியாக, இஸ்ரயேல் மக்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொண்டதுடன், அவரது ஆசியையும் வழி நடத்துதலையும் பெற்றனர். அவ்வாறே விண்ணக கோவிலின் உடன்படிக்கைப் பேழையாகத் திகழும் அன்னை மரியாள், புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையின் மக்கள் அனைவரும் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ளவும், அவரது அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகிறார். எனவே, மரியாளின் உதவியை நாடுவோர் நிலை வாழ்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை."பரிசுத்த கன்னி 'கடவுளின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். புனித அம்புரோஸ் ஏற்கெனவே கற்பித்ததுபோல், நம்பிக்கை, அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறை ஒன்றிப்பு ஆகியவற்றால் இறையன்னை திருச்சபையின் முன்மாதிரியாகத் திகழ்கிறார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு, "நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியாள் நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கிறார். தாம் பறைசாற்றப்படும்போதும் வணங்கப்படும்போதும், நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது பலிக்கும் இறைத்தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார்." (திருச்சபை எண். 65)  "இறைவனின் பரிசுத்த அன்னையும், புதிய ஏவாளும், திருச்சபையின் தாயுமான மரியாள், கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்காக பரிந்துபேசும் பணியை விண்ணகத்திலும் தொடர்கிறார் என நாம் நம்புகிறோம்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 975) இவ்வாறு, "தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும், கடவுளின் விருப்பத்திலிருந்தே உருவாகிறது; கிறிஸ்துவின் இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது; நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நேர்முக ஒன்றிப்பை இச்செல்வாக்கு எவ்வகையிலும் தடுப்பதில்லை; மாறாக அதைப் போற்றி வளர்க்கின்றது." (திருச்சபை எண். 60) எனவே, அன்னை மரியாளின் வழியாக விண்ணக வரங்களைத் தேடுவோர், அவரது பரிந்துரையால் விண்ணகத்தை பெற்றுக்கொள்வது உறுதி.

செபமாலை

'செபமாலை' மூலம் மரியாளை வாழ்த்துவது கடவுளுக்கு ஏற்புடையதா?

"அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று செபமாலையில் நாம் வாழ்த்துகிறோம். எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து. தந்தையாம் இறைவனே கபிரியேல் தூதர் வழியாக, "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற வார்த்தைகளால் மரியாளை வாழ்த்தினார். கடவுளின் மீட்புத் திட்டத்தை மரியாளுக்கு அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை. "பரிசுத்த ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்ததால் மரியாள் இயேசுவின் தாயானார்.இறைமகனை கருத்தாங்கிய அன்னை மரியாள், செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும், அவர்  பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42) என்று வாழ்த்தினார். இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியாரின் தூண்டுதலால் எலிசபெத்து கூறியவை. இறைமகனை கருவில் சுமந்து மீட்புத் திட்டம் நிறைவேற ஒத்துழைத்த அன்னை மரியாளை, இறைத்தந்தையும் இறைஆவியும் போற்றிப் புகழ்வதைக் காண்கிறோம். "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாய்" (மாற்கு 4:35) என்று இயேசுவும் அன்னை மரியாளைப் பாராட்டுவதைக் காண்கிறோம். இவ்வாறு மூவொரு கடவுளால் வாழ்த்தப்பெற்ற மரியாளை ஆண்டவருக்கு விருப்பமான வார்த்தைகளில் புகழ்ந்து உதவி வேண்டுவதே செபமாலையின் அடிப்படை.கடவுளின் மீட்புத் திட்டத்தில் மறைபொருளின் ரோசா மலராகத் திகழும் கன்னி மரியாள், 'இறைவனின் தாய்' என்ற மேலான பெருமையைப் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே கிறிஸ்து இயேசுவைப் போன்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் மாட்சியோடு திகழ்கிறார். எனவே, "திருச்சபை மரியாளைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. திருச்சபையில் என்றும் இருந்து வரும் இவ்வணக்கம், மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் பரிசுத்த ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே வேறுபட்டது." (திருச்சபை எண். 66) இந்த வணக்கத்தின் ஒரு பகுதியாகவே செபமாலை பக்தியும் அமைந்துள்ளது. இறைத்தந்தை மற்றும் பரிசுத்த ஆவியாரின் வார்த்தைகள் மூலம் அன்னை மரியாள்வை வாழ்த்தி, அவரது பரிந்துரையை வேண்டுவது கடவுளுக்கு ஏற்புடைய செயலே.

துயரில் ஆறுதல்

மரியாளை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன? 


மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோனின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில் மரியாளும் பங்கேற்றார். கன்னி மரியாள் பரிசுத்த ஆவியால் கருவுற்றதும், 'அவர் கணவர் யோசேப்பு அவரை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.' (மத்தேயு 1:19) பெத்லகேம் விடுதியில் இடம் கிடைக்காததால், இயேசுவை மரியாள் மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். (லூக்கா 2:7) ஏரோதிடம் இருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கு ஓடிச் சென்றார். (மத்தேயு 2:14) பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மூன்று நாட்கள் அலைந்து திரிந்தார். (லூக்கா 2:46)
இயேசுவின் பணி வாழ்வின்போதும், மரியாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததைக் காண்கிறோம். இறைமகன் இயேசுவை ஒரு சீடராகவும் தாயாகவும் மரியாள் பின்தொடர்ந்தார். அதேநேரத்தில், மகனை சந்திக்காமல் மரியாள் தனிமையில் வாழ்ந்த நாட்களும் பல இருந்தன. இறையாட்சிப் பணியை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த இயேசு, மரியாளின் தாயன்பைக் காயப்படுத்திய தருணங்களும் உண்டு. இறுதியாக, மரணத் தீர்ப்புக்கு ஆளாகி சிலுவை சுமந்து சென்ற இயேசுவின் பாதையில் மரியாளும் பயணம் செய்தார். உலக மக்களைப் பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்க, "தான் பெற்றெடுத்த மகனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார்." (திருச்சபை எண். 58) இவ்வாறு இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்தின்போது உடனிருந்த அன்னை மரியாள், துயரத்தின் உச்சத்தை அனுபவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்ட மரியாள், தம் மகனோடு விண்ணக மாட்சியில் பங்கு பெற்றிருக்கிறார். மனிதருக்குரிய அனைத்து துன்பங்களையும் சந்தித்தவர் என்பதால், நமது துன்ப நேரங்களில் பரிந்து பேசுபவராக இருக்கிறார். கானாவூர் திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, அவர்களின் தேவையறிந்து அன்னை மரியாள் உதவி செய்ததை நற்செய்தி எடுத்துரைக்கிறது. "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று கூறிய இயேசுவின் மனதை தம் நம்பிக்கையால் மாற்றி, தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய முதல் புதுமை நிகழக் காரணமாக இருந்தவர் அன்னை மரியாள். நமது துன்ப வேளைகளிலும் இத்தகைய வல்லமையுள்ள பரிந்துரையால் நாம் ஆறுதல் பெற முடியும் என்பதாலே, மரியன்னையை 'துன்புறுவோரின் ஆறுதல்' என அழைக்கிறோம்.

வானக அரசி

உலக வரலாற்றில் பிறந்த மரியாளை 'வானதூதர்களின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?

மரியாள் உலக வரலாற்றில் பிறந்தவர் தான் என்றாலும், அவரது பிறப்பு கடவுளின் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. வரலாற்றுக்கு முன்பே, இறைமகனின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் அன்னை மரியாள். இறைவனின் மீட்புத் திட்டத்தை எதிர்த்த வானதூதர்களே அலகைகள் என்று பெயர் பெற்றதாக திருச்சபை கற்பிக்கிறது. மனித வரலாற்றில் தம்மை வெளிப்படுத்த விரும்பிய இறைவன், கன்னி மரியாளின் மகனாக இவ்வுலகில் தோன்ற விரும்பினார். இந்த திட்டத்தை வானதூதர்களுக்கு வெளிப்படுத்திய கடவுள், இறைமகனையும் இறை அன்னையையும் வணங்குமாறு கட்டளையிட்டார். இதை ஏற்று அதிதூதர் மிக்கேலின் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு வானதூதர்கள், கன்னி மரியாளையும் குழந்தை இயேசுவையும் வணங்கியதாக கிறிஸ்தவ மரபு கூறுகிறது. இதிலிருந்தே, மரியாள் வானதூதர்களின் அரசி என்பதை உணர முடிகிறது.
"வானதூதர்களைவிடத் தாழ்ந்த இனத்தில் பிறக்கும் இறைமகனையும், அவரது தாயையும் வணங்க முடியாது" என்று கூறி, லூசிபர் தலைமையில் மூன்றாவது பங்கு வானதூதர்கள் கிளர்ந்தெழுந்தனர். மிக்கேலும் அவரோடு சேர்ந்த தூதர்களும் லூசிபரின் கூட்டத்துக்கு எதிராக போரிட்டு, அவர்களை விண்ணகத்தில் இருந்து வெளியேற்றியதாக திருச்சபைத் தந்தையர் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, மனித குலத்தை பாவத்தில் வீழ்த்த தொடக்கம் முதலே அலகை சூழ்ச்சி செய்து வருகிறது. கடவுளின் திட்டத்துக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டும் வகையிலே அலகை எப்போதும் விழிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தனது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த வானதூதர்களின் அரசியான கன்னி மரியாளை, மனிதர்களும் வணங்கவிடாமல் தடுப்பது அலகையின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, இறைமகனின் தாய் என்ற உன்னத நிலையே கன்னி மரியாளுக்கு வானதூதர்களின் அரசியாகத் திகழும் மாண்பை அளித்துள்ளது. இவ்வுலக ஆட்சியாளர்களின் செயல்பாட்டில், அவர்களது குடும்பத்தினருக்கு உள்ள செல்வாக்கை காண்கிறோம். அவ்வாறே, அனைத்துலக அரசர் இயேசுவின் தாயான மரியாள் அனைத்துக்கும் அரசியாகத் திகழ்கிறார். "தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாக கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய மரியாள் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார்." (திருச்சபை எண். 66) மேலும், "அருள்நிறைந்த மரியே வாழ்க! கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:28,30) என்று கபிரியேல் தூதரால் வாழ்த்தப் பெற்ற கன்னி மரியாளை, வானதூதர்களின் அரசி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லை.

புனிதப் பேழை

மரியாளை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?

பழைய உடன்படிக்கையின் அடையாளமாக பொன் தகடு வேய்ந்த பேழை இருந்தது போல, புதிய உடன்படிக்கையின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியாள் திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழையான அன்னை மரியாளிடமும் இத்தகையப் பொருட்கள் இருந்ததைக் காண்கிறோம். வானத்தில் இருந்து பொழியப்பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாளிடம் இருக்கிறது. உயிர்ப்புக்கு அடையாளமான ஆரோனின் கோலுக்கு மாற்றாக, "உயிரும் உயிர்ப்புமான" (யோவான் 11:25) இயேசுவைக் காண்கிறோம். இறைவார்த்தையைத் தாங்கிய கற்பலகைகளுக்கு பதிலாக, "மனிதரான இறைவார்த்தையே" (யோவான் 1:14) மரியாளின் வயிற்றில் இருந்தார்.
இவ்வாறு, மரியாள் உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்வதற்கு விவிலியமே சான்று பகர்வதைக் காண்கிறோம். மேலும், "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலை நாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கிறார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியாள் 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். மோசே வழியாக செய்யப்பட்ட பழைய உடன்படிக்கைக்கு கடவுளின் திருச்சட்டம் அடிப்படையாக இருந்தது போல, புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியாள் திகழ்கிறார்.
மேலும், 'மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' (லூக்கா 1:39) என்று காண்கிறோம். பழைய உடன்படிக்கைப் பேழையும் யூதேய மலை நாட்டில் பயணித்ததை விவிலியம் எடுத்துரைக்கிறது: 'தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர்.' (2 சாமுவேல் 6:2) 'மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.' (லூக்கா 1:41) அவ்வாறே, 'தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.' (2 சாமுவேல் 6:5) "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:43) என்று எலிசபெத்து கேட்டது போன்றே, "ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்?" (2 சாமுவேல் 6:9) என்று தாவீது வினவியதைக் காண்கிறோம். 'மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு வீடு திரும்பினார்.' (லூக்கா 1:56) 'ஆண்டவரின் பேழை ஓபோது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று.' (2 சாமுவேல் 6:11)

விடிவெள்ளி

மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?

'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக்கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர்கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியாள் என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாளை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியாள் தோன்றினார்.
சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாள்வும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கிறார். கதிரவனின் பண்பு நலன்களை விடிவெள்ளி பிரதிபலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியாள் திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாகவும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியாள் போற்றப்பெறுகின்றார். கத்தோலிக்கத் திருச்சபையும் பரிசுத்த ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியாள் விளங்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.
கீழ்த்திசை அடிவானத்தில் தோன்றும் விடிவெள்ளி, கடல் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர வழி செய்கிறது. நீண்ட நெடிய கடல் பயணத்தில் நம்பிக்கைச் சுடராக விடிவெள்ளி திகழ்கிறது. அவ்வாறே, மரியாளும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியாள் நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியாள் தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கயின் அடையாளமாக மரியாள் ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

வானக மாட்சி

"மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டார்" என்பதை உறுதி செய்ய முடியுமா?

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை" (யோவான் 3:13) என்ற இயேசுவின் கூற்றே இந்த சந்தேகத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால் விண்ணகத்திற்கு ஏறிச்செல்வதும், விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொண்டால் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஏனோக்கின் விண்ணேற்பு பற்றி விவிலியம் பின்வருமாறு கூறுகிறது: 'ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.' (தொடக்க நூல் 5:24) இறைவாக்கினர் எசாயாவின் விண்ணேற்பை விவரிக்கும் வார்த்தைகள் இவை: 'இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்றார்.' (2 அரசர்கள் 2:11)
கடவுளோடு நடந்த ஏனோக்கும், கடவுளின் வாக்கை அறிவித்த எலியாவும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மை என்கிறபோது, மனிதராய் தோன்றிய இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையே என்பது தெளிவாகிறது. "அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்" (1 கொரிந்தியர் 15:53) என்ற வார்த்தைகளுக்கு ஏற்பவே மரியாளின் விண்ணேற்பு நிகழ்ந்தது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" (மத்தேயு 5:37) என்று வாக்களித்த இயேசு, 'தம் அன்னையின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறு பெற்றவர் எனப் போற்றும் வகையில் அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.' (லூக்கா 1:48-49)
"மாசற்ற கன்னி மரியாள், ஆதிப் பாவக்கறை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டு, இறுதியாக தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மேலும் அனைத்துக்கும் அரசியாகவும் ஆண்டவரால் உயர்த்தப்பட்டார். இவ்வாறு ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரும், பாவம் மற்றும் சாவின் மீது வெற்றி கண்டவருமான தம் மகனுக்கு இன்னும் முழுமையாக ஒத்தவரானார். புனித கன்னியின் விண்ணேற்பு அவரது மகனின் உயிர்ப்பில் தனிப்பட்ட பங்கேற்பாகவும் மற்ற கிறிஸ்தவர்களின் உயிர்ப்புக்கு முன்னடையாளமாகவும் இருக்கிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 966) "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்" (திருவெளிப்பாடு 12:1) என்னும் வார்த்தைகள் அன்னை மரியாளின் விண்ணக மாட்சியை உறுதி செய்கின்றன.

அடைக்கலம்

கடவுள் மட்டும்தானே பாவங்களை மன்னிக்க முடியும்! மரியாளைப் 'பாவிகளின் அடைக்கலம்' என்று அழைப்பது ஏன்?

"கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள்ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன்களைப் பெற்றனர். இயேசுவுடனான சந்திப்பு பலரது வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கியதைக் காண்கிறோம். இயேசு தம்மை நெருக்கமாகப் பின்தொடர்ந்த சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கியதைக் காண்கிறோம்: "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா." (யோவான் 20:23) பாவம் இல்லாமல் உற்பவித்து உலக மீட்பரின் தாயான மரியாளும், இத்தகைய பாவ மன்னிப்பு அதிகாரத்தால் பாவிகள் மீட்படைய உதவுகிறார் என்பதே திருச்சபையின் போதனை.
"மரியாள் உண்மையிலேயே, கிறிஸ்துவின் உறுப்புகளாகிய கிறிஸ்தவர்களுக்கு தாயாகத் திகழ்கின்றார். ஏனெனில், அந்த தலையானவரின் உறுப்புகளாக நம்பிக்கை கொண்டோர் திருச்சபையில் பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 53) "என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" (லூக்கா 1:47) என்று பாடிய மரியாள், மக்கள் அனைவரும் மீட்பு பெறுமாறு ஆண்டவரிடம் இடைவிடாது பரிந்துபேசி வருகிறார். "தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டி வருகிறவர்" (லூக்கா 1:50) என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்த மரியாள், தம்மை நாடி வரும் பாவிகளின் ஈடேற்றத்துக்காக ஆண்டவரின் இரக்கத்தை பெற்றுத் தருகிறார். பாவங்கள் மன்னிக்கப்பட தம் மகனிடம் பரிந்து பேசும் மரியாள், பாவிகளை நல்வழிப்படுத்துவதிலும் தாய்க்குரிய அன்போடு உதவி செய்து வருகிறார்.
ஆகவேதான், "பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், தேர்ந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாளை நோக்கித் தம் கண்களை அவர்கள் உயர்த்துகின்றனர்." (திருச்சபை எண். 65) இயேசுவுக்கு மட்டுமின்றி திருச்சபையின் மக்கள் அனைவருக்கும் தாயாகத் திகழும் மரியாள், இயேசுவைப் போன்று அவரது சகோதர சகோதரிகளான நாம் அனைவரும் நிறைவுள்ளவர்கள் ஆகுமாறு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார்; பாவிகள் அனைவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் அருளும் மீட்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் செயலாற்றி வருகிறார். விண்ணகத்தில் கடவுளின் மாட்சியில் பங்கு பெற்றுள்ள அன்னை மரியாள், பாவிகளுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத்தர சோர்வின்றி பரிந்துபேசி வருவதால் 'பாவிகளுக்கு அடைக்கலம்' என்று அழைக்கப்படுகிறார்.

வெற்றியாளர்

இயேசுதானே சாத்தானை வெற்றிகொண்டார்! அப்படியிருக்க மரியாளை சாத்தானை வெல்பவர் என ஏன் அழைக்க வேண்டும்?

"தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர் என்பதால், கடவுளின் திட்டத்தில் மரியாள் சிறப்பிடம் பெறுகிறார். உலகின் பாவத்தைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் தாய் ஆகுமாறு, மரியாள் மாசற்றவராய் படைக் கப்பட்டார். பாவத்தின் கறை படாமல் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த மரியாள், "பாவத்தின் மீதும் சாவின் மீதும் வெற்றி கண்டவரான தம் மகனுக்கு இன்னும் அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு விண்ணுலக மாட்சிக்கு கடவுளால் உயர்த்தப் பெற்றார்." (திருச்சபை எண். 59) எனவே, சாத்தானை வெற்றி கொள்ளும் 'கடவுளின் இயல்பு மரியாளிடமும் இருக்கிறது.' (1 யோவான் 3:9)
"வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்" (லூக்கா 10:18-19) என்ற இயேசுவின் வார்த்தைகள், சாத்தானை வெல்லும் அதிகாரத்தை சீடர்களுக்கு வழங்குகின்றன. "ஆட்டுக் குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் சாத்தானை வென்றார்கள்" (திருவெளிப்பாடு 12:11) என்று மறைநூல் கூறுகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வல்லமையால் சாத்தானை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கும்போது, இயேசுவின் தாய் மரியாளுக்கும் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
அனைத்துக்கும் மேலாக, "புதிய ஏவாளாகிய மரியாள், ஆதிப்பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்காமல் கடவுளின் தூதரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டதால், உலக மீட்பராக கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு உலகின் மீட்புக்கு வழி திறந்ததால், சாத்தான் என்று அழைக்கப்படும் அலகையின் வீழ்ச்சிக்கு மரியாளே காரணமாக அமைந்தார். சாத்தானை வெற்றிகொண்டவர் கிறிஸ்து இயேசுவே என்றாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த மரியாள்வுக்கும் அந்த வெற்றியில் கடவுள் பங்கு அளித்தார். இவ்வாறு, "அமைதி தரும் கடவுள், மரியாளின் காலடியில் சாத்தானை நசுக்கிப் போட்டுள்ளார்." (உரோமையர் 16:20) எனவே, பாவிகளின் அடைக்கலமான மரியாள் சாத்தானை வெல்பவராகத் திகழ்கிறார் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

நம் அன்னை

மரியாளை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்படைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

"அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் தேயு 5:9) என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு மனிதரும் தமது நேரிய வாழ்வால் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியும் என்பதே இதன் பொருள். கிறிஸ்து இயேசுவின் நேரிய செயல்களால் அவரை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் இறைத் தந்தையின் பிள்ளைகளாகும் பேறு பெற்றிருக்கிறோம். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்." (எபேசி யர் 1:3,5) இயேசுவின் தந்தையான கடவுள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பது போன்று, அவரது தாயான மரியாளும் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் தாயாகத் திகழ்கிறார்.
மரியாளை மனிதகுலத்தின் தாயாக்கும் கடவுளின் திட்டத்தை, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். 'இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார்.' (யோவான் 19:26-27) மரியாள்வை யோவானின் பாதுகாப்பில் ஒப்படைக்க இயேசு நினைத்திருந்தால், யோவானிடம்தான் முதலில் பேசியிருக்க வேண்டும். யோவானை முதலில் மரியாளிடம் ஒப்படைப்பதில் இருந்தே இயேசுவின் நோக்கம் தெளிவாகிறது. மேலும் நற்செய்தியில் யோவானின் பெயரைக் குறிப்பிடாமல் சீடரிடம் என பொதுவாக கூறுவதன் மூலம், இயேசுவின் சீடர்களாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் மரியாள்வைத் தாயாக ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுவதை உணர முடிகிறது. அதுவே, இயேசுவின் கடைசி விருப்பம் ஆகும்.
'சிலுவை அடியில் நின்ற சீடர் மட்டுமே மரியாளைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்' (யோவான் 19:27) எனக் கூறப்பட்டிருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு சீடர்கள் அனைவருமே அன்னை மரியாளின் அரவணைப்பில் வாழ்ந்ததைக் காண்கிறோம். 'அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாளோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.' (திருத் தூதர் பணிகள் 1:14) இவ்வாறு, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிறிஸ்து இயேசுவைப் பெற்றெடுத்த மரியாளே, பெந்தக்கோஸ்து நாளில் பரிசுத்த ஆவி வல்லமையோடு இறங்கி வந்தபோது திருச்சபையின் மக்களைப் பெற்றெடுத்தார். ஆகவே, மரியாள் கிறிஸ்தவர்களின் தாயானார். பாவ வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக ஏவாள் இருப்பது போல், அருள் வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக மரியாள் திகழ்கிறார்.

துன்பங்கள்

மீட்புத் திட்டத்தில் மரியாளுக்கும் பங்கு இருக்கிறதென்றால், இயேசுவின் துன்பங்களிலும் அவர் பங்கேற்றாரா?

வரலாற்றின் தொடக்கத்தில் உலகிற்கு மீட்பரை வாக்களித்த கடவுள், அவரது தாயைக் குறித்தும் முன்னறிவிப்பதைக் காண்கிறோம். "பெண்ணின் வித்து அலகையின் தலையைக் காயப்படுத்தும்" என்பதே மீட்பின் வாக்குறுதி. அலகையின் தலையை நசுக்கும் மீட்பரை உலகிற்கு கொண்டு வர ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இவ்வாறு தீமை மற்றும் பாவத்தின் மொத்த வடிவான அலகையை ஒழிப்பதில் மீட்பரின் தாய்க்கும் கடவுள் பங்கு தந்தார். அலகைக்கு எதிரானப் போராட்டத்தில் இறைமகன் இயேசு பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. மகன் அனுபவித்த இந்த துன்பங்களோடு தாயின் மனமும் ஒன்றித்திருந்தது என்பதை நாம் உறுதியாக கூற முடியும். எவ்வாறெனில், 'மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19)
அன்னை மரியாள், இயேசுவின் துன்பங்களில் பங்குபெற வேண்டுமென்பது இறைத்தந்தையின் திருவுளமாக இருந்தது. 'திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் கோவிலுக்கு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றினார். பின்னர் சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.' (லூக்கா 2:27,28,34-35) சிமியோன் வழியாக அறிவிக்கப்பட்ட இந்த இறைவாக்கு கன்னி மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவேறியது.
"மீட்பு அலுவலில் மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை கிறிஸ்து கன்னியிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு தூய கன்னி தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவை வரை விடாது காத்து வந்தார்; கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார்; தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற்றார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார். இறுதியாக, சிலுவையிலே உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே மரியாளைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) "ஓ, ஆசிபெற்ற அன்னையே! உண்மையாகவே, உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவியது. ஏனெனில் உமது இதயத்தை ஊடுருவினால்தானே உம் மகனின் இதயத்தில் வாள் நுழைய முடியும்" என்று புனித பெர்நார்து (1090-1153) கூறிய வார்த்தைகள் எத்துணை உண்மையானவை.

இறைத்திட்டம்

வரலாற்றின் தொடக்கத்திலேயே மரியாளை கடவுள் தேர்ந்தெடுத்தார்' என்று கூறுவது எப்படி சரியாகும்?


"கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." கொலோசையர் 1:15-17,20) இவ்வாறு மகனாகிய கடவுளுக்காக உருவாக்கப்பட்ட உலகம், அவராலே மீட்கப்பட வேண்டுமென தந்தையாகிய கடவுள் திருவுளம் கொண்டார். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க, மகனாகிய கடவுள் மனிதரின் உருவை ஏற்கத் திருவுளம் கொண்டார். அவருக்கு மனித உடலைக் கொடுக்க அன்னை மரியாளை தொடக்கம் முதலே கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். ஏனெனில், கடவுளின் திட்டம் ஒரு தாய் வழியாக நிறைவேற வேண்டியிருந்தது.
வரலாற்றின் தொடக்கத்தில் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்ததால், முதல் பெற்றோர் தங்களின் அருள்நிலையை இழந்து தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டனர். கடவுளுடனான உறவை இழந்து பாவத்துக்கு அடிமையான மனிதகுலத்தை விடுவிக்க மகனாகிய கடவுளை மீட்பராக அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். உலக மக்களின் பாவங்களைப் போக்க வரும் இந்த மீட்பர், ஒரு தாயின் வயிற்றில் தோன்றி மானிட மகனாக பிறக்க வேண்டுமென்பது இறைத்திட்டமாக இருந்தது. இதையே கடவுள், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" (தொடக்க நூல் 3:15) என்ற மீட்பின் வாக்குறுதியாக அளிக்கிறார். இவ்வாறு கடவுளின் திட்டத்தில் தொடக்கம் முதலே மரியாள் இடம் பெற்றிருந்ததைக் காண்கிறோம்.
"அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு 'காலம் நிறைவேறியபோது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.' (கலாத்தியர் 4:4-5). இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியினால் கன்னி மரியாள்விடம் உடல் எடுத்தார். மீட்பின் இந்த மறைபொருள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுத் திருச்சபையில் தொடர்ந்து நீடிக்கிறது." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "நெடுங்கால காத்திருப்புக்குப் பிறகு, சீயோனின் மகளாகிய மரியாளில் கடவுளின் திட்டம் முழுமை பெற்றது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 489) கடவுள் அளித்த வாக்குறுதியின் நிறைவாக இயேசு தோன்றியதால், மரியாளை வரலாற்றின் தொடக்கத்திலேயே கடவுள் தேர்ந்தெடுத்தார் என்பது நிரூபணமாகிறது.

அமல உற்பவம்

'மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள். கடவுளைக் காண்பதற்கே தூய்மையான உள்ளம் தேவை என்றால், அவரைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த கன்னி மரியாள் எவ்வளவு தூயவராக இருந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனுக்கு தாயாகுமாறு கடவுளுக்கு தம்மையே அடிமையாக அர்ப்பணித்த கன்னி மரியாள், மிகத் தூயவரான கடவுளைக் கருத்தாங்குமாறு மிகத் தூயவராக பிறக்க வேண்டுமென கடவுள் விரும்பினார். "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இயேசுவை" (எபிரேயர் 1:3) கருத்தாங்கிப் பெற்றெடுக்குமாறு மரியாள் தம் தாயின் வயிற்றிலேயே பாவம் இல்லாமல் உற்பவித்தார்.
முதல் ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதால் பாவம் உலகில் நுழைந்தது. புதிய ஏவாளான மரியாள் கடவுளின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்ததால் மீட்பு உலகிற்கு வந்தது; மரியாளின் வழியாக இறைமகனும் மீட்பருமான இயேசு இவ்வுலகில் பிறந்தார். கடவுளின் விருப்பத்துக்கு முரணாக செயல்படும் மனித இயல்பே தொடக்கப் பாவம் அல்லது ஜென்மப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தம் தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதே, இந்த தொடக்கப் பாவத்தின் கரையுடனே பிறக்கிறார். ஆனால் கடவுளின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் என்பதால், அவரது திட்டம் நிறைவேறுவதற்காகவே மரியாள் இவ்வுலகில் அமல உற்பவியாகத் தோன்றினார். "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்" (லூக்கா 1:49) என்ற சொற்கள், தொடக்கப் பாவத்தின் கறை மரியாளை மாசுபடுத்த முடியவில்லை என்பதையே பறைசாற்றுகின்றன.
"தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் மரியாளை அழைத்த கடவுள், தம் வல்லமையால் இவ்வுலகின் தீய நாட்டங்களில் இருந்து அவரை விலக்கி காத்து, தம் இறைத்தன்மையில் பங்குபெறச் செய்தார்." (2 பேதுரு 1:3-4) இதன் காரணமாக, "மிகவும் ஆசிபெற்ற கன்னி மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, எல்லாம் வல்ல கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனிதகுல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும், தொடக்கப் பாவத்தின் அனைத்து கரைகளில் இருந்தும் பாதுகாக்கப்பட்டார்" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 491) என்று திருச்சபை பறைசாற்றுகிறது. மீட்பரின் தாயாகுமாறு வரலாற் றின் தொடக்கத்திலேயே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவேதான் வானதூதர் மரியாளை, "அருள் நிறைந்த மரியே வாழ்க!" என வாழ்த்தினார்.

இறையன்னை

மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

கன்னி மரியாள் கடவுளின் தாய் என்பது நற்செய்தி எடுத்துக் கூறும் உண்மை. மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. ஏனெனில், "ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிபெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" (எசாயா 7:14,9:6) என்று இறைவாக்கினர் முன்னறிவித்தது, இயேசுவின் பிறப்பில் நிறைவேறியது. மகனாகிய கடவுளைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்ததால், "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று அன்னை மரியாளால் சொல்ல முடிந்தது.
கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாளிடம், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும்." என்றார். (லூக்கா 1:35) இறைமகனைப் பெற்றெடுத்தவர் 'இறைவனின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மனிதரின் நம்பிக்கை மட்டுமல்ல, பரிசுத்த ஆவியாரால் வெளிபடுத்தப்பட்ட உண்மையும் ஆகும். மரியாள்வின் வாழ்த்தைக் கேட்டதும் பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:41-43) என்று உரத்த குரலில் கூறுவதைக் காண்கிறோம். எனவே, திருமுழுக்கின் வழியாக பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒவ்வொருவரும் மரியாள்வை கடவுளின் தாய் என்று அறிக்கையிடுவர்.  
இயேசுவின் மீட்பு அலுவலில் முழுமையாக ஒத்துழைத்த மரியாள், கடவுளின் தாய் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. "மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை, கிறிஸ்து கன்னி மரியாளிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு பரிசுத்த கன்னியும் நம்பிக்கைத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார். தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவைவரை விடாது காத்து வந்த மரியாள், கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார். இறுதியாக சிலுவையில் உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே, மரியாளைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) எனவே, பாவமின்றி உற்பவித்த மரியாளை கடவுளின் தாயாகவும், நம் அன்னையாகவும் ஏற்றுக்கொள்வதன் வழியாக நாம் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகத் திகழ முடியும்.

தூய்மைச் சடங்கு

மரியாள் கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?


"கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்." (பிலிப்பியர் 2:6-7) உலக மக்களின் மீட்புக்கான இறைத்திட்டம், இயேசுவில் மட்டுமின்றி அவரது தாய் மரியாளிடம் நிறைவேற வேண்டியிருந்தது. ஆகவே, இறைமகனின் தாயாகுமாறு அழைப்பு பெற்ற மரியாளும் தம்மை "ஆண்டவரின் அடிமை"யாக (லூக்கா 1:38) ஒப்படைத்தார். இவ்வாறு இறைமகனின் உள்ளமும், இறையன்னையின் உள்ளமும் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் இணைந்து செயல்பட்டன. தந்தையாகிய கடவுளின் மீட்புத் திட்டம் இவ்வுலகில் நிறைவேறுமாறு, மகனாகிய கடவுள், பரிசுத்த ஆவியின் வல்லமையால் கன்னி மரியாளின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார்.
"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) இறைமகனை ஈன்றெடுத்த அன்னை மரியாளும், "பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக முற்றிலும் கையளித்தார்." (திருச்சபை எண். 56) எனவே, "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்ற திருச்சட்டத்தை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருந்தார். "மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது, குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க மரியாள் தம் கணவர் யோசேப்புடன் எருசலேமுக்குச் சென்றார்." (லூக்கா 2:22)
"இயேசு, பரிசுத்த ஆவியால் கன்னி மரியாளின் வயிற்றில் கருவாக உருவானார். ஏனெனில், அவர் புதிய படைப்பைத் தொடங்கிய புதிய ஆதாம்: 'முதல் மனிதர் மண்ணில் இருந்து வந்தவர், இரண்டாம் மனிதர் விண்ணில் இருந்து வந்தவர்.' கருவானது முதலே கிறிஸ்துவின் மனிதத் தன்மை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. கடவுளோடு உறவில் இணைந்திருப்பதற்கான மனிதரின் அழைப்பு, மரியாளின் கன்னித் தாய்மையில் முழுமையாக நிறைவு பெறுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 504,505) இவ்வாறு புனிதத்தில் நிறைந்திருந்த அவர், தம்மை பாவம் நிறைந்த மனிதகுலத்தின் உறுப்பினராகக் காட்ட தூய்மைச் சடங்கை நிறைவேற்றினார். இறைமகனை கருவில் சுமந்ததால் பரிசுத்த கன்னியாக திகழ்ந்தாலும், இறைத் தந்தையின் திருவுளம் நிறைவேறுமாறு மரியாள் இவ்வாறு செய்தார். எனவே, கன்னி மரியாள் 'கடவுளின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சகோதரர்கள்

"யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாளின் மற்றப் பிள்ளைகளைப் பற்றிதானே?

"தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது போதனைகளையும், வல்ல செயல்களையும் கண்டாலும் நாசரேத்தூர் மக்கள், அவரை இறை மனிதராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். எனவே அவர்கள், "இவர் தச்சர் அல்லவா! மரியாளின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" (மாற்கு 6:3) என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. ஏனெனில் யூத வழக்கத்தின்படி, நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக விவிலியத்தில் இருந்து நாம் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், "நாம் சகோதரர்*" (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, "நீ என் சகோதரன்* என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா?" (தொடக்கநூல் 29:15) என்று கேட்பதைக் காண்கிறோம். நற்செய்திகளில் சுட்டிக்காட்டப்படும் யாக்கோபு, யோசே, யூதா, சீமான் போன்றவர்களும் இயேசுவுக்கு இத்தகைய உறவுமுறை சகோதரர்களே. மேலும், இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை என்பதும் தெளிவு. ஏனெனில் மரியாளும் யோசேப்பும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றபோது, பன்னிரண்டு வயது சிறுவனான இயேசுவுடன் சகோதர, சகோதரிகள் யாரும் உடன் சென்றதாக கூறப்படவில்லை. (லூக்கா 2:41-52)
இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியாள் என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை 'இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாள்' (யோவான் 19:25) என நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். 'அவர்களுள் மகதலா மரியாளும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவரும் இருந்தனர்.' (மாற்கு 15:40) இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாளை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமான் உள்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்தியில் காணப்படும் யாரும் மரியாளின் சொந்த பிள்ளைகள் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, கடவுளின் தாயாக மட்டுமே கன்னி மரியாள் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகிறது.
*தமிழ் விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், பொருள் தெளிவுக்காக 'சகோதரர்' என்பதற்கு பதிலாக 'உறவினர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர் தாய்

'மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?

'அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.' (லூக்கா 2:6-7) என்று நற்செய்தி கூறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியில் இந்த நற்செய்தி வாசகத்தை கேட்ட புனித ஜெர்த்ருத் (1256-1302), "இயேசு மட்டுமே மரியன்னைக்கு மகனாக இருக்கும்போது, 'மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' என்று நற்செய்தியாளர் குறிப்பிடுவது ஏன்?" என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு காட்சி அளித்த அன்னை மரியாள், "நற்செய்தியாளர் எழுதியிருப்பது சரியே. ஏனெனில் நான் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றது மட்டுமின்றி, கல்வாரி மலையிலே கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஞான விதமாய் பெற்றேன். அதுமுதல் அவர்கள் அனைவரும் எனது பிள்ளைகளாகவும், இயேசுவின் சகோதர சகோதரிகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார். (கன்னி மரியாளின் வணக்க மாதம், பக்.44)'தலைமகன்' அல்லது 'தலைப்பேறான மகன்' என்ற பதம், முதல் குழந்தையைக் குறிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்தால் தான், முதல் குழந்தையை தலைமகன் என்று அழைக்க வேண்டும் என்பதில்லை. யூத மரபில் தலைமகனுக்கு ஒரு சிறப்பிடம் இருந்தது. "'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளது." (லூக்கா 2:23) இயேசு 'இறைமகன்', 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்'  என்பதை உணர்த்த நற்செய்தியாளர் 'தலைமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு." (கொலோசையர் 1:15) என்றும், "இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது" (கொலோசையர் 1:15) என்றும் திருத்தூதர் பவுல் சான்று பகர்கிறார்."இவ்விறுதி நாள்களில், கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பினார்." (எபிரேயர் 1:2,6) இறைமகன் இயேசுவின் பொருட்டு யோசேப்பும், மரியாளும் தூயவர்களாக வாழ்ந்தார்கள். "ஏனெனில், கடவுளே அவர்களில் செயலாற்றி,  தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் அளித்தார்." (பிலிப்பியர் 2:13) "இயேசு மட்டுமே மரியாளின் ஒரே மகன் என்றாலும், அவர் மீட்பளிக்க வந்த அனைத்து மனிதரிடமும் மரியாளின் ஆன்மீகத் தாய்மை விரிவடைகிறது: 'பல சகோதர சகோதரிகளிடையே, அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப்பேறாக' (உரோமையர் 8:29) நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்; நம்பிக்கை கொண்டோரை உருவாக்கி வளர்ப்பதில், அவர் தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண்.501) எனவே, இயேசுவைத் தவிர வேறு யாரையும் மரியாள் பெற்றெடுக்கவில்லை என்பது உறுதி.


புனித யோசேப்பு

'மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்று நற்செய்தி கூறுவதற்கு, அதன்பிறகு உறவு கொண்டார் என்பது தானே அர்த்தம்?

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசு கூறினார். அப்படியெனில், முடிவுக்கு பிறகு அவர் நம்மோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம் கொள்ள முடியுமா? புனித யோசேப்பின் மனநிலையை நாம் சரியாக புரிந்துகொண்டால், மரியாளின் கன்னிமை பற்றிய சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். 'மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத்திட்டமிட்டார்' (மத்தேயு 1:18,19) என்று நற்செய்தி எடுத்துரைப்பதைக் காண்கிறோம். இதிலிருந்தே, மற்றொருவருடைய மனைவியைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ள யோசேப்புக்கு மனம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
யோசேப்பு பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதவர் என்பதால், மரியாளை மறைவாக விலக்கத் திட்டமிடுவதைக் காண்கிறோம். 'அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' (மத்தேயு 1:20-21,24) என்று நற்செய்தி கூறுகிறது. இதன் மூலம் யோசேப்பு, கடவுளின் திட்டத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தார் என்பதை அறிந்து கொள்கிறோம்.
மரியாள் மற்றொரு மனிதரால் கருவுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தால் அவரை விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு, மரியாள் பரிசுத்த ஆவியால் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும் அவரை ஏற்றுக்கொள்கிறார். இவ்வுலகில் பிறக்க இருந்த மீட்பருக்கும், அவரது தாய்க்கும் பாதுகாவலராக விளங்க வேண்டுமென்ற கடவுளின் திட்டத்தை, யோசேப்பு சரியாகப் புரிந்து கொண்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, 'மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்ற வார்த்தைகள், இறைமகனின் மாட்சியைக் காணும் முன்பே தன்னடக்கத்துடன் இருந்த யோசேப்பு, இயேசு பிறந்தபிறகு எத்துணை பரிசுத்தராக விளங்கியிருப்பார் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன. "மரியாளின் கணவர் யோசேப்பு நேர்மையாளர்" (மத்தேயு 1:19) என்ற புகழுரையே யோசேப்பின் பரிசுத்தத்துக்கு சான்று பகர்கின்றது. எனவே, மரியாளின் கன்னிமை மீதான சந்தேகம் தேவையற்றது

கன்னித் தாய்

இயேசு பிறந்த பிறகும் மரியாள் கன்னியாக இருந்தார்" என்று எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோரே கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்கிறார் இயேசு. அப்படியெனில், மனித உருவில் தோன்றிய இறை மகனைக் கருத்தாங்கிய கன்னி மரியாள், உடலிலும் உள்ளத்திலும் எத்துணை தூயவராக இருந்திருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'இயேசுவின் தாய் மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் பரிசுத்த ஆவியால் கருவுற்றிருந்தார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன.' (மத்தேயு 1:18,22) என்று நற்செய்தி கூறுவதில் இருந்தே, ஆண்டவரின் மீட்பு திட்டத் தில் முன்குறிக்கப்பட்டவர் மரியாள் என்பது தெளிவாகிறது.
கன்னி மரியாளின் வயிற்றில் இயேசுவின் உடலை உருவாக்குமாறு "பரிசுத்த ஆவி அவரில் குடிகொண்டிருந்ததால், அவர் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருந்தார்." (உரோ மையர் 8:9) பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும், இறைமகன் இயேசுவின் தாயாகவும் திகழ்வது மரியாளுக்கு "கடவுள் அளித்த தனிப்பட்ட அருள்கொடை" (1கொரிந்தியர் 7:7) ஆகும். "பரிசுத்த ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது" (கலாத்தியர் 5:17) என்பதால், கடவுளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த மரியாள், வாழ்நாள் முழுவதும் கன்னியாகவேத் திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை. "மரியாளின் கன்னிமையே, கடவுள் மனித உடலெடுத்ததன் தூய தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503)
"கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவராக மரியாள் திகழ்கிறார்." (எபேசியர் 1:11) "மரியாளின் வாழ்வு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்து இவ்வுலகில் மனிதராய்த் தோன்றுவதற்காக, மரியாளும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றினார்." (கொலோசையர் 3:3-4) "உண்மையில், கிறிஸ்துவின் பிறப்பு அவரது தாயின் கன்னிமையை குறைவுபடுத்துவதற்கு பதிலாக புனிதப்படுத்தியது. எனவே திருச்சபையின் திருவழிபாட்டில் மரியாள், 'எப்பொழுதும் கன்னி' என்று கொண்டாடப்படுகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506)


பேறுபெற்ற தாய்

உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" (லூக்கா 11:27) என்று ஒரு பெண் கூறிய போது, இயேசு அதைப் பொருட்படுத்தவே இல்லையே?

'இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.' (லூக்கா 11:27) "இது முதல் எல்லாத் தலை முறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்ற மரியாளின் இறைவாக்கு நிறைவேறுவதை இங்கு முதல்முறையாக காண்கிறோம். இதனை முன்னிறுத்தியே இயேசு அளிக்கும் பதிலும் அமைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது: "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்." (லூக்கா 11:28) அந்த பெண் கூறியது தவறு என்று இயேசு கூறவில்லை. தம்மைப் பெற்று வளர்த்ததால் மட்டுமல்ல, இறைவார்த்தையைக் கடைபிடித்து வாழ்ந்ததாலும் 'மரியாள் மிகவும் பேறுபெற்றவர்' என இயேசு புகழ்ந்துரைக்கிறார்.

"காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்." (எபிரேயர் 1:3) இவ்வாறு அனைத்தையும் தாங்கி நடத்தும் வார்த்தையான இறைவனையே தாழ்ச்சியால் தம் வயிற்றில் கருத்தாங்கும் பேறு பெற்றவர் மரியாள். "தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்த படியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்" (லூக்கா 1:69-70) என செக்கரியா இறைவாக்காக உரைத்தது மரியாள் இயேசுவைக் கருத்தாங்கியது பற்றியே என்பது தெளிவு. 

"மரியாள், தம் நம்பிக்கையின் அடையாளத்தை எந்த சந்தேகத்தாலும் கறைபடுத்திக் கொள்ளாமல், கடவுளின் திருவுளத்துக்கு தம் கன்னிமையை முழுமையான கொடையாக அர்ப்பணித்தார். மரியாளின் நம்பிக்கையே, அவரை 'மீட்பரின் தாய்' ஆக்கியது. கிறிஸ்துவின் உடலைக் கருத்தாங்கியதைக் காட்டிலும், கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டதால் மரியாள் மிகவும் பேறுபெற்றவராக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506) இவ்வாறு தம் உடலிலும் உள்ளத்திலும் கன்னிமை பழுதுறாதவராக வாழ்ந்ததால் தான், மரியாளால் மானிடமகனாகத் தோன்றிய இறைமகன் இயேசுவை வளர்த்து ஆளாக்க முடிந்தது. ஆண்டவரையே தம் மகன் என்று அழைக்கும் பேறுபெற்றவர் மரியாளைத் தவிர யார்?


கடவுளின் தாய்

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாளை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

'"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும் மீட்பருமானவரின் தாயாகுமாறு தனிப்பட்ட அருள் வரங்களாலும், அலுவல்களாலும் அணி செய்யப்பட்டவராக மரியாள் திகழ்கிறார். இறைவனின் திட்டத்தால், கன்னியாக இருந்து கொண்டே தாயாகும் வரம் பெற்றவர் மரியாள். "கணவரையே அறியாத அவர் பரிசுத்த ஆவி நிழலிடத் தம் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் இறைத் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) எனவே. மரியாளின் தன்னுரிமையுள்ள ஒத்துழைப்பின் வழியாகவே "கடவுள் மனிதராகி நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்பது தெளிவாகிறது.
"நற்செய்திகளில், 'இயேசுவின் தாய்' என்று அழைக்கப்படும் மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் முன்பே, அவரை 'ஆண்டவரின் தாய்' என தூய ஆவியின் தூண்டுதலால் எலிசபெத் அழைத்தார். உண்மையில், தூய ஆவியால் கன்னி மரியாளின் வயிற்றில் மனிதராக கருவான அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், இறைத்தந்தையின் நித்திய மகனுமானவர், உடல் சார்ந்த முறையில் உண்மையிலேயே மரியாளின் மகன் ஆனார். எனவே, திருச்சபை மரியாளை உண்மையாகவே 'கடவுளின் தாய்' (Theotokos) என்று அறிக்கையிடுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 495) கண்ணுக்குப் புலப்படாதவரும், உலகமே கொள்ள முடியாதவருமான கடவுளை, தம் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாளை 'கடவுளின் தாய்' என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
"திருச்சபை முதலில் தோன்றிய காலத்தில் இருந்தே, இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கன்னி மரியாளின் திருவயிற்றில் கருவானார் என்பதை அறிக்கையிடுகிறது; 'மனித வித்தின்றி பரிசுத்த ஆவியின் வல்லமையால்' இயேசு கருவான நிகழ்வை உடல் சார்ந்த நிலையில் உறுதிப்படுத்துகிறது. கன்னி கருத்தாங்குதலை, இறைமகன் நம்மைப் போன்று மனிதரானதை உறுதிப்படுத்தும் அடையாளமாக திருச்சபைத் தந்தையர் காண்கின்றனர். எனவே அந்தியோக்கு புனித இக்னேசியு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்: பரிசுத்த கன்னியே, நீர் உறுதியாக நமது ஆண்டவரைக் கருத்தாங்கினீர்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 496) "மனிதரான நித்திய இறைமகனும், கடவுளுமானவரின் தாயாக இருப்பதால், மரியாள் உண்மையிலேயே 'கடவுளின் தாய்' தான்!" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 509)

இயேசுவின் தாய்

நாம் மரியாளை 'இயேசுவின் தாய்'  என்று அழைத்தாலும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரணமாகத் தானே அழைத்தார்?

'பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.' (லூக் 2:6-7,21) இவ்வாறு நற்செய்தியாளர் கூறுவதில் இருந்து 'மரியாள் இயேசுவின் தாய்' என்பது தெளிவாகிறது. இயேசு வளர்ந்த ஊர் மக்கள் அவரை, 'மரியாளின் மகன்' என்றே அழைத்தனர். "இவருடைய தாய் மரியாள் என்பவர் தானே?" (மத்தேயு 13:55) "இவர் மரியாளின் மகன் தானே!" (மாற்கு 6:3) என்று நாசரேத்து ஊரினர் கூறியதாக நற்செய்தி தெளிவாக எடுத்துரைக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தாலும், தம்மை "மானிடமகன்" (மத்தேயு 16:13) என்று கூறி வந்ததன் மூலம் தம் தாய் மரியாளைப் பெருமைப்படுத்தினார். இவ்வாறு இயேசு, தம்மைப் பெண்ணின் வித்தாகவும், புதிய ஆதாமாகவும் அடையாளப்படுத்துகிறார்.
இறைத்தந்தையின் மீட்புத் திட்டத்தில் புதிய ஆதாமாகத் திகழ்ந்த இயேசுவுக்குத் துணைநிற்கும் புதிய ஏவாளாக மரியாள் செயல்படுவதை காண்கிறோம். முதல் ஆதாமுக்குத் தகுந்த துணையாக முதல் ஏவாள் படைக்கப்பட்டதுபோல (தொடக்க நூல் 2:20-23), புதிய ஆதாமான இயேசுவுக்காக புதிய ஏவாளான மரியாளும் அருள்நிலையில் படைக்கப்பட்டார். இயேசுவின் மீட்பு பணியில் நம்பிக்கையோடு ஒத்துழைத்ததால், மரியாள் நம்பிக்கை கொண்டோரின் தாயாக விளங்குகிறார். இவ்வாறு, "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" (தொடக்க நூல் 3:15) என்ற முன்னறிவிப்பை நிறைவேற்றிய பெண்ணாக மரியாள் திகழ்கிறார். இதை சுட்டிக்காட்டவே, இயேசு தம் வாழ்வின் இரண்டு முக்கியத் தருணங்களில் மரியாளை "பெண்ணே!" என்று அழைக்கிறார்.
முதலாவதாக இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கிய காலத்தில், கானாவூர் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை கூறும் மரியாளிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என இயேசு கேட்கிறார். இருந்தாலும் மரியாளின் நம்பிக்கையால், தண்ணீர் திராட்சை இரசமான முதல் அற்புதத்தை இயேசு நிகழ்த்துவதைக் காண்கிறோம். ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்ததைப்போல, இயேசு அற்புதம் நிகழ்த்த மரியாள் காரணமாக இருக்கிறார். இரண்டாவது, உலக மீட்புக்காக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில், தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" (யோவான் 19:26) என்றார். இவ்வாறு இயேசு, தம் சீடர்கள் அனைவரையும் மரியாளின் பிள்ளைகளாக ஒப்படைத்தார். எனவே, மண்ணில் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக ஏவாள் இருப்பது போன்று, விண்ணக வாழ்வுக்கு தகுதிபெறும் அனைவருக்கும் தாயாக மரியாள் திகழ்கின்றார்.

தாய்க்கு மரியாதை

மரியாளை மதிக்காததால்தானே, "என் தாய் யார்?" (மத்தேயு 12:48) என்று கேட்டு இயேசு அவரை அவமானப்படுத்தினார்?

"இறைமகன் இயேசு விண்ணகத்தில் தாய் இல்லாதவராகவும், மண்ணகத்தில் தந்தை இல்லாதவராகவும் தோன்றினார்" என்பதே நமது விசுவாசம். 'இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்' (லூக்கா 2:52) என்று நற்செய்தி கூறுகிறது. மனிதர்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கிய கடவுள், ஆண்டவர் பேரிலுள்ள கடமை முடிந்ததும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை குறித்து எடுத்துரைக்கிறார். "உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட" (விடுதலைப் பயணம் 20:12) என்பதே ஆண்டவர் நமக்கு வழங்கிய கட்டளை. "நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" (மத்தேயு 16:13) என்று கூறிய இயேசு, "திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுவதற்கே வந்தார்." (மத்தேயு 5:17) எனவே, அவர் விண்ணகத் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருந்ததுடன், தம் மண்ணகப் பெற்றோர்களுக்கும் பணிந்து நடந்தார். (லூக்கா 2:49,51)
'ஒருநாள் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். அதற்கு இயேசு, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.' (மத்தேயு 12:46-50) இந்நிகழ்வில் இயேசு, மக்கள் அனைவரையுமே தம் சகோதரராகவும், சகோதரியாகவும், தாயாகவும் மாற அழைப்பு விடுக்கிறார். மேலும் விண்ணகத் தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முற்றிலும் அர்ப்பணித்து, மீட்புத் திட்டத்தில் ஒத்துழைத்த அன்னை மரியாளையும் இயேசு பெருமைப்படுத்துகிறார்.
"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக்கா 9:62) என்ற தம் வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு இங்கு குடும்ப உறவுகளை விலக்கி வைப்பதை காண்கிறோம். இதில் மரியாளை அவமானப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்" (மத்தேயு 10:37) என்ற தமது போதனைக்கு உயிரூட்டம் கொடுக்கும் வகையில், தாம் இறைத் தந்தைக்கு உரியவர் என்பதை இயேசு இங்கு தெளிவுபடுத்துகிறார். அதே வேளையில், உலக மீட்புக்காக இறைத்தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து, வார்த்தையான இறைமகனுக்கு மனித உடல் கொடுத்த கன்னி மரியாளின் மேன்மையையும் இயேசு புகழ்ந்துரைக்கின்றார்.

மகனுடன் மரியாள்

மரியாள் முக்கியமானவர் என்றால் நற்செய்தி நூல்களில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட்டிருப்பது ஏன்?

இறைமகன் இயேசுவின் வாழ்வையும், வழிகாட்டுதலையும் நமக்கு வழங்கவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. "மனிதராய் பிறந்தவர்களுள் பெரியவர்" (மத்தேயு 11: 11) என்று இயேசுவால் போற்றப்பட்ட திருமுழுக்கு யோவானைப் பற்றியும், "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தப்பட்ட கன்னி மரியாளைப் பற்றியும் நற்செய்திகள் அதிகமாக பேசவில்லை என்றாலும், மீட்புத் திட்டத்தில் அவர்களின் பங்கைத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. "தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் தோன்ற" (லூக்கா 1:70) முழு மனதோடு ஒத்துழைத்தவர் என்பதால், இறைவனின் திட்டத்தில் மரியாள் முக்கியமானவர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இயேசு வைக் கருத்தாங்கியது முதல் கல்லறையில் வைத்தது வரையிலான மரியாளின் பங்கேற்பை நற்செய்தி நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
உன்னதரான இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்குமாறு, "கடவுளின் அருளை மரியாள் கண்டடைந்தார்." (லூக்கா 1:30) கணவரை அறியாத கன்னியாக இருந்தும், "ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியதால் மரியாள் பேறுபெற்றவரானார்." (லூக்கா 1:45) இவ்வாறு கடவுளின் திட்டத்துக்கு தம்மையே அடிமையாக கையளித்த மரியாளை "எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர்." (லூக்கா 1:48) இறைவார்த்தையான இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்த மரியாள், 'இறைத் திட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தபோது, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:35) என்ற இறைவாக்கு மரியாளுக்கு அருளப்பட்டது.
குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை ஞானிகள், "குழந்தையை அதன் தாய் மரியாள் வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள்." (மத்தேயு 2:11) இயேசு எப்போதும் தம் தாய் மரியாளுக்குப் பணிந்து நடந்தார். (லூக்கா 2:51) அன்னை மரியாளின் நம்பிக்கையால், கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீர திராட்சை இரசமாக மாற்றினார். (யோவான் 2:1-11) 'மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாய் மரியாள் அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்.' (மத்தேயு 12:46) இவ்வாறு இயேசுவின் விருப்பத்தை அறிந்து நடக்க, மரியாள் எப்போதும் ஆவலாய் காத்திருந்தார். இறுதியாக சிலுவை அருகில் நின்ற மரியாளை, இயேசு தம் சீடருக்கு தாயாக அளித்தார். (யோவான் 19:25-27) அந்த தாயை மதித்து போற்றுவது நம் கடமையாகும்.

பரிந்துரை மரியாள்

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்!" (மத்தேயு 11:28) என்று இயேசு அழைக்கும்போது, மரியாளிடம் செல்வது ஏன்?

"நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் இயேசு நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்." (உரோமையர் 5:10) நம்மை இறைத்தந்தையோடு ஒப்புரவாக்கி நமது மீட்புக்கு காரணமான தலைமைக் குரு இயேசுவின் தாயாகுமாறு, விண்ணக அழைப்பு (எபிரேயர் 3:1) பெற்றவர் கன்னி மரியாள். இவ்வாறு, "மரியாளின் மூலமாக மாட்சி பெறத் திருவுளம் கொண்ட நித்திய தந்தை, அவர் மூலமாக எல்லையற்ற வரங்களை நம்மீது பொழியவும் விருப்பம் கொண்டார். மரியாள் வழியாக இறைத்தந்தை நமக்குத் தந்த கொடைகளுள் மிகச்சிறந்த நற்கொடை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!" (மரியாளின் சேனை கைநூல் அதி. 5/1) இயேசுவை மனிதகுலத்துக்கு கொடையாக அளித்தவர் மரியாள் என்பதால், மரியாளை நாடும் அனைவரும் இயேசுவைக் கண்டடைகின்றனர்.
"'கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்' (1திமோத்தேயு 2:5-6) என்ற திருத்தூதரின் கூற்றுக்கேற்ப, நம் இணைப்பாளர் ஒருவரே. இறைமகன் இயேசுவின் இந்த இணைப்பாளர் பணி தன்னிகரற்றது. எனவே மரியாளின் பரிந்துரைக்கும் பணியால், கிறிஸ்துவின் இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக, அதன் ஆறறல் இதன் வழியாக வெளிப்படு கிறது. ஏனெனில், பரிசுத்த கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கிறிஸ்துவினுடைய பேறுபலன்களின் நிறைவுப் பெருக்கத்தினின்றே வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அப்பணியை முற்றிலும் சார்ந்ததாய் இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது." (திருச்சபை எண். 60)
மரி லத்தாஸ்ட் (1822-1847) என்ற கன்னிக்கு காட்சி அளித்த நம் ஆண்டவர் இயேசு, "கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளராக நான் இருக்கிறதைப் போன்று, எனக்கும் உங்களுக்கும் இடையிலான இணைப்பாளராக கன்னி மரியாளை நியமித்திருக்கிறேன். ஆகவே, உங்களுக்கு நான் கொடுக்கிற அருள்வரங்களை இறையன்னை வழியாக மட்டுமே பெற முடியும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும், என் திவ்விய தாயின் பரிந்துரை மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர் ஆசி வழங்குபவர்களுக்கு நானும் ஆசி வழங்குவேன்" என்று கூறியுள்ளார். எனவே, நமது சுமைகளை அன்னை மரியாளிடம் இறக்கி வைக்கும் போது, இறைமகன் இயேசுவின் ஆறுதலை நாம் கண்டடைய முடியும். இறைவனின் திட்டத்தில் மரியாள் முக்கியமானவராகத் திகழ்வதை நாம் இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுளின் அடிமை

மரியாள் மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?

"மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, தொடக்கப் பாவத்தின் கறையில் இருந்தும் மற்ற அனைத்து பாவங்களில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தூயவராகத் திகழ்ந்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508) "மீட்புத் திட்டத்தில் தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவரான மரியாள், தம் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமென கடவுள் இவ்வாறு முன்குறித்து வைத்தார்." (உரோமையர் 8:29) எனவே, "தம் உடலில் நிகழ்ந்த மறை நிகழ்ச்சிகள் வாயிலாக மனிதரைப் பாவத்தினின்று மீட்க வந்த இறைமகன் இயேசு, மரியாளிடம் இருந்து மனித இயல்பை எடுத்துக் கொண்டார்." (திருச்சபை எண்.55)
"மரியாளின் கன்னிமையே கடவுளின் மனித உடலேற்புக்கு உண்மையான தொடக்கமாக அமைந்தது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503) இறைத் தந்தையின் திட்டத்துக்கு "ஆம்" என பதில் அளித்ததால், இறைமகன் இயேசுவை பரிசுத்த ஆவியின் வல்லமையால் கருத்தாங்கும் பேறுபெற்றவர் மரியாள். "தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக மரியாள் முற்றிலும் கையளித்தார். இவ்வாறு எல்லாம் வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்லாமல், நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் மரியாள்." (திருச்சபை எண்.55)"
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்." (உரோமையர் 5:19) முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால், மண்ணிலிருந்து வந்த முதல் ஆதாம் மனிதகுலத்தின் அருளை இழக்கச் செய்தார். புதிய ஏவாளான மரியாளின் கீழ்ப்படிதலால், விண்ணிலிருந்து வந்த புதிய ஆதாமான இயேசு மனிதகுலம் இழந்த அருளைப் பெற்றுத்தந்தார். இவ்வாறு, இறைவனின் மீட்பு அலுவலில் மரியாள் ஓர் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டார். இறைத்திட்டத்தில் உயிரோட்டமான சிறப்புமிக்க இடத்தை மரியாள் பெற்றிருப்பதால், கடவுளின் மகிமையும் பெருகுகின்றது." (மரியாளின் சேனை கைநூல் அதி. 5/1) எனவே, மரியாள் மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மரியே வாழ்க!

"கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக!" (தானியேல் 2:20) என்று தானே கூறப்பட்டிருக்கிறது. மரியாளை ஏன் வாழ்த்த வேண்டும்?

எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இவ்வுலகில் தந்தை இல்லாதவராக பிறந்த இறைமகன் இயேசு, தாய் இல்லாதவராக தோன்ற விரும்பவில்லை. இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றித்திருக்கிற இறைமகனை அற்புதமான முறையில் கருத்தாங்கிப் பெற்றெடுத்ததால் இறைவனின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியாள். உலகமே கொள்ளாத இறைவனை, தம் வயிற்றில் சுமந்த மரியாளை நாம் வாழ்த்துவதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மரியாள் மக்கள் அனைவராலும் வாழ்த்தப்பட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம்.
"விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது" (யோவான் 3:27) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, மரியாள் பெறுகின்ற வாழ்த்தும் விண்ணில் இருந்தே வந்தது. மரியாள் இறைமகனின் தாயாக முன்குறிக்கப்பட்டிருந்ததால் தந்தையாம் கடவுள் தம் வானதூதரை அனுப்பி, "அருள்நிறைந்த  மரியே வாழ்க!" (லூக்கா 1:28) என வாழ்த்துகிறார். "அறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனின் செயல்முறைகளுக்கும், அவரது முடிவில்லா விருப்பத்திற்கும் நடுவில் நின்றுகொண்டு, விசுவாசத்தின் மங்கலான ஒளியில், இறைவனின் திட்டத்துக்கு தம்மை கையளித்ததால்" (மரியாளின் சேனை கைநூல் அதி. 5) மரியாள் ஆண்டவரின் தாயானார். இவ்வாறு எல்லாத் தலைமுறையினரிடமும் 'பேறுபெற்றவர்' (லூக்கா 1:48) என்ற வாழ்த்தை மரியாள் உரிமையாக்கிக் கொண்டார்.
தூய ஆவியாரின் வல்லமையால் 'உன்னத கடவுளின் மகனை' (லூக்கா 1:32) கருத்தாங்கிய மரியாள், செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது எலிசபெத்தை ஆட்கொண்ட பரிசுத்த ஆவியார், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தியதோடு, மரியாளை "ஆண்டவரின் தாய்" (1:43) என்றும் அழைத்தார். "ஓர் எளியப் பெண் இறைவனின் தாயாக இருப்பது அனைத்திற்கும் மேலான இறைத்திட்டம் அல்லவா? அவர் ஒரு கன்னிப் பெண்ணைத் தம் தாயாகச் செய்ததை மிகச்சிறந்த அற்புதம் என்று சொல்வதற்கு தடை எதுவும் உண்டோ?" (கன்னி மரியாளின் வணக்க மாதம் பக். 23) இவ்வாறு மூவொரு இறைவனிடம் பெற்றிருக்கும் மேன்மையான இடத்தால், மரியாள் மனிதகுலத்தின் வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் என்றும் தகுதி உள்ளவராகத் திகழ்கிறார்.

அன்னை வணக்கம்

"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்" (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாளுக்கு வணக்கம் செலுத்துவது ஏன்?

"வானதூதர் தூது சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கையுடன் தாம் அளித்த இசைவைக் கன்னி மரியாள் சிலுவை வரை தயங்காது காத்து வந்தார். இவ்வாறு இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டோர் முடிவில்லா நிறைவு பெறும்வரை அருள் திட்டத்தின்படி மரியாளின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். ஏனெனில், விண்ணேற்புக்குப் பின்பும் இந்நிறைவாழ்வு அலுவலை அவர் விட்டுவிடவில்லை. மாறாக பலவிதங்களில் பரிந்துபேசி நிலையான நிறைவாழ்வடைய நமக்குத் தேவையான கொடைகளை எப்போதும் பெற்றுத் தருகின்றார்." (திருச் சபை எண். 62) எனவே, "நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாளுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்." (திருச்சபை எண். 52)
"திருச்சபை மரியாளைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (Hyperdulia) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப் பெற்றவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் 'கடவுளின் தூய்மைமிகு தாய்' ஆவார். பரிசுத்த கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணக்கம் செலுத்தினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் புகலடைந்திருக்கின்றனர். குறிப்பாக எபேசு (கி.பி. 431) திருச்சங்கத்திற்குப் பிறகு, வியத்தகு முறையில் கடவுளின் மக்கள் மரியாளை அதிக மதிகம் வணக்கம் செலுத்தவும், அன்பு செய்யவும், உதவிக்கு அழைக்கவும், கண்டுபாவிக்கவும் முற்பட்டனர்." (திருச்சபை எண்.66)  "'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்' (லூக்கா 1:48) என்று மரியாளே முன்மொழிந்ததற்கு ஏற்ப, திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது. மனிதரான வாக்குக்கும், தந்தைக்கும், பரிசுத்த ஆவியாருக்கும் நாம் அளிக்கும் ஆராதனையில் (Latria) இருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது. மேலும், இறை ஆராதனையை இவ்வணக்கம் மிகச்சிறந்த விதமாய் ஊக்குவிக்கிறது எனலாம். வழுவற்ற மரபுக் கோட்பாட்டிலிருந்து மாறுபடாத, இறையன்னைக்குரிய பலவகையான பக்தி முயற்சிகளின் பயனாக நாம் தாயைப் பெருமைப்படுத்தும்போது, மகனை அறிந்து, அன்பு செய்து மாட்சிமைப்படுத்துகிறோம்; அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். ஏனெனில், அவருக்காகவே அனைத்தும் உள்ளன.' (கொலோசையர் 1:15-16)" (திருச்சபை எண்.66)

மரியாளின் சிறப்பு

கடவுளால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறும் அளவுக்கு மரியாளிடம் காணப்படும் சிறப்பு என்ன?

"பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத் திருநூல்களும் மாண்புக்குரிய மரபும் நிறவாழ்வுத் திட்டத்தில் மீட்பரின் தாய்க்குரிய பணியை மேன்மெலும் அதிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள், மீட்பரின் தாயான ஒரு பெண்ணின் உருவைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன. முதல் பெற்றோர் பாவம் புரிந்தபின், அலகையின் மேல் பெறப்போகும் வெற்றியைப் பற்றிய வாக்குறுதி அவர்களுக்கு அளிக்கப் பெற்றது. இவ்வாக்குறுதியில் மரியாள் இறைவாக்காக முன்னுருவகிக்கப் பெற்றதை (தொடக்க நூல் 3:15) பிற்கால முழு வெளிப்பாட்டின் ஒளியில் நாம் காணலாம். அதுபோல் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயர் பெறப்போகும் மகனை கருத்தாங்கிப் பெற்றெடுப்பார் (எசாயா 7:14) என்று கூறப்பெற்ற கன்னியும் இவரே." (திருச்சபை எண்.55)
மீட்கப்பெற வேண்டிய மக்களனைவருள் ஒருவராக இருந்தாலும், "மீட்பரின் தாயாகுமாறு, மரியாளை அந்நிலைக்குத் தகுந்த அருள் கொடைகளால் கடவுள் நிரப்பினார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 490) "மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, கிறிஸ்துவிடம் இருந்து வரும் தூய்மையின் ஒளியால் நிரப்பப்பெற்றார். படைக்கப்பட்ட மற்ற எந்த நபரையும் விட மரியாளுக்கு ஆசி வழங்கியுள்ள இறைத்தந்தை, 'தூயவராகவும் மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவரைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.' (எபேசியர் 1:4)" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 492) "தம் மகன் இயேசுவின் பேறுபலன்களை முன்னிட்டு சீரிய முறையில் மீட்கப் பெற்றுள்ள மரியாள், நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்." (திருச்சபை எண்.53) 
"இறைவாக்கு மனிதரானதன் காரணமாக கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில் நித்தியத்திலிருந்தே கடவுளின் தாய் என முன் நியமனம்பெற்றவர் பரிசுத்த கன்னி. இவ்வுலகில் இவர் இறை மீட்பரின் அன்பு அன்னையாகவும், எவரையும் விஞ்சும் முறையிலே ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், மனத்தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்கினார். கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார்; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம்மகனோடு அவரும் துன்புற்றார். இவ்வாறு மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றியெரியும் அன்பு என்பவற்றால் நிறைவாழ்வு அலுவலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 61) இத்தகைய சிறப்புகளால், இறையன்னை மரியாள் நம் வணக்கத்துக்கு தகுதியானவராய் இருக்கிறார்.

பேறுபெற்ற கன்னி

"பேறுபெற்றவர்!" என்று சொல்லும் அளவுக்கு மரியாள் சாதித்தது என்ன?

"கடவுள் உலகிற்கு அனுப்ப இருந்த தம் மகனுக்கு உடலைத் தயார் செய்ய, படைப்பு ஒன்றின் சுதந்திரமான ஒத்துழைப்பை நாடினார். இதற்காக காலங்கள் அனைத்திலும் இருந்து இஸ்ரேலின் மகள் ஒருவரை, கலிலேயாவின் நாசரேத்தைச் சேர்ந்த யூத இளம்பெண்ணை, 'தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமான கன்னி மரியாளை' (லூக்கா 1:27) தம் மகனுக்குத் தாயாக கடவுள் தேர்ந்தெடுத்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 488) எனவேதான் மரியாள், "தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்" (லூக்கா 1:48) என்று கூறுகின்றார்.
"அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க கொண்ட ஆவலால், 'காலம் நிறைவேறிய போது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்,' (கலாத் தியர் 4:4-5) இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கி, தூய ஆவியினால் கன்னி மரியாள்விடம் உடல் எடுத்து மனிதரானார்." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "ஏவாளின் வழிமரபினர் நடுவினின்று, கன்னி மரியாளைத் தம் மகனின் தாயாகுமாறு கடவுள் தேர்ந்து கொண்டார். அருள் நிறைந்தவரான மரியாள், மீட்பின் தலைசிறந்த கனியாக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண்.508)
"எனவே, மரியாள் உண்மையாகவே 'கடவுளும் மீட்பருமானவரின் தாய்' என ஏற்றுக்கொள்ளப் பெற்று போற்றப்பெறுகிறார். இறைமகனின் தாய் என்ற இந்த உன்னத நிலையானலும் பெருமை யாலும் அணி செய்யப் பெறுகின்றார். இதன் காரணமாக, இறைத்தந்தைக்கு மிகவும் உகந்த மகளாகவும் பரிசுத்த ஆவியின் திருக்கோயிலாகவும் திகழ்கின்றார். இந்த மேன்மையான அருள் கொடையினால் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள மற்ற எல்லாப் படைப்புகளையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார்." (திருச்சபை எண். 53) எனவே, "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" (லூக்கா 1:49) என்ற கன்னி மரியாளின் சொற்களில் உள்ள உண்மையை உணர்ந்தவர்களாய், அவரைப் 'பேறுபெற்றவர்' என அழைப்பதில் தவறேதும் இல்லை.

வாழ்வோரின் தாய்

"நான் ஆண்டவரின் அடிமை" (லூக்கா 1:38) என்று கூறிய சாதாரணப் பெண் மரியாளை, கத்தோலிக்கர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஏன்?

"நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறும் முன்பே, மரியாள் உலக மீட்பரின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவராக இருந்தார். "ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தையாம் கடவுள் ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப் பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்தமுறையில் நிறைவேறுகின்றது." (திருச்சபை எண்.56).

"கிறிஸ்துவின் பிறப்பு மரியாளுக்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, கடவுளின் வாக்குறுதிகளும் தயாரிப்புகளும் நிறைவேறுகின்ற 'காலத்தின் நிறைவு' தொடங்குகிறது. இறைத் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் குடிகொண்டிருக்கிற இயேசுவைக் கருத்தாங்க மரியாள் அழைப்பு பெற்றார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 484) "கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானத்தூதர் 'அருள் நிறைந்த மரியே’ (லூக்கா 1:28) என்று வாழ்த்துகின்றார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார்." (திருச்சபை எண்.56)

"வானதூதர் தூது சொன்னதும் கன்னி மரியாள் தம் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்று, உலகிற்கு வாழ்வை வழங்கினார்." (திருச்சபை எண். 53) "இவ்வாறு கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால், ஆதாமின் மகளான மரியாள் இயேசுவின் தாயானார். புனித இரேனெயு கூறுவதுபோல, 'மரியாள் தம் கீழ்ப்படிதலால் தாமும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்.' இவரோடு வேறுபல பழங்காலத் தந்தையரும் பின்வருமாறு கூறுகின்றனர்: 'ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாளின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது; நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியாள் அவிழ்த்துவிட்டார்.' ஏவாளோடு ஒப்பிட்டு, மரியாளை 'வாழ்வோரின் தாய்' எனவும் அவர்கள் அழைக்கின்றனர்.'' (திருச்சபை எண்.56) இவ்வாறு பேறுபெற்றவராகத் திகழும் மீட்பரின் தாய் மரியாளை, கத்தோலிக்கர்கள் கொண்டாடுவதில் தவறு என்ன இருக்கிறது?

விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950

விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950 
மரியாவின் மரண காலம் நெருங்கி வந்ததும், திருத்தூதர்கள் அனைவரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எருசலேம் நோக்கி விரைந்தனர். தோமா தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் மரியா மரணம் அடைந்தார். யூத வழக்கப்படி மரியாவின் உடலை திருத்தூதர்கள் விரைவில் அடக்கம் செய்துவிட்டனர். தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அவரது முகத்தையாவது ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பினார். 

திருத்தூதர்கள் அனைவரும் மரியாவை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்றனர். கல்லறை திறக்கப்பட்டது; ஆனால் உள்ளே மரியாவின் உடல் இல்லை. விண்ணக நறுமணம் அங்கே வீசியது. இறைமகன் இயேசு தனது அன்னையின் உடலை அழிவுற விடாமல், மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்று திருத்தூதர்கள் நம்பினர். பின்பு அன்னை மரியா தோமாவுக்கு காட்சி அளித்து, தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்தார் என்று மரபுவழி செய்திகள் கூறுகின்றன. 

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக் குறிக்கும். 

மரியாவின் விண்ணேற்பு, Tizian, 1516 
1950இல் பன்னிரண்டாம் பயஸ் மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 

மரியன்னையின் விண்ணேற்பு விழா உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களாலும் கொண்டாடப்படுகின்றது. இயேசுகிறீஸ்து தனது தாயாரை நம் அனைவர்க்கும் தாயாக இவ்வுலகில் நமக்காக விட்டுச் சென்றார். "பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்", "அருள் நிறைந்த பெண்மணி" என்று பெண்கள் குலத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் தாய்மையின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் எம் மரியன்னை. எனவே அவரின் விண்ணேற்பை பெருவிழாவாக கொண்டாடுகிறோம். 

திருச்சபையின் மரபு பதிவு செய்திருக்கும் அன்னை மரியாள் பற்றிய செய்திகளும் திருத்தந்தையர்களின் அன்னை மரியாளின் விண்ணேற்பு பிரகடனங்களும் மரியன்னையின் மகிமையை உலகறியச் செய்துள்ளன. சாவின் நிழல் தண்டாத பெண்ணாய் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமையைச் சுவீகரித்த அன்னை மரியாள் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் பாவக்கறை நீங்கிய நம் தூய வாழ்வைத் தான். கி. பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் அன்னை மரியாளின் விண்ணேற்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 

முதலாம் நிக்கோலாஸ் காலம் (கி. பி. 858- 867) முதல் என்றும் மறைய முடியாத அளவிற்கு திரு வழிபாட்டில் ஊன்றிய வெற்றி விழாவாக விண்ணேற்பு விழா மாறியது. திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். 

அன்னை மரியாள் மரிக்கவில்லை. உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற ஒரு மரபு பசுமையாக இருந்து வருகிறது. இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்? எனவே அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது. 

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் விட்டுவிடுகிறார். ‘தனது வையக வாழ்வு நிறை வெய்தியவுடன்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். ‘மரணத்தால் வாழ்வு மாறுபடுகின்றதேயன்றி அழிக்கப்படுவதில்லை’ என்றே கத்தோலிக்க அடக்கச் சடங்குத் திருநூல் பகர்கிறது. அன்னை மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், மரியாள் இயேசுவின் உயிர்ப்பில் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். 

நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும், வெளிப்படையாக நம்பிக்கையாகவும் அவர் திகழ்கின்றார். மரியாளின் உடல், ஆன்ம விண்ணேற்பு, மனித உடலின் பருப்பொருளின் நன்மைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, முழு மனிதனும் மீட்கப்படுவான் என பகர்கிறது. மரியாளின் விண்ணேற்பு, வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது விண்ணையும் மண்ணையும் இணைத்த ஓர் உண்மை நிகழ்வு. அது வெறும் புதுமை அல்லது கொண்டாட்டமல்லாத அன்றாட வாழ்வின் சிலுவைகள் ஊடான ஒரு பயணம். அது, வெறும் திருவிழாவல்ல, ஒரு தீப்பொறி, பாவத்தை விலக்கி தூய வாழ்வுக்கு எம்மை அழைத்து நிற்கும் ஒரு வாழ்க்கை. 

தமிழில் அன்னை மரியாள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார், இப்பெயர்கள் அவரது குணாதியசங்களை கொண்டும் அவர் செய்த புதுமைகளைக் கொண்டும், அவரது ஆலயங்கள் அமைந்துள்ள இடப் பெயர்களைக் கொண்டும் புனையப்பட்டுள்ளன. புனித மரியாள், கன்னி மரி, பனிமயமாதா, வியாகுல மாதா, அன்னை வேளாங்கண்னி, மடுமாதா, புதுமைமாதா, லூட்ஸ் மாதா, போன்ற பெயர்களாள் அன்னை மரியாள் இவ்வுலகில் அழைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுகின்றார். 

இன்றைய நாளில் நாம் அன்னையை மகிமைப்படுத்த நம்மாலான கடமைகளையும் கடைப்பிடிக்கவும் நமக்கான பணிகளை செவ்வனே ஏற்று அன்னை மரியாளின் வழித்தடத்தில் பயணிக்கவும் முயலுவதே அவருக்கு நாம் செய்யும் மகிமைப் பேறாகும். 

இன்றைய உலகில் அன்னை மரியாளின் வழியில் தாய்மையின் மகத்துவத்தையும் வாழ்க்கையில் அன்றாட நிலைகளில் அவற்றுக்கான பொறுமை நிலைகளை தத்தம் குடும்பங்களில் நாம் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? நம் குழந்தைகளை தாயன்புடன் பரிவுடன் அவர்களது நடைமுறை வாழ்க்கையை அவதானித்து அவர்களுக்கான உந்துகோலாக நாம் நடந்து கொள்ளுகின்றோமா? நம்மை அண்டி வருபவர்களை தாயன்புடன் நடத்துகின்றோமா…? நம்மை பரிகாசப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கின்றோமா?…. நமக்கு வரும் சோதனைகளையும் சுமைகளையும் தாங்கிக் கொள்கின்றோமா….. இவற்றுக்கான விடைகளை நாம் அனைவரும் நமக்குள் சுயபரிசோதனை செய்து அன்னை மரியாள் இவ்வுலகில் வாழ்ந்த பாதையில் அவரது செபதவ முயற்சிகளை நாம் கடைப்பிடித்து விசேடமாக இன்றைய உலகில் அன்னை மரியாளின் பக்தி மீது காட்டப்படும் அவவிசுவாச நிலைகளை நாம் தகர்த்தெறிந்து அன்னை மீது விசுவாசம் கொண்டவர்களாக வாழ்ந்து அன்னையின் செபமாலைப் பக்தியை இவ்வுலகில் மற்றவர்களிடையே நிலை பெறச் செய்து அன்னைக்குரிய பிள்ளைகளாக நாம் என்றும் வாழ்வதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம். அன்னை என்றுமே எம்மைக் காப்பாள். எமக்கு கவசமாக காவலாக என்றும் எம்முடன் கூட பயணிப்பாள் அந்த நம்பிக்கையில் நம் வாழ்வை அன்னையின் கையில் ஒப்படைப்போம். 

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்...

அமல உற்பவி மரியாள் – கி.பி 1854

அமல உற்பவி மரியாள் – கி.பி 1854

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு. இவளது மேன்மை இவளது இறைத் தாய்மையிலிருந்தாலும், இத்தாய்மைக்காக இறைவனாலேயே சிறப்பான விதத்தில் காக்கப்பட்டதால், மாந்தரனைவரும் அடையவேண்டிய இலக்கான மங்களத்தின் நிறைவான மாசற்ற அமலத்துவத்தில் தான் பரிமளிக்கிறது என்றால் இக்கூற்று மிகையல்ல.
மரியாள் அமலியாக அவதரித்தவள். இவள் அமல உற்பவி. ஆதிப்பெற்றோரின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த தூய நிலையிலேயே இவ்வவனியில் அருமையாக அவதரித்தவள். இத்தகு பெருமையால் மரியாள் இறைவனால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், இந்த ‘அமலி’ என்னும் அங்கீகாரம் வரலாற்றில் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றை நோக்கும்போது, நூற்றாண்டுகளையல்ல, ஆயிரமாண்டுகளைக் கடந்து, அறிவு, நம்பிக்கை, விசுவாசம், போராட்டம், பகிர்வுகளைக் கடந்து பலமான எதிர்பார்ப்புகள் மற்றும் மக்களின் ஏக்கங்களுக்கிடையே தான் மறைக்கோட்பாடாக முழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மறைக்கோட்பாடு கடந்து வந்த வரலாறு மற்றும் பாரம்பரியப்பயணம் அதி நீளமானது. இதனை ஆழமாக நோக்குமுன், மரியாள், “அமலி” என்று அழைக்கப்படுமளவிற்கு அவளை உயர்த்திய, மக்களுக்கு உணர்த்திய சில விவிலிய மற்றும் விசுவாசக் கலவைகளையும் அவற்றின் பயணங்களையும் அவற்றின் பொருளையும் புரிந்துகொள்ள விழைவது நன்மை பயக்கும்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கடவுளின் அருட்கொடைகள் மனிதனுக்கு தடைப்பட்டன. உறவு நிலை பாதிக்கப்பட்டது. தந்தை கடவுள் மனிதனோடு கொண்டுள்ள் உறவைச் சரிசெய்ய, புதுப்பிக்கக் கன்னி மரியாளைக் கருவியாகவும், பாலமாகவும், பயன்படுத்தினார்.
இறைவனின் மீட்புத்திட்டத்தின் தொடக்கத்திலேயே மரியாள் தோன்றுகிறார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன்தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). பெண்ணின் வித்துக்கும் அலகையின் வித்துக்கும் இடையே நடைபெறும் மாபெரும் தொடர் போரில் பெண்ணின் வித்து நிச்சயமாக வெற்றி அடையும். இதுதான் தவறிய மனிதனுக்கு இறைவன் வழங்கிய முதல் நற்செய்தியாகும்.
திருமுழுக்கு வழியாக ஒருவருடைய ஜென்மப் பாவம் நீக்கப்படுகிறது. ஆனால் மரியாளை ஜெனமப்பாவம் தீண்டாதபடி இறைவன் பாதுகாத்தார். மீட்பரின் தாய் மரியாள் பாவத்தின் ஆட்சிக்கு ஒரு நொடியும் உட்பட்டிருப்பது, ‘மீட்பரின் தாய்’ என்னும் அவருடைய தனிச்சிறப்பான அழைத்தலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அவரை ‘அருள் நிறைந்தவராக’ (லூக் 1:28) அதாவது, ஜென்ம பாவக்கறையின்றி இறைவன் படைத்தார்.
இதனைத்தான் வானதூதர் கன்னி மரியாளிடம்
அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்
என வாழ்த்தொலியாக லூக்கா 1:28 இல் என்று வாழ்த்துகிறார். மரியாள் அன்றும் இன்றும் என்றும் “அருள் நிறைந்தவரே.”
தூய பவுல், நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே. 1:4) என்கிறார். உலகம் உருவாகும் முன்பே ஒவ்வொரு கிறித்தவரையும் இறைவன் கிறிஸ்து வழியாகத் தேர்ந்துகொண்டது உண்மை என்றால், இவ்வுண்மை மீட்பரின் தாய் மரியாளுக்கு இன்னும் எவ்வளவோ அதிகமாகப் பொருந்தும்!
மரியாள் மீட்பரின் தாய் என்றாலும் அவரும் இயேசுவின் இறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்கப்பட்டார். மரியாளுக்கு இயேசு கொண்டுவந்த மீட்பை இறைவன் முன்னரே வழங்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டே மரியாள் அமல உற்பவியாகப் பிறந்தார். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவது போல், “தம் மகனின் பேறு பலன்களை முன்னிட்டு அவர் உன்னத முறையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்… ஆயினும் அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப்பெறவேண்டிய மக்கள் அனைவரும் அவருள் ஒருவராகின்றார்”. (திருச்சபை எண்.53). திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “மீட்பரின் தாய்” என்னும் தமது மறைத் தூது மடலில் மரியாள் ‘அருள் நிறைந்தவர்’ என்பதற்கு ஆழமான விளக்கம் தருகிறார் (மீட்பரின் தாய், எண்கள் 8-11).
மரியாளைப் பொருத்தமட்டில், ஜென்மப் பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப் பொருத்தமட்டில் ஜென்மப்பாவம் நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப் பாதுகாக்கின்றார்.
ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு, நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத் தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும்.
இவ்வாறு மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.
புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.
மரியாளின் அமல உற்பவத்திற்கு ஓர் இறையியல் வல்லுநர் கூறியுள்ள இரத்தினச் சுருக்கமான காரணம்: இறைவன் அதைச்செய்ய முடிந்தது: அது ஏற்புடையதாக இருந்தது: எனவே அவர் அதைச் செய்தார்
ஒரு முறை ஒருவர் என்னிடம், "தந்தையே, சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாய் கண்ணகியின் சிலை வரை ஓடிவருகிறது: பிறகு திரும்பவும் பின்நோக்கி ஓடுகிறது: இவ்வாறு பலமுறை அந்நாய் செய்கிறது. ஏன்? ஏன்று கேட்டார். நான் பல காரணங்களைச் சொல்லியும் அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல், “அது அந்த நாயின் விருப்பம்” என்று நாயை விடப் பயங்கரமாகக் கடித்தார்.
இது ஒரு ‘கடிஜோக்’. ஆனால் இதில் பொதிந்துள்ள உண்மை என்ன? ஒரு நாய்க்குக் கூட அதன் விருப்பப்படி நடக்க உரிமை உண்டு. அப்படியானால் மனிதருக்கு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளுக்கு தாம் விரும்புவதைச் செய்ய உரிமை இல்லையா? திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையின் இறுதியில் நிலக்கிழார் தமக்கு எதிராக முணுமுணுத்தவர்களிடம், எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப்பொறாமையா? (மத் 20:15) என்கிறார். எனவே, இறைவன் மரியாளின் அமல உற்பவத்தை விரும்பினார். அதை அவரால் செய்ய முடிந்தது. எனவே. அவர் அதைச் செய்தார். கடவுளின் செயலைக் கேள்விக்கு உட்படுத்த நாம் யார்?
அருள் நிறைந்தவரும் அமல உற்பவியுமான மரியாள் நமக்கு வழங்கும் நற்செய்தி: நாம் அனைவரும் மரியாளைப் போன்று அமல உற்பவமாகப் பிறக்கும் பேறு கிடைக்கவில்லையென்றாலும், நம்மாலும் மாசற்றவர்களாக வாழ முடியும். அதற்குண்டான ஆற்றலை நாம் திருமுழுக்கின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளோம். நாம் மாசற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இறைமகன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இதனைப் புனிதப் பவுல் அடிகளார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும் படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே, கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்ற எபே. 1:4 இல் குறிப்பிடுகிறார்.
ஓய்வு பெற்ற ஜெயில் அதிகாரி ஒருநாள் அதிகாலையில் கைவண்டி இழுத்துக்கொண்டு போகும் ஒரு நபரை சந்தித்தார். உற்றுப்பார்த்த போதுதான் தெரிந்தது அவன் பல திருட்டுக்களை செய்துவிட்டு அடிக்கடி சிறைக்கு வந்தவன் என்று. இவருக்கு நன்றாகத் தெரிந்தவன். இப்போது கஷ்டப்பட்டு கைவண்டி இழுத்து அவன் பிழைப்பது பார்த்து அவனைப் பாராட்டினார். “தம்பி உன்னைப் போலவே எல்லோரும் திருந்தி உழைக்க ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு அவன், “சார் உங்களிடத்தில் சொல்ல என்ன இருக்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் மாறவில்லை. இப்போது கூட இந்த கைவண்டியைத் திருடிக்கொண்டுதான் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போனான்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம் என்று ஒரு பாடல் வரி சொல்கிறது.
தூய பவுல், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத்தெரியாதா? (1 கொரி 3:16) என்று கேட்கிறார்.
ஒரு ‘குண்டு’ அம்மா பங்குத்தந்தையிடம் “நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு , பங்குத்தந்தை அவரிடம், “நீங்கள் பரிசுத்த ஆவியின் பசிலிக்கா என்றாராம்.
ஓர் ஆலயத்தை எவ்வளவு புனிதமாக போற்ற வேண்டுமோ அவ்வளவு புனிதமாக நம் உடலையும் போற்ற வேண்டும். தூய ஆவி நமது உள்ளத்தில் சுடர் விட்டெரியும் பேரொளி. அப்பேரொளியை, உண்மையின் ஒளியை நமது கனமான பாவத்தால் அணைத்து விடுகின்றோம். ஆகவே தான், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். (1கொரி 5:19), அதாவது தூய ஆவியை அணைத்து விட வேண்டாம் என்று எச்சரிக்கிறார் தூய பவுல். நமது உள்ளத்தின் இனிய விருந்தினரான தூய ஆவியை நாம் அன்புடனும் பண்புடனும் நடத்த வேண்டும். தூய ஆவி நமது தீய நடத்தையால் மிகவும் வருந்துகின்றார்.
கடவுளின் தூய ஆவியார்க்கு துயரம் வருவிக்காதீர்கள் (எபே 4:30) என்று அறிவுருத்துகின்றார் தூய பவுல்.
ஒரு கிறிஸ்தவர் பொய்யை விலக்கி உண்மை பேச வேண்டும்: சினம் கொள்ளக்கூடாது: திருடக்கூடாது: கெட்டவார்த்தையை தவிர்க்க வேண்டும். மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல, பழிச்சொல் ஆகியவைகளை விட்டொழித்து பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டி பிறரை மன்னிக்க வேண்டும். (எபே 4:25-32).
கோபம் வருவது இயல்பு கோபத்தை சரியான விதத்தில் வெளிப்படுத்தலாம். தீய வார்த்தைகள் சொல்ல தேவையில்லை. எப்போதும் கெட்ட கெட்ட வார்த்தைகளை மிகவும் சரளமாக பொரிந்து தள்ளும் ஒரு பாட்டியிடம் பங்கு தந்தை “பாட்டி இனிமே கெட்ட வார்த்தை சொல்லாமல் நாயே பேயே பன்றி குரங்கு வெண்டக்கா சுண்டக்கா வெறிநாய் சொறிநாய் என்று திட்டுங்கள் என்றார் அதற்கு அந்த பாட்டி அந்த வார்த்தையெல்லாம் என் வாயிலிருந்து வராது கெட்ட வார்த்தை பழக்கம் ஆயிடுச்சு சாமி என்றார். அடிக்கடி அவர் தம் பழக்கத்தை புதுபித்து கொள்கின்றார். “கெட்டவார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றார். (எபே 4:29).
சிலருக்கு குடிப்பழக்கம் நல்ல பழக்கம் ஆயிடுச்சு அதை தவிர்க்க அவர்களால் இயலவில்லை. ஒரு மாணவன் ‘வாழைப்பழம்’ என்று சொல்வதற்குப்பதிலாக ‘வாயப்பயம்’ என்றான். அவனுடைய தந்தையை ஆசிரியர் அழைத்து ‘ஏன் உங்கள் மகன் அவ்வாறு சொல்கிறான்’ என்று கேட்டதற்கு அவர் “அது எங்க பயக்க வயக்கம்’ என்றார். ஒருசிலர் ஒருசில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பின்னர் அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்படுகின்றனர்.
கணவர் பயங்கரக் குடிகாரர். அவருடைய மனைவி அவரைப் பற்றிப் பங்குத் தந்தையிடம் முறையிட்டார். ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணிக்கு பங்குத் தந்தை பேய் வேடம் போட்டுக் கொண்டு அக்குடிகாரர் வீட்டிற்குச் சென்றார். அப்போதும் அவர் நன்றாகக் குடித்துவிட்டு மனைவி. மக்களை அடித்துக் கொண்டிருந்தார். பேய் வேடத்தில் வந்திருந்த பங்குத் தந்தையைக் கண்ட குடிகாரர் சிரித்துக் கொண்டு அவரிடம், “நீ பேய்தானே நான் கூடப் பங்கு சாமியார் என்று நினைத்து பயந்திட்டேன்” என்றார்.
குடிப்பழக்கமும் அத்துடன் இணைந்துள்ள பக்க வாத்தியங்களும் தூய ஆவிக்கு மனவருத்தம் விளைவிக்கும் பாவங்களாகும். குடி குடியை கெடுக்கும் என்பது மட்டுமல்ல குடி கோமகன் கோயிலையும் இடிக்கும் என்பது உண்மையே.
ஒரு பெண் குரஙகு குட்டியொன்றை ஈன்றது: அக்குட்டியைப் பார்த்து அழுதது, ஏன்? என்று ஆண்குரங்கு கேட்டதற்கு, அப்பெண் குரங்கு, ‘நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக்கொண்டிருக்கிறது’ என்றது. அதற்கு ஆண் குரங்கு, கவலைப்படாதே போகப்போக நம் முகம் வந்துவிடும்’ என்று அதைத்தேற்றியது. மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர், மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது, வேதனைக்குரியது.
நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவாரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்
(கால 5:15).
புனித அகுஸ்தினார் ஒர் ஊரில் ஆட்டம் போட்டுக் கொணடிருந்த பேயைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார். சக்திபடைத்த புனிதா். ஆகவே பேய் வாயைப் பொத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. வழியில் ஒரு கோயில். புனிதர் சிறிது நேரம் ஜெபித்துவிட்டு வர எண்ணி கோவிலுக்கருகில் இருந்த மரத்தில் பேயைக் கட்டினார்.
அங்கே பக்கத்தில் ஒரு தாய் பசுவிடம் பால் கறந்துகொண்டிருந்தாள். அருகில் அவளது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். “அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது” என்று பேய்க்கு கட்டளையிட்டுவிட்டு புனிதர் செபிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் பேய் சிறுவனிடம் பேச்சுக்கொடுத்தது. ஒரு குச்சியை எடுத்து பசுமாட்டின் பின்புறம் குத்தச் சொன்னது. சிறுவன் பேயின் பேச்சைக் கேட்டு குச்சியை எடுத்துக் குத்த மாடு மிரண்டு எட்டி உதைத்துவிட்டு கயிறு அறுத்துக்கொண்டு ஓடிப்போனது. பால்பாத்திரம் கீழே விழுந்து பால் தரையில் சிந்தியது.
ஆத்திரமடைந்த தாய் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு சிறுவனை துரத்திக்கொண்டிருந்தாள். புனிதர் ஜெபம் முடித்து வெளியே வந்தார். நிலைமை மாறியிருப்பதைப் பார்த்தார். பால் கொட்டிக்கிடக்கிறது. யாரையும் காணவில்லை. “நீ ஏதாவது செய்தாயா?” என்று கேட்க பேய் “இல்லை” என்று தலையாட்டியது. சாத்தான் எதுவும் செய்வதில்லை. ஆனால் செய்யத் தூண்டுகிறது. மனிதர்கள் அதன் சோதனைக்கு மடிகிறார்கள்.
மனமாற்றத்திற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு சக்கேயு. ஆவர் குறுக்கு வழியில் சென்று கொள்ளை அடித்து குபேரர் ஆனார். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை அவர் மனசாட்சி குடைந்து கொண்டே இருந்தது. புவியில் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும் பாவங்கள் அவர்களை விடுவதில்லை. சக்கேயு இயேசுவை காண விரும்பி ஒரு மரத்தில் ஏறினார். இயேசு கண்ணாலே கண்டால் போதும் என்றிருந்தார். ஆனால் இயேசுவோ அவர் வீட்டிற்க்கே சென்றார், அவருடன் விருந்துண்டார். ஓளிந்து கொண்டிருந்தவனை ஒளிக்கு கொண்டு வந்தார். கள்ளனை நல்லவனாக ஆக்கினார். உடல் அளவில் குட்டயனை உள்ளத்தில் நெட்டயனாக உயர்த்தினார்
ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டைவிட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை “உன் மகன் நாசமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது ! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு, தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!
உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும், இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்
(எசா1:18).
முதல் திருவிருந்திற்குத் தயாரிப்பாகச் சிறுவர் சிறுமியருக்கு மறைக்கல்வி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் பங்கத்தந்தை. ஒரு சிறுனியிடம், “iஷ்னி? நீ சாவான பாவத்துடன் இறந்துபோனால் எங்கே போவாய்?” என்று கேட்டார். “நரகத்தக்குப் போவேன் ஃபாதர்! என்றாள். “நரகத்துக்குப் போனபின் அங்கே நீ செய்யும் முதல் காரியம் என்னவாயிருக்கும்? என்று பங்கத்தந்தை கேட்டார். “நான் பாவசங்கீர்த்தனத்திற்குப் போவேன்” ஃபாதர்” என்றாள் “நரகத்திலா, பாவசங்கீர்த்னத்திற்கா?” என்று ஆச்சரியப்பட்ட அவர் “நரகத்தில் யாரிடம் பாவசசங்கீர்த்தனம் செய்யப்போவாய்? “என்று சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டார். “உங்களிடம்தான் ஃபாதர்? “ என்று உறுதியாகச்சொன்னாள் சிறுமி. பங்குத்தந்தைக்குத் தூக்கி வாரிப்போட்டது.

- யாக்கோபின் இறையனுபவ ஏணி (தொ. நூ. 28:12)
- மோசேயின் பாலைவன அனுபவத்தால் கருகாமல் எரியும் புதர் (வி. ப. 3:2-3)
- இனிமைமிகு பாடலில் காணப்படும், தாவீதின் கோபுரம் (இ. பா. 4:4)
- அதே புத்தகத்தில் காணப்படும் வாயில் மூடப்பட்ட தோட்டம் (இ. பா. 4:12)
- யாவேயின் நகரம் (தி. பா. 87: 1-3)
- இறைமாட்சிமை விளங்கும் ஆலயம் (1அர. 8:10-11)
- இறைவனின் புனித பேழை (வி. ப. 31:1-11)
- ஞானத்தின் பிம்பம் (நீதி மொழிகள் 8:22-36)
முதுகில் கோணிப்பையைப் போட்டுக்கொண்டு ஒரு சாலையோரத்தில் குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த ஒருவனை பார்த்து ஒரு செல்வந்தன் கேட்டான். “எல்லாம் எடுத்து போட்டுக்கொண்டிருக்கிற,, உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு? சற்று சுதாரித்து திரும்பி குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த அவன் செல்வந்தனைப் பார்த்து “யாரைப் பார்த்து பைத்தியம் என்ற சொன்னாய்? நான் நினைத்தால் இதோ இந்தக் கோணியில் சேர்த்து வைக்கிற இவற்றை இப்போது கூட தூக்கி எறியலாம். ஆனால் நீ உன் உடம்பு முழுவதும் சேர்த்துக் குவித்து வைத்திருக்கிறாயே வஞ்சனை, நேர்மையற்றதனம், சுயநலம், இந்தக் குப்பைகளைத் தூக்கி எறிய முடியுமா? செல்வந்தன் அரண்டு போனான். இதே கேள்விக்கணை நம்மை நோக்கிய வண்ணம் இருப்பதை உணர்வோம். இயேசு அட்டவணையிட்டுக் காட்டும் பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை , தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகிய கறைகள் நம்மில் படிந்திருக்கிறதா? என்று ஒரு கணம் நினைத்துப்பார்ப்போம்.
அருள்மிகப்பெற்றவரும் அமல உற்பவியுமான மரியா நமக்கு வழங்கும் நற்செய்தி: பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ. 3:15). பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20). கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31). உலகம் உருவாகும் முன்பே இறைவன் நம்மையும் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டார் (எபே. 1:4). திருச்சபையானது மாசு மறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27). நாமும் மரியன்னையுடன் இறை மாட்சிமையில் பங்கு பெறுவோம் (உரோ. 8:28-30).
இவ்வுண்மைகளை நாம் திறந்த உள்ளத்துடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து தீமையின் அச்சாணியை முறித்து, புனிதம் கமழும் புத்துலகைப்படைப்பதே நாம் நம் தாய்க்குப்பாடும் தன்னிகரில்லாத் தாலாட்டு ஆகும்.

இந்தக் கடவுளின் மீட்புத் திட்டத்தை இறைமகன் இயேசுவும், கன்னி மரியாளம் பற்றுதியோடுச் செய்து முடித்தனர். இன்றைய முதல் வாசகம் (தொ. நூ. 3:4-15,20) கீழ்ப்படியாமையால் ஆதாம் ஏவாள் எப்படி இறைவனின் அருட்கொடையை இறந்தனர் என்பதைப் பறிறியும், இந்த நிலை ஒரு பெண்ணால் மீண்டும் புதுபிக்கப்படும் என்பது பற்றியும் தெளிவாகக் கூறியது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்தான் கன்னி மரியாள். கீழ்ப்படியாமையால் விளைந்தத் தீமை, கீழ்ப்படிதலால் சரிசெய்யப்பட்டது. குன்னி மரியாயும், இறைமகன் இயேசுவும் கீழ்ப்படிதல் மூலம் இறைத்திட்டத்திற்குப் பணிந்தனர்.
நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்க நிகழட்டும்
லூக்கா, 1:38-இல் என்று மரியாவும்
ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உம் விருப்பப்படியே
என்ற லூக்கா. 22:42-இல் இயேசுவும் கூறி இறைத்திட்டத்தை நிறைவேற்றினர்.
நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். குன்னி மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்.
இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கியோம்? இன்றைய உலகம் பால உணர்வு என்றால என்ன என்பதை மறந்கு கொண்டு வருகிறது. எதை வேண்டுமானாலும் செய்யலம் என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்கம் கொஞ்சமாகக் முழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் வாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்க மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள். அனைத்தையும் பொறுத்கக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை நமது சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும். இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம் தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும் கன்னி மரியாளிடமும் தொடர்ந்து செபிப்போம்